இலக்கியங்கள் வழிபாட்டுக்கன்று ந. முருகேசபாண்டியன் எழுதிய “மறுவாசிப்பில் செவ்வியல் இலக்கியப் படைப்புகள்” கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து]

This entry is part 11 of 15 in the series 21 மே 2017

 

வளவ. துரையன்

 

நவீன இலக்கிய எழுத்தாளர்களில் சங்க இலக்கியப் பயிற்சி கொண்டவர்கள் மிகக் குறைவு. விரல்விட்டு எண்ணக் கூடிய அவர்களில் ந. முருகேச பாண்டியனும் ஒருவர். அதிலும் தமிழில் திறனாய்வுச் சங்கிலி அறுந்துபடாமல் தொடர்ந்து இயங்கி வருபவர் அவர். பல்வேறு கருத்தரங்குகளில் சங்க இலக்கியம் பற்றி அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு இது. குறிப்பிடத்தக்க நவீன இலக்கிய இதழ்களிலும் இவை வெளிவந்துள்ளன.மாதவி மற்றும் மணிமேகலை குறித்தும் இரு கட்டுரைகள் உள்ளன,

 

”சங்க காலத்தில் பாலியல் என்பது ஒரு கொண்டாட்டமாகவே இருந்தது. பெண்ணும் தனக்கு ஏற்ற தான் விரும்பிய ஆணைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்குச் சுதந்திரம் இருந்தவளாக விளங்கினாள். கல்வியறிவு நிரம்பப் பெற்றிருந்த பெண்கள் தங்கள் பாலியல் மனநிலையை ஆழமாகவே எழுதி உள்ளனர். “நான் என்ன செய்வேன்? முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்?” என்ற ஔவையாரின் பாடல் வரிகளைச் சான்றாகக் கொள்ளலாம்”. இவற்றையெல்லாம் தரும் முருகேசபாண்டியன் “மதங்களின் ஆதிக்கம் வாழ்வில் வந்த பின்னர்தான் பாலியல் எதிர்மறை அம்சமாகி விட்டது; உடலைக் கொண்டாடாமல், உடலை வருத்தித் தவம் இருத்தல், உடலைத் துறந்து வீடு பேறு அடைதல் போன்றவை உண்டாகி பாலுறவினைக் கேவலமாக ஆக்கிவிட்டன” என்று துணிந்து கூறுகிறார்.

 

மேலும் ”பாலியல் பற்றிய தவறான புரிதல்கள் புறந்தள்ளப்பட வேண்டும்”  என்கிறார். அதை இயற்கையானதாகக் கருதி வரவேற்கும் மனநிலை வேண்டும் என்றால் ’பாலியல் கல்வி இன்று இளம் பருவத்திற்குத் தேவைப்படுகிறது’ என்லாம். இந்நூலின் முதல் கட்டுரையில் அவர் பார்க்கும் ஒரு புதிய பார்வையைக் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். அதாவது, “யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்பதைப் போரில் தோற்றுப் போன இன்னொரு குழுவினருக்கு, அடிமைப்பட்ட மக்களுக்குத் தேறுதல் சொல்வதற்காகப் பாடப்பெற்றது என்று கருத இடமுண்டு” என்று எழுதுகிறார். ”ஏம்பா வருத்தப் படறே? இதுவும் ஒன் ஊர்தாம்பா; நாங்களும் ஒன் சொந்தக்காரங்கதாம்பா” என்று கூறுவதாக இதை எடுத்துக் கொள்ளலாம். இதுதான் புதிய பார்வை; இதுவே இன்றைய தேவை.

 

சங்ககாலப் பெண் கவிஞர்கள் பற்றிய கட்டுரையில் ”இன்று நவீன பெண் கவிஞர்கள் கவிதையில் பயன்படுத்தும் யோனி, முலை போன்ற சொற்களைச் சங்க காலத்திலே பெண்கவிஞர்கள் பௌயன்படுத்தி உள்ளனர் என்பது முக்கியமான தகவல்” என்று கட்டுரையாளர் கூறுவது நவீன இலக்கிய வாசகனும் அத்துடன் கவிஞர்களும் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும். அதற்குச் சான்றாக, வெள்ளிவீதியாரின் ‘திதிலை அல்குல் என் மாமைக் கவினே’ [குறுந்தொகை; 27] மற்றும் ஔவையாரின் ‘முலையிடை முளையிட்ட நோய்’ [அகநானூறு 273] என்ற வரிகளைக் கூறுகிறார். சங்ககாலக் கவிதைகள் அக்காலச் சூழலைத்தான் படம் பிடித்துக் காட்டுகின்றன. அவையே இல்லாவிடில் நாம் இன்று அக்காலப் பண்பாடு, உணவுமுறை, காதல், வீரம் பற்றி அறியவே முடியாது. அன்றைய சமூக நிலையையும், காதலையும் வீரத்தையும் நாம் இன்றைய பொதுப்புத்தியை வைத்து வரையறை செய்ய முடியாது.

 

எனவே ”தாய்க்கும், மகனுக்கும் இடையேயான உறவு அரசியலால் துண்டிக்கப்பட்டு வீரம் என உருவாக்கப்படுகிறது” என்றும், ‘குறுநில மன்னர்களின் போர்களில் மரணமெய்தியது வீரமெனப் போற்றிப் பொற்காலக் கனவு காண்கிறோம்’ என்றும் கூறுவது ஏற்க முடியாத ஒன்று. வேண்டுமானால் இதை ஒரு புதிய பார்வையாகக் கொள்ளலாம்; எப்படியும் பார்க்க திறனாய்வாளனுக்கு உரிமை உண்டன்றோ?

 

நூலின் முக்கியமான பதிவுகளில் ஒன்றாக நான் கருதுவது பெண் இழப்பின் காரணமாக ஆண் படும் மனவேதனையைத் துயரமான மொழியில் எடுத்துக் காட்டி உள்ள பாடலைத் தந்திருப்பதாகும். பெரும்பாலும் யாரும் அதிகமாக அறிந்திராத பாடல் இது. மாக்கோதை எழுதிய பாடல் இதுவாகும். கள்ளிச்செடிகள் நிறைந்த சுடுகாட்டில், எரியும் நெருப்பில், விறகுப் படுக்கையில் அன்பிற்குரியவளைக் கிட்த்தி விட்டு இன்னும் என் உயிரைப் போக்கிக் கொள்ளாது உயிர் வாழ்கின்றேன்” என்பது இப்பாடலின் பொருளாகும்.

 

“கள்ளி போகிய களரி மருங்கின் களியம் பறந்தலை

வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து

ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி

ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை

இன்னும் வாழ்வல் இதன்பண்பே           [புறநானூறு-245]

 

பெண்ணை இழந்த ஆணின் நிலை மிகவும் அரிதாகவே சங்கப்பாடல்களில் பதிவாகி உள்ளன. இதனை எடுத்துக் காட்டிய கட்டுரையாசிரியர் பாராட்டுக்குரியவர்.

 

மேலும் சங்க காலச் சமயங்கள் பற்றிக் கூறும்போது, “சூர், அணங்கு, சூலி, முருகு போன்ற கடவுள்கள் இயற்கை சார்ந்த இடங்களில் தங்கியிருப்பதான நம்பிக்கை, சங்க காலத்தில் வலுவாக நிலவியது” என்ற கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது. சங்க கால மக்கள் இயற்கையைத்தான் கடவுளென்று வழிபட்டனர் பிற்காலத்தில்தான் உருவ வழிபாடு தோன்றியது எனக் கருதலாம். அதிலும் எல்லா மலைகளிலும் கடவுளர்கள் நிறைந்து இருப்பதாக அவர்கள் நம்பியதை இயற்கை சார்ந்த வழிபாடாகவே கருதலாம். அணங்குடை நெடுவரை [அகம்:22]; அணங்குடை வரைப்பு [அகம்:372]; அணங்கொடு நின்றது மலை [நற்றிணை;165’] போன்ற பாடல் அடிகள் சான்றாக எடுத்தாளப்பட்ட்டுள்ளன. மேலும் சங்க கால மக்களிடையே சைவம், வைணவம் என்னும் வைதிக சமயங்களோடு, பௌத்தம், சமணம் என்னும் அவைதிக சமயங்களும் நடை முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்று “சங்கத் தமிழரின் சமயம்” கட்டுரை வழி அறிய முடிகிறது.

 

சங்ககால மக்களின் வாழ்வில் சடங்குகள் முக்கிய இடம் பெற்றிருந்தன. வாழ்வில் துன்பங்கள் ஏற்படும்போதோ அல்லது நாம் மேற்கொள்ளும் செயல் நல்லபடி முடியவேண்டும் எனும்போதோ மனம் ஊசலாடுகிறது. ஏதேனும் ஒரு பற்றுக்கோடு கிடைக்காதா என்று ஏங்குகிறது. அப்போது தொன்றுதொட்டுத் தொடர்ந்துவரும் சில நம்பிக்கைகள் கை கொடுக்கின்றன மனம் அந்த நம்பிக்கைகளைப் பின்பற்றச் சொல்கிறது. இவையே சடங்குகளாக மாறிவிட்டன எனலாம். இதைப் “பத்துப்பாட்டில் சடங்குகள்” என்னும் கட்டுரையில், “மனிதனின் நம்பிக்கையானது செயல்வடிவம் பெறுகையில், அது நிகழ்த்தப்டும் சடங்காக மாறுகின்றது” என்று கட்டுரையாசிரியர் எழுதுவது குறிப்பிடத்தக்கதாகும்.

 

இன்றைக்கும் நம் மறைந்த மூத்தோர்களின் நினைவாக நாம் இல்லத்தில் நாம் குறிப்பிட்ட அந்த நாளில் சில சடங்குகள் செய்கிறோம். அப்போது காக்கைக்குச் சோறிடுதல் முக்கியமான ஒன்றாகும். இறந்த நம் முன்னோர்கள் அன்று காக்கை வடிவில் வந்து நாம் தரும் உணவை ஏற்றுக் கொள்வர் என்பது நம்பிக்கையாகும். அதைப் பலிச்சோறு வழங்குவது என்றும் சொல்வார்கள். இதைக் கீழ்க்கண்ட பொருநராற்றுப்படைப் பாடல் அடிகளின் வழி முருகேசபாண்டியன் எடுத்துக்காட்டுகிறார்.

 

”கூடு கெழீஇய குடிவயினான்

செஞ்சோற்ற பலி மாந்திய

கருங்காக்கை கவ்வு முனையின்

மனைநொச்சி நிழல் ஆங்கண்

ஈற்றுய்மைதன் பார்ப்பு ஓம்பும்”

 

ஒக்கூர் மாசாத்தியாரின் பாடல்களைக் காட்டும் கட்டுரையில் அவர் எப்படி இயற்கையை அனுபவித்துப் பாடுகிறர் எனக் கட்டுரையாசிரியர் காட்டுகிறார். அதுவும் முல்லைப் பூக்களுக்கு மாசாத்தியார் தரும் அடைமொழிகளை, ’பெயல் புறந்தந்த பூங்கொடி முல்லை’, ‘பூத்த முல்லை’, வெருகு சிரித்தன்ன’, முல்லை மென்கொடி’, முல்லையம் புறவில் முல்லை ஊர்ந்த கல்’, ‘முல்லை மாலை’,  என்று முல்லைப் பூவைக் காட்டி அதன் வழி மாசாத்தியார் பெண்ணின் காத்திருத்தலைப் பதிவுசெய்திருக்கிறர் என்னும் போது முருகேச பாண்டியனின் ஆய்வு நன்கு புலப்படுகிறது. அதேபோல அச்சங்கப் புலவரின் உவமைகளையும் கட்டுரை எடுத்துக்காட்டி உள்ளது. ”தேர்ச்சக்கரம் சென்ற வழியின் சுவடு, பாம்புகள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்வது போன்றுள்ளது” ”காட்டுப் பூனை சிரித்தது போன்ற முல்லைப்பூக்கள்” என்னும் உவமைகள் சுவைக்கத்தக்கன.

 

சங்ககாலக் கையறுநிலைப் பாடல்களின் கனத்தைப் பற்றி இதுவரை யாரும் அதிகமாகப் பதிவு செய்யவில்லை. ஒரு கட்டுரையில் பத்துக் கையறுநிலைப் பாடல்கள் எடுத்துக் காட்டப்பட்டு அவை எழுந்த சூழல் அவற்றில் வெளிப்படும் சோகம் எல்லாம் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக அதியமானின் கொடைத்திறம் நாம் அறிவோம். ஆனால் அவன் இறந்தபின்னும் வேறு எவரிடத்தும் எதுவும் ஏற்க மாட்டான் என ஔவையார் தன் பாடலில் கூறுகிறார்.

”அவனுக்கு நடுகல் நாட்டிச் சிறு பாத்திரத்தில் இப்பொழுது அவனுக்கு நார்கொண்டு வடிகட்டியத் தேனைப் படைக்கிறார்களே அவன் அதை ஏற்றுக்கொள்வானா? மாட்டான்; அவன் பிறருக்குக் கொடுத்தே பழக்கப்பட்டவன்; எதையும் பிறரிடம் ஏற்கமாட்டான் எனச் சொல்கிறது” ஔவையாரின் இக்கையறு நிலைப் பாடல்’

 

“       நடுகல் பீலிசூட்டி நார்அரி

சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லோ

கோடு உயர் பிறங்குமலை கெழீஇய

நாடு உடன் கொடுப்பவன் கொள்ளா தோனே”

 

பெரிய நாட்டையே கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளாதவன் இத்தேனையா ஏற்றுக்கொள்வான் என்னும் போது அவனின் கொடைத்திறம் மிளிர்கிறது. அத்துடன் ஔவையார் அவன் மீது வைத்த அன்பும் தெரிய வருகிறது.

 

இன்று எல்லாவற்றையும் கட்டுடைத்துப் பார்க்கும் பின்நவீனத்துவ சூழலில், ’திருக்குறள், பதினென் கீழ்க்கணக்கு நூல்கள்” போன்றவற்றையும் ’மணிமேகலை, மாதவி’ ஆகியோரையும் புதிய அளவுகோல்கள் கொண்டு பார்க்கும் கட்டுரைகள் குறையொன்றுமில்லாமல் கட்டுரையாசிரியரின் நுண்ணிய இலக்கியப் பார்வைக்கும், வாதத்திறமைக்கும் சான்றாக விளங்குகின்றன என்று கூறலாம்.

அதுவும் “விமர்சனமற்ற வெற்றுப்புகழுரைகள் திருக்குறளுக்குத் தேவையில்லை; எனவே பண்டைத்தமிழ்ச் சமூகத்தின் சிறந்த சமூகச் சிந்தனையாளரான திருவள்ளுவரின் இயல்புக்குப் பொருந்தாத வேடங்களை, அவருக்கு அணிவிப்பது பெருமைக்குரியதல்ல: என்னும் முருகேசபாண்டியனின் கூற்று எண்ணித் துணிந்து எழுதப்பட்டதாகும்.

 

மொத்தத்தில் எந்த இலக்கியமானாலும் அதை வழிபாடு செய்தலை விட்டுவிட்டு அதைப் புதிய பார்வையில் அணுகிப் பார்க்கும்போதுதான் அந்த இலக்கியத்தின் உண்மையான நுண்மாண் நுண்பொருளை நாம் அறியலாம் என இந்நூல் தெளிவாகக் காட்டுகிறது எனலாம்.

 

[“மறுவாசிப்பில் செவ்வியல் இலக்கியப்படைப்புகள்—ந.முருகேசப்பாண்டியன்; வெளியீடு: நியூ செஞ்சுரி ப்க் ஹவுஸ் [பி] லிட்.,–41-பி; சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்; அம்பத்தூர்; சென்னை—98; 044-26251968;  பக்: 156; விலை ரூ120]

[வளவ. துரையன், 20, இராசராசேசுவரி நகர், கூத்தப்பாக்கம், கடலூர். 607 002;

பேசி:93676 31228 valavaduraiyan@gmail.com]

 

Series Navigation2017ஆம் ஆண்டுக்கான வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ஜூலை முதலாம் நாள் துவங்கி நான்காம் நாள் வரையிலும் மின்னசோட்டா மாகாணத்திலிருக்கிற மினியாபோலிசு செயிண்ட்பால்Sangam Kalai Vila on Saturday June 10th in Staten Island, NY
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *