கசீரின் யாழ்

This entry is part 26 of 45 in the series 4 மார்ச் 2012

இளவரசன் கசீர் போர்களத்திலிருந்து குதிரையில் திரும்பிக் கொண்டிருந்தான். அவன் வகடு பழங்குடியினரை ஆளும் நகம்பாவின் மகன். வகடு பேரரசை ஆள வேண்டும் என்று போர்டுமா பழங்குடியினர் அவர்கள் மேல் போர் தொடுத்திருந்தார்கள். வகடு இனத்தவரும் சற்றும் மனந்தளராமல் அவர்களை எதிர்த்து வந்தார்கள். வெற்றி அல்லது செத்து மடி என்ற உறுதியான கொள்கையிடன் இருந்தான் இளவரசன்.
நகம்பா வயதான போதும், எட்டு குழந்தைகளுக்குத் தந்தையான கசீருக்கு பட்டத்தை கொடுக்காமல், போர் தொடுக்க அவனை அனுப்பிய வண்ணம் இருந்தார். இந்தப் போரில் வெற்றி கிட்டினாலாவது, தந்தை தன்னை மன்னனாக ஆக்குவார் என்ற நம்பிக்கையுடன் இருந்தான் கசீர். மிகுந்த மனச் சோர்வுடன் கசீர் நடந்து வந்து கொண்டிருந்தான்.

அப்போது திடீரென்று “ஓஹோ கசீர்..” என்று ஒரு குரல் ஒலித்தது. “நீ ஏன் போருக்குத் செல்கிறாய்? நீ வகடுவின் மன்னன் ஆகவே முடியாது” என்றது அந்தக் குரல்.

இதைக் கேட்ட கசீருக்கு கடும் கோபம் ஏற்பட்டது. குதிரையிலிருந்து இறங்கி, “மறைந்து இருந்து குரல் கொடுப்பது யார்? தைரியமிருந்தால் முன்னால் வா?” என்று எதிர் குரல் கொடுத்தான் கசீர்.

மறைவிலிருந்து ஒரு பெரியவர் வந்தார்.

அவரை கசீர் அடையாளம் கண்டு கொண்டு, “கியேகோரி.. நீங்களா? நான் அரசனாக ஆக முடியாது என்று சொல்வது எனக்கு சற்றும் விளங்கவில்லை?” என்றான் அதிகாரத்துடன்.

சற்றும் பயமில்லாமல், ஞானி கியேகோரி, “நான் சொல்வதைப் புரிந்து கொள். நீ பெரிய வீரனாகவும் யாவரும் மதிக்கும் நாயகனாகவும் இருக்கலாம். ஆனாலும் உன் தந்தையின் கீரீடத்தை உன்னால் அணியவே முடியாது என்பதே உண்மை” என்றார்.

“நீங்கள் சொல்வது தவறு. நான் இந்தப் போரில் வென்று, நிச்சயம் அரசனாவேன்” என்று அவரைத் தாக்க தன் உடைவாளை கோபத்துடன் எடுத்தான் கசீர்.

“என்னைக் கொல்வதால் உன் விதி மாறி விடாது கசீர்” என்று சொல்லிச் சிரித்தார்.

அவர் சிரிப்பதைப் பார்த்து கசீர் சற்றே தயங்கி நின்றான்.

“நீ காட்டுக்குள் சென்று அங்கிருக்கும் பறவைகள் பாடுவதைக் கேட்பது உனக்கு நல்லது. அவை உன் விதியை, உனக்கு என்ன காத்திருக்கிறது என்பதைச் சொல்லும்” என்றார்.

கசீர் உடனே தன் குதிரையில் ஏறி, அதைத் தட்டிவிட்டான். பறவைகள் நிறைந்து காணப்பட்ட காட்டுப் பகுதிக்குச் சென்றான். “பறவைகள் சொல்வது எனக்கெப்படிப் புரியும்?” என்று எண்ணியவாறே குதிரையிலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தான்.

அவன் புதர்களை நோக்கி நடை பயின்ற போது, வெட்டவெளிப் பகுதியில் ஒரு பெரிய மரச்சேவல் தோன்றியது. அது தலையை நன்றாக நீட்டிப் பாட ஆரம்பித்தது.

பாடலைக் கேட்க ஆரம்பித்ததுமே, “எனக்கு அது பாடுவது புரிகின்றதே..” என்று கசீர் அதிசயித்தான். பறவை பாடல் மூலமாக ஒரு கதையைச் சொல்லியது. அது ஒரு வீரனின் கதை. வீர தீரச் செயல்களைக் கூறியது. அதன் வார்த்தைகளில் உண்மையும், இதயத்தை உருக்கும் வகையில் அன்பும் நிறைந்திருந்தது. காலத்திற்கு அப்பாற்பட்டு நிற்கக்கூடிய பாடலாக அது இருந்தது.

கசீர் பாடலைக் கேட்டு அகமகிழ்ந்து, ஞானியிடமே திரும்பவும் சென்றான்.

“கியேகோரி.. மரச்சேவல் பாடியதைக் கேட்டேன். எல்லாமே புரிந்தது. அது யாரைப் பற்றிப் பாடியது என்பது தான் புரியவில்லை” என்றான்.
“அது பாடியது உன்னுடைய தலைவிதியைப் பற்றித்தான்” என்றார்.

“என் தலைவிதியா?” என்று ஆச்சரியப்பட்டான் கசீர்.

“ஆம்.. நீ புலவனாக இருக்க வேண்டியவன். வீரனாக அல்ல. நீ யாருக்காக காத்துக்கொண்டு இருக்கிறாய்.. புலவர்கள் யாழ் வைத்திருப்பதில்லையா?” என்றார்.

கசீர் ஞானி சொன்னதைக் கேட்டு, நடப்பது ஒன்றும் புரியவில்லையென்றாலும், அந்த நகரிலே யாழ் செய்யும் வினைஞனைத் தேடிச் சென்றான். அழகிய யாழ் செய்துத் தரும்படிக் கேட்டான்.

யாழும் தயாரானது. யாழை வாங்கி அதன் தந்திகளை மீட்டிப் பார்த்தான். அது இசைக்கவில்லை.

வினைஞனைப் பார்த்து “என்ன இது?” என்று இடியென முழங்கினான் கசீர்.

கசீருக்கு கோபம் ஏற்படும் வகையில் நடந்து கொள்பவர்களின் இதயம் கூரான வாளால் பிளக்கப்படும் என்பதை உணர்ந்தவனாகையால் வினைஞன், மிகுந்த பயத்துடன், “நானோ சாதாரண வினைஞன். என்னால் யாழ் மட்டுமே செய்ய முடியும். என்னால் இயன்ற வரை மிகச் சிறந்த யாழைச் செய்துள்ளேன். இரத்தமும் மூச்சும் உள்ள விலங்குகள் தான் சத்தம் செய்யும். அது போல் இந்த யாழும் இரத்தமும் மூச்சும் பட்டால் இசை எழுப்பும். அதனால் அதை நீங்கள் உங்கள் தோளில் மாட்டிக் கொள்ளுங்கள். அதை உங்களில் ஒரு அங்கமாக வைத்துக் கொண்டால், விரைவில் பாடலாம்” என்றான்.

கசீருக்கு வினைஞன் கூறியது சற்றே வித்தியாசமாகத் தான் இருந்தது.

“உங்களுடைய இரத்தம் அதன் மேல் சொரியட்டும். உங்களுடைய மூச்சையும் அது சுவாசிக்கட்டும். அப்போது அது நீங்கள் விரும்பிய பாட்டைப் பாடலாம்” என்றான் வினைஞன்.

யாழைப் பெற்றதுமே, தன் எட்டு மகன்களையும் அழைத்தான். “நற்பெயரைத் தவிர நமக்கு எதுவும் பெரிதல்ல. போர்டுமாவினரை நாம் தோற்கடிக்க வேண்டும். அதற்கு தினமும் நாம் போரிட்டாக வேண்டும். நம் உயிர் போர்களத்தில் தான் போக வேண்டும். வார்த்தைகள் தாம் நம்மைத் தாண்டி வாழும். நம்முடைய செயல்கள் பாடப்பட வேண்டுமென்றால், நாம் மேலும் கடினமாகப் போரிட வேண்டும். அப்போது தான் நிலைத்து நிற்கும் மிகச் சிறந்த பாடலில் நாம் வாழ முடியும்” என்றான்.

எண்மரும் அதை ஏற்றுக் கொண்டனர். ஏழு நாட்கள் கசீரும் அவனது மகன்களும் முன்னை விடவும் கடுமையாகப் போரிட்டனர். ஒவ்வொரு நாளும் தன்னுடைய இறந்த மகனைத் தோளில் சுமந்தபடி கசீர் மிகுந்த வருத்தத்துடன் வீடு திரும்பினான். வகடு குடியின மக்கள் கசீரின் துயரத்தைக் கண்டு மிகவும் வருந்தினர்.

தினந்தோறும், துயரத்தினால் வந்த கண்ணீரும், மகனின் காயங்களிலிருந்து வடிந்த இரத்தமும், அமைதியாக இருந்த யாழை நனைத்தது.
ஏழு மகன்களைப் பலி கொடுத்த பின்னும், கசீர் சற்றும் அசரவில்லை. போர்டுமா குடியினரும் சளைக்காமல் எதிர்த்த வண்ணமே இருந்தனர்.
எட்டாம் நாள், வகடுவின் மக்கள் அனைவரும் கசீரிடம் வந்தனர். “இந்த இரத்தப் போரை நிறுத்துங்கள். எங்களுக்கு அமைதி வேண்டும். நீங்கள் புகழுக்காக வேண்டி, உங்களது ஏழு பிள்ளைகளை போரில் ஏற்கனவே பலியிட்டு விட்டீர்கள். மீதம் இருக்கும் மகனையும், உற்றார் உறவினர்களையும், பொருட்களையும் எடுத்துக் கொண்டு இங்கிருந்து சென்று விடுங்கள். எங்களை அமைதியாக வாழ விடுங்கள்” என்று கெஞ்சினார்கள்.

மக்களின் விருப்பத்தை ஏற்று, தன் குடும்பத்தார்;, உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரையும் அழைத்துக் கொண்டு காட்டுக்குள் வாழச் சென்றான். பாலைவனத்திற்கு அருகே, மாடு மேய்த்து வாழத் தொடங்கினான்.
ஒரு நாள், அனைவரும் உறங்கிய பின்னர், கரும் வானத்திற்குக் கீழே அமர்ந்து கொண்டு, நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது, அவன் தான் இழந்த ஏழு பிள்ளைகளைப் பற்றியும், இறந்த தந்தையைப் பற்றியும், வகடுவின் தலைவனாக ஆக முடியாமல் போனது பற்றியும் எண்ணிப் பார்த்தான். அவன் நாட்டை விட்டுச் சென்றதும், எப்படி போர்டுமா குடியினர் திரும்பவும் வகடுவிற்கு வந்தார்கள் என்பதையும், அமைதி வேண்டிய மக்கள் எப்படி ஊரின் நாலப்பக்கமும் இருந்த கதவுகளைத் திறந்து விட்டார்கள் என்பதையும் எண்ணிப் பார்த்தான். அமைதி வேண்டிய போதும், போர்டுமா குடியினர் எப்படி பயிர்களை நாசம் செய்து, களஞ்சியங்களை அழித்து, வீடுகளை தரைமட்டமாக்கி, எல்லா இடங்களையும் நாசப்படுத்தினர் என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்தான். கசீரின் உள்ளம் மிகுந்த துயருற்றது. அப்போது ஒரு பாடல் கேட்டது. அது அவனது எண்ணங்களை அப்படியே பாடியது.

கசீர் பாடலைக் கேட்டு, யார் இதைப் பாடுவது என்று சுற்றும் முற்றும் பார்த்தான்.

கசீர் தன்னுடைய மதிப்புமிக்க யாழை எடுத்துப் பார்த்தான். பாடப்பட்ட கவிதை வரிகளை செவி கொடுத்துக் கேட்டான். குழந்தை பருவத்திலிருந்து அழுதே அறியாத கசீரின் கண்களில் கண்ணீர் மல்கியது.

உருக்கமான பாடல் வரிகளைக் கேட்க கேட்க, “இது உண்மை தான். இந்தப் பாடல் வரிகள் நின்று நிலைக்கக் கூடியது” என்று கசீர் உணர்ந்தான்.
இன்று வரையிலும், யாழ் பாடிய அந்த டௌசி இதிகாசம் தான், இன்றைய புர்கினோ பாஸோ நாட்டில் பாடப்பட்டு வருகிறது.

குறிப்பு : இந்தக் கதையை ஜெர்மனியரான லீயோ பிரோபினஸ் என்பவர் 1899-1915இல் எழுதினார். இந்த இதிகாசம் மேற்கு ஆப்பிரிகாவின், பல முறை அழித்துக் கட்டப்பட்ட வகடு நகரின் கதையை பாடல்களாகத் தருகிறது. இதிகாசம் என்பது பாடல்கள் மூலம் மாவீரர்களைப் பற்றிச் சொல்லப்படும் கதை. இந்த கசீரின் யாழ் என்ற கதை டௌசி இதிகாசத்தின் முதல் பாகம்.

Series Navigationஅந்த முடிச்சு!ஷிவானி
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *