சில்லறை விஷயங்கள்

This entry is part 1 of 23 in the series 6 ஜூன் 2021

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

 

 

ஒருகாலத்தில் பத்துபைசாவுக்கு மூன்று பட்டர் பிஸ்கெட்டுகள்

சுடச்சுட கிடைக்கும் பேக்கரியிலிருந்து.

இன்று ஒரு ரூபாய் நாணயமே சில்லறை.

 

”இந்தா சில்லறைப்பணம் போகும் வழியில் யாருக்கேனும் தருவாயே”

என்று அன்போடு என்னிடம்

சில ஐம்பது ரூபாய்த் தாள்களைத் தரும்

நல்ல முதலாளி இன்றில்லை.

 

சில்லறையில்லையென்று பேருந்திலிருந்து

இறக்கிவிடப்பட்ட முதியவர்களில் யாரேனும்

இருபதடி வேகாத வெயிலில் நடந்து

இரண்டாக மடிந்து விழுந்து

மாரடைப்பால் இறந்திருக்கக்கூடும்.

 

கடலலையில் கால் வைத்து மகிழ்வது

சில்லறை விஷயமாயிருக்குமா?

சரியாகத் தெரியவில்லை.

 

சில்லறை நாணயத்தைச் சுண்டித்தான்

பூவா தலையா பார்க்கமுடியும்.

 

காயா பழமா வளர்ந்தவர்களுக்கு சில்லறை விஷயம்

குட்டிப்பெண்ணுக்கு உயிர்வலி.

 

கோயில் உண்டிகளை நிரப்புவது இரண்டாயிரம் ரூபாய்த் தாள்களை விட

எளிய மக்கள் முடிந்துவைத்துக் கொண்டுவந்து போடும்

சில்லறைகளே.

 

கண் தெரியாத பாட்டியொருவர் தள்ளாடி தட்டுத்தடுமாறி

வந்துகொண்டிருந்தார்.

வாய் மட்டும் விடாமல் முனகிக்கொண்டிருந்தது.

யாராவது ஒரு ரூபாய் தர்மம் தாங்கய்யா

_ ஒரு கப்பு டீத்தன்னிக்கு ஒரு ரூபாய் குறையுதும்மா….”

 

சில்லறைகளை மட்டுமே சேமிக்கமுடிந்த கட்டுமானப்பணித் தொழிலாளியொருவரின் மனதில்

ஐந்துநட்சத்திர ஹோட்டலின் சில்லறையில்

உறங்கவேண்டும் என்ற

தாகம் தகித்துக்கொண்டிருக்கிறது.

 

ஒருவகையில் கல்லறையும்

சில்லறையே.

 

சௌந்தர்யலட்சுமி வங்கி விளம்பரம் சொல்லும் _

”சிறுதுளி பெருவெள்ளம்”

 

சில்லறையைக் களவாடினால் திருடன்;

கோடிகளை விழுங்கியவர் திருவாளர் கள்ளர்.

 

கதையைத் திருடுதல் சில்லறை விஷயம் சிலருக்கு

கையுங்களவுமாகப் பிடிபட்டால்

அவமானம் அவர்களுக்கா சில்லறைக்கா?

 

சிலருக்கு கவிதை சில்லறை விஷயம்;

சிலருக்கு சகவுயிர்கள் சில்லறை விஷயம்;

 

சில்லறை யில்லையென்றால் இந்தப் பிச்சைக்காரர்களே யிருக்க மாட்டார்கள்

என்று முகஞ்சுளித்துச் சொல்வாரும்

சில்லறையா? இவர்களெல்லாம் ஸ்விஸ் வங்கியில் பணம் வைத்திருப்பார்கள் என்று பல்லைக் கடித்துக்கொண்டு சொல்வாருமாய் _

 

எல்லோரோடும்தான் வாழ்ந்தாகவேண்டியிருக்கிறது

பொல்லா இலக்கியவுலகு மட்டும் விதிவிலக்கா என்ன?

 

Series Navigationபூடகமாகச் சொல்வது
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Comments

  1. Avatar
    செல்வா says:

    சில்லறையைப்பற்றிய உங்கள் கவிதை எந்தன் சிந்தையை தூண்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *