கவிஞர் அம்பியின் வாழ்வும் பணிகளும் புலம்பெயர்ந்து ஓடிடும் தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கும் மூத்த எழுத்தாளர்

author
1
0 minutes, 14 seconds Read
This entry is part 10 of 12 in the series 12 மார்ச் 2017

Ambi(1)

 

                                         முருகபூபதி – அவுஸ்திரேலியா

 

ஏறினால் கட்டில், இறங்கினால் சக்கரநாற்காலி. அத்தகைய ஒரு வாழ்க்கையை அவுஸ்திரேலியா சிட்னியில் கடந்துகொண்டிருக்கும் ஈழத்தின் மூத்த கவிஞர் அம்பி அவர்கள் அண்மையில் தனது 88 ஆவது  வயதைக் கடந்திருக்கிறார்.

Mr.Amby & Mrs Amby

எனினும்,  நினைவாற்றலுடன் தனது கடந்த கால வாழ்க்கைப் பயணத்தை நம்முடன் தொலைபேசி ஊடாக பகிர்ந்துகொண்டார். அன்பின் மறுபெயர் அம்பி என சில வருடங்களுக்கு முன்னர் மல்லிகை, ஞானம் அட்டைப்பட அதிதி கட்டுரையில் இவர் பற்றி எழுதியிருக்கின்றேன். நான் எழுதப்புகுந்த 1970 காலப்பகுதியிலிருந்து இவருடனான எனது இலக்கிய நட்புறவு குடும்ப நட்புறவாகவும் நெருங்கியமைக்கு அம்பியின் நல்லியல்புகளே அடிப்படை.

 

சிட்னிக்கு சென்றால் அவருடன் சில மணிநேரங்கள் செலவிடுவதும் அவரது நனைவிடை தோய்தல் கதைகளை செவிமடுப்பதும்,  அவருடன் அமர்ந்து உணவு அருந்துவதும் எனது வழக்கம்.

நகைச்சுவையும் அங்கதமும் அவரது பேச்சில் இழையோடும். நினைத்து நினைத்து சிரிக்கத்தக்க பல கதைகளை அவர் எனக்கு சொல்லியிருக்கிறார்.

 

உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடுகின்றேன். அவர் மெல்பனுக்கு வரும் சமயங்களில் எமது இல்லத்தில் தங்குவார். ஒரு தடவை அவர் இரவு உணவுக்குப்பின்னர் எடுக்கும் மருந்தை ( மாத்திரை) கொண்டுவருவதற்கு மறந்துவிட்டார்.

 

( நாமிருவரும் நீரிழிவுடன் சொந்தம் கொண்டாடுபவர்கள்)

 

நல்லவேளையாக என்னிடம் அவர் எடுக்கும் மாத்திரையின் மற்றும் ஒரு வகை இருந்தது. பெற்றுக்கொண்டார்.

 

மீண்டும் அவர் ஒரு தடவை மெல்பன் வருவதற்கு முன்னர் தொலைபேசியில் சொன்னார். அப்பொழுது ” அம்பி, மறக்காமல் இரவு உணவுக்குப்பின்னர் எடுக்கும் மருந்தை கொண்டு வாருங்கள்” என்றேன். உடனே அவர், ” நான் உணவுக்குப்பின்னர் எடுக்கும்  மருந்தைக் கொண்டுவருகின்றேன். நீர் உணவுக்கு முன்னர் எடுக்கும் மருந்தை வாங்கிவைத்திரும்.”  என்றார்.

 

இவ்வாறு நெஞ்சத்துக்கு நெருக்கமாக உரையாடும் – உறவாடும் அம்பியிடம் கல்வி கற்ற மாணாக்கர்கள்  இந்தப்பூமிப்பந்தெங்கும் வாழ்கிறார்கள்.  ஆனால், நானோ அவரது மாணவன் இல்லை. அதனால் ஆசான் – மாணாக்கன் என்ற உறவுக்கு அப்பால் எம்மிடம் நீடித்திருப்பது  –  எஞ்சியிருப்பது இலக்கிய நட்பும் சகோதர வாஞ்சையும்தான்.

 

இனி அவரது வாழ்க்கைச் சரிதையை படியுங்கள்.

 

 இராமலிங்கம் அம்பிகைபாகர் என்ற இயற்பெயரைக்கொண்ட கவிஞர் அம்பி அவர்கள் இலங்கையில்  வடபுலத்தில் நாவற்குழியில் 17-02-1929 ஆம் திகதி  பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை நாவற்குழி சி.எம்.எஸ் பாடசாலையிலும் பின்னர் உயர் கல்வியை யாழ். பரியோவான் கல்லூரியிலும் தொடர்ந்த அவர் விஞ்ஞான மற்றும் கணித ஆசிரியராக 1950 ஆம் ஆண்டு முதல் 1968 ஆம் ஆண்டு வரையில் யாழ். தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் பணியாற்றினார்.

 

இக்கல்லூரி தனது மகத்தான சேவையில்  இருநூறு ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.   சுமார் 18 ஆண்டுகள் வரையில் இங்கு பணியாற்றிய அம்பி அவர்கள், அதன்பின்னர் கிழக்கிற்கு இடமாற்றம் பெற்றார்.  அங்கு முதலில் ஓட்டமாவடி முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் அதன்பிறகு, மட்டக்களப்பு அரச கல்லூரியிலும் சேவையாற்றினார்.

 

கொழும்பு கல்வி வெளியீட்டுத்திணைக்களத்தில் 1969 இல் கணித பாடநூல் எழுத்தாளராகவும்  பணியாற்றிய அம்பி,  சனத்தொகை பயிற்சிக்கல்விக்கான புலமைப்பரிசில் பெற்று அமெரிக்கா  சென்றார். அங்கு  University of Connecticut  (Institute of public service)  இல் பயிற்சியை முடித்துக்கொண்டு, தாயகம் திரும்பி, மீண்டும் கொழும்பில் சனத்தொகை கல்விப் பாடத்திட்ட அதிகாரியாக பணியாற்றினார். அதன் பின்னர், 1981 இல் பாப்புவா நியூகினி நாட்டிற்கு பணிநிமித்தம் சென்று  அங்கு தொலைக்கல்விகல்லுரியில் கணிதத்துறை தலைவராக பணியாற்றினார்.   அங்கிருந்து,  1992 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தார்.
இளம் பராயத்திலிருந்தே கவிதை, கவிதை நாடகம்,  சிறுகதை, கட்டுரை, விமர்சனம், ஆய்வு முதலான துறைகளில் அவர் அளப்பரிய பணிகளை மேற்கொண்டிருந்தபோதிலும் தமிழ்கூறும் நல்லுலகில் கவிஞர் என்றே அறியப்பட்டவர்.

அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல்வராகப்பதவி ஏற்றதையடுத்து தமிழ்நாட்டில் 1968 இல்  நடந்த இரண்டாவது தமிழாரய்ச்சி மாநாட்டிற்காக நடைபெற்ற அகில உலக கவிதைப்போட்டியில் பங்கேற்ற கவிஞர் அம்பி, அதில் வெற்றியீட்டி தங்கப்பதக்கம் பெற்றவர். இதனை அம்பி அவர்களுக்கு, அச்சமயம் தமிழக அரசில் அங்கம் வகித்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரசிகமணி கனகசெந்திநாதன் ஈழத்து பேனா மன்னர்கள் என்ற தலைப்பில் தொடர் எழுதியபோது அம்பியின் எழுத்துலகம் பற்றியும் விரிவாக குறிப்பிட்டுள்ளார். இயல்பிலேயே இனிய பண்புகளை தன்னகத்தே கொண்டுள்ள அம்பி நகைச்சுவையாகவும் அங்கதம் தொனிக்கவும் பேசவல்லவர்.

 

இலங்கையின் தமிழ்மருத்துவத்துறை முன்னோடியான அமெரிக்க பாதிரியார் மருத்துவகலாநிதி சாமுவேல் கிறீன் அவர்களைப்பற்றி விரிவான ஆய்வு நூலை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.
அம்பி, அத்துடன் நில்லாமல் குறிப்பிட்ட மருத்துவ முன்னோடிக்கு இலங்கையில் தபால் தலை வெளியிடுவதற்கும் முயற்சித்து அதில் சாதனை புரிந்தார். அம்பியின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட இலங்கை அரசு குறிப்பிட்ட தபால் தலையை வெளியிட்டது.
இந்த மதிப்பிற்குரிய செயலைப்புரிந்தமைக்காக இலங்கையில் அமெரிக்க தூதுவராலயம் அம்பி அவர்களை அழைத்து கௌரவித்து பாராட்டியது.

 

சாமுவேல் கிறீன் அவர்களின் கல்லறை அமெரிக்காவில் மசாசூசெட் மாநிலத்தில் கிறீன் அவர்கள் பிறந்த ஊரான வூட்சரில் அமைந்துள்ளது. அவ்விடத்திற்கு இரண்டு தடவைகள் நேரில்சென்று மலரஞ்சலி செலுத்தியவர் அம்பி அவர்கள் என்பதும் முக்கிய தகவல்.

 

இலங்கையில் இவரிடம் கற்ற பல மாணவர்கள் பிற்காலத்தில் இவரது தூண்டுதலாலும் ஊக்குவிப்பினாலும் எழுத்தாளர்களாக அறிஞர்களாக, கவிஞர்களாக உருவாகியிருக்கிறார்கள். கவிதைத்துறையில் இவரது ஆற்றலை வியந்து தமிழக இலக்கிய இதழான சுபமங்களா இவரை ஈழத்தின் கவிமணி என்று புகழாரம் சூட்டியுள்ளது.
பாப்புவா நியூகினியிலும் அவுஸ்திரேலியாவிலும் குழந்தை இலக்கியத்தின் வளர்ச்சிக்காக ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறுவர் இலக்கிய வரிசையில் சில கவிதை நூல்களையும் எழுதியிருக்கிறார். அத்துடன் அவுஸ்திரேலியா சிட்னியில் தமிழ்மொழியை ஒரு பாடமாகப்பயில தமிழ் மாணவர்கள் முன்வந்தபோது அவர்களின் தேவைகருதி உருவாக்கப்பட்ட தமிழ்ப்பாட நூலாக்கக்குழுவில் பிரதம ஆலோசகராக பணியாற்றி இங்கு வாழும் தமிழ்க்குழந்தைகளின் தமிழ் அறிவுத்தேவையை பூர்த்தி செய்வதற்கு தொடர்ச்சியாகத் தொண்டாற்றினார்.
அவுஸ்திரேலியாவுக்கு இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா முதலான நாடுகளிலிருந்து தமிழர்கள் புலம்பெயர்ந்து வந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களின் குழந்தைகளின் நாவில் தமிழ் வாழவேண்டும் என்பதற்காக இந்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்ப்பாடசாலைகளில் தமிழைக்கற்பிக்க அமைக்கப்பட்ட பாடநூலாக்கக்குழுவில் கவிஞர் அம்பியின் பணியானது விதந்துபோற்றுதலுக்குரியது.
தமிழ்சார்ந்த மாநாடுகள், கருத்தரங்குகள், விழாக்கள்  உட்பட பல கவியரங்குகளிலும் அம்பி அவர்கள் புகலிட நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழை மறந்துவிடக்கூடாது என்ற தொனிப்பொருளிலேயே தொடர்ச்சியாக குரல் எழுப்பிவந்துள்ளார். அத்துடன் இதுதொடர்பாக பல கட்டுரைகளும் எழுதியுள்ளார். தேமதுர தமிழ் ஓசை உலகமெலாம் பரவச்செய்யவேண்டும் என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்க தமிழின் சிறப்பை ஏனைய மொழிகள் அறிந்தவர்களுக்காக ஆங்கிலத்திலும் எழுதி தமிழுக்கு தொண்டாற்றியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்திவரும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினரான அம்பி அவர்கள் அந்த அமைப்பின் பணிகளுக்கு பக்கபலமாக இருப்பதுடன், இந்த அமைப்பின் வருடாந்த எழுத்தாளர் விழா ஒன்று கூடலில் நடைபெறும் சிறுவர் அரங்கு மற்றும் மாணவர் அரங்கு முதலானவற்றில் பங்குபற்றும் இளம் தலைமுறையினருக்கு தான் படைத்த சிறுவர் இலக்கிய நூல்களைப்பரிசளித்து வருகின்றார்.

எழுத்துலகில்

தினகரன் வாரமஞ்சரியில்   வெளிவந்த இலட்சியச் சோடி என்ற சிறுகதையின் மூலம் இலக்கிய உலகில் அறிமுகமானஅம்பியின்  படைப்புகள் :

  • கிறீனின் அடிச்சுவடு
  • அம்பி பாடல் (சிறுவர் பாடல்கள்)
  • வேதாளம் சொன்ன கதை (மேடை நாடகம்)
  • கொஞ்சும் தமிழ் (சிறுவர் பாடல்கள்)
  • அந்தச் சிரிப்பு
  • யாதும் ஊரே; ஒரு யாத்திரை
  • அம்பி கவிதைகள்
  • மருத்துவத் தமிழ் முன்னோடி
  • Ambi’s Lingering Memories (Poetry, பப்புவா நியூ கினி
  • Scientific Tamil Pioneer Dr Samuel Fisk Green
  • உலகளாவிய தமிழர்
  • A String of Pearls
  • பாலர் பைந்தமிழ்

அம்பியின்  நாடகங்கள்

  • அம்பியின் வேதாளம் சொன்ன கதை கவிதை நாடகம், இலங்கையில் பிரபல நாடக இயக்குநர் சஹேர் ஹமீட் நெறியாள்கையிலும், யாழ்பாடி என்ற கவிதை நாடகம் அவுஸ்திரேலியாவில் அண்ணாவியார் இளையபத்மநாதனின்  அண்ணாவியத்திலும் அரங்கேறியுள்ளன. அம்பியின் பவளவிழாவை முன்னிட்டு அவரது வாழ்வையும் பணிகளையும் பதிவுசெய்யும்   விரிவான ஆய்வு நூலை எழுத்தாளர் லெ. முருகபூபதி  எழுதியுள்ளார். இந்நூல்   2003 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில்  வெளியாகியுள்ளது.

தமிழில் விஞ்ஞானக்கட்டுரைகளை இலங்கையில் எழுதிய முன்னோடி கவிஞர் அம்பி அவர்கள்  என்று பிரபல இலக்கிய விமர்சகர் அம்பியைப்பற்றி  இலங்கையில் வெளியாகும் The Island பத்திரிகையில் எழுதியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அம்பி இதுவரையில் பெற்றுள்ள விருதுகள்:

1968 உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு விருது (தங்கப்பதக்கம்)
1993 இலங்கை இந்து கலாசார அமைச்சின் ‘தமிழ்மணி விருது’
1994 கொஞ்சும் தமிழ் சிறுவர் இலக்கிய நூலுக்கு இலங்கை சாகித்திய விருது.
1997 அவுஸ்திரேலியாவில்  மெல்பன் ‘நம்மவர்’ விருது.
1998 கனடாவில் சி.வை. தாமோதரம் பிள்ளை விருது (தங்கப்பதக்கம்)
2004 அவுஸ்திரேலியா கன்பராவில் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் விருது
இலங்கையில் மல்லிகை, ஞானம் ஆகிய இலக்கிய இதழ்கள்  முகப்பில் அம்பியின் உருவப்படத்துடன் அவரது பணியை பாராட்டி கட்டுரை எழுதி கௌரவித்துள்ளன.
தற்பொழுது அம்பி, அவுஸ்திரேலியா சிட்னியில் தமது மனைவி, மக்கள், மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் வசிக்கின்றார்.

” புத்தம் புதிய கலைகள் மெத்த வளருது மேற்கிலே…. சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வம் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் “ என்று நூறாண்டுகளுக்கு முன்னர் தமிழ் மக்களுக்கு அறைகூவல் விடுத்தார் மகாகவி பாரதியார்.

காலம் உருண்டோடியது. தமிழர்கள் பூமிப்பந்தெங்கும் புலம்பெயர்ந்தனர்.

பாரதியின் தமிழ்க் கவிதை இலக்கிய மரபில் தோன்றியிருக்கும் கவிஞர் அம்பி அவர்கள், உலகெங்கும் புலம்பெயர்ந்துசென்று வாழும் தமிழர்கள் தமது தாய்மொழியை கைவிட்டுவிடலாகாது என அறைகூவல் விடுத்துள்ளார்.

அம்பி கவிதைகள் நூலிலும் பல இதழ்கள், இணையத்தளங்களிலும் வெளியாகியிருக்கும் பிரசித்திபெற்ற அக்கவிதையை இங்கு காணலாம்.

ஓடிடும் தமிழா

ஓடிடும் தமிழா நில், நீ ஒரு கணம் மனதைத்தட்டு
வீடுநின்னூருள்  சொந்தம், விளைநிலம் நாடு விட்டாய்
தேடியதெல்லாம் விட்டுத்திசைபல செல்லும் வேளை
பாடிய தமிழை மட்டும் பாதையில் விட்டிடாதே

 

ஓர்தலைமுறையின் பின்னே உன்னடி உறவென்றேனும்
ஊரிலே அறியாப்பிள்ளை உலகரங்கினில் யாரோ
தாரணிமீதில் நானோர் தமிழனென்றுறுதி செய்யின்
ஊர்பெயர் உடைகள் அல்ல ஒண்டமிழ் மொழியே சாட்சி

சாட்சியாய் அமையுஞ் சொந்தச் செந்தமிழ் மொழியே முன்னோர்
ஈட்டிய செல்வம் எங்கள் இனவழிச்சீட்டாம்
ஏந்த நாட்டிலே வாழ்ந்தபோதும் நடைமுறைவாழ்வில் என்றும்
வீட்டிலே தமிழைப்பேணும் விதிசெயல் கடமை ஐய!

 

வீட்டிலே தமிழைப்பேசும் விதி செயல் கடமை ஆமாம்
பாட்டனாய் வந்து பேரன் பரம்பரை திரிதல் கண்டே
ஈட்டிய செல்வம் போச்சே,  இனவழி போச்சே என்று
வாட்டு நெஞ்சுணர்வை வெல்ல வழி  பிறிதொன்றுமில்லை.

—00—-

Series Navigationஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பன்முகநோக்கில் பண்டைத் தமிழ்ப்பண்பாடு தேசியக்கருத்தரங்கு வருகிற 17, 18பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலையும் இலக்கியமும்): இடைக்காலம் (கி.பி 476- 1453)
author

Similar Posts

Comments

  1. Avatar
    இராய செல்லப்பா says:

    “ஈட்டிய செல்வம் போச்சே, இனவழி போச்சே என்று//
    வாட்டு நெஞ்சுணர்வை வெல்ல வழி பிறிதொன்றுமில்லை//” என்ற வரிகள் ஈழம் சிதறிப்போய், உலகநாடுகள் பலவற்றிலும் தஞ்சம்புகுந்த தமிழர்களின் மனநிலையைக் காட்டுகிறது. தமிழ் எனற மொழி ஒற்றுமை ஒன்றுதான் இனி இவர்களோடு வரப்போகும் ஒரே சொத்து. எனவே “வீட்டிலே தமிழைப்பேசும் விதி செயல், கடமை ஆமாம்” என்கிறார் கவிஞர் அம்பி. பாராட்டப்படவேண்டிய கவிதை. கவிஞர் அம்பி அவர்கள் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து தமிழர்களுக்கு வழிகாட்டும் நிலையில் ஒளிர்ந்திடவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வாழ்த்த வயதில்லை.
    -இராய செல்லப்பா (தற்போது) நியூஜெர்சி

Leave a Reply to இராய செல்லப்பா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *