சூளாமணியில் சமயக் ​​கொள்​கையும் நிமித்தமும்

This entry is part 18 of 28 in the series 10 மார்ச் 2013

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
Malar.sethu@gmail.com

தமிழில் ​தோன்றிய காப்பியர்களில் குறிப்பிடத்தக்க காப்பியம் சூளாமணியாகும், ​​சிலம்பு, ​மேக​லை, சிந்தாமணி என்ப​தைத் ​​தொடர்ந்து இக்காப்பியமும் பெண்களின் த​லையில் அணிந்து ​​கொள்ளும் அணிகலனின் ​பெயரில் அ​மைந்திருப்பது சிறப்பிற்குரியதாக உள்ளது. சமண சமயக் கருத்துக்க​ளைக் கூறும் இக்காப்பியம் சு​வைபட அ​மைந்து கற்பாற்கு இன்பமளிக்கின்றது.

சூளாமணி -​​பெயர்க்காரணம்

சூளாமணிக் காப்பியம் தோலாமொழித் தேவர் இயற்றியதாகும். இதன் காலம் கி.பி.10-ஆம் நூற்றாண்டாகும் (கி.பி. 925-950). காப்பியத் தலைமாந்தர்களில் ஒருவராம் பயாபதி மன்னனை, உலகின் முடிக்கு ஓர் சூளாமணி ஆனான்(முத்திச்சருக்கம். 59) என்று ஆசிரியர் பெருமைப்படுத்துகிறார். இதன்வழி சூளாமணி என்பது பயாபதி அரசனின் புகழ்ப் பெயராகவே இருக்கின்றது என்பது தெரிகிறது. இக்காப்பியத்தில், இரத்தின பல்லவ நகரினைச் சூளாமணியின் ஒளிர்ந்து(முத்திச்சருக்கம் 284) என நகரின் பெருமையையும், இந்திர சஞ்சய அரசனை, மஞ்சுசூழ் மலைக்கோர் சூளாமணி (முத்தி. 329) என அரசின் பெருமையையும்,குன்றெடுத்த திவிட்டன் முடிமேல் சூளாமணி முளைத்த சோதி (முத்தி. 1519) எனக் காப்பியத்தலைவனின் பெருமையையும் சுட்டியிருப்பதால், இந்நூலாசிரியர் காப்பியத்தின் பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளமை நன்கு புலனாகின்றது.

முதல் நூல்

சூளாமணிக்கு முதல் நூலானது செஞ்சொற்புராணம் என்பதை அதன் பாயிரத்தின் மூலம் உணரலாம். வடமொழியில் உள்ள ஸ்ரீபுராணத்தில் வரும் 11-ஆம் தீர்த்தங்கரர் புராணத்தில் சூளாமணிக் கதை கூறப்படுகிறது. வடநாட்டு வேந்தர்களானவிசயனும், திவிட்டனும் பாகவதத்தில் வரும் பலராமன், கண்ணன் ஆகியோருடன் ஒப்பிட்டு எண்ணுதற்குரியர். ஸ்ரீபுராணத்தைத் தவிர, மற்றொரு சமணக் காப்பியமான மகாபுராணத்திலும் சூளாமணிக் கதைப் பொருள் வருகின்றது.

நாற்பொருள் கூறுதல், ஆருகத (சமண) சமயத்தில் காணும் அரிய உண்மைகளை விளக்கல், வாழ்வில் பின்பற்றற்குரிய வரலாறுகளையும் நீதிகளையும் எடுத்துரைத்தல் ஆகியவை பற்றிச் சூடாமணி பேசுவதால், சமணர்கள் மேலான நூலாகஇதனைப் போற்றி வந்தனர்.

ஆசிரியர் ​பெயர் விளக்கம்

சூளாமணி ஆசிரியர் தோலாமொழித் தேவர் தான் என்பது பற்றித் தெளிவாக எதுவுமே தெரியவில்லை. தோலாமொழித்தேவர் எனும் பெயருக்கு வெல்லும் சொல்வல்லார் என்பது பொருள். தோலாமொழி என்று சில தனிச் செய்யுள்களில் இவர்பெயர் வருகிறது; ஆனாலும் இவரது இயற்பெயர் குறித்துத் ​ ​தெளிவவாகத் அறியஇயலவில்​லை என்பது குறிப்பிடத்தக்கது.

கதைச் சுருக்கம்

இந்தியாவின் வடக்கில் சுரமை நாடு இருந்தது; இதன் தலைநகரம் போதனமாநகரம். பயாபதி என்பவன் இந்நகரை ஆண்டு வந்தான். இந்தப் பயாபதிக்கு மனைவியர் இருவர். மிகாபதி, மூத்தவள்; சசி என்பவள் இளைய மனைவி. இவ்விருவரும்முறையே விசயன், திவிட்டன் என்னும் இரு புதல்வர்களைப் பெற்றெடுக்கின்றனர். விசயன் சிவப்பாகவும் திவிட்டன் கறுப்பாகவும் இருப்பர்.

ஒரு நாள் பயாபதி கனவொன்று கண்டான். விடிந்ததும், நிமித்திகன் ஒருவன் வந்து, “நீங்கள் கனவு ஒன்று கண்டீர்கள் அல்லவா?” என்று கூறிக்கொண்டே அதன் பலன்களைக் கூறினான்; ”வடநாட்டில், வெள்ளிமலையை அடுத்துள்ள வித்தியாதரர்நாட்டுமன்னன் சுவலனசடி; இவனது மனைவி, வாயுவேகை என்பவள். இவ்விருவருக்கும் பிறந்த மக்கள் இருவர்; மகன் அருக்ககீர்த்தி; மகள் சுயம்பிரபை. தன் மகளை இங்கு அழைத்து வந்து, திவிட்டனுக்குத் திருமணம் செய்து தருவான். இன்னும் ஏழுநாட்கள் போனதும், அம்மன்னனின் ஓலை வரும்!” என்று சொன்னான்.

சுவலனசடி மன்னன், ஒருநாள் தோட்டத்தில் இருந்த சமணக் கோயிலுக்குச் சென்று வணங்கிக் கொண்டிருக்கும்போது, இரு சாரணர்கள் (வான்வழியே நடப்பவர்கள்) அத்தோட்டத்து வாசலில் சமணத் தத்துவத்தை எடுத்துரைத்தனர். அவற்றைக்கேட்ட சுயம்பிரபை, ஒரு நோன்பை மேற்கொண்டாள்.

சுயம்பிரபை மணம் குறித்து சதவிந்து எனும் நிமித்திகன் வீட்டிற்கே சென்று நாள்பார்த்தான் மன்னன். அந்த நிமித்திகன், ‘திவிட்டனே சுயம்பிரபைக்கு ஏற்ற மணவாளன். இன்னும் ஒரு திங்களில், ஒரு சிங்கத்தின் வாயைப் பிளந்து தன் வீரத்தைஅவன் உலகுக்கு உணர்த்துவான்’! என்றான்.

இதைக் கேட்ட சுவலனசடி மன்னன், திவிட்டன் தந்தை பயாபதியிடம் மருசி என்ற தூதுவனை அனுப்பினான். ஓலையைப் படித்த பயாபதியும் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தான். பிறகு சுவலனசடிமன்னன், சிங்கத்தின் வாயைப் பிளக்கும்செய்கையை அறிய, ஒற்றர்களை அனுப்பி வைத்தான்.

வித்தியாதரர் வாழும் அதே பகுதியில், வடசேடி எனும் பகுதியை அச்சுவகண்டன் என்பவன் ஆண்டுவந்தான். இவன் மிகவும் கர்வமுள்ளவன்; கொடுங்கோலாட்சியை நடத்தி வருபவன். இவனிடம் சதவிந்து எனும் நிமித்திகன், “நீ இப்படிக்கர்வமுள்ளவனாக இராதே! உனக்கு ஒரு பகைவன் பிறந்து வளர்கின்றான்! அவன் எளிதானவன் அல்ல!” என்றான். உடனே, பயாபதியிடம் வரிவசூல் செய்து வரும்படி நான்கு தூதர்களை அனுப்பினான் அச்சுவகண்டன்.

திவிட்டன், திறை கொடுக்காமல், கண்டனை ஏசி, தூதர்களை வெறுங்கையுடன் அனுப்பிவிட்டான். தூதர்கள் சொன்னதைக் கேட்ட கண்டனின் அமைச்சனான அரிமஞ்சு என்பவன், அரிகேது எனும் மாயவித்தைக் காரனை அழைத்து, ‘நீ சிங்க உருவம்கொண்டு, திவிட்டனையும் அந்த நாட்டையும் அழித்து வா!’ என அனுப்பினான். அந்தச் சிங்கம், அப்படியே சென்று சுரமை நாட்டில் பேரழிவு ஏற்படுத்தியது. திவிட்டன் அந்த மாயச் சிங்கத்தை விரட்டிப் பின் தொடர்ந்தான்; உண்மையான சிங்கம் இருக்கும்ஒரு குகை வரைக்கும் சென்ற அந்த மாயச்சிங்கம் பிறகு மறைந்துவிட்டது. திவிட்டன் குகையுள்ளே இருந்த சிங்கத்தின் வாயைப் பிளந்து கொன்றான். இந்தச் சம்பவங்களை ஒற்றர் மூலம் அறிந்த சுவலனசடி மன்னன், சுயம்பிரபையை மணத்துக்குஆயத்தப்படுத்தினான். நாற்படை சூழ, போதன நகரத்திற்குச் சென்றான், சுயம்பிரபை திவிட்டனைத் தன் விமானத்தில் இருந்தபடியே, கண்டு, காதல் கொண்டாள்.

மாதவசேனை என்பாள், சுயம்பிரபை உருவத்தை வரைந்து, அதைத் திவிட்டனிடம் காட்டினாள்; ஓவியத்தில் மயங்கிய திவிட்டன், சுயம்பிரபையை அடைய விரும்பினான். இவ்விருவர் மணமும் மறை விதிப்படி நடந்தது.

சிலநாட்களுக்குப்பின், சுவலனசடி மன்னன் பிரபையைத் திவிட்டனுக்கு மணம் செய்வித்ததை அறிந்த அச்சுவகண்டன், சுவலனசடி மன்னன் மீது போருக்குப் புறப்பட்டான். பயாபதி முதலியோருடன் சேர்ந்து சுவலனசடி மன்னனும் போரிட முடிவுசெய்தான். திவிட்டனுக்கும் வித்தியாதர வேந்தர்களோடு போரிடுவதற்குரிய மந்திரங்களைக் கற்பித்தான். இச்சமயத்தில் அச்சுவகண்டன் தூதுவன் வந்து, “அரசர்களே! கண்டனுக்குச் சுயம்பிரபையை வழங்குவீர்களா? அல்லது திவிட்டன் உயிரைஅவனுக்குத் திறையாகத் தருவீர்களா?” என்று கேட்டான்.

இதைக் கேட்ட திவிட்டனின் கண்களில் பொறி பறந்தது! வானில், “திவிட்டனே வெற்றி பெறுவான்!” என்ற ஒலி கேட்டது. பயாபதி படையும், கண்டன் படையும் மோதின! போரில் கண்டனும், கண்டனின் தம்பியரும் மடிந்தனர். கண்டனின் மனைவி,போர்க்களத்தில், கண்டனின் உடல்மீது விழுந்து உயிர்விட்டாள்! பின்னர், திவிட்டன், கோடிக்குன்றம் எனும் மலையைக் கையால் அகழ்ந்து தூக்கினான்; அந்நேரத்தில், இவன் வாசுதேவனே என்று பலரும் வாழ்த்தினர்.

சில நாட்கள் ஆனபின்பு, சுயம்பிரபைக்கு, விசயன் என்றொரு மகன் பிறந்தான்; பிறகு சோதிமாலை என்றொரு மகளும் பிறந்தாள்.

சோதிமாலைக்குச் சுயம்வரம்; சோதிமாலை மண்டபத்தில் பலரையும் பார்த்தபின், தன் மாமன் அருக்க கீர்த்தியின் மகனான அமிர்தசேனனுக்கு மாலை சூட்டினாள்.

பிறகு அருக்ககீர்த்தி, தன் மகள் சுதாரை என்பவளுக்குச் சுயம்வரம் நடத்தினான். சுதாரை, திவிட்டன் மகன் விசயனுக்கு மாலைசூட்டினாள்; திருமணம் நடந்தது.

ஒரு நாள், பயாபதி மன்னனுக்குச் சில சிந்தனைகள் தோன்றின. “முன்செய்த தவத்தால் தான் இந்தச் சிறப்பு எனக்குக் கிடைத்தது. ஆதலால், தவத்தை மறந்து நாம் இருத்தல் கூடாதல்லவா? இன்னும் தவம் செய்தால் வீடுபேறு கிட்டுமே” எனநினைத்தான்.

தன்மக்களை அழைத்துப் பயாபதி, “அருள் இல்லாதார்க்கு அவ்வுலகு இல்லை. கல்வி இலார்க்கு நுண்ணறிவு இல்லை! பொருள் நிலை இல்லாதது! நல்லறங்கள் செய்யுங்கள்! உங்களுக்கு வயது ஆனதும், உங்கள் குழந்தைகளிடம் ஆட்சியைவிட்டுவிட்டுத் தவம் செய்யுங்கள்”! என்று சொல்லியபின்பு தானும் மனைவியர் இருவருமாகத் தவம் செய்யப் புறப்பட்டனர். இறுதியில் பயாபதி முதலியோர் பேரின்பம் பெற்றனர். திவிட்டன் அருகன் அடியை மனத்திருத்திப் பல்லாண்டுக் காலம் ஆண்டான்எனக் காப்பியம் முடிகிறது.

சூளாமணி சிறுகாப்பியம் ஆகிய விந்​தை

காப்பிய மாந்தர் என்ற நிலையில் மண்ணுலக அரசர்களையும் விண்ணுலக அரசர்களையும் அமைத்துள்ளார் ஆசிரியர். சூடாமணிக் காப்பியத்தில் தலைமைப் பாத்திரம் திவிட்டனா? அல்லது பயாபதியா? என்பது தெளிவற்று இருப்பதை உணரலாம்.

காப்பியத்தில் இன்பச் சுவை, யாரைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கிறதோ, அவரே காப்பியத் தலை​மை மாந்தராவார்! சூளாமணியில், திவிட்டனே காதல் சுவையைத் தாங்கி வரும் பாத்திரம்; அதுமட்டுமல்லாமல், வீரச்சாகசச் செயலையும் அவனேபுரிகிறான். ஆனால், காப்பியம் வலியுறுத்தும் வீடுபேறு, பயாபதி மன்னனைச் சுற்றியே அமைக்கப்பட்டுள்ளது!

சீவக சிந்தாமணியில், சீவகனே வீரன், காதலன், தவம் செய்பவன். அதனால் அக்காப்பியத்தில் சிக்கல் இல்லை.

ஆனால், சூளாமணியில் காதலனாகவும் வீரனாகவும் மட்டுமே திவிட்டன் உள்ளான். வீடுபேறு அடைவது பயாபதியைச் சார்ந்திருக்கின்றது. காப்பியம் இவ்வாறு முரண்பட்டு, தெளிவற்று, சுவைகள் முறிவுபட்டு இருப்பதால்தான், சூளாமணியைச் சிறுகாப்பியத்தில் சேர்த்தனர்! அளவில் பெரிதாக இருப்பினும், சிறுகாப்பியமாக இருக்கலாம் என்பதற்குச் சூளாமணி ஒரு சான்று. அறம், பொருள், இன்பம், வீடு எனும் நாற்பொருளும் பெற்றிருந்தாலும், தலைமைப் பாத்திரம் சிதைபடுவதால், சூளாமணி சிறுகாப்பியமானது. தமிழ்க் கதைமரபு, காப்பிய மரபு இவற்றின்படி, திவிட்டனே காப்பியத் தலைவனானான்.

விண்ணுலக அரசர்கள், மண்ணுலக அரசர்கள் என உயர்நிலை மக்களைப் பற்றியே கவிதைகள் படைத்திருக்கிறார் ஆசிரியர் என்பது ​நோக்கத்தக்கது.

இக்காப்பியத்தில், பெண்கள் மிகவும் குறைவாக உள்ளனர் உணர்ச்சி மிக்க படைப்பாக அச்சுவகண்டனின் சொல்லும் செயலும் அமைக்கப்பட்டுள்ளன.

சிந்தாமணியும் சூடாமணியும்

தோலாமொழித்தேவர் பண்டைய தமிழ் இலக்கியங்களை நன்கு பயின்றவர் என்பதைத் தமது காப்பியத்தில் அவற்றைப் பயன்படுத்தியிருப்பதைக் கொண்டு அறியமுடிகின்றது. திருத்தக்க​தேவரன் சிந்தாமணியின் அ​மைப்பல் சூடாமணி அ​மைந்திருப்ப​தே இதற்குச் சான்றாகும்.

சீவகசிந்தாமணியிலே, மதிலைப் புனைந்துரைத்த பின்னர்ப் பரத்தையர்கள் வாழும் தெருக்களைக் கூறிக் கடைகளைப் புகழத் தொடங்குகிறார் திருத்தக்கதேவர். அதுபோலவே சூளாமணியிலும் மதிலைப் புனைந்துரைத்த பின்னும், கடைகளைப்புகழ்வதற்கு முன்னும், வரும் பாடல்கள் பரத்தையரையே குறிக்கின்றன.

சூளாமணியின் முதல் 50 செய்யுட்களின் சொல், தொடர், கருத்து ஆகியவை சிந்தாமணிக் காப்பியத்தோடு இணைத்துப் பார்க்கக் கூடியனவாக அமைந்துள்ளன. திருக்குறளின் சொற்களைப் பல இடங்களில் கையாண்டிருப்பதைக் காணலாம்.

சமயங்கொள்கையும் நிமித்தமும்

சூளாமணியில் இடம்​​பெறும் காப்பிய மாந்தர்கள் அருக தேவனை வணங்கும் வகையில் பல நிகழ்ச்சிகளை ஆசிரியர் படைத்துள்ளார். நூலினைத் தொடங்கும்போது அருக வணக்கம் கூறி ஆரம்பித்துள்ளார். (பாடல்-1)அருகப் பெருமானின்பெருமைகளைப் பற்றி வரிப்பாடல்களில் காப்பிய மாந்தர்களும் சாரணர்களும் அரசர்களும் பாடுவதுபோல அமைத்துள்ளமையைக் காப்பியம் முழுவதிலும் காணமுடிகிறது.

“வரம்பில் ஆற்றல் உடையவன் அவன் தரிசனம் அணியாது மொளி திகழும் மூர்த்தி (182) மலர்மேல் ஏகியவன் (187) காமனைக் கடிந்தவன் காலனைக் காய்ந்தவன் துயரவித்தவன் (2146) காக்கும் திருமால் (540) நிறைதரு கேவலத்தோன் (541) என அருகப் பெருமானின் புகழைப் பலபட விரித்துரைக்கிறார். நன்னிகழ்ச்சிகள் நடைபெறுமுன் அருகன் கோவிலில் விழா எடுத்ததைக் காட்டுகிறார். (107) அருகபதம் அடைவதைச் சிவகதி என்கிறார் (355)

சமண சமயக் கருத்துப்படி, பிறவி காரண காரியத் தொடர்ச்சியாய், அளவின்றி வருவதால் பிறவிமாலை (198) என்று குறிப்பிடுகிறார்.

சாரணர்கள் ஆகாயத்தில் சஞ்சரித்து (186)

அவ்வப்போது அருகன் ஆலயம் வந்து துதிப்பர்; (190, 203)

அவர் உரை கேட்டு மாந்தர் பலர் அருக நெறியைப் பின்பற்றி உய்வர் என்பதும், நோன்பு நோற்றல் குறித்தும், கடவுள் பற்றியும், பிற சமயக் காழ்ப் புணர்ச்சியின்றி எடுத்துரைக்கும் பாங்கினைச் சூளாமணியில் காண்கிறோம்.

மானுடர் வாழ்வு

யானை விரட்ட அஞ்சி ஓடிய ஒரு மனிதன் ஆழ்கிணற்றில் விழும்போது அக்கிணற்றில் பாம்புகள் இருப்பதைக் கண்டான்; ஒரு கொடியைப் பற்றித் தொங்கினான். மேலே மதயானை, கீழே விஷநாகம்; இரண்டுக்கும் இடையே அஞ்சிச் சாகும்சூழ்நிலையில் இருக்கும் அந்த மனிதன் மேலே அண்ணாந்து பார்க்கிறான். அவன் வாயில் ஒரு தேன்துளி விழுகிறது. மனிதன் யானையாலோ, அல்லது நாகத்தாலோ இறப்பது உறுதியென்ற உண்மை அறிந்த நிலையிலும் அந்தத் தேன் துளியைச் சுவைத்துஇன்புறும் தன்மையதுவே மானுடர் வாழ்வு. இதனை அறிந்து நடப்பாயாக! என்று உலக வாழ்வின் இயல்பைக் கூறுகின்றது இப்பாடல்.

“ஆனை துரப்ப அரவுறை ஆழ்குழி

நானவிர் பற்றுபு நாலும் ஒருவன்ஓர்

தேனின் அழிதுளி நக்கும் த்தது

மானுடர் இன்பம்;மதித்தனை கொள்நீ ‘’ (1989)

(அரவு = பாம்பு; நாலும் = தொங்கும்; திறந்தது = தன்மையது)

மனிதப்பிறவி சிற்றின்பத்தை நாடுவது மிகமிக இழிந்தது என்பதைச் சுட்டும் வகையில் இக்கதையினை உவமை வாயிலாகத் தருவதை உணரமுடிகிறது.

நிமித்தம்

காப்பியங்களில் நன்னிமித்தம், தீநிமித்தம் பார்க்கும் படியாக அமைக்கப்படுவது மரபு. அவ்வகையில், சூளாமணிக் காப்பியத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. நன்னிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குமுன் நன்னிமித்தமும், தீ நிகழ்ச்சிகள் நிகழுமுன்தீநிமித்தங்களும் நிகழ்வதைச்சூளாமணியில் காணமுடிகிறது.

தெய்வத் தன்மை வாய்ந்த மகன் பிறப்பான் என்பதைக் காட்டும் வகையில் மகளிர் உறங்கும்போது அவர்கள் வாய் வழியாக மதி புகுந்து அகம் அடைவதைச் சுயம்பிரபை வாயிலாகக் காட்டுகிறார் ஆசிரியர் (1701 – 1709)

முகில் முழங்குவது நன்னிமித்தமாகக் காட்டப்பட்டுள்ளது (399)

நன்மக்கள் பிறந்ததைக் காட்டும் நன்னிமித்தமாகத் திசைகள் தெளிந்ததையும், தேவ துந்துபிகள் முழங்குவதையும் இரவலர் ஆசை ஒழிந்ததையும் தீவினைகள் அழிந்ததையும் (73-ஆம் பாடலில்) காட்டுகிறார்.

போர் செய்யப்புகும்போது நன்னிமித்தமாக வெல்பவனின் மேனி ஒளிவிரிவதையும், அவன் மகளிர்க்கு இடத்தோள் துடிப்பதையும் வீரர் கை வாளில் பூ நின்றதையும் குறிப்பிடுகிறார் (1218) ஆசிரியர் தோலாமொழித் தேவர்.

இதற்கு மாறாகத் தீநிமித்தங்களையும் சூளாமணியில் காண்கிறோம். முரசினுள் பாம்பு புகுதல், குடைகளில் தேன்கூடுகட்டி அதிலிருந்து தேன்துளித்தல், காக்கை தேர்க்கொடிஞ்சியில் ஏறிக்கரைதல், திசையும் ஆகாயமும் தீப்பற்றி எரிதல், உதிரமழை பெய்தல், மகளிர் வலக்கண் துடித்தல் போன்ற தீநிமித்தங்களை விளக்கமாகக் குறிப்பிடுகிறார். இவ்வாறு கேட்போர் ஆவலைத் தூண்டும் விதமாகத் தீநிமித்தங்களையும், நன்னிமித்தங்களையும் பயன்படுத்தியிருத்தல் விளங்குகிறது.

காப்பியத் தொடக்கத்தில் நாட்டுவளம், நீர்வளம், பொருள்வளம் ஆகியவற்றின் பெருமைகள் பேசப்பட்டுள்ளன. பயாபதி மன்னன் ஆட்சிச் சிறப்பு, மக்கட்பேற்றின் மாண்பு, கனவு பற்றிய நம்பிக்கைகள், அரசன் அறிவுடைப் பெரியோரின் துணையை நாடுதல் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறார் தோலாமொழித் தேவர். ஆட்சிப் பரப்பைப் பெருக்கத் திருமணம் என்பதை ஒரு துணைக் கருவியாகக் கையாண்டுள்ளார்.

மண்ணுலகக் காட்சியைப் பற்றிப் பாடிய புலவர் வித்தியாதர உலகத்திற்கும் கதையைக் கொண்டு செல்கிறார். பல நிறமணிகள், மலர்கள், தெய்வமரங்கள், ஆறுகள் ஆகிய எல்லாவற்றிலும் பெருமதிப்பும் தெய்வ நலனும் பொலிவதைக் காட்டிவிண்ணுலக அரசன் சுவலனசடிக்கு, அருக்ககீர்த்தியும் சுயம்பிரபையும் பிறந்த செய்தியும் கூறப்பட்டுள்ளது.

வித்தியாதரருடன் மானுடர் மணவினை கொள்வதும் விஞ்சையர் மனிதரே எனப் பழமரபு கூறிக் கதையைத் தொடர விட்டிருப்பதும் காப்பியப் போக்கில் ஆவலைத் தூண்டுவதாக அமைக்கப்பட்டுள்ளன.

இன்பச் சூழலைப் பற்றிப் பேசிய பகுதிகளுக்கு அடுத்து, துன்பச் சூழலை வெளிப்படுத்த நினைக்கும் ஆசிரியர், அச்சுவ கண்டனையும் திவிட்டனையும் போரிடச் செய்கிறார். அதன்படி திவிட்டன் பக்கம் நற்சகுனமும் பகைவர் பக்கம் தீச்சகுனமும்தோற்றுவித்து, திவிட்டன் வெற்றி பெறலும் பகைவர் அழிவும் விளக்கமாகக் காட்டப்பட்டுள்ளன. இதன்வழியே, அரசுச் செல்வம், மகளிர் இன்பம் ஆகியவை நிலையா என்னும் கருத்தை, வெற்றி தோல்வி இரண்டின் இடையே தூவுகின்றார் ஆசிரியர்.

அதற்கடுத்த நிலையில், உலக இன்பத்தையே கூறிவந்த நிலைமாறி அழியா நிலையை அடைய வழி எது என்பதை எண்ணச் செய்து, அருக மார்க்கத்தை ஒரு முனிவர் வாயிலாகப் பேச வைத்து, துறவு பூணுவதே நன்னெறி என்பதையும் பயாபதிஅரசன் மூலம் விளக்கியிருக்கிறார் ஆசிரியர். இதன் வழி, மனித வாழ்வில் உயர்நிலை பெறுவதே சூளாமணியாகத் திகழ வழிகாட்டும் எனக் காப்பியத்தை முடிக்கிறார் ஆசிரியர், தோலாமொழித் தேவர்.

சூளாமணியில் சமண சமயக் கருத்துக்களுடன் மனிதர்கள் பின்பற்றி வாழக்கூ​டிய உயரிய ​நெறிக​ளையும் எடுத்து​ரைக்கின்றது. நிமித்தம் என்ற சகுனத்தின் வழி மனித வாழ்வு நி​லையில்லாத் தன்​மை உ​டையது என்ப​தை எடுத்து​ரைத்து நி​லையில்லா உலகில் நி​லைத்து வாழக்கூடிய வ​கையில்நற்​செயல்க​ளைச் ​​செய்து வாழ ​வேண்டும் என்ற பண்பாட்டு ​நெறி​யையும் ​தோலா​மொழித்​தேவர் எடுத்து​ரைப்பது நி​னைந்து இன்புறத்தக்கதாக அ​மைந்துள்ளது.

Series Navigationமண்ணில் வேரோடிய மனசோடு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்புகவிதை
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

3 Comments

  1. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    வாசிக்க வாசிக்க சுவை ததும்பும் படிக்கு அமைந்த இந்த வ்யாசம் சமர்ப்பித்த முனைவர் ஸ்ரீ சேதுராமன் அவர்களுக்கு வணக்கம்.

    வ்யாசத்தின் பின் பகுதியில் சூடாமணி என்ற பதமும் காணக்கிட்டுகிறது.

    இன்றைக்குத் தமிழகத்தில் பெண் குழந்தைகள் அணியும் நெற்றிச்சுட்டி என்ற அணிகலன் தானோ இந்தச் சூடாமணி எனத் தோன்றுகிறது. எனது புரிதல் தவறானால் இந்த அணிகலன் யாது என விளக்கவும்.

    சீவக சிந்தாமணி மற்றும் சூளாமணிக் காப்பியங்களை ஒப்பிட்டமை மற்றும் காப்பியத்தலைவன் யார் என்பதில் தெளிவின்மையால் சூளாமணிக் காப்பியம் சிறு காப்பியமானது போன்ற விளக்கங்கள் மிகவும் சிறப்பாக இருந்தன.

    சமயக்கொள்கையாக வைராக்ய சீலராய் வாழ்க்கையில் துறவறம் மேற்கொள்தலை அருக சமயம் போதிப்பதாக தங்கள் வ்யாசம் மூலம் உணர முடிகிறது.

    நிமித்த சாஸ்த்ரப்படி காப்பியம் பேசும் சுப மற்றும் துர் நிமித்தங்கள் பலவற்றையும் அறிய முடிந்தது.

    தங்கள் வ்யாசத்தில் சொல்லப்பட்ட சில கருத்துக்களில் சிறியேனுக்கு சம்சயங்களும் இருப்பதால் அவற்றைப் பகிர்ந்து அவற்றுக்கு தெளிவளிக்குமாறும் விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

    குறிப்பாகக் கீழ்க்குறிப்பிடப்பட்ட வாசகம்.

    இவ்வளவு அழகாய்ச் சமர்ப்பிக்கப்பட்ட வ்யாசத்தின் பால் தோஷாரோபணஞ்செய்வதாகத் தயவு செய்து கருத வேண்டா. எனது சம்சய விமோசனத்திற்காக மட்டிலும் எனது குழப்பங்களைப் பகிர்கிறேன்.

    1. \சூளாமணிக்கு முதல் நூலானது செஞ்சொற்புராணம் என்பதை அதன் பாயிரத்தின் மூலம் உணரலாம். வடமொழியில் உள்ள ஸ்ரீபுராணத்தில் வரும் 11-ஆம் தீர்த்தங்கரர் புராணத்தில் சூளாமணிக் கதை கூறப்படுகிறது. வடநாட்டு வேந்தர்களானவிசயனும், திவிட்டனும் பாகவதத்தில் வரும் பலராமன், கண்ணன் ஆகியோருடன் ஒப்பிட்டு எண்ணுதற்குரியர். ஸ்ரீபுராணத்தைத் தவிர, மற்றொரு சமணக் காப்பியமான மகாபுராணத்திலும் சூளாமணிக் கதைப் பொருள் வருகின்றது.\

    சூளாமணிக்கு முதல் நூலானது செஞ்சொற்புராணம் என அதன் பாயிரத்தில் கூறப்பட்டதாகப் பகிர்ந்துள்ளீர்கள். இன்று செஞ்சொற்புராணமும் வழக்கில் உள்ளதா அல்லது விலுப்தமாகி விட்டதா என அறிய விழைகிறேன்.

    சூளாமணியின் கதைப்பொருள் வடமொழியில் உள்ள *ஸ்ரீபுராணத்திலும்* மற்றொரு சமணக்காப்பியமான *மகாபுராணத்திலும்* வருவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

    த்ரிஷஷ்டி ஜைன சலாகபுருஷர்களான ( அறுபத்துமூன்று ஜைன சலாகபுருஷர்கள்) 24 தீர்த்தங்கரர்கள், 12 சக்ரவர்த்திகள், 9 பலதேவர்கள், 9 வசுதேவர்கள் மற்றும் வசுதேவர்களால் அழித்தொழிக்கப்படும் 9 ப்ரதிவசுதேவர்கள் போன்றோரைப் பற்றி உரைக்கும் புராணங்கள் இவை.

    நானறிந்தவரை *மஹாபுராணம்* சம்ஸ்க்ருத ஜினபுராணம். ஆனால் *ஸ்ரீபுராணம்* அதனை ஒட்டி மணிப்ரவாள மொழிநடையில் ( தமிழும் சம்ஸ்க்ருதமும் கலந்த மொழிநடை) தமிழகத்துச் சமணர்களால் அருளப்பட்ட புராணம்.

    ஜினசேனரின் ஹரிவம்சமும் ஹேமசந்த்ரரின் த்ரிஷஷ்டிசலாகபுருஷ சரிதமும் கூட த்ரிஷஷ்டி ஜின சலாகபுருஷசரிதம் பேசும் சம்ஸ்க்ருத காவ்யங்களாகச் சொல்லப்படுபவை எனக்கேட்டிருக்கிறேன்.

    2. குழப்பம் தரும் மற்றொரு வாசகம்

    \வடநாட்டு வேந்தர்களானவிசயனும், திவிட்டனும் பாகவதத்தில் வரும் பலராமன், கண்ணன் ஆகியோருடன் ஒப்பிட்டு\

    மேற்கண்ட வாசக அமைப்பு சிறியேனை மிகவும் குழப்பத்திலாழ்த்தியது.

    வடநாட்டு வேந்தர்களான விசயனும், திவிட்டனும் பாகவதத்தில் வரும் பலராமன், கண்ணன் ஆகியோருடன் ஒப்பிடப்பட்டு

    அல்லது

    வடநாட்டு வேந்தர்களான விசயன் மற்றும் திவிட்டன் ஆகியோர்களை பாகவதத்தில் வரும் பலராமன், கண்ணன் ஆகியோருடன்
    ஒப்பிட்டு

    என்ற படிக்கு வாசகம் சரியாக அமையுமோ என எண்ணினேன்.

    நான் மேலே குறிப்பிட்ட வாசகங்களில் பிழை உள்ளதா எனவும் அடைக்குறியிலிடப்பட்ட வாசகம் பிழையற்றதா எனவும் விளக்குமாறும் விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

  2. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    மதிப்பிற்குறிய தள நிர்வாகிகளுக்கு

    இந்த வ்யாசத்தைச் சொடுக்கியபின் வ்யாசத்தின் சொற்கள், வ்யாசத்தின் பெட்டகத்தை மீறி “இந்தப் பகுதியில் மேலும்” மற்றும் “இதழில்” என்ற இரண்டு பெட்டகங்களிலும் சென்று சொற்களின் மீது சொற்களாக வாசிக்க முடியாத படிக்கு இருந்தன.

    வ்யாசத்தை copy paste செய்து அழகி Unicode Editorல் பதிந்த பின்னரே வாசிக்க முடிந்தது.

    இது எனது கணினியில் உள்ள குழப்பத்தாலா அல்லது தளத்தில் உள்ள குழப்பத்தினலா எனத் தெரியவில்லை.

    தள்த்தில் உள்ள குழப்பத்தின் படி என்றிருந்தால், வாசிக்க விழையும் மற்றைய வாசகர்களுக்காக வேண்டி இந்தக் குழப்பத்தை சரிசெய்யுமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

    அன்புடன்
    க்ருஷ்ணகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *