குழந்தைகளை உயரத்தில் வைத்துப் பார்க்கும் நிலை வரவேண்டும் !

author
0 minutes, 4 seconds Read
This entry is part 9 of 13 in the series 13 ஜூன் 2021

 மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

                    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

                              மெல்பேண் . … ஆஸ்திரேலியா

 

  

 

       இல்லறத்தின் பேரின்பம் குழந்தைச் செல்வங்களே. குழந்தை இல்லா வீட்டில் குதூகலம் என்பது காணாமல் போய்விடும்.ஆணும் பெண்ணும் இணையும் வாழ்க்கையில் ஆனந்தப் பரிசாக வந்தமை வது குழந்தைகளே. குழந்தை பிறப்பதே வாழ்க்கையில் பெருவர மாகும். அந்தக் குழந்தைகளை எப்படிப் பார்க்கிறோம் அந்தக் குழந் தைகளை எப்படி வளர்க்கிறோம் என்பதுதான் குழந்தையின் வாழ்க் கையிலே மிகவும் முக்கியமான நிலையாகும்.

   குழந்தை என்னும் சொல் – பிறந்த குழந்தையினைக் குறிப்பதா கவே யாவரும் கருதுகிறோம்.ஆனால் ” குழந்தைத் தொழிலாளி ” என்னும் பதம் சற்று வித்தியாசமானதாய் குழந்தைகளைப் பார்க்க வைக்கிறது. ஐந்து வயது தொடக்கம் பதினான்கு வயதுவரை உள்ள வர்கள் குழந்தைத் தொழிலாளர் என்னும் வகைக்குள் சிக்கித் தவிக் கிறார்கள். பிறந்த பிள்ளையினைக் குழந்தை என்பதுதான் பொது வான நியதி. ஆனால் வயது தொடக்கம் 14 வயது வரைக்குள் இருக் கின்றவர்களும் குழந்தைத் தனம் மிக்கவராகையால் அவர்களும் ” குழந்தை ” என்னும் வட்டத்துக்குள் வந்து  – தொழிலினைச் செய்யும் நிலையில் ” குழந்தைத் தொழிலாளர் ” என்று அழைக்கும் பொதுமை க்குள் வந்து நிற்பதை உலகமெங்கணும் காணுகிறோம். தொழிலாளர் எனும் பொழுது வயது வந்தவர்களே அங்கு வந்து நிற்பார்கள் என்பதுதான் நியாயமானது. ஆனால் இங்கு குழந்தைகளே தொழி லாளர் என்னும் நிலைக்குள் வந்து நிற்பதுதான் உலகத்தின் மாபெரும் கவலையாய்பிரச்சினையாய்முகிழ்த்து வந்து நிற்கிறது.

  பள்ளிக்கூடம் செல்ல வேண்டியவர்கள் வேலைத்தலத்தில் நிற்கிறார்கள். பாடப்புத்தகங்கள் எடுக்க வேண்டிய கைகளில் கல்லையும்மண்ணையும்கடப் பாரையையும்கடினமான பொருட்களையும்கழிவுகளையும்பத்தான பொருட்களையும்பிஞ்சுக்கரங்களால் தூக்கியும் சுமந்தும் நிற்கிறார்கள். “இளமையிற் கல்வி சிலையிலெழுத்து ” என்பார்கள்இளமையோ கல்லுடைப் பதிலும்கல்லைச் சுமப்பதிலும் கழிகிறது ! பிச்சை எடுப்பதும் எச்சியிலை பொறுக்குவதும். பிஞ்சுக்கரங்களுக்கு ஒப்படைக்கப் படுகிறது ! புத்தகங்களை சுமக்கவேண்டியவர்கள் தூக்கமுடியாச் சுமைகளை – கண்ணீரில் நனைந்தபடி சுமக்கும் நிலையில் காணப்படுகிறார்கள் !

   குழந்தைகளைக் குழந்தைகளாகப் பார்க்காமல்குழந்தைகளை குழந்தைகளாக நடத்தாமல்அவர்களையும்  ஒரு தொழிளாளர் என்று எண்ணி பல நாடுகள் பிஞ்சுக்கரங்களில் அஞ்சாமல் பல தொழிற்கரு விகளை ஒப்படைத்து நிற்பதையும் காணமுடிகிறது.விளையாட்டுப் பொருட்களும்புத்தகங்களும் இருக்க வேண்டிய கைகளில் – அவர்க ளுக்கு ஒவ்வாதவற்றைக் கைகளில் கொடுத்து வேலைவாங்கி – குழந்தைகளின் உலகினைச் சிதைக்க வைக்கின்ற  கொடுஞ்செயல் அரங்கேறிக் கொண்டிருப்பது பெரும் வேதனையாகவே இருக்கி றது.உலகின் பெரும்பாலான நாடுகள் குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்துவதைத் தடை செய்த போதும் – இன்னும் இந்தக் கொடிய நிலை மாறியதாகவே தெரியவில்லை.

    எரிட்டிரியா நாட்டில்  ஒன்பது பத்தாம் வகுப்புகளில் படிப்பவர்கள் கட்டாயம் வேலைசெய்யவும்இராணுவப் பயிற்சிக்கும் நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். சோமாலியாவில் ஐந்துவயது முதல் பதினான்கு வயது க்குட்பட்டவர்கள் பலர் குழந்தைத் தொழிலாளர்களாக அமர்த்தப் பட்டிருக்கிறார்கள்.இப்படி அமர்த்தப் பட்டவர்களோ ஆயிரக்கணக் கெனலாம்.வீதிகளில் பிச்சை எடுப்பதிலிருந்து சுரங்கத் தொழில்வரை குழந்தைகள் தொழிலாளராக்கப் பட்டிருக்கிறார்கள்.இங்கு குழந்தை களுக்கென்று முறையான கல்விமுறை ஏற்படுத்தப் படவில்லை என்பதும் நோக்கத்தக்கது.கொங்கோ நாட்டில் – இங்கிருக்கும் தேசிய புரட்சி ஆயுதக் குழுக்களால் குழந்தைகள் அடிமைகளாக நடத்தப் பட்டு அவர்களின் சுயநலத்துக்காக அல்லல்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள் என்பது மனமேற்கா வருத்தமாய் தொடர்கிறது. சூடானும் குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்கியே நிற்கிறது. பள்ளிசெல்லும் குழந்தைகள் மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகிறார்கள்.

  மியன்மார் என்றாலே பயமே யாவர் மனதிலும் எழுந்துவிடும்.அந்த நாட்டில் காணப்படும் வறுமையால் மில்லியன் கணக்கில் குழந்தைத் தொழிலாளர் பெருகி வருகிறார்கள்.

   இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் நிலை என்பது மிகவும் துன்பகரமாகவே  காணப்படுகிறது. சட்டங்கள் பல போட்டும் அங்கு நிலைமை மாறுவதாகவே தெரியவில்லை.குழந்தைத் தொழிலாளர் முறையென்பது பல இடங்களில் கொத்தடிமை முறையாகவே இருக்கிறது.இடம்பெயரும் தொழிலாளர்கள் மத்தியில் – குழந்தைகள் கொத்தடிமை என்பது மிகவும் அதிகமாகவே காணப்படுகிறது.அதே நேரம் வட மாநிலங்களிலிருந்து கட்டட வேலைக்கென்று அழைத்து வரப்படும் குழந்தைகளின் வாழ்வு நிலையோ மிகவும் மோசமாகவே காணப்படுகிறது.இடைத்தரகரால் இந்தக் குழந்தைகள் தொழிலாளர் ஆக்கப்படும் நிலை கட்டாயமாகத் தடுக்கப்படவேண்டும். தரகர்களின் செயலினால் குழந்தைகளின் கொத்தடிமை முறை வளர்கிறது என்று தான் சொல்லவேண்டும்.

  குழந்தைகள் கூலிக்கு வேலை பார்த்தாலும்குடும்பத்தாருடன் வேலை செய்தாலும் – அவைகள் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் கல்விக்கும்இடை யூறாக அமையும்  நிலையில்த்தான்  ” குழந்தைத் தொழிலாளி “  உருவெடுக்கிறான். இப்படியானவர்களைத்தான்                ” குழந்தைத் தொழிலாளி ” என்று பெயர் சூட்டி நிற்கிறோம். அதுமட்டுமன்றி – குறைவான கூலிக்கு நீண்டநேரம் வேலை செய்வதுஉடல் ஆரோக்கியம்மன ஆரோக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு பாதிப்பினைத் தரும் சூழலில் வேலை செய்வது குடும்பங்களைவிட்டுப் பிரிந்து வேலை செய்வதுபள்ளிப் படிப்பினை இழந்து வேலை செய்வது – அத்தனையும் யாருக்கு அமைந்திருக் கிறதோ  , அங்கேதான் ” குழந்தைத் தொழிலாளி ” வந்து நிற்கிறான்.

நேரடியாகவே குழந்தைத் தொழிலாளர் முறை இருப்பதுபோல் மறைமுகக் குழந்தைத் தொழிலாளர் முறையும் இருக்கிறது. அரசாங்கத்தின் சட்டங்கள் பாயாத இடங்களில் – குழந்தைகளை வேலைகளுக்கு அமர்த்தி அவர்களின் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் வகைக்கு உள்ளாக்குவதுதான் மறை முக நிலை எனலாம்.இவற்றைவிட இன்னுமொரு நிலை இருக்கிறது. அதுதான் கொடூரமான பயங்கரமான கொத்தடிமை முறை எனலாம். பெற்றவர்கள் பெற்ற கடனுக்காய் பிள்ளைகளைக் கொத்தடிமை யாக்கி வேலை வாங்கும் முறைமை என்பது கொடுமையிலும் பெருங்கொடுமையாய் இந்தியாவில் பல மாநிலங்களில் காணமுடிகிறது.

  நாட்டில் ஏற்படும் கலவரங்கள். இன மோதல்கள். இவற்றால் பெற்றோரை இழக்கும் குழந்தைகள். பெற்றவர்களால் கைவிடப்படும் குழந்தைகள். யாவரும் குழந்தைத் தொழிலாளராக்கப்படுகிறார்கள். பல நாடுகளில் குழந்தைகளை விற்பதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. தரகர்கர்கள் என்னும் பெயரில் உருவாகின்ற துரோகிகள் – ஈவு இரக்கமின்றி குழந்தைகளை பணத்துக்காக எதுவும் செய்திடத் துணிந்து தங்களின் இலாபத்தைக் கணக்குப் பார்த்தபடி இருக்கிறார்கள்.

  குழந்தைத் தொழிலாளர்களை இல்லாமல் செய்வதற்கு சட்டங்கள் போடுகிறார்கள். சர்வதேச அளவில் அமைப்புகள் நிறுவுகிறார்கள். இவ்வாறு செய்யும் நிலை தோன்றியதால் – குழந்தைகளுக்குக் கட்டாயமாகக் கல்வியினை ஊட்டவேண்டும்.பள்ளிக்கூடம் செல்லா நிலையில் இருக்கும் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் செல்லச் செய்ய வேண்டும். குழந்தைத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தும் இட ங்களைக் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னும் ஒரு எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இன்னும் குழந்தைத் தொழி லாளர் என்னும் நிலைமட்டும் நாடுகளை விட்டு முற்றிலும் அகலு வதாய் தெரியவில்லை.

  சட்டம் போடுவதோ திட்டம் போடுவதோ முக்கியம் அல்ல. சட்டத்தையும் திட்டத்தையும் மனதார உணரவேண்டும்.குழந்தைத் தொழிலாளர் என்னும்  சொல்லை அனைவரும் மறக்கவேண்டும். அப்படி ஒன்று இருக்கிறது என்னும் எண்ணமே மனங்களில் எழுந்துவிடக் கூடாது.பிள்ளைச் செல்வம் பெருஞ்செல்வம். அந்தச் செல்வத்தை அழவைத்து பார்ப்பதில் ஆனந்தம் காண்பது முறையா அவர்களை வாட்டி எடுத்து வேலைவாங்குவது மனித நீதிக்குத்தான் அடுக்குமா? குழந்தைத் தொழிலாளர் மூலம் கிடைக்கும் இலாபத் தைச் சுவைப்பதில் இன்பம் காணுவார் இரக்கத்தை இறக்கச் செய் கிறார்கள். குழந்தையும் தெய்வமும் ஒன்றுஎன்கிறோம்.தெய்வத்தைக் கோவிலில் வைத்துப் பூசிக்கின்றோம். குழந்தைகளை மட்டும் ஏன் பூசிக்க மறுக்கின்றோம் பூசிக்கத்தான் வேண்டாம் ! நேசிக்கலாம் அல்லவா ?

  உலகிலுள்ள அனைவரும் சிந்திக்க வேண்டும். வேலை செய்வதற்கு வயது வேண்டும். உடலில் உறுதிவரவேண்டும். பிஞ்சுக்கரங்களை முறிப்பது முறையா ? வளரவேண்டிய இளந்தளிர்கள். வாழ்வினை என்னவென்று அறியாத பருவத்திலே இருப்பவர்கள்.அவர்களுக்கு நாங்கள் ஆறுதலாய் இருக்க வேண்டும். அரவணைப்பாய் இருக்க வேண்டும். விழிப்புணர்வு பெறுவோம் ! குழந்தைகளை மீட்போம் ! குழந்தைகள் உலகம் குதூகல உலகம் ! குழந்தைத் தொழிலாளர் என்பதே நாட்டுக்கு அவமானமாகும் !

    பள்ளி சென்று படிக்க நினைக்கும் குழந்தை பத்திரிகை போடுகிறது. படித்தும் பரீட்சைக்குக் காசின்றி தேனீர் கடைகளில் கோப்பைகளை கழுவும் நிலை ஏற்படுகிறது. கணிதத்தைக் கற்றிட எண்ணிய பிள்ளை கல்லுடைக்க கல்சுமக்கச் செல்கிறது.ராக்கெட்டில் சென்று விண்ணியலைக் காண விளையும் பிள்ளை தெரிவில் விளையா ட்டுப் பொம்மையை விற்கிறது. சுண்டல் விற்று நிற்கிறது. விஞ்ஞானியாய்மருத்துவனாய்பொறியாளனாய்வரவேண்டிய குழந்தைகள் வீதியிலே திரிவதா விறகினைச் சுமப்பதா? மாற்றம் வரவேண்டும் ! குழந்தைகளை உயரத்தில் வைத்துப் பார்க்கும் நிலை வரவேண்டும் ! அப்படி வரும் நாள் அகிலத்துக்கு ஆனந்தமான நாளாகும் !

 

 

Series Navigationதலைவியும் புதல்வனும்இல்லத்தரசி – உருது மூலம் –இஸ்மத் சுக்தாய்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *