உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் – 4 – தி ஹேன்ட் மெய்டன்

author
0 minutes, 5 seconds Read
This entry is part 2 of 16 in the series 6 மே 2018

அழகர்சாமி சக்திவேல்

திரைப்பட விமர்சனம் –

2016-இல் வெளிவந்த தி ஹேன்ட் மெய்டன்(The Hand Maiden) என்ற இந்த கொரியத் திரைப்படம், தனது படம் முழுக்க, நிறைய உடல் உறவுக் காட்சிகளைக் கொண்டுள்ளது. ஆண்களையும், பெண்களையும் சுண்டியிழுக்கும் அத்தனை ஆபாசக் காட்சிகள் இருந்தும், படம் எண்ணற்ற உலக விருதுகளை தட்டிச் சென்று இருக்கிறது என்பது இந்தப்படத்தின் கலைத் தரத்துக்கு ஒரு சான்று. A for Apple, B for Ball என்று பிள்ளைகளுக்கு படம் காட்டிச் சொல்லிக் கொடுப்பதுபோல, படத்தில் ஒரு சிறுமிக்கு, ஆண்குறி இது பெண் குறி இது எனப் படம் வரைந்து சொல்லிக் கொடுக்கப்படுகிறது. வக்கிரம் நிறைந்த இது போன்ற காட்சிகள் படம் முழுதும் இருந்தும், இந்தப்படம் பல உலக விருதுகளைத் தட்டிச் சென்று இருக்கிறது. ஆஹா ஓகோ என்று சொல்லக்கூடிய அளவில், பிரமாண்டமான சண்டைக் காட்சிகள் எதுவும் இல்லாமலேயே, நம்மை மயிர்க் கூச்செறிய வைக்கும் கொடூரமான குருரக் காட்சிகள் படம் முழுக்க இருக்கின்றன. இவ்வளவு வக்கிரங்கள் இருந்தும், இந்தப்படம் பல உலக விருதுகளைத் தட்டிச் சென்று இருப்பதற்கான. காரணம் ஒன்றுதான். அது அந்தப் படத்தின் அருமையான திரைக்கதை. கோயிலுக்குள் பக்தியுடன் நுழையும் நமக்கு, நம்மை கைகூப்பி வரவேற்கும் காவல் தெய்வக் கன்னிகளின் பெருங்கொங்கைகள் ஆபாசமாய்த் தெரிவதில்லை. கோயிலைச் சுற்றி வருகையில், தூண்களில் நாம் காணும் உடல் உறவுக் காட்சிகளும், நிர்வாணக் காட்சிகளும் நமக்கு ஆபாசமாய்த் தெரிவதில்லை. காரணம் அங்கே நிர்வாணம், தெய்வீகத்துக்குள் ஒளிந்து கொண்டு மிளிர்ந்து கொண்டிருப்பதே. அது போலவே, இந்தப்படத்தின் இயக்குனரும், தான் சொல்லவந்த ஒரு இக்கட்டான விஷயத்தை காட்சிகளாய் அடுக்கியிருக்கும் விதம், படம் பார்க்கும் நமக்கு, அத்தனை ஆபாசங்களையும் சுவாரஸ்யமாய் சுவைத்து ரசிக்க முடிகிறது. கோழியை வெட்டும்போது பார்க்கும் நமக்கு ஏற்படும் அருவருப்பு, அதே கோழித் துண்டுகளை, பிரியாணிக்குள் பார்க்கும்போது மறைந்துபோவது போன்றதே, இந்தப் படத்தின் ஆபாசக் காட்சிகளும்.

ஹேன்ட் மெய்டன் என்ற இந்தக் கொரியப் படத்தின் திரைக்கதை, 2002-இல் வெளிவந்த “பிங்கர் ஸ்மித்” என்ற வேல்ஸ் நாட்டு நாவலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டு இருக்கிறது. ‘பிங்கர் ஸ்மித்’ என்ற அந்த வேல்ஸ் நாவலின் கதையோ, இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணியின் காலத்தில் நடப்பது போல் எழுதப்பட்ட ஒரு கதை ஆகும். ‘பிங்கர் ஸ்மித்’ கதையின் ஆணிவேரை மட்டும் எடுத்துக்கொண்டு, தனது திரைப்படத்தின் கதையை, ஜப்பான் ஆக்கிரமித்த கொரியாவில் நடப்பது போல, வெற்றிகரமாக மாற்றியிருக்கும் படத்தின் இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 1930-இல் நடக்கும் கதையாக, இத்திரைப்படக் கதை இருப்பதால், கொரியாவின் அந்தக் கால வரலாற்றைக் கொஞ்சம் பார்ப்போம்.

ஜப்பான் பல காலமாகவே கொரிய தீபகற்பத்தைச் சுரண்டி வந்தபோதும், 1910-க்குப் பிறகே, கொரியா. ஜப்பானின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் வந்தது என்பது வரலாறு. அப்போது ஜப்பானில் விவசாயிகள் எண்ணிக்கை அதிகப்படியாய் இருந்ததால், விவசாயிகளின் ஜப்பான் எண்ணிக்கையை குறைக்கும் விதமாய், ஜப்பான் விவசாயிகள், கொரியாவுக்குள் குடியேற ஊக்குவிக்கப் பட்டார்கள். அன்றைய சூழ்நிலையில் கொரிய விவசாயிகளிடம் பத்திரம் பதிந்து சொத்துக்களைப் பாதுகாக்கும் முறை சரியான வகையில் இல்லாமல் இருந்தது. இந்த பலவீனத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட ஜப்பான், முதன் முதலாய் பத்திரம் பதியும் திட்டத்தை கொரியாவுக்குள் கொண்டு வந்தது. அதன் மூலம், எழுத்து ஆதாரம் இல்லாத அத்தனை நிலங்களையும் தனது கைவசப்படுத்தியது. அப்படி கைவசப்படுத்தப்பட்ட நிலங்கள் ஜப்பான் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட, ஜப்பான் விவசாயிகள் கொரியாவுக்குள் குடியேறி, செல்வச் செழிப்பில் வாழ ஆரம்பித்தனர். 1910-இல் ஜப்பானின் நில ஆக்கிரமிப்பு வெறும் 7 சதவிகிதமாய் இருந்தது. ஆனால் 1930-இல் அது 50 சதவிகிதம் ஆகிவிட, கொரிய மக்கள் படிப்படியாக, தங்கள் சொந்த நாட்டிலேயே கூலிவேலை செய்யும் கொடுமைக்கு ஆளானார்கள். சில கொரியர்கள், ஜப்பான அரசாங்கத்திடம் நயந்து பழகி, கொரியாவுக்குள் இருந்த ஜப்பானிய அதிகாரிகளின் பெண்களை மணமுடித்து வாழ்ந்தார்கள். அப்படி ஒரு ஜப்பானியப் பெண்ணை மணந்து ராஜ வாழ்க்கை வாழ்ந்த கவுசிகி என்ற கொரியனே இந்தத் திரைப்படத்தின் கொடூர வில்லன் ஆவான்.

இந்தப் படத்தில் சொல்லப்படும் இன்னொரு புதுமையான விஷயம் சுங்கா(Shunga)  என்ற ஜப்பானிய காமக்கலை வடிவம் ஆகும். பதினொன்றாம் நூற்றாண்டில் ஆரம்பித்த இந்த சுங்கா காமக்கலை, கட்டையில் செதுக்கப்படும் காமச்சிற்பங்கள், காகிதங்களில் வரையப்படும் தூரிகை காம ஓவியங்கள், புத்தகவடிவில் சொல்லப்படும் கொஷோகுபன் என்ற காமக்கதைகள் எனப் பல வடிவத்தில் இருப்பவை. சுங்கா காமக்கலை வடிவங்கள் அதிர்ஷ்டம் தருபவை என்று ஜப்பானியர்கள் நம்பியதால் பெண்கள் தத்தம் வீடுகளிலும், வியாபாரிகள் தங்கள் கடைகளிலும் சுங்கா கலைப்பொருட்களை வைத்து இருப்பது ஜப்பானிய மரபாக இருந்தது. நகரங்களில் வசித்த பெண்கள் சுங்கா காமப்புத்தகங்களை வாடகைக்கு வாங்கிப் படிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்து இருக்கிறார்கள். அன்றைய சூழ்நிலையில், போர் என்பது ஜப்பானிய வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாய் இருந்ததால், போருக்கு செல்லும் சாமுராய் வீரர்களும் இந்த சுங்கா காமக் கலைப்படைப்புகளை தங்கள் கையோடு எடுத்துக்கொண்டு சென்று இருக்கிறார்கள். இருப்பினும், ஜப்பானின் நாகரிகம் படிப்படியாக மேற்கத்திய பாணியைத் தழுவ ஆரம்பித்தபோது, சுங்கா கலை வளர்ச்சி ஒடுக்கப்பட்டது. சுங்கா கலைப்பொருட்கள வைத்து இருப்பது குற்றம் எனச் சொல்லப்பட்டது. அன்றாட வாழ்க்கையில் சுங்கா கலை மறைந்த போதும், பணக்கார வர்க்கத்தில் சுங்கா கலை மறையவில்லை. ஜப்பானியப் பணக்காரர்கள், இது போன்ற சுங்கா காமக்கலை வடிவங்களை தங்கள் பங்களாக்களில், அரசாங்கத்துக்குத் தெரியாமல் சேகரித்து வைத்து இருப்பதை வழக்கமாக்கிக் கொண்டனர். இதற்கென, பெரிய பெரிய அருங்கலையகத்தை தங்கள் மாளிகைக்குள்ளேயே நிறுவி, பொருட்களை சேகரித்து வைத்து தங்களது பணக்கார நண்பர்களிடம் காட்டுவது அப்போதைய மரபாய் இருந்தது. இந்தப்படத்தில் வரும் கொடூர வில்லன் கவுசிக்கும் அது போன்ற ஒரு சுங்கா அருங்கலையகத்தை தனது மாளிகையில் ரகசியமாய் நிறுவுகிறான். பல்வேறு சுங்கா காமப்புத்தகங்களை அதில் சேர்த்து வைக்கிறான். அவனும் பல சுங்கா காமப்புத்தகங்களை எழுதுகிறான் என்று கதை போகிறது.

ஜப்பானியர்களைப் பொறுத்தவரை, கொரியர்கள் தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றே நினைப்பு. எப்படி தென் இந்தியர்கள் என்ன நிலையில் இருந்தாலும் அவர்களை வடஇந்தியர்கள் ‘மதராசி’ என்று கிண்டல் செய்கிறார்களோ அது போன்றே ஜப்பானியர்கள் கொரியர்களை அன்றைய சூழ்நிலையில், தாழ்த்தி வைத்து இருந்தார்கள். கொரியர்களுக்கும், ஜப்பானியர் முன்னால் ஒரு தாழ்ந்த எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. பல கொரியர்கள் ஜப்பானில் வேலை தேடிக்கொண்டு ஜப்பானுக்குள் குடி பெயர்ந்தார்கள். இன்னும் பலரோ ஜப்பானியப் பெண்களை மணந்து, ஜப்பானியக் குடியுரிமை மற்றும் சமூக மதிப்புப் பெற வழி தேடினார்கள். இந்தத் திரைபடத்தில் வரும் வில்லன் மற்றும் கதாநாயகன் ஆன புஜிவாரா என்ற இன்னொரு கதாபாத்திரமும் அதே முறையைக் கையாளுகிறது என்பது படத்தின் ஒரு முக்கியப்பகுதி ஆகும். இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பு, படத்தில் வரும் அந்த இரு பெண்களின் லெஸ்பியன் உடல்உறவுக் காட்சி ஆகும். மேற்கத்தியப் படங்களில் கூட, இப்படி ஒரு அப்பட்டமான லெஸ்பியன் பெண்-பெண் உடலுறவுக் காட்சிகள் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. பாம்புகள் போல இரண்டு பெண்களும் பூந்து பூந்து விளையாடும் அந்தக்காதல் காட்சிகள் பெண் ஓரினச் சேர்க்கையாளர்களையும், ஆண்களையும் ஒரு உச்சத்திற்கு கொண்டு போகும் என்பதில் எனக்கு ஐயமில்லை. நிறைய ஆண்களுக்கு லெஸ்பியன் என்ற அந்த உடல் உறவில் பெண்கள் என்ன செய்வார்கள் என்பது சரியாய்த் தெரிந்து இருப்பதில்லை. இந்தப்படம் லெஸ்பியன் உறவு என்றால் என்ன என்று அக்குவேறு ஆணிவேறாகப் பாடம் நடத்துகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

இனி  படத்தின் கதையைப் பார்ப்போம்.

தி ஹேன்ட் மெய்டன் என்ற இந்தக் கொரியத் திரைப்படம், புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் விருதுக்காகவும், சிறந்த தொழில்நுட்ப விருதுக்காகவும் பரிந்துரைக்கப்பட்ட படம் ஆகும். இதில், கேன்ஸ் சிறந்த தொழிநுட்ப விருது, படத்தின் கலை இயக்குனர் ரூ சாங் கீக்கு கொடுக்கப்பட்டது. காரணம், கொரியாவின் 1930-ஆம் ஆண்டு காலகட்டத்தை அப்படியே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தி இருப்பதற்காகத்தான். ஒரு பணக்கார ஜப்பானியரின் மாளிகை, மாளிகையின் கலைநயம் மிகுந்த படுக்கை அறைகள், அதைச் சுற்றியுள்ள தோட்டம், கதாநாயகி ஹிடேக்குவின் விலை உயர்ந்த ஆடைகள் என படத்தின் ஒவ்வொரு காட்சியிலும், கலை இயக்குனரின் உழைப்பு மிளிர்வதை நாம் காணலாம். முக்கியமாய் சுங்கா காமப்புத்தகங்களை, கதாநாயகி ஹிடேக்கு, பார்வையாளர்களுக்கு படித்துக் காட்டும் அந்த சுங்கா பார்வையாளர் அறையைப்..பார்க்கும்போதே நமக்கு ஒரு பிரமிப்பு ஏற்பட்டுப் போகிறது. இந்தப்படத்தின் இயக்குனர், திரு பார்க் சூன் வூக், இது போன்ற சிக்கலான, வக்கிரம், வன்முறை மற்றும் ஆபாசம் நிறைந்த படங்களை எடுப்பதில் கை தேர்ந்தவர். கொரியாவின் தலைசிறந்த இயக்குனர்களுள் திரு பார்க் சூன் வூக்கும் ஒருவராவார். அவர் கற்பனையின் திறமைக்கு அளவே இல்லை இங்கே ஒரு சிறு காட்சியைக் குறிப்பிட வேண்டும். படத்தின் ஒரு கட்டத்தில், படத்தில் வரும் பார்வையாளர்களுக்காய், கதாநாயகி, ஒரு சுங்கா காமப்புத்தகம் வாசித்துக் காட்டும்படி வில்லனால் பணிக்கப்படுகிறாள். கதையை உணர்ச்சியுடன் படிக்கிறாள் கதாநாயகி. கயிறால் கட்டப்பட்ட இரண்டு ஜோடி வெண்கல மணிகளை, அந்த சுங்கா கதைக்குள் வரும் இரண்டு பெண்கள் தங்கள் பிறப்புறுப்பில் சொருகிக் கொள்வதாகவும், அவர்கள் லெஸ்பியன் உறவின்போது, அந்த வெண்கலமணிகள் ஆவேசமாய் ஒலி எழுப்புதாகவும் கதை வாசித்துக் காட்டுகிறாள் கதாநாயகி. பார்வையாளர் கூட்டம் மெய்மறந்து கைதட்டுகிறது. காட்சியை அங்கே கட் செய்கிறார் இயக்குனர், படத்தின் இறுதிக்கட்டத்தில் கதாநாயகி ஹிடேக்குவும் அவளது லெஸ்பியன் காதலியும் சுபமாய் ஒன்று சேர்கிறார்கள். அவர்கள் கையில் வெண்கல மணிகள் இருப்பதைக் காட்டும் கேமரா, பின் அவர்களை விட்டு மெல்ல நகருகிறது. படம் பார்க்கும் நமக்கு, அந்தப் பெண்களின் சிரிப்புச் சத்தமும் அந்த வெண்கல மணிச்சத்தமும் மட்டும் கேட்பதோடு படத்தை முடிக்கிறார் இயக்குனர். என்ன கற்பனை பாருங்கள். சரி..இனி படத்தின் கதைக்கு வருவோம்.

கதாநாயகி ஹிடேக்கு ஒரு ஜப்பானியப் பெண். பணக்கார ஜப்பானியக் குடும்பத்தில் பிறந்தவள். ஹிடேக்கு சிறுமியாய் இருக்கும்போதே, அவள் அக்காவை வசியப்படுத்தி மணம் முடிக்கிறான் கொடூர வில்லன் கொரியன் கவுசிகி. மனைவியின் ஜப்பானியத் தொடர்பு மூலம் கவுசிக்கு நிறைய ஜப்பானிய அரசாங்க நண்பர்கள் மற்றும் ஜப்பானிய பணக்காரர்களின் நட்பு கிடைக்கிறது. கவுசிகியின் முக்கிய வேலை, சுங்கா காமக்கலை பொருட்களை சேகரிப்பது, தனது சுங்கா காட்சிக் கூடத்திற்கு அவன் நண்பர்களை அழைப்பது, தான் சேகரித்த பொருட்களை அவர்களுக்கு விளக்கி பின் ஏலம் விடுவது. இதுதான் கவுசிகியின் முக்கியவேலை. சில நேரங்களில் அவனே சுங்கா காமக்கதைகள் எழுதி அதற்குப் படமும் அவனே வரைகிறான். தன்னிடம் உள்ள காமப்புத்தகங்களை, அரங்கில் படித்துக்காட்டும்படியும், மீறினால் மனநலக்காப்பகத்தில் சேர்த்துவிடுவேன் எனவும், தனது மனைவியை மிரட்ட, பணக்காரியான ஹிடேக்குவின் அக்கா, கதை படித்த கையோடு, அவமானத்தில் தூக்கு மாட்டி இறந்து போகிறாள். இப்போது சொத்து முழுவதும் ஹிடேக்குவின் வசம் வந்து சேர்கிறது. ஆரம்பத்தில் இருந்தே ஹிடேக்குவை மிரட்டி வளர்க்கும் வில்லன் கவுசிகி, ஹிடேக்குவின் அக்காவிற்கு பதிலாய் ஹிடேக்குவை புத்தகம் படிக்க பயிற்றுவிக்கிறான். புத்தகம் படிக்கும் அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர் ஆக வரும் இன்னொரு கொரிய வில்லன் ஹிஜிவாரா, நிலைமையைப் புரிந்துகொண்டு, கதாநாயகி ஹிடேக்குவை மயக்கி அவள் சொத்துகளை அபகரிக்கத் திட்டமிடுகிறான். அதற்காய், கொரிய பிக்பாக்கெட்காரியான சூக் கீயை தயார் செய்கிறான். சூக் கீ, ஹிடேக்குவின் பணிப்பெண்ணாக மாளிகைக்குள் பிரவேசம் செய்கிறாள்.

ஒருநாள், ஹிடேக்கு குளிக்கும்போது, சூக் கீ அவளுக்கு ஒரு குச்சி மிட்டாய் தருகிறாள். குச்சி மிட்டாயை சுவைக்கும் ஹிடேக்குவிற்கு பல்வலி வந்து விடுகிறது. பல்வலி போக, சூக் கீ. ஹிடேக்குவின் வாய்க்குள் விரலை விட்டு இனிப்பு மருந்து தடவுகிறாள். இரு பெண்களுக்குள்ளும் லெஸ்பியன் காமத்தீ பற்றிக் கொள்கிறது. இருப்பினும், தனது லெஸ்பியன் ஆசையை மறைத்துக் கொள்ளும் சூக் கீ, ஹிடேக்குவிற்கு பொருத்தமானவன் கதாநாயகன் பிஜிவாராதான் என்று ஹிடேக்குவின் மனதை மாற்ற முயல்கிறாள். லெஸ்பியன் ஹிடேக்குவிற்கோ, சூக் கீயின் அழகே பிடித்து இருக்கிறது. கதாநாயகன் பிஜிவாரா , ஹிடேக்குவை மயக்க எவ்வளவோ முயற்சி செய்தும், ஹிடேக்கு அதற்கு இடம் கொடுக்க மறுக்கிறாள். ஒரு நாள், “முதல் இரவில் ஒரு ஆண் மகன் என்ன செய்வான்?” என்று ஹிடேக்கு, பணிப்பெண் சூக் கீயைக் கேட்க, சூக் கீ, படுக்கையில் கதாநாயகன் பிஜிவாரா போல, ஹிடேககுவுடன் லெஸ்பியன் உடல் உறவு கொள்கிறாள். இப்போது இருவரும், தாங்களே பொருத்தமான ஜோடி என்று உணர்ந்து கொள்கிறார்கள். பணிப்பெண் சூக் கீ, நாயகன் பிஜிவாராவை எதிர்த்துப் பேச ஆரம்பிக்க, பணிப்பெண் சூக் கீயை கெட்டவள் என ஹிடேக்குவிடம் போட்டுக்கொடுக்கும் பிஜிவாரா, பணிப்பெண் சூக் கீயை மனநலக் காப்பகத்தில் வலுக்கட்டாயமாக சேர்த்துவிடுகிறான். கொஞ்சநாள் கழித்து, பிஜிவாராவின் உண்மை சொரூபத்தை தெரிந்துகொள்ளும் ஹிடேக்கோ, தனது அக்காள் போலவே தூக்கு மாட்டிக்கொண்டு செத்துப்போக நினைக்க, சரியான நேரத்தில் தப்பி வந்த பணிப்பெண் சூக் கீ, அவளைக் காப்பாற்றுகிறாள்.

இரு பெண்களும், வில்லன் கவுசிகையையும் , வில்லன் பிஜிவாரவையும் புரிந்து கொள்கிறார்கள். கோபப்படும் இரு பெண்களும். முதலில் கவுசிகியின் அந்த சுங்கா அருங்காட்சியகத்தை அழிக்கிறார்கள். பின் இருவரும் சொத்துக்களை மாற்றிய பணத்தோடு சீனாவுக்கு தப்பிச் செல்கிறார்கள். (ஏனெனில், ஓரினச்சேர்க்கை, சீனாவில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று ஆகும்.)  வில்லன் பிஜிவாராவை தனியே சந்திக்கும் ஹிடேக்கோ, அவனோடு உடல் உறவு செய்யும் சமயத்தில், அவனை மயக்க மருந்து கொடுத்து, செயல் இழக்கச் செய்கிறாள். வீட்டை வீட்டு வெளியே சென்ற வில்லன் கவுசிகி, வீடு திரும்பியவுடன், நடந்த.விஷயம் அனைத்தையும் புரிந்துகொள்கிறான் தனது கொழுந்தியாள் ஹிடேக்கு , தனது கைவிட்டுப் போன ஆத்திரத்தோடு, வில்லன் பிஜிவாராவை வீட்டுக்கு அழைக்கும் கவுசுகி, சுங்கா புத்தகம் செய்யும் கட்டர் கொண்டு, பிஜிவாராவின் விரல்களை வெட்டுகிறான். கால்களையும் வெட்டுகிறான். ஒவ்வொன்றாய் வெட்டிக்கொண்டே வரும் கவுசுகி, கடைசியில் பிஜிவாராவின் தந்திரத்தால் செத்துப் போகிறான். கூடவே வில்லன் பிஜிவாராவும் மடிகிறான். தப்பிப்போகும் இரு லெஸ்பியன் பெண்களும் சீன நாட்டுக்கு, போலி பாஸ்போர்ட் மூலம் தப்பிச் செல்கிறார்கள். சந்தோசமாய் வாழ்கிறார்கள் என்பதோடு படம் சுபமாய் முடிகிறது. கடைசி காட்சி வரை, வில்லன் கவுசிகியின் கொடூரத்தனம் தொடர்கிறது. தனது ஹிடேக்கோவை, வில்லன் பிஜிவாரா கெடுத்துவிட்டான் என்பதை புரிந்துகொள்ளும் வில்லன் கவுசிகி, அவளை எப்படிக் கெடுத்தான், என்னவெல்லாம் செக்ஸ் செய்தான் என்று அவன் எழுதும் சுங்கா கதை பாணியில் கேட்பது மிக மிக நகைச்சுவை.

என்னைப் பொறுத்தவரை, கதையுடன் கூடிய எந்த ஆபாசமும் சரியானதே. இந்தப்படம் ஆபாசத்தை சரியாகக் கையாண்டு இருக்கிறது என்தை, நான் சொல்லாவிட்டாலும், இந்த படத்தின் வெற்றியும் அது பெற்ற உலக விருதுகளும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது.

அழகர்சாமி சக்திவேல்


Series Navigationபுதிய சூரியக்கதிர் மின்சக்தி உற்பத்திப் பொறிநுணுக்கத்தை எப்படித் திறனாய்வு செய்வது ?”பாவண்ணனைப் பாராட்டுவோம்” விழா
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *