காணாமல் போன உள்ளாடை

This entry is part 1 of 39 in the series 4 டிசம்பர் 2011

பயணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட பத்து இயக்குனர்களின் குறும்படங்கள் “கேரள கபே” என்ற பெயரில் முழுத்திரைப்படமாக கேரளாவில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டது முக்கிய நிகழ்வாகும். பலமுன்னனி இயக்குனர்கள் முன்னனி நடிக நடிகர்கள் அதில் பங்கு பெற்றிருந்தனர்.சமீபத்தில் கேரளாவிலிருந்து சில குறிப்பிடத்தக்கக் குறும்படங்கள் வெளியாகியுள்ளன. ஷாஜிகைலாஜின் இயக்கத்தில் பொதுவுடமைத் தத்துவவாதி ஏகேஜி பற்றின படத்தில் அவரின் அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றின பல்வேறு தகவல்கள் அதை ஒரு சிறந்த ஆவணப்படமாக்கியிருக்கிறது.”மதர்” என்ற படம் கிறிஸ்துவ கன்னியாஸ்திரிக்கு நேர்ந்த பாலியல் வன்முறை பற்றியது. தொண்ணூறுகளில் வட இந்தியாவின் பல இடங்களில் பெண்கள் மீதான வன்முறை நடந்தது. புவனேஸ்வரில் மரியா என்ற கிறிஸ்துவ கன்னியாஸ்திரி

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவர் கர்ப்பமடைந்தார் அவரை தேவாலயத்தைச் சார்ந்தவர்கள் தனியே பிரித்து வைத்து குழந்தையை பெற்றெடுக்க செய்கின்றனர் “ஆயிரம் நாட்களும் ,ஒரு கனவும்” கோக கோலா தொழிற்ச்சாலை ஒன்றுக்காக பிளாச்சி மடா என்ற கிராமத்தில் தொடர்ந்து நீர் உறிஞ்சப்பட்டதால் ஏற்பட்ட குடி தண்ணீர் பஞ்சம், விவசாய நிலங்கள் பாதிப்படைந்ததை விவரிக்கிறது. “சாருலதாவின் பாக்கி ” என்ற படம்

சத்யஜித்ரேயின் சாருலதா கதாபாத்திரம் இருவர் மத்தியில் ஏற்படுத்திய பாதிப்புகளைப் பற்றிச் சொல்கிறது.

மறைந்த இயக்குனர் பத்மராஜனின் மூன்று கதைகளை மையமாகக் கொண்டு “கபாந்தகதி ” என்ற நீளமான குறும்படம் வெளிவந்திருக்கிறது. 45 வயதே இருந்து மறைந்த பத்மராஜனின் இழப்பு மலையாளத் திரைப்பட உலகத்தில் குறிப்பிடத்தக்கதாகும். இயல்பான காதலும் காமமும் கொண்ட இருவர் பற்றிய ஒரு கதை தன் காதல் மனைவியை மீறி அவளின் மகள் மீது காமம் கொள்ளும் ஒருவனின் கதை என்று மூன்று பத்மராஜனின் கதைகளை இணைத்து ” கபாந்தகதி ” என்ற பெயரில் கீதா ஒரு குறும்படம் வெளியிட்டிருக்கிறார். அம்மா, மகள், காதலன் உறவுகளைச் சித்தரிக்கும் இப்படத்தின் ஒரு பகுதி சிறப்பாக உருவாகியுள்ளது. வேலையில்லாத இளைஞனின் காம எண்ணங்களின் வெளிப்பாட்டை கவிதைவரிகளோடு விஸ்தாரமாக்கியிருகிறார் கீதா. ஆண்,பெண் உறவுகள் பற்றிய அலசலாக இப்படம் அமைந்திருக்கிறது. இயக்குனராய் விளங்கிய பத்மராஜனின் இலக்கிய படைப்புகள் சிலவை குறிப்பிடத்தக்கவை. இவரின் முதல் நாவல் “நட்சத்திரங்களின் காவல்” கேரளா சாகித்ய அகாதமியின் பரிசைப் பெற்றது. இவரின் இயக்கத்தில் ” ஓரிடத்து பயில்வான்”, “மூணாம் பக்கம்” ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 1986 வரை அகில இந்திய வானொலியில் பணிபுரிந்து வந்த பத்மராஜனின் படைப்புகள் விளிம்பு நிலை மக்களைப் பற்றின வாழ்க்கையை பொதுவாக்கியவை. பரதனின் ” பிரளயம்”, “பெருவெளி அம்பலம்” போன்ற படங்களில் திரைக்கதையில் இடம் பெற்றிருந்தார். பரதனுடன் இணைந்து கலைப்படங்களின் தீவிரத்தை ஒரு பாதையாக்கியவர், விளிம்பு நிலை மனிதர்கள், பாலிய அனுபவங்கள், ஓரினச்சேர்க்கைப் பெண்களின் காதல் போன்றவற்றையும் சிறப்பாக கையாண்டிருக்கிறார்.

1991-ல் இவர் இயக்கி வெளியிட்ட ” நிஜன் கந்தர்வன்” என்ற படம் தோல்வியடைந்து. அவரின் மனைவி ராஜலட்சுமி தனக்கு கனவில் வந்த ஒரு விடயம் பற்றி பத்மராஜனிடம் தெரிவித்திருக்கிறார். சிந்து புராணத்தை மையமாகக் கொண்ட ஒரு கதை அது. கந்தர்வன் பூமிக்கு வரும் போது ஏற்படும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டதாகும் அது. கதைப்படமாக்கும் போது கதாநாயகனுக்கு ஒரு விபத்து நிகழ்ந்திருக்கிறது படப்பிடிப்பில் கதாநாயகி மயங்கி விழுந்து அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார். படம் வெளியான போது அதன் திரையிடலை காண கோழிக்கோடு சென்ற பத்மராஜன் திடுமென மரணமடைந்தார். நிஜன் கந்தர்வன் படம் அவரின் வாழ்க்கை சூழலை தலைகீழாகப் புரட்டிப் போட்டது. முக்கிய படைப்பாளி மரணத்தை வெறும் ஒளியாக்கி மறைந்து விடச் செய்தது.

“90 செ.மீ “என்ற படம் நரனிபுழா சனவாசாங் இயக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெண் தனது துணிகளைத் துவைத்துக் காயப் போடுகிறார். ஒரு எல்.ஐ.சி முகவர் வந்து போகிறார். கணவர் இருக்கும் போது வரச்சொல்கிறார் அவளின் சிறிய உள்ளாடை ஒன்று காணாமல் போகிறது. கணவனும் மனைவியும் தேடுகிறார்கள். புதிதாக ஒன்றை வாங்கிவந்து மாட்டிக்கொண்டு மனைவி வெளியே கிளம்ப வேண்டியிருக்கிறது. எலி தூக்கிப் போயிருக்கலாம் என்ற அனுமானத்தில் எலிப்பொறி பெட்டியொன்றையும் வாங்கி வருகிறார். அதுவும் திருடு போய்விடுகிறது. கணவன் இரவில் கண்விழித்துப் பார்க்கிறான் எதுவும் அகப்படவில்லை கணவனும் மனைவியும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இறுதியாகக் கணவன் ” உள்ளாடை உடுத்த வேண்டாம்” என்று மனைவிக்கு ஆணையிடுகிறான்.

“பந்தி போஜனம்” என்ற குறும்படம் கோவில்களில் தலித் பிரவேசம் போன்றவை பற்றிய அறிமுகத்துடன் ஆரம்பிக்கிறது. தாழ்த்தப்பட்ட சாதியைச்சார்ந்த ஒருவன் பணக்கார உயர்சாதிகாரர் சாதிப்பெயரைச் சொல்லி திட்டிவிடுகிறார்.இது நீதிமன்றத்தில் வழக்காடுகிறது தலித்தான ஒரு பப்ளிக் பராசிகியூட்டர் இந்த வழக்கைக் கையாள்கிறார். ஒரு மேல் சாதி வழக்கறிஞர் பெண் உட்பட மூன்று பெண் வழக்கறிஞர்கள் அந்த பப்ளிக் பிரசிக்கியுட்டரை ” மடக்குவதை” தவிர வேறு வழியில்லை என்ற முடிவிற்கு வருகிறார்கள். ஒரு நாள் மதிய வேளை உணவிற்கு வீட்டில் ஏற்பாடு செய்கிறார்கள். பப்ளிக் பிரசிக்கியுட்டர் தனது ஆண் உறவினர் உடன் வருகிறார். அவருக்கு பிடித்தமான மீன் மற்றும் அசைவ உணவுகளை மேல்சாதிப் பெண் விருந்து என்பதால் சாப்பிட வேண்டியக் கட்டாயத்தில் இருக்கிறாள். சாதியும், உணவு வகைகளும் அவர்களின் வாழ்க்கை முறையைக் காட்டிவிடுகிறது. நல்ல திருப்தியான விருந்து சாப்பிட்டதாக பப்ளிக் பிராசிக்யூட்டர் பெண் சொல்கிறாள். மாற்றாக அடுத்த விருந்தை அவள் வீட்டில் தரவேண்டும் என்றக் கட்டாயச் சிக்கல் அவள் மனதில் வருகிறது. ஓரளவு பப்ளிக் பிரசிக்கியுட்டரை “மடக்கி””விட்டோம் என்ற நம்பிக்கையில் மற்ற மூன்று பெண் வழக்கறிஞர்களுக்கு வருகிறது. உயர்சாதிப் பெண் கட்டாயத்தால் தான் உண்ட அசைவ உணவை வாந்தியெடுக்கிறாள். வழக்கறிஞர்கள் நீதி மன்ற வளாக உணவு விடுதியிலேயே உணவு பற்றி பரிமாறிக் கொள்ளும் விடயங்கள் சுவாரஸ்யமானவை. தங்களின் சாதியமைப்பு, வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டு அவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. பப்ளிக் பிரசிக்கியூட்டர் பெண் அசைவ உணவோ, தாழ்ந்த சாதிப் பெண் என்ற காரணத்தாலோதனியே தான் உட்கார்ந்து சாப்பிட வேண்டியிருக்கிறது. அவர்களின் பேச்சில் தலித்களின் ஆலய பிரவேசம், சேரிகளில் நடபாட்டம் உட்பட பல சாதிப் பிரச்சனைகள் இடம்பெருகின்றன. உணவுப் பழக்கங்களை முன்வைத்து இந்த விசயங்கள் அலசப்படுவது சுவாரஸ்யத்தைத் தருகிறது. 2000 ஆண்டு கால தீண்டாமைக் கொடுமை அவர்களின் பேச்சில் குறுக்கிடுகிறது

கேரள குறும்படங்களில் முன்னனி நடிகர்கள் நடிப்பதும், பிரபலமான இயக்குனர்கள் இயக்குவதும் ஆரோக்கியமான விஷயமாக இருக்கிறது, சமீபத்தில் சென்னையில் கமலஹாசன் நடத்திய ஒரு திரைக்கதைப் பட்டறையின் இறுதியில் சென்னையை மையமாக வைத்து 30 குறும்படங்கள் அவரின் மேற்பார்வையில் வெளிவரப்போவதாகவும், ஒரு குறும்படத்தை அவர் இயக்குவதாகவும் தகவல் தந்தார். பல குறும்படங்களின் வெளியீட்டு விழாக்கள் பிரபல தமிழ் இயக்குனர்கள் பங்கு பெறுகிறார்கள். நடத்தப்படும் குறும்படப் போட்டிகளுக்கு பிரபல இயக்குனர்கள் நடுவர்களாக இருக்கிறார்கள் என்பதே சிறு நம்பிக்கைக் கீற்றாக இருக்கிறது.

Series Navigationயானையைச் சுமந்த எறும்புகள்
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *