கவிதையும் ரசனையும் – 18 நாரணோ ஜெயராமன்

author
0 minutes, 7 seconds Read
This entry is part 8 of 11 in the series 20 ஜூன் 2021

அழகியசிங்கர்

   நான் இப்போது நாரனோ ஜெயராமன் கவிதைகள் எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறேன்.

 

         ஜெயராமனின் ‘வேலி மீறிய கிளை’ என்ற கவிதைப் புத்தகம் க்ரியா வெளியீடாக 31.10.1976ல் வெளிவந்தது.  அத் தொகுப்புக்கு பிர்மிள் தர்மூஅரூப்சிவராம் எழுதிய முன்னுரை கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

 

         இந்த முன்னுரையை இரண்டு மூன்று முறை படித்துவிட்டேன். அடியேனின் சிற்றறிவுக்குச் சற்றும் எட்டவில்லை. 

 

தமிழில் எழுதியிருக்கும் அவருடைய கட்டுரையை இன்னொரு முறை யாராவது முயற்சி செய்து தமிழ் படுத்தினால் நன்றாக இருக்கும்.

 

         அவர் எழுதிய இரண்டு இடங்களை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

 

         ‘இன்று நுண்ணுணர்வுகளை மழுங்க அடிக்கும் சமகால வாழ்வின் தமிழ் வேஷமாகவே இளங்கோவின் தீபத்தினடியில் இருளாகி ருசிகரமான போலிகள் பதுங்குகின்றன.  காந்தியின் தியாகக் கொள்கை வெகுஜன வாதமாகியதும் ருசிகரமான காதல் கதைகளுக்கு ஒரு ஜனரஞ்சகமான பின்னணியாகிறது.’

 

         மேலே குறிப்பிட்டது பிரமிளின் வாசகங்கள்.

 

         இன்னொரு இடத்தில் 

 

         ‘வாழ்வின் நிதர்சனத்தை உணர்ந்தவன் புத்துணர்வு பெறுகிறான்.  புத்துணர்வு பொங்கும் வெளியீட்டின் வழியே கலையுருவில் நிதர்சனத்தைப் புனர் படைப்பாகச் சிருஷ்டிக்கிறான்.  ஆனால், ருசிகரமான அனுபவமோ மனசின் முதிர்ச்சியின்மை, விகாரம்  ஆகியவற்றைச் சார்ந்தது.’

 

         1976ல் இப்படி எழுதுவதுதான் ஒரு ஸ்டைல் போலிருக்கிறது. அதில் பிரமிள் கடுமையாக இயங்கிக் கொண்டிருந்தார்.

 

         இந்தப் புத்தகத்திற்கு வைதீஸ்வரனும் முன்னுரை எழுதியிருக்கிறார்.  அவர் எழுதிய முன்னுரை 2018ல் வெளிவந்திருக்கிறது.

       

                            நிலை 

 

                  அமர்ந்திருக்கும் வரப்பு.

 

                  வரப்பின் மேல் சிலுக்கும் செடி

 

                  அரக்குச்  சிவப்பாய்

                  ஒளிரும் 

                  மேற்குச் சிதறல்கள்

 

                  அண்ணாந்த கண்

                  தொலைவில் அதிசயிக்க

                  வேகம் கொள்ளும் பறவைகள்

 

                  வடப்புறத்தில் நீர்த்தடங்களாய்

                  முயங்கிக் கிடக்கும் உருவங்கள்,

 

                  தொலைவில் மேயும் மாடு,

                  கன்று.

 

                  எல்லாமே ஸ்தம்பித்து நிற்கின்றன.

 

                  எங்கோ மூலையில்

                  கட்டிப் போட்ட

                  வீட்டு நாய் மட்டும்

                  குரைத்துக்கொண்டேயிருக்கிறது.

 

         எங்கோ மூலையில் கட்டிப் போட்ட வீட்டு நாய் குரைப்பதால் எல்லாமே ஸ்தம்பித்து நிற்கின்றனவா என்ற கேள்விக்குறி எழுகிறது.  எல்லாவற்றையும் கவனிக்கிற மாதிரி கட்டிப்போட்ட வீட்டு நாயையும் கவனிக்கிறாரா?

         ‘அளவு’ என்ற இன்னொரு கவிதையைப் பாருங்கள்.  

 

                           அளவு

 

                  நீண்ட நாளாய் எதிர்பார்த்த

                  மழை பெய்தது – ஆனால்

                  எங்கள் வீட்டு சாய்ந்த

                  தென்னைமரங்களின் 

                  முதுகு நனையவில்லை.

 

         இந்தக் கவிதையில் கவிகுரலோன் மழை பெய்ததற்காக சந்தோஷப்படத் தோன்றவில்லை.  ஏன் எனில் அவன் வீட்டு சாய்ந்த தென்னைமரங்களில் முதுகு நனையவில்லை. இந்தக் கவிதையில் பலர் தன்னைப் பற்றியே நினைத்துக்கொள்வார்கள் என்று சொல்லாமல் சொல்கிறாரா?  இப்படிப் பல கேள்விகள் ஒரு கவிதையைப் படிக்கும்போது தோன்றுகிறது.  கவிகுரலோன் ஒன்று நினைக்கிறார்.  வாசகன் இன்னொன்று நினைக்கிறான்.

        

         சின்ன சின்ன வரிகளில் அதிகமாக நாரணோ ஜெயராமன் கவிதைகள் எழுதியிருக்கிறார்.  இதோ இன்னொரு கவிதை

 

                           சஞ்சாரம் 

                          

                           நாங்கள்

                           எங்கள் பிரச்சினைகளைப் பேசி

                           தீர்வு காணா நிலையில்””

                           எங்கள் நிழல்கள் பேசிக்கொண்டன”

 

                  எப்படித் தீர்வுகாண முடியும் பிரச்சனைகளால் ? அதற்காக நிழல்களை வம்பிககிழுக்கிறாரோ என்று தோன்றுகிறது.

 

பொதுவாக ஜெயராமன் கவிதைகளில் இயற்கையைப் பற்றி அவதானிப்பும், தத்துவப்போக்கும்  எல்லா கவிதைகளிலும் பரவிக் கிடக்கின்றன.

 

                  ஜெயராமனின் புகழ்பெற்ற கவிதைகள் பல உண்டு.  ‘லெவல் கிராஸிங்’ அதில் ஒள்று.  

                           லெவல் கிராஸிங்

 

                           இந்த

                           என்ஜினும் ஓர் எல்லையில்

                           மூச்சடங்கிவிடும்.

 

                           அன்றாடக் காரியம் முடித்த

                           எந்திரத் திருப்தியுடன்.

 

                           பேப்பரில் முகம் மறைத்து

                           பயணம் செய்யும் மாந்தர்,

                           உறங்கப் போவர்

                           மூட்டையைப் பத்திரமாய்ச் சேர்த்த

                           நிம்மதியுடன்.

 

                           வெறும் தண்டவாள அதிர்வுகள்

                           சத்தை, குப்பை குவியலில் கண்ணாடித் 

                           துகள் –

                           என்னில் வாழ்வு ஒளி

 

         இந்தக் கவிதையில் ஒரு ரயில் பயணம் நடைபெறுகிறது.  பத்திரமாக என்ஜினும் ஒர் எல்லைக்குப் போய் மூச்சடங்கி விடுகிறது.

வெறும் அதிர்வுகளைக் கொடுக்கும் தண்டவாளம். சக்கை, குப்பை குவியலில் கண்ணாடித் துகளைச் சேர்க்கிறது.  கடைசியில் ஒரு வரி எழுதி கவிஞர் முடிக்கிறார்.  என்னில் வாழ்வு ஒளி என்று.  இதில்தான் எல்லாவற்றையும் சொல்லி  முடிக்கிறார்.  எல்லா அவதிகளையும் தாண்டி வாழ்வு ஒளிமயமாக இருக்கிறது. 

 

         சில இடங்களில் இவர் கவிதைகளில் வெளிப்படும் வைர வரிகளை வியக்காமலிருக்க . முடியவில்லை. 

                  ‘உயிர்’ என்ற கவிதையில் 

                  ‘ஓட்டைக் கதவுக்கு கனத்த பூட்டுகள்’

                  ‘தவம்’ என்ற கவிதையில் ‘இமைசொடுக்க விழி மலர்ந்த’

இன்னொரு வரி, ‘அரைத் துஞ்சலில் எருமை.’

                        ‘வேலி  மீறிய கிளை’ கவிதைத் தொகுப்பிற்குப் பின் கவிதைகள் எழுதுவதை விட்டு ஒதுங்கி விட்டார் ஜெயராமன். 

         ஆனால் எனக்கு என்ன ஆச்சரியமென்றால் 2011ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரை அவர் கவிதைகள் எழுதிக்கொண்டு வந்திருக்கிறார்.  அக் கவிதைகளை அவர் யாரிடமும் குறிப்பிடவில்லை, எந்தப் பத்திரிகைக்கும் பிரசுரம் வேண்டி அனுப்பவில்லை.

                  இந்தக் குறிப்பிட்ட காலத்தில் நாரோணா ஜெயராமனின் கவிதைகள் முற்றிலும் வேறுபட்டவை..  அவற்றையும் கொஞ்சம் பார்ப்போம்.                 

                  ‘கடியாரப் பிரக்ஞை’ என்ற கவிதையை எடுத்துக்கொள்வோம்.

 

                  வயோதிகத்தில் 

                  மூதாட்டிக்கு,

                  மணிக்கொரு முறை சிறுநீர்,

 

                  ஒவ்வொரு முறையும்

                  ‘பெட்பேன்’ வைத்து அகற்றுகையில்,

                  மணி என்னவென முனகுகிறாள்

                  அவஸ்தை நீள

                  காலம் நீர்க்காமல்

         அவஸ்தை மட்டும் நீண்டு கொண்டிருக்கிறது ஆனால் காலம் அப்படியே நீர்க்காமலிருக்கிறது.  

         திரும்பவும் சின்ன சின்ன கவிதைகள்.  மிகக் குறைவான வரிகள் கொண்ட கவிதைகள்.

                           யூகபாரம் என்ற கவிதை.

 

                  விழுந்த நொடியில்

                  நீர் முத்தின்

                  ஜாலத்தைப் போல்

                  காலத்தை

                  கணங்கணமாய்

                  கைக்கொள்

                  ஆனந்தக் கூத்தாடு

         சூட்சுமமாய் நொடி எதையும் தவற விடாதே என்று அழுத்தமாய் இந்தக் கவிதை கூக்குரலாய் ஒலிக்கிறது. 

                  மரண சுதந்திரம் என்ற கவிதையைப் பார்ப்போம்.

 

                  உயிர் துறந்தாள்

                  அம்மா 

                  92 வயதில்

                  உணர்ந்த துக்கமெல்லாம்

                  அயர்ச்சியெல்லாம்

                  அவள் பட்ட கஷ்டமோ?

 

                  இலேசானது மனசு,

                  எரியூட்டிய பின்,

                  ஆன்ம விடுதலையில்

 

         அம்மாவிற்கு ஆன்ம விடுதலை அவள் மரணம் என்று முடிக்கிறார். 

 

                  ‘தோற்றுவாய்’ என்ற கவிதை ஒரு தத்துவ விசாரம். 

 

                  இதென்னப்பா?

                  மனிதர்கள் தாம் தோற்றுவித்த சிக்கலில்

                  வலிந்து கட்டி

                  மல்லுக்கட்டி

                  கூத்தடிக்கிறீர்கள்

                  பிரபஞ்ச வெளியில்

                  உன் இடமென்ன? என் இடமென்ன?

                  உன் காலமென்ன? என் காலமென்ன?

                  வியந்து, அரவணைத்து 

                  வியாபிக்காமல்?

 

         எங்கோ கொண்டு போய் விடுகிறது கவிதை.  வியந்து, அரவணைத்துப் போகாமல் நாம் ஏன் மல்லுக்கட்ட வேண்டுமென்கிறார்.

                  தன் உள்க் குரலை அவர் பின்னாளில் எழுதிய கவிதைகளில் அழுத்தமாகத் தெரிவிக்கிறார்.  இக் கவிதைகளைப் படிக்கும்போது வெளிப்படைத் தன்மை அழுத்தமாகத் தென்படுகிறது.

         ஒரு நல்ல கவிதைத் தொகுதியைப் படித்த திருப்தி எனக்கு.

 

Series Navigationதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *