கவிஞர் சிற்பியின் சில படைப்புகள்

author
1
0 minutes, 3 seconds Read
This entry is part 25 of 31 in the series 2 டிசம்பர் 2012


மஞ்சுளாதேவி
கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் அவர்கள் இரு முறை சாகித்யா அகாதமி பரிசு பெற்றவர். அவரின் சமீபத்திய சில நூல்கள் பற்றிய அறிமுகம்  இங்கே:

1. சிற்பி: மெளனம் உடையும் ஒரு மகா கவிதை, ஒரு மகாதரிசனம்” –    நவபாரதி kakகட்டுரைகள்

    கவிஞர் சிற்பியின் அனைத்துக் கவிதைத் தொகுப்புகள் குறித்தான நூல் இது. “விமர்சனம் “அல்ல. சிற்பியின் ஒரு நேர்மையான ரசிகனாய் இருந்து நுகர்ந்து திளைத்த கவி அனுபவங்களை அழகாய் பதிவு செய்கிறது.

 

    புதுமைப்பித்தன் குறிப்பிடுவாரே, எங்கோ இருக்கும் ஒரு ‘வாசகனுக்காக’ என்று. அப்படிப்பட்ட ‘வாசகனாக’த் தகதகத்திருக்கிறார் நவபாரதி. எல்லா எழுத்தாளர்களுக்கும் அந்த ‘ஒரு வாசகனைச்’ சந்திக்கும் பேறு கிடைப்பதில்லை. சிற்பிக்கு வாய்த்திருக்கிறது. சிற்பியின் 75 ஆம் ஆண்டின் பவளவிழாவில் இந்நூல் வெளியிடப்பட்டிருப்பது மிகவும் பொருத்தம்.    கால அளவையோ, தொகுப்பையோ வரிசைப்படுத்தி நோக்கும்’ ஆய்வு’ களுக்கெல்லாம் அப்பாற்பட்டு நிற்கிறது ‘நவபாரதி’யின் அணுகுமுறை. கவிதைகளைக் கவிதையாக மட்டுமே ரசிக்கிற, இன்று ‘அருகி விட்ட மனோபாவம்’ முழுநூலிலும் படர்ந்திருக்கிறது.     சிற்பியின் எழுபத்தைந்தாண்டுகள் உடன் இருந்த உணர்வு எழுகிறது. இத்தனைக்கும் சிற்பியின் தனிப்பட்ட வாழ்க்கையை இந்நூல் பேசவில்லை.  கவிதைகளை முன் வைத்து மட்டுமே  இதனைச் சாதித்திருக்கிறார்.

    கவித்துவம் நிறைந்த இருபத்தியாறு தலைப்புகளில் இருநூற்றுப்பத்துப் பக்கங்களில் இந்நூல் அமைந்திருக்கிறது.சிற்பியின் கவிதைகளில் திளைப்பதோடு தன் சொந்தக்கருத்தமைவுகளையும் முன்வைக்கிறார்.மானுடம் பாடும் வான்ம்பாடி-சிற்பி அதன் ஜீவநாடி என்கிறார். சிற்பியின் பழையனூர் நீலி கதையைப்பற்றிப் பேசும்போது” கோவலன் கண்ணகி செவ்விலக்கியத்திற்கு மாறான நாட்டார் வழக்காறுக்கதை “ என்ற ஒப்பீடுவித்தியாசமானது. மவுன மயக்கம் குறித்துப் பேசுகையில் “ அழகிய ருஸ்யப்பெண்கள்  விலைப்பெண்கள் ஆகிவிட்ட சோகம் நமக்கு”  என்று தற்கால நிலையையும் காட்டுகின்றார். ”மகாத்மாவை”  சிலாகித்த்தோடு காந்தி, கிருஸ்ணர், இயேசு மீவரையும் நேர்த்தியோடு ஒப்பிடுகையில், ’  கிருஸ்ணனை ஒரு வேடனின் அம்பு கொன்றது, யெசுவை அந்த மகாயூதனி, ஒரு யூதனே  சிலுவையில் அறைந்தான். இந்த மகாத்மா ஹே ராம் என்று இறுதிப் பிரார்த்தனை செய்ய ஓர் இந்து வெறியன் கொன்றான்” என் ஒப்பீடு செய்கிறார் நவபாரதி..நூல் முழுக்க சிற்பியின் கவிதைவரிகளை அப்படியே எடுத்துத் தருவது “ பாயிரத்தின் “ பணியைச் செய்கிறது.சிற்பி பன்முகத்தன்மை வந்தவர் என்பதை நிருபித்திருக்கிறார். நவீனமும் மரபும் இணைந்த புது மரபை வழி நடத்திச் செல்கிறவர் என்பது தெளிவாகிறது.

    சிற்பியின் பவள விழாவை முன்னிட்டு என்சிபிஎச் சிற்பியின் முழுக்கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளது. முன்பு கவிஞர் பாலா செயத்து போல நவபாரதியும் இந்தa முழுத்தொகுப்பையும்  ரசிக பாவனையில்  அமைத்திருக்கிறார். இன்னும் விரிவான விமர்சன அவாவை இந்நூல் உண்டாக்குகிறது  ( .ரூ150. கவிதா, சென்னை )

si2. சிற்பியின் நெஞ்சம்: தொகுப்பு


சிற்பி என்ற மாமனிதரை, அவருக்கே உரித்தான மேன்மைகுணங்களை அவரோடு அணுக்கமாய் இருந்த பேராசிரியர்கள், நண்பர்கள், மாணவர்கள், எனப்பலரும்  பதிவு  செய்துள்ள தொகுப்பு நூல் இது. இரணியன், செந்தலை கவுதமன் ஆகியோர் கவிஞரிடம் நிகழ்த்திய நேர்காணலில்  மாணவப்பருவம், குடும்பம், இலக்கியப்பணி, ஆசிரியப்பணி, பொதுவுடமை என  பல்வேறுதளங்களில் தொடுத்த எழுபத்தைந்து வினாக்களுக்கு சிற்பி அளித்துள்ள  நுட்பமான பதில்கள் அவரது சான்றாண்மை நெஞ்சத் தெள்ளென புலப்படுத்துவதாய் அமைந்துள்ளது..சிற்பியின் படைபுகளோடு  அவருடனான அனுபவங்களை 27 கட்டுரைகளில் பலர் பதிவு செய்திருப்பதில் அவரின் பன்முகப் பரிமாணங்களை அறிய முடிகிறது.

    தொல்லியலில் அவருக்கிருந்த ஆர்வம், அவர் நடத்திய முத்தமிழ்ப்பணி, அவரது கட்டுரையாக்கத்தின் சிறப்பான பக்கங்கள், ஆய்விலும், ஆய்வு மாணவர்களிடம் அவர் கொண்டிருந்த அக்கறை, இளையோரை வழிநடத்தும் பாங்கு , கவிஞரின் குழந்தை உள்ளம், நகைச்சுவையுணர்வு,  திரைப்பட்டல் எழுதிய அனுபவம்,, எல்லைகளுக்கப்பால்  விரிந்து கிடக்கும் அவரது மொழிபெயர்ப்புப் பணி  என்ற தளத்திலும், “ இன்றைய மகிழ்ச்சியை விட நாளையப் பதிவுகள் முக்கியம் “ என்ற கொள்கையுள்ளம் கொண்ட தலைமைப்பண்பு, ‘சொல்லித்தந்த வானமாய்’, “தாயினும் சாயப்பரிந்து’ என்று நெகிழும் நினைவுகள் என்ற தளத்திலும் அவரைக்குறித்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.செம்மாந்த சிறப்புமிக்க இக்கவிஞரின் மனிதப் பண்புகளை “ அடுத்தத் தலைமுறைக்காய் அடைகாக்கிறது” இந்நூல்

3.    நீலக்குருவி: சிற்பியின் கவிதைகள்
——————————————-

    ’ ஆழம் செல்லச் செல்ல ஆழ் குழாய் நீரின் சுவையில் இனிமை கூடிக் கொண்டே இருப்பது போல இத்தொகுப்பில் கவி ஈரத்தின் சுவை ஊறிக் கசிகிறது. வயதின் முதிர்வு தந்த பக்குவப் பார்வையின் சான்றாண்மை இனிமை கவிதைகளில் படிந்து கலந்திருக்கின்றது.

    இத்தொப்பின் ஆகச் சிறந்த கவிதை என ‘நீலக் குருவி’யைச் சுட்டலாம். அலைபேசிக்கு நாம் கொடுத்த விலை அதிகம்தான். பாரதியும் பாவேந்தரும் கவிதைகளில் கொஞ்சிய குருவிகள் இன்று இல்லை. இந்த இழப்பு பற்றி,

“எங்கேபோயின\  குதூகல குருவிகள் \  மொட்டுக் சிட்டுகள்” – என்று சுற்றுப்புறச்சுழல் பற்றி அக்கறை உள்ள அனைவரின் உள்ளக் கேள்வியை கவிதையில் பதிக்கிறார்.

    கவிதை உணர்த்திய ஓர் அமானுஷ்யமான மாய அழகில் மூழ்கிப் போகிறோம். எப்படி பாரதியாரின் குயில் பாட்டில் வரும் குயில் என்பது குயில் அல்லவோ அதுபோல இங்கு குருவி என்பது குருவி அல்ல.

    சிற்பியின் பாடுபொருள் தேர்வு எப்போதுமே அவதாணிப்பிற்குரியது. சுற்றுப்புறச் சூழல் பற்றியும் தலித்தியம் பற்றியும் வானம்பாடிக் காலத்திலேயே எழுதியதன் மூலம் பலரும் பின்பற்றக் காரணமாயிருந்தவர். இத்தொகுப்பின் விசேசப் பாடுபொருள் என ‘வயது முதிர்வை’ச் சுட்டலாம்.     இளையோராய் இருக்கும்போது ‘முதுமைக் காதல் பற்றி எழுதிய பாடல்கள் தமிழில் உண்டு. வயது அதிகமாக ஆக இளம் வயதின் இனிமைகளை அசை போடவே மனம் விரும்பும். ஆனால் கவிஞர் சிற்பி இத்தொகுப்பின் பல  கவிதைகளில் வயது முதிர்வின் பக்குவத்தைப் பதிவு செய்திருப்பதன் மூலம் தமிழ்க் கவிதையின் புதிய சாளரங்களைத் திறந்து வைக்கின்றார்.

    போர் என்பது மனிதனுக்குள் எத்தகைய அவநம்பிக்கைகளை விதைக்கும் என்பதை, பிரச்சார நெடி இல்லாமல் சொல்கிறார். கத்திபோல் படிப்பவரின் மனசுக்குள் கவிதையைச் செருக முடியும் என்று ‘ஓவியனின் மறுபக்கம்’ என்ற கவிதை நிரூபிக்கிறது.

     அபிமன்யு கதை படித்து நாள் முழுக்க, ஆற்றாமல் அழுத பிள்ளைப் பருவம் மறந்து போகும்” என்று ஒவ்வொன்றாய்க் கூறி வரும் கவிஞர், ஈழத்தில் நடந்த கொடுமை மட்டும் மறக்காது என்கிறார்.

“காற்றழவும் வான் அழவும் கடலுக்கப்பால் கரியான கொடுங்காட்சி மறப்பதில்லை” என்ற கவிதையை வரலாற்றுப் பதிவு எனலாம். அரசியல் உலகம் செய்யும் வரலாற்றுப் பிழைகளை கவிதை உலகம் மன்னிப்பதில்லை  என்பதன் இலக்கியச் சான்றுதான் ‘மறப்பதில்லை’

    (மணிவாசகர் பதிப்பகம். விலை ரூ. 65/-)

“சிற்பி – ஒரு கிராமத்து நதி” – குறும்படம்

—————————————–

    கவிஞர் சிற்பியின் 75 நிறைவை ஒட்டி சிற்பி அறக்கட்டளை குறும்படத்தை வெளியிட்டுள்ளது.

ஒரு தமிழ்க் கவிஞரின் வரலாற்று ஆவணம். இயக்குனர் விஜய்குமார் வெளிநாட்டில் கற்று வந்த தொழில் நுட்பத்தை மண்ணின் மணத்தோடு குழைத்திருக்கிறார்.    சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு படத்தொகுப்பாளர் ராஜேசின் கடும் உழைப்பு குறும்படத்திற்கு கச்சித நேர்த்தியைத் தருகின்றது.

    மரபில் எழுதத் துவங்கிய ஒரு தமிழ்க் கவிஞர் புதுக் கவிஞராகக் களத்தில் நின்று ஜெயித்து இந்தியக் கவிஞராக ஜொலிக்கும் சிற்பியின் வாழ்க்கைப் பயணம் பதிவாகியுள்ளது. இளம் எழுத்தாளர்களுக்கு குறிப்பாகக் கவிஞர்களுக்கு இது குறும்படமல்ல. நெடும் பாடம்.

    கவிதை நூல்கள் அட்டைப் படங்களோடு அறிமுகமாகின்றன. கவிஞர் சிற்பியும் பிறரும் பேசும் தகவல்கள் சுருக்கமாகவும் சுவையோடும் அமைந்திருக்கின்றன.    கவிஞர் தாகூரின் ஆளுமையைக்காட்ட ஒரு சாந்தி நிகேதன் அமைந்தது போல கவிஞர் சிற்பியின் கவித்துவத்தை உணர கிராமத்து நதியான ஆழியாறு அமைகிறது. மழை சூழ்ந்த அந்த ஆழியாற்றின் பசுமைக் காட்சிகள் பார்ப்போரையும் ஒரு நொடிக்காவது கவிஞராய் மாற்றிவிடும் என்பது உறுதி.

    கவிஞருடன் உறவு பேணும் இளமைக் காலத் தோழர்கள், பணியாற்றிய நிறுவனங்கள், இடிபாடுகளுடனிருக்கும் சொந்த ஊரின் கட்டிடங்கள், விமர்சகர்கள், உடன் பணியாற்றிய பேராசிரியர்கள், கவிஞர்கள், படித்த மாணவர்கள், பதிப்பகத்தார் எனப் பல்வேறு கோணங்களிலும் கவிஞரைப் பற்றிய பார்வைகள் முன் வைக்கப் படுகின்றன.

     “”யாருடைய நிழல் நான்”?“ “காலமுட்டையின் ஓடு பிளக்கிறேன். குஞ்சாய் நானே குதித்து வருகிறேன்”” “ போன்ற கவிதை வரிகளின் படமாக்கல் கவனத்தை ஈர்த்துக் கொள்கின்றன்.

    75 ஆண்டுகளாக கவிதை என்ற ஒற்றை நட்சத்திரத்தை நோக்கியே உத்வேகப்பட்ட ஒரு கவிஞனின் ஆன்மாவை தரிசித்த நிறைவு கிடைக்கிறது. அங்கீகாரத்திற்கு செலுத்தப்பட வேண்டிய கடும் உழைப்பு பற்றிய புரிதல் கிடைக்கிறது. அழகிய கவிதை புத்தகங்களைப் புரட்டிய திருப்தி மனதை நிறைக்கிறது.

——————————–*—————————————-”

குறும்படம் கிடைக்கும் முகவரி : 50, அழகப்பா குடியமைப்பு, பொள்ளாச்சி-1 விலை = ரூ.50/


           ஜெ.மஞ்சளாதேவி, உடுமலைப்பேட்டை : அனுப்பியவர்: சுபமுகி

Series Navigationசன் ஆப் சர்தார் ( இந்தி )குரு
author

Similar Posts

Comments

  1. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    திரு.வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசத்துக்கு சாகித்ய அகாடமி விருது வழங்க நடுவர் குழுவில் நுழைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட அதே சிற்பி-தானே இவர் ?

    இவருடைய ‘கிராமத்து நதி’ என்ற கவிதை – என்று சொல்லப்பட்ட – நூலை படித்துபார்த்தேன்.

    அதுவரை கவிதை என்ற பெயரில் நான் கிறுக்கி வைத்திருந்த சிலவற்றின்மேல் லேசாக எனக்கிருந்த அவநம்பிக்கையும் அதிருப்தியும் உடனே அகன்றன. :)

Leave a Reply to பொன்.முத்துக்குமார் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *