குளம்

This entry is part 35 of 53 in the series 6 நவம்பர் 2011

பற்களான படிக்கட்டுக்களோடு
பாசம் புதையக் காத்திருந்தது குளம்.

தட்டுச் சுற்றான வேட்டியுடன்
தலை குப்புறப் பார்த்தபடி இருந்தான் அவன்.

விரால் மீன்களாய் விழுந்து
துள்ளியபடி இருந்தார்கள் சிறுவர்கள்.

இரவுக்குள் ஒளிய நினைத்து
கருக்கத் துவங்கியது தண்ணீர்.

மொழியற்றவனைப் பார்த்து
நாவசைத்துப் பாடத்துவங்கியது குளம்.

நிலவும் சேர்ந்து இசையமைக்க
அவனும் இசைய விரும்பினான்.

தாலாட்டுப் பாடிய தாயை அணைக்க
நீரை நெகிழ்ந்து இறங்கினான்..

உடல்களையும் உடைகளையும் கழுவிக்
கிடந்த குளம் இவனைத் தழுவியது.

ஈசானமூலைக் கிணறுப் பள்ளம்
கைநீட்டி அரவணைப்பில் விழுங்கியது.

நிந்தனைகளற்ற சுழலுக்குள்
நிபந்தனைகளற்ற நித்திரையில் ஆழ்ந்தான் அவன்.

வருடம் ஒரு காவு என வசவுகேட்டு
வாய் பேசாமல் அலைந்தது குளம்.

Series Navigationமூளையும் நாவும்தோற்றுப் போனவர்களின் பாடல்
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

3 Comments

  1. Avatar
    maduraisaravanan says:

    //தாலாட்டுப் பாடிய தாயை அணைக்க
    நீரை நெகிழ்ந்து இறங்கினான்..

    உடல்களையும் உடைகளையும் கழுவிக்
    கிடந்த குளம் இவனைத் தழுவியது.//

    arumai….vaalththukkal

  2. Avatar
    Thenammai says:

    குளத்தின் அலைவாய்./// நல்ல சொல்லாடல் சிவா நன்றி.

    நன்றி மதுரை சரவணன்.

Leave a Reply to Thenammai Cancel reply

Your email address will not be published. Required fields are marked *