‘ இளைய ராணியின் நகைப் பெட்டி’ – 3

This entry is part 10 of 20 in the series 4 செப்டம்பர் 2016

3

 

சுதாகர் ராஜா, தங்கள் அரண்மனைக்கு வந்து பரிகாரம் செய்து கொடுங்கள் என்று கேட்டது, அவன் எதிர்பார்க்காதது. ஏனென்றால் அவன்  அப்படி ஒரு பரிகார பூஜையோ, யாகமோ  இதுவரை நடத்தியது இல்லை.

 

ராஜ குடும்பம் என்றால் அவர்களிடம் ஏகப் பட்ட தங்கம், பணம் இருக்கும். உண்மையில அந்த நகைப் பெட்டியை  கண்டுபிடிச்சு கொடுக்க முடியுதோ இல்லியோ, அந்த நகைப் பெட்டியை தேடறதுக்காக பூஜை, யாகம் செய்யறதா சும்மா சொல்லி, பூஜை செலவு, தட்சிணைங்கிற பேர்ல அவங்க கிட்ட இருந்து பணம் கறக்கலாமே என்று நினைத்தான். புறப்படுவதற்கு முன் பரிகார பூஜை, யாகம் நடத்துவது எப்படி என்று கற்றுக் கொண்டால் போகிறது. அந்த அரண்மனைக்கு போய் பூஜை செய்து கொண்டே   நகைகளையும் தேடலாம்..  நகைகள் கிடைத்தால்,  சன்மானம் கொடுப்பார்கள்.. சன்மானத்தையும் வாங்கிக் கொண்டு, தன்னுடைய பரிகார பூஜையினால் கண்டு பிடிச்சதா சொல்லி பிரபலமாகி விடலாம்.

 

டிவி நிகழ்ச்சிக்காக வாங்கிய கடனை இன்னும் அடைக்க முடியவில்லை. வேறு யாரிடம் இருந்தும் கடிதமும் வர வில்லை.  காணிக்கை இல்லாமல் தான் கடிதங்கள் வந்தன.  கையில் இருந்த பணம் காலி ஆகி, தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சாப்பாட்டிற்கும் சேர்த்து சிவாவிடம் கடன் சொல்ல வேண்டிய நிலை வந்து விட்டது. டிவி விளம்பரத்திற்காக வாங்கிய கடனை எப்படி கட்டுவது..

 

யோசித்தான். ராமுவிடம்,  டிவி விளம்பரத்தினால், ஒரு ராஜ வம்சத்திலிருந்து கடிதம் வந்திருப்பதாகச் சொல்லி, ரயில் டிக்கெட்டுக்கு மேலும் கடன் வாங்கிக் கொண்டு புறப்பட்டான்.

 

இரவு பூராவும் ரயில் பிரயாணம். விடிந்து  மதுரையில் இறங்கும் போது, மணி ஆறு. அரண்மனை இருக்கும் அந்த ஊருக்கு பஸ்சில் தான் போக வேண்டும் என்றார்கள்.

 

இட்லி சாப்பிடலாமா என்று ஆசை வந்தது. கையில் இருப்பது பஸ் டிக்கெட்டுக்கு மட்டும் தான் சரியாக இருக்கும் என்பது புரிய, கொஞ்சம் தாக்குப் பிடித்தால், அரண்மனையில் ராஜ விருந்து சாப்பிடலாமே என்று நினைத்து, டீ மட்டும் சாப்பிட்டான்.  பஸ் ஏறி அந்த ஊருக்குப் போய்ச் சேரும் பொழுது, மணி பத்து ஆகி விட்டது. அது ஒரு சின்ன ஊர். பஸ்ஸிலிருந்து இறங்கியவுடன், அந்த ராஜாவை கார் அனுப்ப சொல்லலாம் என்று ஏற்கனவே பேசிய அந்த செல் நெம்பரில்  தொடர்பு கொண்டு தான் வந்து சேர்ந்து விட்டதாகச் சொன்னான் பரந்தாமன்.

 

“ பஸ் ஸ்டாண்டு வாசல்ல நில்லுங்க, நான் பக்கத்தில தான் இருக்கேன்.. வர்ரேன்..” என்று பதில் வந்தது. பேசியது அந்த சுதாகர் ராஜாவா… அல்லது வேறு ஆளா.. பஸ் ஸ்டாண்ட் இரைச்சலில் சரியாக குரலை கண்டு பிடிக்க முடியவில்லை.

 

ஒரு முதியவர் தடுமாறி வந்து நின்றார். எண்பது  வயது மதிக்கலாம். ஒரு வேளை தன் செல் போனை கார் டிரைவரிடம் கொடுத்து அனுப்பி இருப்பாரோ.. எண்பது வயது கார் டிரைவரா…

 

“ சுதாகர் ராஜா அனுப்பிச்சாரா..”  என்று பரந்தாமன் கேட்டான்.

 

“ நான் தான் அந்த சுதாகர் ராஜா…”  என்று அவர் சொல்ல, அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

 

அந்த முன்னாள் ராஜா, பரந்தாமனை அழைத்துக் கொண்டு அந்த ஊர் பஸ் ஸ்டாண்டிற்கு வெளியே வந்து நடக்க ஆரம்பித்தார். பசி அவன் கண்ணை மறைத்தது. அந்த சமயத்தில் ஒரு ஓட்டல் அவன் கண்ணில் பட்டது.  அந்த ஓட்டலுக்கு உள்ளே அழைத்து போய், சாப்பிட ஏதாவது அந்த ராஜா வாங்கிக் கொடுப்பார் என்று எதிர்பார்த்தான்.

 

அவர் ஓட்டலைத்தாண்டி நடந்தார். காலை டிபன் ஆகிவிட்டதா என்று அவர் கேட்கவே இல்லை.

 

கார் கொண்டு வந்து நிறுத்தி வைத்து இருப்பார்,  என்று நினைத்தான். ஆனால், சுதாகர் ராஜா, ஒரு ஆட்டோவைக் கூப்பிட்டார். அவனை ஏறச் சொல்லி விட்டு, தானும் ஏறி உட்கார்ந்தார். வந்த ஆட்டோக்காரன் தங்கள் ஊர் ராஜாவைக்  கண்டு கொண்ட மாதரி தெரியவில்லை.

 

ஆட்டோ புறப்பட்டது.

 

ஆட்டோ குலுங்கி குலுங்கி சென்றதில், பசி வயிற்றைக் கிள்ளியது அவனுக்கு.

 

 

*                               *                       *

 

து செங்கல் சுவரில் அமைந்த ஒரு பழைய அரண்மனை. வெளி சுவர் உடைந்து இருந்தது. அரண்மனையின் ஒரு சிறு பகுதி மட்டும் உபயோகத்தில் இருப்பது போலத் தெரிந்தது. பெரும்பாலான மற்ற பகுதிகள் பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து காணப்பட்டது. சில பகுதிகள் செம்மண் மேடாக இருந்தது. இதில் இந்த ராஜ குடும்பம் வசிக்கிறதா.. ஆச்சர்யமாய் இருந்தது.

 

அந்த முதியவரின் வயதான மனைவி அதாவது  ராணி அம்மா அவர்கள் இருவரையும் வரவேற்றார்கள்.  எங்கு பார்த்தாலும் செங்கல் சுவரில் இருந்து கொட்டிய செம்மண். அந்த மண்ணோடு குப்பையும், கூளமும் சேர்ந்து இருந்தது. ஏன் இப்படி பராமரிக்கப் படாமல் இந்த அரண்மனை, இருக்கிறது என்பது அவனுக்கு உறுத்தியது.

இந்த பாழடைந்த அரண்மனையில் அந்த நகை பெட்டி எங்கோ இருக்கிறது என்பதும்,  அதை அந்த சுதாகர் ராஜா கண்டு பிடிக்க தான் உதவவேண்டும் என்பதும் நினைவுக்கு வந்தது.

 

அந்த ராணி அம்மா அவனை மேல் மாடிக்கு கூட்டிக் கொண்டு போனார். அந்த ராஜாவால் மேல் மாடி வரைக்கும் படி ஏறி வர முடியவில்லை.

 

“ இந்த ரூமுல  தங்கிக்கோங்க..” என்று சொல்லிவிட்டு ராணி அம்மா கீழே போக,

 

இந்த ராஜ குடும்பமும், இந்த அரண்மனையும் தான் எதிர்பார்த்த மாதரி  இல்லை என்பது புரிந்தவுடன் ஒரு பெருமூச்சு வந்தது அவனுக்கு. வறுமையின் உச்ச கட்டத்தில் இருக்கும் இவர்களிடமிருந்து பூஜை, தட்சிணை என்று பணம் கறக்க முடியுமா..

 

பசியில் வயிறு எரிந்தது. தன்னிடம் பணம் இல்லை என்பதையோ, காலையில் இருந்து தான் சாப்பிடவில்லை என்பதையோ வெளிக்காட்டினால், தான் பெரிய ஆள் இல்லை என்பது அவர்களுக்கு தெரிந்து விடும் என்பதால் அவர்கள் ஏதாவது சாப்பிட கொடுக்கும் வரை பசியை அடக்கியாகி வேண்டும் என்பது புரிந்தது அவனுக்கு.

 

ஜன்னலுக்கு அருகில் போய் நின்று அரண்மனையை சுற்றி நோட்டம் விட்டான். ஒரு காலத்தில் ரொம்ப வசதியாக இருந்திருப்பார்கள் என்பது தெரிந்தது.

 

முன் வாசலில் அமைந்த கம்பி கேட்டைப்  தள்ளிக் கொண்டு, ஒரு பையன்,  சிறிய மூட்டையை தலையில் வைத்துக் கொண்டு வருவது தெரிந்தது. மளிகை சாமான் போல் தெரிந்தது.

 

அந்த மளிகை சாமான்களின் வரவுக்காக வராண்டாவின் வாசலில் நின்று கொண்டிருந்தார் அந்த சுதாகர் ராஜா. அவரைப் பார்த்தவுடன் அந்த பையன், “ பழைய கடனே இன்னும் பாக்கி இருக்குது.. இதுக்கு மேல கடன் கொடுக்க முடியாதுன்னு முதலாளி சொல்ல சொன்னார்..” என்றான்.

 

“ மெதுவா பேசு.. வீட்டுக்கு விருந்தாளி வந்திருக்காங்க..” என்றார்   சுதாகர் ராஜா, அந்த மளிகைக் கடை பையனிடம்.

 

அவன் சாப்பிட்டு முடித்தவுடன், அந்த சுதாகர் ராஜா தன் சின்ன பாட்டி ரூபவதி எப்படி கொடுமைப் படுத்தப் பட்டாள் என்பதை பற்றி சொன்னார்.

 

“ ஏற்கனவே இந்த நகைப் பெட்டியை தேடறதுக்காக இந்த குடும்பத்துக்காரங்க இந்த அரண்மனைய பல எடத்தில இடிச்சிருக்காங்க.. அப்படி இடிக்கும் போது,  இந்த அரண்மனை பல எடங்கள்ள இடிஞ்சி விழுந்திருக்கு.. அப்படி இடிஞ்சி விழும் போது, அதில சிக்கி என்னோட அப்பா பிரேம் குமார், ஒரு சித்தப்பா, என்னோட ஒரு தம்பி,  இப்படி நிறய பேரு இறந்து போயிருக்காங்க.. அதுக்கு காரணம் அந்த ரூபவதியின் ஆவிதான்னு சொல்றாங்க.. அந்த ஆவி இந்த நகைப் பெட்டியை பாதுகாத்துக்கிட்டு வருதுதாம்… அதுக்குதான் பரிகார பூஜை செய்யணும்.. ”

 

இதைக் கேட்டு பரந்தாமனுக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. ரூபவதி ஆவிக்கு பரிகார பூஜை செய்ய வேண்டுமா..

 

“ ஏற்கனவே கேரளாவில இருந்து ஒரு மந்திரவாதியை கூட்டிக்கிட்டு வந்து பாத்தோம்.. அவன் முடியாதுன்னு சொல்லிட்டு ஓடிட்டான்.. அதனால நம்ம தமிழ் நாட்டு முறைப் படி பரிகார பூஜை பண்ணலாம்னு உங்கள வரவழைச்சோம்..”

 

மறுபடியும் பரந்தாமனுக்கு உடம்பெல்லாம் நடுங்கியது.

 

 

“  பெரிய பெரிய மந்திரவாதிகளே முடியாதுன்னு சொல்லிட்ட பிறகு நான் என்ன செய்ய முடியும்..” என்று சொல்லிவிட்டு, கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தான்.

 

பிறகு எழுந்து வேகமாய் நடந்து தனக்கு கொடுத்த ரூமுக்கு வந்தான். தன் பெட்டியை எடுத்து, துணிகளை அடுக்கி,  சுட்கேசுடன் கீழே இறங்கினான்.

 

“ முடியாதுன்னு ஊருக்கு கெளம்பறீங்களா..” என்றார் சுதாகர் ராஜா.

 

“ ஆமாம்..” என்றான் அவன்.

 

அதிர்ச்சி அடைந்த அவர் கொஞ்ச நேரம் யோசித்தார்.

 

“ இன்னொரு விஷயம் சொல்றேன்.. அது வழியா நீங்க உதவ முடியுமான்னு பாருங்க..” என்றார்.

 

இவர்களிடம் இருந்து எதுவும் கறக்க முடியாது என்பதால், கிளம்பி விடுவதே நல்லது என்று  மனதில் தோன்றியது. அவன் எதுவும் பேசவில்லை. அவரே தொடர்ந்தார்.

 

“ அந்த ரூபவதியை அடிச்சி துரத்தினதற்கு  சில வருஷம் கழிச்சு, அந்த நகைப் பெட்டி சம்பந்தமா ஒரு முக்கியமான விஷயம்  தெரிய வந்ததாம்… அந்த விஷயத்தை வைச்சி, அந்த நகைப் பெட்டியை கண்டு பிடிக்க முடியுமான்னு பாருங்க..”

 

“ என்ன அது..” ஆர்வமில்லாமல் கேட்டான்.

 

“ அந்த நகைப் பெட்டியை பத்தி என் தாத்தாவும் ரூபவதியும் பேசினதை ஒட்டுக் கேட்டதா சொன்ன அந்த வேலைக்காரன், தான் காதில கேட்டது நகைப் பெட்டியா, இல்ல வெத்தலைப் பெட்டியான்னு சந்தேகம்னு சொன்னானாம்..”

 

“ அப்படியா.. அவனை போட்டு அடிச்சி இருப்பாங்களே..”

 

“ அதை விடுங்க.. இப்ப அதுவா முக்கியம்.. அதனால, வெத்தலைப் பெட்டிக்கும், நகைப்பெட்டிக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்குமான்னு யோசிக்க ஆரம்பிச்சாங்களாம்..”

 

“ மேல சொல்லுங்க..” என்றான் பரந்தாமன்.

 

“ அந்த வேலைக்காரனோட பலதடவை பேசினாங்களாம்… நீ கேட்டதை எல்லாம் ஒன்னு விடாம சொல்லுன்னு, சொல்ல வைச்சாங்களாம்.. அதை வச்சு, சில விஷயம் கண்டு பிடிச்சிருக்காங்க.. நகைப் பெட்டியை எங்கோ அரண்மனையில ஒளிச்சு வைச்சிட்டு, அந்த நகைப் பெட்டி இருக்கிற எடத்தை எங்க தாத்தா சின்ன பாட்டி ரூபவதிகிட்ட சொல்லி இருக்கலாம்.. அப்படி ஒளிச்சு வைச்சி இருக்கிற எடத்தை கண்டுபிடிக்க ஒரு வரைபடம் வரைஞ்சி ரூபவதிகிட்ட கொடுத்து இருக்கலாம்… அந்த வரைபடம் வெத்தலைப் பெட்டியில இருந்திருக்கலாம்னு பின்னாடி தெரிய வந்திச்சாம்.. இதுக்குள்ள பத்து பதினைந்து வருஷம் ஆயிடுச்சாம்….”

 

பரந்தாமன் கொஞ்ச நேரம் யோசித்து விட்டு சொன்னான்.

 

“ இதெல்லாம், ரூபவதி போனதுக்கு அப்புறம் தெரிய வந்துருக்கும்.. அந்த மேப் ரூபவதி வசம் இருக்குதுன்னு தெரியாம, ரூபவதியை அடிச்சி துரத்திட்டாங்க போலிருக்கு….”

 

“ ஆமாம்..”

 

“ அந்த ரூபவதியை உடனே கண்டு பிடிச்சிருக்கலாமே..”

 

“ ரூபவதி அடி வாங்கி வாங்கி, இந்த அரண்மனையை விட்டு போகும் போதே அரை உயிரோட தான் போனாங்களாம்.. அவங்க காகிநாடா போனவுடனே எறந்து போயிட்டாங்களாம். அந்த வரைபடம் அவங்க குடும்பத்தில யாரிடமாவது இருக்கணும்.. நீங்க காகிநாடா போய் அந்த வரைபடத்தை கண்டுபிடிச்சி கொண்டாந்து இந்த நகைப் பெட்டியை எடுத்து தர முடியுமா..”

 

யோசித்த பரந்தாமன், “ அந்த ரூபவதியோட வாரிசுங்க விலாசம் தெரியுமா..” என்று கேட்டான்.

 

-தொடரும்

Series Navigation‘ இளைய ராணியின் நகைப் பெட்டி’ 4‘ இளைய ராணியின் நகைப் பெட்டி’ – 2
author

தாரமங்கலம் வளவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *