உத்தமம் INFITT – உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றத்தின் மாநாடு…

author
1
0 minutes, 4 seconds Read
This entry is part 21 of 23 in the series 14 அக்டோபர் 2012

கோவிந்த் கருப் ( Govind Karup )

” கூடுவோம்,
கொண்டாடுவோம்..
நமது இனம் தலைநிமிர
அறிவுத் தமிழ் நிலை உயர்த்துவோம்… “
( கோவிந்த் கருப் )

மொழி நமது முக அடையாளம்… அதன் கருத்தாற்றல் நமது அக அடையாளம்…
தமிழ் நமக்கு நெஞ்சம் நிமிர்த்தும் வலிமையை தந்திருக்கிறது….

கூடிப் பழகும் உலக வாழ்வில் நாம் கூனிக் குருகாமல் இருக்க தமிழ் நமக்கு மரியாதையைப் பெற்றுத் தந்திருக்கிறது…

பொருளாதார காரணங்களுக்காக நாம் இடம் பெயர்ந்து போனாலும் அவ்வூர் மொழியை நாம் கற்றால் தான் பொழைப்பு நடத்த முடியும் என்று திணிக்கப்பட்ட ஹிந்தி மொழிக்கு தரப்படும் முக்கியத்துவம் தமிழுக்கு தமிழகத்தில் இல்லை..

ஹிந்தி படிக்காதது ஒரு தலைமுறைக் குற்றம் என்பது ஒரு பேத்தலான வாதம்…
ஹிந்தி இந்தியாவை இணைக்கும் என்பது முட்டாள்தனத்தின் உச்சம்…
வடக்கத்திய இனம் பொருளாதார ரீதியாக நம்மை ஆளுமை செய்யும் முயற்சியே அது..

நமது தமிழர்கள் அன்று கரும்பு காட்டு கூலிகளாகவும், கீழ்நிலை கூலிகளாகவும் வேலை தேடிச் சென்ற போது அங்கு போய் ஹிந்தி திணறிக் கற்றார்களோ, அது போல் இன்று தமிழகம் வரும் பீகார், மற்றும் வடக்கத்தியருடன் தெருவிற்க்கு தெரு பாணி பூரி கடை வந்துள்ளது… ஆனால், அவர்கள் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் கற்கிறார்கள்…

நாம் அங்கங்கு அவர்கள் குறைந்த பட்ச தமிழ் கற்க நிலையம் நடத்தலாம்…
அதுவிட்டு, இதர் ஆவோ என்கிறோம்..

அது விட்டு கஷ்டப்பட்டு மத்திய அரசு அலுவலகங்களில் இன்று ஒரு ஹிந்தி வார்த்தை என்று KAR வரி , என்று படித்து அவனுக்கு நாம் வாழ நமது கௌரவத்தை வரியாக கட்டி, மானம் இழக்கிறோம்..
தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, வரும் எத்துனை ஹிந்திக்காரர்கள், தமிழோ, கன்னடமோ, மலையாளமோ, மராட்டியோ கற்கிறார்கள்…

இன்று அறிவாற்றல் வென்றே தமிழர்கள் வெகுவாக புலம் பெயர்ந்து இருக்கிறார்கள்.
இதோ உலகை , கோடு தாண்டாமல் வீடுகள் நுழைந்து இணையம் இணைக்கிறது…

அந்த இணையத்தில் தமிழ் இன்று விளையாட களம் அமைத்தவர்கள், புலம் பெயர்ந்து எதோ உறவு நூழிலை அறுந்து போன உணர்வில் சோகமாய இருந்த போது, வாராது வந்த மாமணியாய் வந்த இணையத்தில் தமிழ் வளர புலம் பெயர்ந்தவர்கள் பங்களிப்புச் செய்தார்கள்.

அவர்களின் பிரிவு சோகமே , இணையத்தில் தமிழின் உறவு மகிழ்ச்சி ஆனாது…

எம்.எஸ் விஸ்வனாதனா..? இளையராஜாவா..? யார் பாடல் பெரிது என்பதை முகம் தெரியாமல் வாதித்து சந்தோஷம் கண்ட tfmpage ஆகட்டும்,

அரட்டையுடன் project madurai முயற்சி கண்ட tamil.net ஆகட்டும்,

சிந்தனையும், எழுத்து எண்ணங்களும் 32 பக்கத்தில் அடங்கிய போது, திறந்த வெளியே எழுத்துக்களின் திரையாக வந்த இணைய இதழ்கள் ஆகட்டும், பிளாக்குகள் ஆகட்டும்..

எந்த பத்திரிக்கையும் அனுமதிக்காத கருத்துக்களை பிரசுரம் ஆக்கும் திண்ணை.காம் ஆகட்டும்….

எல்லாம் நமது உணர்வுகளுக்கு வடிகாலாய், ஆன்மாவின் வெளிப்பாடாய் இருப்பினும்,
அது நிமிர்ந்து நிற்க ஒரு முதுகெலும்பாய்,
பரவி வியாபிக்க ஒரு நரம்பு மண்டலமாய்,
கிளர்ந்து வாழ ஒரு ரத்தமாய்..
துடித்து ஜீவிக்க இதயமாய்,
தமிழ் சுவாச நுரையீரலாய்..
இருக்க வேண்டிய கட்டமைப்பின் தர நிலை உயர, உதவும் ஒரு மன்றமே  INFITT.org

இதில் உறுப்பினராய் சேருதலும், முடிந்தால் அம் மாநாடு வருதலும் நமது கடமை…
டிசம்பர் 28 – 30 2012 ல் ,
தமிழ் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைந்து சிதம்பரத்தில் நடக்கிறது.
புலம் பெயர்ந்தவர்களும் கட்டாயம் வர வேண்டும் என்று, உலகத்தின் பெரும் பகுதியில் பொதுவாக இருக்கும் விடுமுறை காலத்தில் நடக்கிறது.

இந்தியாவிற்கு வரும் தமிழர்களே ஒரு நாள் ஒதுக்குங்கள்…
விழா ஏற்பாட்டாளார்கள் சிதம்பரம் வரும் தமிழர்கள், அதன்
சுற்றுப் புறத்தில் இருக்கும் சுற்றுலா தளங்களுக்கு இவர்கள் போய் வர ஒரு தகவல் இணையத் தளம், கால் செண்டர் என இப்போதே அமைக்க வேண்டும்…

தமிழால் நாம் வாழ்ந்தோம்.. தமிழ் நமது ஆணிவேர்.. நாம் அதன் விழுதுகள்… இது இரு நிலை உறவு…

கூடுவோம், கொண்டாடுவோம்.. நமது இனம் தலைநிமிர நமது அறிவுத் தமிழ் நிலை உயர்த்துவோம்…
கட்டுரை சமர்பிக்க விரும்புவர்களும் infitt.org இணையம் பாருங்கள்…

அவர்கள் தளத்தில் இருந்து…..

உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பின் சார்பில் இந்த ஆண்டின் இறுதியில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மொழியியல் உயராய்வு மையத்தோடு இணைந்து பதினொன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு – 2012 நடக்கவிருக்கிறது என்னும் செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்வுகொள்கிறோம். உத்தம நிறுவனம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு பன்னாட்டு அமைப்பு ஆகும்.

கணினி, இணையம் ஆகியன தொடர்பாகத் தமிழின் பயன்பாடுகள் பற்றிய ஆய்வுகள் உலகெங்கிலும் தமிழர்களிடையே பரவும் வகையில் உலகத் தமிழ் இணைய மாநாடுகளைக் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உத்தம நிறுவனம் நடத்திவருகிறது என்னும் தகவலை உங்களோடு பகிர்ந்துகொள்ள விழைகிறோம். உத்தம நிறுவனம் உலகத் தமிழர்களைக் கணினி வாயிலாக இணைப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றால் அது மிகையாகாது.

இது வரை ஏழு மாநாடுகளை அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, ஆகிய நாடுகளில் முன்னனிப் பல்கலைக் கழகங்களோடு இணைந்தும், தமிழகத்தில் மூன்று மாநாடுகளைத் தமிழக அரசின் முழு ஆதரவோடும் உத்தம நிறுவனம் நடந்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.. தமிழ்த் தொடர்பான கணினி சார் மொழியியல் துறையில் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மொழியியல் உயராய்வு மையத்தில் வரும் டிசம்பர் 28 முதல் 30 வரை “உலகத் தமிழ் இணைய மாநாடு 2012”ஐ நடத்த உத்தமத்தின் செயற்குழு முடிவெடுத்துள்ளது. அண்ணாமலைப் பல்கலைக் கழக மொழியியல் பேராசிரியர் மா. கணேசன் அவர்கள், மாநாட்டின் உள்ளூர்க் குழுவுக்குத் தலைமை தாங்கவிருக்கிறார். உத்தமம் அமைப்பின் துணைத்தலைவர் திரு. இளந்தமிழ் அவர்கள் மாநாட்டின் பன்னாட்டுக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.முந்தைய இணைய மாநாடுகளைப் போலவே வரும் 2012 மாநாடும் கருத்தரங்கு, கண்காட்சி, மக்கள் கூடம் என்று மூன்று முனைகளில் செயல்படும். ஆய்வுக் கருத்தரங்கு நிகழ்வுகள் டிசம்பர் 28,29 ஆகிய இரண்டு நாட்களில் நடக்கவிருக்கிறது. கண்காட்சியும் மக்கள் கூடமும் டிசம்பர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களில் நடக்கும். மாநாட்டுக்குப் பதிவு செய்த பேராளர்கள் மட்டுமே கருத்தரங்கு மற்றும் பயிலரங்கில் கலந்து கொள்ளலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். கண்காட்சியிலும், சமூகக் கூடத்திலும் பொதுமக்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்கலாம்.

கருத்தரங்குகளில் பல்வேறு ஆய்வாளர்கள் கணினித்தமிழ் குறித்த தங்களின் ஆய்வுகளை ஏனைய ஆய்வாளர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. மாநாட்டின் கருத்தரங்குக் குழுவுக்கு முனைவர் பத்ரி சேஷாத்ரி அவர்கள் தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ளார். கருத்தரங்குக் குழு மாநாட்டுக்கான ஆய்வுக் கட்டுரைகளைத் தேர்வு செய்வதுடன், கருத்தரங்குகளைச் செவ்வனே நடத்தும் பொறுப்பையும் வகிக்கும். இவ்வாண்டின் கருத்தரங்குக்கு “செல்பேசி மற்றும் பலகைக் கணினிகளில் தமிழ்க் கணிமை” என்ற தலைமைக் கருத்தை ஒட்டிய ஆய்வுக் கட்டுரைகளை வரவேற்கிறோம். இது தவிர, கணினி சார் மொழியியல், திறவூற்று மென்பொருள் ஆய்வுகள், மின்வணிக முறைகள், கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் போன்ற கணித்தமிழ் வளர்ச்சிக்குப் பயன் தரும் பல்வேறு ஆய்வுத் துறைகளிலும் கட்டுரைகளை வரவேற்கிறோம்.
… மேலும்  www.INFITT.org

Series Navigationஅக்னிப்பிரவேசம்- 5கதையே கவிதையாய்! (9)
author

Similar Posts

Comments

Leave a Reply to Govind Karup Cancel reply

Your email address will not be published. Required fields are marked *