சிம்மாசனங்களும், துரோகங்களும்- வெ. இறையன்புவின் இரு நூல்கள்

This entry is part 25 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

 

 

இவ்வாண்டில்  வெ. இறையன்புவின் இரு நூல்களை  நியூசென்சரி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

1. சிம்மாசன சீக்ரெட் 2. துரோகச்சுவடுகள்

 

 

தலைமைப்பண்பு பற்றி பேசுகிறபோதெல்லாம் அது பரம்பரையாக வந்தது போல் சொல்லும் பண்பு இருந்து கொண்டே இருக்கிறது. பிறப்பு தலைமைப்பண்பை தீர்மானிப்பதாய் இருப்பதாய் இருந்த மாயைகளும், கட்டமைப்புகளெல்லாம் தகர்ந்து விட்டன. தொடர்ந்த உழைப்பு, தன்னலமற்றத் தன்மை  தலைமைப்பண்பிற்கு வழிகோலுகிறது. அவ்வகையில் தலைமைப்பண்பிற்கான விசயங்களாய் விழிப்புணர்வுடன் இருத்தல், பேச்சில் கவனம கொள்ளுதல், துணிவுடன் தொடங்குதல், உடனடியாக முடிவெடுத்தல்., முடியும் வரை காத்திருத்தல், நேரமே உயிர் மூச்சாகக் கொல்லுதல் , இயல்பாக இருத்தல், அவமானங்களை எதிர் கொள்ளுதல், உடலை உறுதியாக வைத்துக் கொள்ளுதல், ஆபத்துடன் வாழ்தல்  ஆகியவற்றை முதன்மையானப் பண்பாக எடுத்துக் கொண்டு இந்நூலில் விவரிக்கிறார். எதற்குப்பிரச்சினை என்று நினைப்பவர்கள் மத்தியில்  தலைமைப்பண்பு பற்றிய விழிப்புணர்வையும், அதன் அம்சங்களையும் பற்றியத் தெளிவையும் ஏற்படுத்தவே இக்குறுநூல் என்றும் குறிப்பிடுகிறார்.குழுவை ஒருங்கிணைக்க வைப்பதற்காக எப்போதும் ஆபத்துடன் இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அன்பினால் ஒன்று சேர்ப்பதை விட வெறுப்பினால் வென்று சேர்ப்பது எளிது எனபதை அவர்கள் அறிவார்கள் என்ற சின்னச் சின்னப் பிரச்சினைகளை பெரிதாக்கும் மனிதர்களின் பண்பு பற்றிய அலசல் நுணுக்கமானதாகும். சமூகம் எப்போதும் ஒத்துக் கொள்கிற போர் புரிய வீரம் அவசியம் என்பதை விடுத்து சமூகம் முன் வைத்தவற்றை எதிர்ப்பதற்கும், அவற்றை மறுதலிப்பதற்கும் அதிகமான துணிச்சல் தேவை என்பதை விரிவாக எடுத்துரைக்கிறார். இவ்வளவு சிரமப்பட்டு சிம்மாசனங்களை அடைவதைக் காட்டிலும் அவற்றை தக்க வைத்துக் கொள்வது சிரமம் என்பது பற்றியும் அக்கறையை வெவ்வேறு கோணங்களில் காட்டுகிறார்.சிம்மாசனங்களை கைப்பற்றி உட்கார்ந்திருப்பதை விவும், சிம்மாசனங்களை விட நாம் மேன்மையானவர்களாக் இருக்க வேண்டும் . அப்போதுதான் நம்க்கும் பெருமை , சிம்மாசன நாற்காலிக்கும் பெருமை என்பதையும் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்.ஒரு படைப்பிலக்கிய வாதியாகவும், மேடைப்பேச்சு மூலமும் லட்சக்கணக்கான மாணவர்களை, மக்களைச் சந்திக்கிறவராயும் இருக்கிற காரணத்தால் சமூக நுண்ணறிவு என்பது தலைமைக்குத் தேவையான முக்கியமான பக்குவம் என்பதை கூறுகிறார். சமூக நுண்ணறிவு பற்றி இவ்வளவு நுணுக்கமாகவும், அதன் தேவை கருதியும் ஒரு படைப்பிலக்கியவாதியால் தான் எடுத்துரைக்க முடியும் என்பது இந்நூலின் முக்கிய சிறப்பம்சம் எனலாம்.   ஒவ்வொரு பக்கத்திலும் சிம்மாசனங்களைத் தொட்டவர்களின் படங்கள் நிறைந்து ஆச்சர்யம் கொள்ளச் செய்கிறது.

தன்னம்பிக்கை பற்றி எழுதுகிறவர்கள், பேசுகிறவர்கள் பெரும்பாலும் எதிர்மறை அம்சங்களைப் பற்றிப் பேச மாட்டார்கள். நம்பிக்கையையே மூன்று வேளை உணவாகக் கொள்ளும்படி அறிவுறுத்துவர். .துரோகர்கள் நிறைந்த சமூகத்தில் அவர்களைப் புறந்தள்ளி விட்டு, நேர்மறை அம்சங்களைத் தொடர்ந்து கட்டமைத்துக் கொண்டு போய் வெற்றிக்கனி பறிக்க ஏணியைப் போடுவார்கள். அந்நிலையில் ஒரு நூலின் தலைப்பே      “ துரோகச் சுவடுகள் “ என்று தலைப்பிட்டு இறையன்பு அவர்களிடமிருந்து வெளிப்பட்டிருப்பது மாறுதலாயும் எதிர்மறை அம்சங்களிலிருந்து நேர் மறை அம்சங்களுக்கு போகும் பாதையைக்  காட்டுவதாகவும் இருக்கிறது.

வரலாற்றின் பல பக்கங்களிலும்   துரோகங்கள் சிம்மாசனங்களை எட்ட வைத்திருப்பதைக் காட்டுகிறார்.அதுவும் தற்கால அரசியல் சமூக சூழல்களில் துரோகங்களின் நிழல்கள் படிந்திருபதை இந்திராகாந்தியின் கொலை முதல் அரசியல் கட்சிகளின் கூட்டணி வரை சுட்டிக்காண்பிக்கிறார். துரோகங்களால் இழந்து போன சிம்மாசனங்களைப் பற்றிப் பேசும் போது  அவற்றால் வெவ்வேறு துறைகளின் நிகழ்ந்த குறைபாடுகள் பற்றியும் விரிவாகச் சொல்கிறார். உதாரணம் இந்திய மருத்துவ முறை பற்றியது.. சீடர்கள் முழுமையாக அறிந்தால் துஷ்பிரயோகம் செய்து விடுவார்களே என்ற அச்சத்தில்தான் இந்திய மருத்துவ முறைகள் முழுமையும் அடுத்தத் தலைமுறைகளை அடையாமல் போய் விட்டன. குறுகிய உள்ளம் படைத்தவர்கள் கையில் அரிய மருத்துவ முறைகள் அகப்பட்டு விட்ட்தால் அவை குணப்படுத்துவதை விட ரணப்படுத்துவதற்கு அதிகம் உபயோகப்படுத்தப்பட்டு விடும் என்ற அச்சமும் அதற்குக் காரணம் என்கிறார்.  துரோகிகளிடமிருந்து தப்பிப்பது எப்படி என்கிற கேள்வியும் அதற்கான பதிலும் இந்த நூலிலே அடங்கியிருக்கிறது. விரக்தியை  ஏற்படுத்துவது இந்நூலின் நோக்கமில்லை என்று எச்சரிக்கை செய்வதற்கான குரலாக அமைந்திருக்கிறது.

வழக்கமாய் நாம் கோடிட்டுக் கொள்கிற வரிசையில் இப்புத்தகத்தின் சில வரிகளைப் பார்க்கலாம்.:

* விசுவாசிகள் குறிஞ்சியைப் போலவும், துரோகிகள் நெருஞ்சியைப் போலவும் இருக்கிறர்கள்.

* வரலாற்றில் மகான்களும் இறைத்தூதர்களும் அருகில் கூட துரோகிகள் எப்போதும் இருந்திருக்கிறார்கள் என்கிற செய்தி நம்மை தொய்வடையச் செய்வதற்காக அல்ல. இன்னும் நாம் கூடுதலான எச்சரிகையாய் நடந்து கொள்வதற்காகவே..

* நம்பிக்கையை கைக்குட்டையாக்க் கையாள வேண்டுமே தவிர கால் சட்டையாக அணிய முடியாது. சந்தேகமும் சாப்பாட்டுடன் கலந்திருந்தால்தான் வாழ்க்கையில் சம்த்தன்மை ஏற்படும் என்பது சரித்திரம் உணர்த்தும் பாடம்.

* உழைத்தவர்களுக்குபோய்ச் சேர வேண்டிய அடையாளத்தை மறைத்து விட்டு தொடர்பில்லாத    நபருக்குப் பெருமைகளை அள்ளி வீசுவது வியர்வைச் சிந்தியவர்களுக்கு அயர்வைத்தருகிற அற்பச் செயல்.

*துரோகம் எப்போதும் நிகழ்வுகளின் தொடர்ச்சி. அது தலைமுறைகளை தாண்டியும் நீடிக்கும் வன்மம்.

 

 

( நியூசென்சரி பதிப்பகம், சென்னை 98  வெளியீடு.

1. சிம்மாசன சீக்ரெட் 2. துரோகச்சுவடுகள் இரண்டும் தலா ரூ 60 விலை )

Series Navigationசிங்கப்பூரில் 34 ஆம் ஆண்டுத் திருமுறை மாநாடு -2014 – பங்கேற்பாளரின் அனுபவக் குறிப்புகள்தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா ஆகஸ்ட் 25-ம் நாள்
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *