சீதாயணம் [3] (இரண்டாம் காட்சி)

This entry is part 21 of 31 in the series 20 அக்டோபர் 2013

 

சி. ஜெயபாரதன், கனடா

(இரண்டாம் காட்சி)

 

அன்புள்ள நண்பர்களே,

 

“சீதாயணம்” என்னும் எனது  நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். முக்கியமாக  இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, பிள்ளைகளை இழந்து, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரையும் போக்கிக் கொண்ட சீதாவின் பரிதாப நிகழ்ச்சி இது.

 

அன்புடன்,
ஜெயபாரதன், கனடா

+++++++++++++

[சென்ற வாரத் தொடர்ச்சி]

 

நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா                       

வடிவமைப்பு :  வையவன்                        

ஓவியம் :  ஓவித்தமிழ்

 

Inline image 1

 

Inline image 2

[சென்ற வாரத் தொடர்ச்சி]

 

 

காட்சி இரண்டு

வால்மீகி ஆசிரமத்தில் சீதா அடைக்கலம்

 

 

 

Scene -4

 

Scene -5

 

[இடம்: கங்கா நதியின் தென்கரை ஓரம்.நேரம்: பகல்.பங்கு கொள்வோர்: சீதா, இலட்சுமணன், குகன், வால்மீகி ஆசிரமத்தின் பெண் சீடர்கள்][அரங்க அமைப்பு: இரத்தில் கங்கையின் வடபுறம் வந்திறங்கிப் பின் குகன் ஓட்டி வந்த படகில் கங்கை நதியைக் கடந்து இலட்சுமணன், சீதா கரையோர தோப்பின் மரநிழலில் தங்குகின்றனர். குகன் சீதாவின் ஆடை, அலங்கார, ஆபரணப் பெட்டியைச் சுமந்து கொண்டு அவர்களுக்குப் பின் தொடர்கிறான்]
இலட்சுமணன்: (சீதாவைக் கும்பிட்டுத் திடீரெனக் காலில் விழுந்து, தழுதழுத்த குரலில் கண்ணீருடன்) அண்ணி! என்னை மன்னிக்க வேண்டும். …. இல்லை! இல்லை! … என்னை மன்னிக்க வேண்டாம். உங்களுக்கு மாபெரும் துரோகத்தைச் செய்து விட்டேன்! துரோகத்துக்கு உடந்தையாக இருந்து, துரோகச் செயலைத் தடுக்க வலுவின்றி, துரோகக் கட்டளைக்கு அடிபணிந்து, பாசமுள்ள உங்களுக்கு வஞ்சகம் செய்து விட்டேன்! … நான் கோழை! … நான் வஞ்சகன்! … என்னை மன்னிக்காதீர்கள்! .. என்னை இறைவன் தண்டிப்பான். செய்யத் தகாத செயலைத் தெரிந்தே செய்து விட்டேன்!

சீதா: (புரியாத விழிகளுடன்) நீ என்ன சொல்கிறாய் ? நீ என்ன வஞ்சகம் செய்துவிட்டாய் ? மன்னிக்கச் சொல்லிப் பிறகு மன்னிக்க வேண்டா மென்று ஏன் மன்றாடுகிறாய் ? ஏன் உடம்பு நடுங்குகிறது ?

இலட்சுமணன்: (காலைப் பிடித்து கொண்டு, மேலே திரும்பி) அண்ணி! அருமை அண்ணி! எப்படிச் சொல்வேன் உங்களுக்கு ? அண்ணனிட்ட தண்டனையை உங்களுக்கு எப்படிச் சொல்வேன் அண்ணி ?

சீதா: உன் அண்ணா, என்ன தண்டனை எனக்கு விதித்திருக்கிறார் ? புரிய வில்லையே. புரியும்படிச் சொல் இலட்சுமணா, சொல்!

இலட்சுமணன்: [நேரே பார்க்காமல் முகத்தைத் திருப்பி தடுமாற்றமுடன்] அண்ணி! உங்களை அண்ணா நாடு கடத்தியுள்ளார்! உங்கள் இதயக் கோயிலில் குடியுள்ள எங்கள் அருமை அண்ணா!

சீதா: [கூர்ந்து நோக்கி] நான் என்ன குற்றம் செய்தேன் ? சுற்றி வளைக்காமல் நேராகப் பேசு!

இலட்சுமணன்: அண்ணி! நீங்கள் எந்தக் குற்றமும் புரிய வில்லை. உங்களை இன்று காட்டில் விட்டு விட்டு வரவேண்டு மென்று எனக்கு அண்ணாவின் உத்தரவு. கட்டளையை நிறைவேற்றி விட்டேன். போன வனவாசத்தில் நிகழ்ந்த தவறுக்கு, இப்போது புது வனவாசம் உங்களுக்கு! இரண்டாம் வனவாசம்!

சீதா: கட்டளை நிறைவேற்றி விட்டாய்! முதலில் கட்டளை ஏன் பிறந்தது ? ஏதோ நடந்திருக்கிறது. ஏன் மறைத்து மறைத்துப் புதிர் போடுகிறாய் ? மறைக்காமல் நடந்ததைச் சொல் இலட்சுமணா!

இலட்சுமணன்: அன்று கைகேயி சிற்றன்னையின் வரத்தைக் காப்பாற்ற தந்தைக்கு அடிபணிந்து, காடேக ஒப்புக்கொண்டார். இப்போது குடிமக்கள் அவச்சொல்லுக்கு அடிபணிந்து, உங்களைக் காட்டுக்கு அனுப்பத் தண்டனை விதித்திருக்கிறார். அதனால் அண்ணா அவமானப் பட்டாராம்!

சீதா: அவச்சொல்லால் என் பதிக்கு அவமானமா ? குடிமக்கள் என்னைப் பற்றி என்ன அவச்சொல்லை இவருக்குச் சொன்னார்களாம் ? இந்த அவமானத்தை என் பதி எனக்கல்லவா முதலில் சொல்ல வேண்டும் ? நான் சம்பந்தப்பட்ட இந்த அவமானம் எனக்குத் தெரியாமல், முதலில் உங்களுக்குத் தெரிந்திருப்பது இப்போது எனக்கு அவமானமாகத் தோன்று கிறது. நான் அவரது மனைவியா அல்லது அந்தப்புர பெண்ணடி மையா ? மனைவி அருகில் இருந்தது தெரியாமல் போனது. மதிப்புள்ள மிதிலை நாட்டு மன்னரின் புதல்வி என்பதும் மறந்து போனது. என்னால் ஏற்பட்ட அவமானம் அவரை மட்டுமா தாக்கும்! என்னையும் தாக்கும்! என் தந்தையையும் பாதிக்கும்! என்ன அவமானம் என்னருமைப் பதிக்கு ?

இலட்சுமணன்: அசோக வனத்தில் காலம் தள்ளிய உங்கள் புனிதத்தில் அண்ணாவுக்கு எள்ளளவும் ஐயப்பாடு இல்லை! இலங்கை வேந்தன் சிறையிட்ட உங்களை உத்தமி என்று முற்றிலும் நம்புகிறார். ஆனால் குடிமக்கள் மனதில் உங்கள் மீது தப்பான சந்தேகம் எழுந்துள்ளது. இராவணன் உங்களைத் தொட்டுத் தூக்கிச் சென்றானாம். பல வருடங்கள் அவனது அரண்மனையில் நீங்கள் வைக்கப் பட்டிருந்தீர்களாம்! அண்ணா நம்பித் தன்னுடன் எப்படி அரண்மனையில் வைத்துக் கொள்ளலாம் என்று குடிமக்கள் அண்ணாவைத் தூற்றினார்களாம். இது ஒற்றர் மூலம் அண்ணாவுக்குத் தெரிய வந்தது.

சீதா: [ஆத்திரமாய்] என்ன சொன்னாய் இலட்சுமணா! நான் களங்க மற்றவள். நான் கறை அற்றவள். இராவணன் முரட்டுத்தனமாய்ப் பற்றித் தூக்கிச் சென்றது, ஆத்மாவற்ற இந்த கூடு உடம்பைத்தான். என் ஆத்மா சுத்தமானது. தூய்மையான என் மனக் கோயிலில் இருப்பவர் என் பதி ஒருவர்தான்! இதை நான் எப்படி நிரூபித்துக் காட்டுவது ? இராவணன் பிறர் மனைவியைக் களவாடிய அயோக்கியன்! ஆனால் அவன் கூட என்னைப் பலாத்காரம் செய்யவில்லை! அப்படி ஏதேனும் ஆகியிருந்தால் என்னுயிரை அன்றைக்கே மாய்த்திருப்பேன்! என் ஆத்மா ஏற்றுக் கொண்டு ஒருவரை மணந்தபின், விதியால் பிரிக்கப்பட்டு, மற்றவன் கையால் தீண்டப்பட்டு, அவன் மாளிகையில் வாழ்ந்தேன் என்று ஊரார் ஏசினாலும், உன் அண்ணா வுக்கு என்மேல் நன்னம்பிக்கை இல்லாமல் போனதா ? உண்மையாக உன் அண்ணாவுக்குத்தான் என்மீது நம்பிக்கை யில்லை! அப்படித்தான் எனக்குத் தெரிகிறது. தன் சந்தேகத்தை மறைத்து, ஊரார் புகாரைக் காரணம் காட்டி, அவரது அன்பு மனைவியை ஏன் தண்டிக்கிறார் ? நான் புனிதமானவள் என்பதை நிரூபிக்க முடியாது! நிரபராதி சீதா என்பதை நிரூபிக்கக் கூடிய ஓர் இரக்கமுள்ள அரக்கனை உன் அண்ணா போர்க் களத்தில் கொன்றுவிட்டார்! நான் புனிதமானவள் என்று முதலில் நம்பினால்தானே, அவர் ஊருக்கு நிரூபிக்க முடியும்! அன்பு மனைவியைத் தண்டித்து, அறிவு கெட்ட குடிமக்களின் அவச்சொற்களை மெய்யென்று காட்டி விட்டார்! தன்மானத்தைக் காப்பதாய்க் காட்டி என் மானத்திற்குப் பங்கம் இழைத்தார்! உன் அண்ணா எனக்குப் பதி! ஆனால் சீதா அவரது மனைவி இல்லை!

இலட்சுமணன்: அப்படி அண்ணாவைத் திட்டாதீர்கள் அண்ணி! ஊர்வாயிக்கு அண்ணா அஞ்சிமனம் நோவது உண்மையே! அதே சமயத்தில் உங்கள் புனிதத்தில் அவருக்குச் சந்தேகமில்லை என்பதும் உண்மையே! அப்படி சந்தேகம் இருந்தால், படை திரட்டிச் சென்று, கடல் கடந்து போரிட்டு உங்களை மீட்க வந்திருப்பாரா ?

 

[தொடரும்]

+++++++++++++++

தகவல்

1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit    to Kishan Lal Verma

3.  Mahabharatha By: Rosetta William [2000]

4. The Wonder that was India By: A.L. Basham [1959]

5. The Ramayana & The Mahabharata  By: Romesh C. Dutt  [1969]

6.  Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma  [2004]

**************

S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013)  [R-2]

http://jayabarathan.wordpress.com/

 

Series Navigationகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 32 (இறுதிப்பகுதி)“காமன்சென்ஸ்” இல்லாத “காமன்வெல்த்” நாடுகள்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

3 Comments

  1. Avatar
    ஷாலி says:

    இந்த பிரிவுச் சூழலுக்கு ஒரு பொருத்தமான பாட்டை போட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
    ———————————————
    கங்கை நதியோரம் (லட்சுமணன்) நடந்தான்,
    கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்
    மெல்ல நடந்தாள்.

    கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம்
    காலங்கள் தோறும வாழ்கின்ற சொந்தம்
    விளையாட்டுப் பிள்ளை… மணல் வீடு அல்ல
    விதி என்னும் காற்றில் பறி போவதல்ல

    மங்கை அவள் சீதை முள்ளில் நடந்தாள்
    மன்னனவன் கண்ணில் கங்கை வடிந்தாள்
    உள்ளம் நெகிழ்ந்தான்
    மன்னனவன் கண்ணில் கங்கை வடிந்தாள்.

    மாணிக்கப்பாவை நீ வந்த வேளை
    நினையாததெல்லாம் நிறைவேற கண்டேன்
    அன்பான தெய்வம்…. அழகிய செல்வம்
    பெண்ணென்று வந்தாள் என்னென்று சொல்வேன்.

    படம்:வரப்பிரசாதம். பாடல்: கவிஞர்.புலமை பித்தன்.

  2. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    எல்லாம் அறிந்த சகல கலாவல்லி ஷாலி அவர்களே,

    இத்தனை அரிய, பெரிய கருத்துகள் எப்படி உங்களுக்குத் தோன்றுகின்றன, பொருத்தமான இத்தனைத் திரைப் பாடல்கள் எப்படி மனப்பாடம் செய்தீர்கள்? வேறு இழைகளில் கூட வரும் உயர்ந்த வரலாற்றுக் கருத்துக்கள் உங்கள் வீட்டுப் பரணில் நிரம்ப உள்ளனவா ? நடமாடும் ஞானியார் நீங்கள்.

    சி. ஜெயபாரதன்

  3. Avatar
    ஷாலி says:

    “வசிட்டர் வாயால் பிரம்மரிஷி” பட்டம்.

    பேராசிரியர் அவர்களே! நன்றி! நன்றி!! தங்கள் சொல்லுக்கு எந்தவகையிலும் தகுதி இல்லாத சாமானியன் நான்.எல்லோரையும் போலவே கூகுள் சோழியை குலுக்கிப் போடுகிறேன். கிடைத்த முத்துக்களை கோர்த்து விடுகிறேன்.
    முயற்சியும் ஆர்வமும் சிறிது நேரத்தையும் செலவு செய்தால் கற்பகதரு,காமதேனு அட்சய பாத்திரம்,அமுத சுரபி இணையத்தில் எல்லாம் கிடைக்கும்.
    மற்றபடி உங்களுக்கு மட்டும் ஒரு உண்மையை சொல்கிறேன்.
    ஷாலி வல்லி அல்ல வல்லன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *