ஐ.எஸ்.ஐ.எஸ் வன்முறையால் குர்திஸ்தான் நிலத்துக்கு திரும்ப வரும் ஜோராஸ்டிரிய மதம்

author
4
0 minutes, 6 seconds Read
This entry is part 2 of 23 in the series 21 ஜூன் 2015

ஜூடித் நியூரிங்க்

நூரி ஷரீஃப்
நூரி ஷரீஃப்

சுலைமானி, குர்திஸ்தான்
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர், ஜொராஸ்டிரிய மதம் தான் தோன்றிய நிலத்துக்கு மீண்டும் வருகிறது. ஈராக்கிய குர்திஸ்தான் அரசின் மத அமைச்சகம், இங்கு ஜர்தாஷ்டி ( Zardashti) என்று அழைக்கப்படும் ஜொராஸ்டிரிய மதத்தை ஒரு அங்கீகரிக்கப்பட்ட மதமாக பதிவு செய்து, குர்து அரசாங்கம் இந்த மதத்துக்கு என்று தனி அமைச்சகமும், இந்த மதத்தை பின்பற்றுபவர்கள் தங்கள் கோவில்களைகட்டிகொள்ள அனுமதியும் அளிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறது.

ஐரோப்பாவில் ஜோராஸ்டிரிய அமைப்பை 2006இல் உருவாக்கியவரும், பின்பு இந்த மார்ச்சில், குர்திஸ்தானில், எர்பில் நகரத்தில் அதிகாரப்பூர்வமாக திரும்ப கொண்டுவந்ததாக அறிவித்ததுமான இந்த ஜொராஸ்டிரிய இயக்கத்தை துவக்கியவர்களில் ஒருவரான நூரி ஷரிஃப் ”அதற்கான நேரம் வந்துவிட்டது” என்று கூறுகிறார். ஏப்ரலில், குர்திஸ்தான் ஜொராஸ்டிரிய மத தலைமை அமைப்பு (Supreme Council of Zoroastrians in Kurdistan) ஸ்தாபிக்கப்பட்டது.

இந்தியாவிலும் ஈரானிலும் ஏற்கெனவே மிகவும் செயல்பாட்டுடன் இருக்கும் இந்த இயக்கத்தில், தற்போது ஈராக்கிய குர்திஸ்தானில் சுமார் 100000 பேர்கள் இருப்பதாக கூறுகிறது. இது முக்கியமாக இஸ்லாமிய காலிபேட்டின் வன்முறைக்கு எதிர்வினையாகவே இவ்வளவு பேர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்று குர்திஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான சுலைமானி நகரத்தில் பேட்டியின் போது, நூரி ஷரீஃப், கூறினார்.

மக்கள் தங்கள் மீது திணிக்கப்படுவதை பார்க்கிறார்கள். வேறொரு மதக்கொள்கைக்காக அடக்குமுறைக்கு ஆளாக்கப்படுவதை பார்க்கிறார்கள். இது இப்போது நமது தலைவிதியை நாமே தீர்மானித்துகொள்வதற்கான நேரம். ஏனெனில் நாங்கள் ஓய்ந்து போய்விட்டோம். டாயீஷ் (Daesh இஸ்லாமிய காலிபேட்டை அவதூறாக அரபியில் குறிக்கும் வார்த்தை) இடமிருந்து எந்த ஒரு நல்ல செயல்களையும் நாங்கள் பார்க்கவில்லை. இது சாவையும் வன்முறையையுமே எங்களுக்கு தருகிறது” என்று கூறினார்.

ஜொராஸ்திரியர்கள் ஜொராஸ்டர் அல்லது ஜராதுஸ்த்ராவை பின்பற்றுகிறார்கள். இவர் இங்கே ஜர்தாஸ்த் என்று அழைக்கப்படுகிறார். இவர் கிமு 6ஆவது நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் இஸ்லாம் கிறிஸ்துவத்தில் இருப்பது போன்று ஒரு இறைதூதர் இல்லை என்று ஷரீஃப் வலியுறுத்துகிறார்.

“அவர் கடவுளால் தன் பிரதிநிதியாக அனுப்பப்படவில்லை. அவர் பிரபஞ்த்தையும், மனித வாழ்க்கையை பற்றியும் சிந்தித்தார். ஜராஸ்த் முழு ஞானம் பொருந்திய மனிதர்.. என்னை பொறுத்தமட்டில் அவர் ஒரு தீர்க்கதரிசி. ஆனால், அவர் தானே உருவாக்கிய தத்துவத்தை தருகிறார்” என்றார்.

மேஜையில் தன் முன்னே இருந்த ஒரு சிறிய பச்சை புத்தகத்தை காட்டினார். “இந்த புத்தகத்தில் அவரது சிந்தனையின் சுருக்கிய வடிவம் இருக்கிறது. மனித வாழ்க்கை, கடவுள், மதம், பிரபஞ்சம் ஆகியவற்றை பற்றிய நூறு கேள்விகளை அவர் எழுப்பினார். இது கடவுளின் வார்த்தை அல்ல. மனிதர்களின் வார்த்தைகள்” என்று ஷரீப் தொடர்ந்தார்.

ஜெர்மனியிலிருந்து சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னால், சுலைமானி நகருக்கு வந்து, குர்திஸ்தானின் புராதன மதத்தை மீண்டும் கொண்டுவர வேலைகளை ஆரம்பித்தார், மேலும் அவரது இந்த முயற்சிக்காக ஜராதுஸ்த்ராவின் கருத்துக்களை தொகுத்து புத்தகமாக ஆக்கி பிரசுரம் செய்தார். இந்த கருத்துக்கள் ஜொராஸ்டிரிய மதத்தின் முக்கியமான புத்தகமாகமான அவெஸ்தாவிலிருந்து எடுக்கப்பட்டவை.

“ஒரே கடவுளை வணங்கவேண்டும் என்ற கருத்தை முதன் முதல் வைத்தவர் ஜராஸ்த் அவர்களே. இந்த கடவுள் அஹூரா மாஸ்தா, இருப்பினை உருவாக்கியவர்” என்றார்.

இந்த மதத்துக்கு மக்களை ஈர்க்கும் முக்கியமான விஷயம், இந்த மதத்தை உருவாக்கியவர் ஒரு குர்து என்பதே. அவரை பற்றி அதிகம் தெரியாது. அவர் தற்போதைய உர்மியா (இன்று ஈரானில் உள்ளது) நகரில் பிறந்தவர் என்பதையும், அவர் ஒரு போரில் இறக்கும்போது வயது 77 என்பதையும் நாம் அறிவோம். “அவர் இருக்கும்போது எதிர்ப்பு இருந்தது. பிறகு நாங்கள் அலெக்ஸாந்தரால் வெற்றிகொள்ளப்பட்டோம். அதன் பிறகு இஸ்லாமிய ஆக்கிரமிப்பு வரும் வரைக்கும் நாங்கள் ஒன்று இணைந்திருந்தோம்” என்றார்.

ஏற்கெனவே ஜோராஸ்திரியர்களுக்கு இந்தியாவிலும், ஈரானில் கெர்மான் நகரிலும் மையங்கள் உள்ளன.

“மூன்றாவதாக சுலைமானி நகரில் திறக்க திட்டம் வைத்திருக்கிறோம். குர்திஸ்தானில் பல நகரங்களில் நாங்கள் கூட்டங்கள், செமினார்கள் நடத்தியிருக்கிறோம். ஏராளமான மக்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். “ என்று ஷரீப் கூறினார். “குர்துக்களின் மத்தியில் மீண்டும் வேர்களுக்கு செல்ல பெரும் ஆர்வம் இருக்கிறது. சமூகத்தின் பலதரப்பட்ட மக்களிடமிருந்து ஆர்வத்தை பார்க்கிறோம். பேராசிரியர்கள், அரசியல்வாதிகள், சாதாரண மக்கள். பல லட்சக்கணக்கான மக்கள் இதில் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். எண்ணிக்கை அதிகரித்துகொண்டே வருகிறது” என்றார்.

பல பெரிய நகரங்களில் கவுன்ஸில்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அரசாங்கப்பூர்வமான அனுமதிக்காக காத்திருப்பதாக கூறினார். அது வந்ததும் அனைவரும் வரக்கூடிய ஒரு மையம் திறக்கப்படும் என்று கூறினார்.

கோவில்களும் திறக்கப்படும், ஜொராஸ்திரிய மதத்தின் வார்த்தையில் இந்த கோவில்களுக்கு அதாஷ்கா என பெயர். அதாவது தீ வீடு. ஏனெனில் தீ புனிதமானதாக கருதப்படுகிறது.

”அவை முன்பு இருந்த ஒரிஜினல் இடங்களிலேயே திறக்கப்படும். Darbandighan, Shaklawa, Soran, Chami Rezan, Qishqapan தார்பந்திகன், ஷாக்லவா, சாமி ரெஷான், கிஷ்காபான் ஆகிய இடங்கள். கிஷ்காபானில் புதைக்கப்பட்டிருக்கும் அரசரே ஜரதாஷ்டி என்று ஷரீப் கூறினார். “எங்களுக்கு வரலாறு வழிகாட்டும். நாங்கள் எங்கள் பழைய கோவில்களை புதுப்பிப்போம் “ என்றார்.

ஆனால் தற்சமயம், இந்த குழு கலாசாரத்தையும் பாரம்பரியத்தையுமே குறி வைத்துள்ளது. “நாங்கள் மதத்திற்கு வந்துவிடுங்கள் என்றோ, மக்கள் இத்தனை மணி நேரம் தொழுகை செய்யவேண்டும் என்றோ கட்டுப்படுத்தமாட்டோம்” என்றார்.
Ateshkadeh_yazd1-810x507
இஸ்லாமுக்கு முந்தைய மதத்தை புனருத்தாரணம் செய்வதும், இஸ்லாமை விட்டு வெளியேறி தங்கள் மதத்துக்கு வாருங்கள் என்று அழைப்பதும், இவை தடை செய்யப்பட்டவை என்று கருதும் முஸ்லீம்களை கோபப்படுத்தலாம் என்றாலும், ஷரீபும் அவரது இயக்கத்தினரும் வெளிப்படையாகவே வேலை செய்ய உறுதி பூண்டுள்ளார்கள்.

“மறைவாகவும் ரகசியமாகவும் தங்கள் மதத்தை பின்பற்றும் காலத்தை குர்திஸ்தான் கடந்துவிட்டது. நாங்கள் சட்டங்களையும் வழிமுறைகளையும் பின்பற்றுவோம். எங்களை சட்டம் பாதுகாத்தால், அது எங்களை காப்பாற்றும் என்று நம்புவோம். எல்லா மதங்களும் இறைவனை வழிபட உரிமை உள்ளவை” என்று அவர் கூறினார்.

அது ஆபத்தானது என்று அறிந்திருந்தாலும்.

‘நாங்கள் எங்கள் முடிவை உறுதியுடன் எடுத்திருக்கிறோம். இந்த குறிக்கோள் எங்களிடம் பல தியாகங்களை எதிர்பார்க்கலாம். அவர்களால் கொல்லவும் வன்முறைஆட்டம் போடவும்தான் முடியும்” என்று ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற முஸ்லீம் தீவிரவாதிகளை குறித்து ஷரீப் கூறினார். “அவர்களிடம் பல வாதங்கள் இருக்கலாம். ஆனால், ஞானம் இல்லை. அதனால்தான் அவர்கள் கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். எங்களுக்கு அவர்களிடம் பயமில்லை. அவர்களது மதம் பிற்போக்கானது” என்றார்.

பெரும்பான்மையான குர்துகள் முஸ்லீம்கள் என்றாலும், அவர்கள் சமாதானமாக சேர்ந்து வாழமுடியும் என்று ஷரீப் எதிர்பார்க்கிறார். “நாங்கள் அமைதியாக சேர்ந்துவாழ்வதையே விரும்புகிறோம். எங்கள் கலாசாரத்தில் வன்முறைக்கான வேர்கள் இல்லை. ஜர்தாஸ்த் அவர்களின் ஞானத்தில் ஒன்று. அவர் சொல்கிறார். “கஷ்டமான காலங்களில் நான் என் வாளை எடுக்கமாட்டேன். ஆனால் ஒரு விளக்கை ஏற்றுவேன்”

மூலம்

ஸ்டாக்ஹோம் (ஸ்வீடன்)இல் உள்ள குர்துகள் ஜொராஸ்திரிய மதத்தை ஸ்தாபித்து கோவில்களை கட்டி வழிபாடுகளை துவக்கியுள்ளதை பற்றிய கட்டுரை

மொபெ: ஆர் கோபால்

Series Navigation1977-2009 காலகட்டத்தில் மேற்குவங்கத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி ஆட்சியில் நிகழ்ந்த அரசியல் படுகொலைகள் குறித்த ஒரு கணக்கெடுப்புமிதிலாவிலாஸ்-23
author

Similar Posts

4 Comments

  1. Avatar
    அகில் says:

    ஒரு கதவை மூடிவிட்டால் மறு கதவை திறந்துவிடுகிறார்கள்.
    மதங்கள் அழிகின்றன, மறு உருவாக்கம் பெறுகின்றன, மாறுகின்றன. மாறமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் மதங்கள் தேங்கிய குட்டைகளாகி மடிகின்றன.

  2. Avatar
    ஒரு அரிசோனன் says:

    சில சமயம் தீமைகளாம் நன்மை விளையும் என்பார்கள். ISIS தீவிரவாதம் தன்னையும் அறியாமல் ஒரு நன்மையை — ஜோராஸ்ட்ரிய சமயத்திற்கு புத்துணர்வு ஊட்டுகிறது என்பதில் ஒரு அற்ப மகிழ்ச்சியே.

  3. Avatar
    சவரப்பிரியன் says:

    குர்திஸ்தானத்துக்கு சென்று ராமானுஜரின் வைணவத்தை BS பரப்பலாமே?
    இல்லை அது வெறுமே அய்யங்கார்களுக்கு மட்டும்தானா?

Leave a Reply to BS Cancel reply

Your email address will not be published. Required fields are marked *