ஜென் ஒரு புரிதல் பகுதி – 15

This entry is part 32 of 44 in the series 16 அக்டோபர் 2011

சத்யானந்தன்

கூண்டிலிருந்த ஒரு கிளி விடுதலையாக புத்தர் எப்படி வழி வகுத்துக் கொடுத்தார் என்பது பற்றி ஒரு புராணக் கதை உண்டு. ஷென் குவாங்க் என்னும் துறவியைத் தான் முதன் முதலாக புத்தர் சீன தேசத்தில் சந்தித்தார். அப்போது தொடக்கத்திலேயே ஷென் கோபப் பட்டு புத்தரின் கேள்விகளால் எரிச்சலுற்று ஒரு சங்கிலியால் புத்தரின் முகத்தில் அடிக்க புத்தரின் பற்கள் விழுந்து விட்டன. (பின்னாளில் ஷென் அவரது சீடரானார்) புத்தர் அங்கிருந்து வெளியேறி ஒரு கோயிலின் மதிலை நோக்கியபடியே ஒன்பது ஆண்டுகளைக் கழித்ததாக ஒரு நம்பிக்கை. அந்தக் கோயிலுக்கு வெளியே ஒரு கிளி கூண்டில் அடைபட்டிருந்தது. அந்தக் கிளி “என்னால் இந்தக் கூண்டைவிட்டு வெளியேற முடியவில்லையே” என்று கூறிய படியே இருந்தது. அப்போது புத்தர் ” உன் கால்களை விரைப்பாக்கி, கண்களை மூடிக் கொள். இதுவே கூண்டிலிருந்து வெளியேறும் வழி” என்றார். மாதக் கணக்கில் கூண்டிலிருந்த கிளி எதையும் செய்யத் தயாராயிருந்தது. அது அவ்வாறே தனது கண்கள் மூடிய நிலையில் கால்களை விரைப்பாக்கி அப்படியே படுத்து விட்டது. மாலையில் கிளியைப் பிடித்து வைத்திருந்தவன் வந்தான். அவன் கிளியின் நிலை கண்டு கண் கலங்கினான். ஆசையாய் வளர்த்த கிளி செத்து விட்டதே என வருந்தினான். அதைக் கையிலெடுக்கும் போது அதன் உடல் சில்லிடாமல் சற்றே உஷ்ணமாக இருந்ததால் அதை காற்றோட்டமாக வீட்டுத் திண்ணையில் வைத்து இப்படியும் அப்படியும் அசைத்துக் காத்திருந்தான். கிளி கண் விழித்தது. சிறகுகளை அசைத்தது. உடனே பறந்து சென்று விட்டது.

மனம் மற்றும் புலன்கள் இவற்றின் வாயிலாக நாம் அடையும் அனுபவங்கள் அனைத்தும் மாயைகள் – ஏனெனில் இவை நிகழ்கிற அல்லது நிகழப் போகிற ஒன்றால் கிளர்ந்து ஒருவருக்கு உள்ளே மட்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்றுகின்றன. அதே சமயம் இந்த மாயை புற உலகைப் பொருத்த அளவில் உண்மை. மனம் புலன்கள் மற்றும் உடல் என்னும் சிறையிலிருந்து வெளி வர கிளி போலவே மரணமே நிகழ்ந்தது போல் எண்ணங்கள் ஏதுமற்று வெறும் சுவாசம் மட்டும் நிகழும் ஒரு யோக நிலை உண்டு. இந்த உடல் நானில்லை- புலன்களும் மனமும் அரங்கேற்றும் நாடகம்- இவை அனைவரையுமே சிறைப்படுத்தும் கூண்டு போன்றவை என்னும் தெளிவே விழிப்பு. இந்த விழிப்பே ஆன்மீகத் தேடலில் மனம் ஒன்ற வழி வகுக்கும். இந்தத் தேடலின் ஏதோ ஒரு அபூர்வ கணத்தில் ஆத்ம தரிசனம் நிகழக் கூடும். அப்போது எப்படிப் பட்ட அனுபவம் இருக்கும்? இதைக் கவிதையில் வடிக்க முடியுமா? பதிமூன்று மற்றும் பதினாங்காம் நூற்றாண்டில் “மியுஸோ ஸொஸெகி” யின் கவிதைகளில் “புத்தரின் ஸடோரி” என்னும் கவிதையில் இதற்கான முயற்சியைக் காண்கிறோம். பல நூற்றாண்டுகளுக்கும் முன்னே புதுக்கவிதை என்னும் நுட்பத்துடன் எழுதப்பட்டிருப்பவை வியப்பளிக்கின்றன.

“நச்சி கனான்” (ஜப்பானியக் கோயில்) மண்டபத்தில்
————————————————————

பால் வண்ண அண்டப் பெரு வழி
மனித உலகின் மீது
நீர் வீழ்ச்சி போல் ஒளியை ஊற்றும்
அவிலோகிடேஷ்வரரை (பௌத்த குரு) வணங்கச் சரியும்
சரிந்து வீழும் அவ்வொளி வீழ்ச்சியின் ஒலியை
கேட்கும் கொடுப்பினை என் பேறு

உலகிற்கு அப்பால்
———————
அடர்ந்த காட்டில்
வரப்புகளில்லை
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
எதுவுமில்லை
இதன் இடைப்பட்டு தனியே
ஒரு மரத்தை அடையாளம் காணுவது கடினம்
தலையைத் திருப்பி ஒவ்வொரு
திசைக்கு அப்பாலும்
நோக்கும் போது
முதன்முறையாக உன் கண்கள்
உன்னை ஏமாற்றி
வந்திருப்பதை அறிவாய்

புத்தரின் ஸடோரி (ஆத்ம தரிசனம்)
—————————————
ஆறு வருடங்கள்
தனியே மூங்கிற் புதரின் கீழே
அமர்ந்து
பனியைத் தவிர குடும்பம்
ஏதுமற்ற பனிமலையில்
நேற்றிரவு
வான் வெளி தூளாவதைக்கண்டு
விடிவெள்ளியைத் தட்டி எழுப்பி அதைத்
தன் கண்களில் பதித்துக்
கொண்டான்

தெளிவான பள்ளத்தாக்கு
—————————–
(ஆறாவது குரு என்று அவர் குறிப்பிடுவது ஹ்யுனெங்க் என்பவர். அவர் சித்தி அல்லது ஆத்ம தரிசனம் பற்றி நிகழ்த்திய உரைகளையே இவர் குறிப்பிடுகிறார்)

ஒரு குச்சியால் கலக்கி விட முடியாத
நீர்நிலை
ஆழத்தை விட ஆழமானது
வானும் நீரும்
ஒரே ஆழும் நீலமாகும்
ஆறாவது குருவின்
சொற் பெருக்கின்
மூலத்தை நீ அடைய விரும்பினால்
நதியின் இக்கரையிலோ
மறு கரையிலோ
மையத்திலோ தேடாதே

“ஹ்யுனெங்க்” கின் சுனை
—————————–
“ஹ்யுனெங்க்” கின் தர்மம் என்னும்
நீரூற்று வற்றாதது
அது இப்போதும் பிரவாகிக்கிறது
அதனின்று தெறித்த
ஓரு துளி விரிந்தும் ஆழ்ந்தும்
பரவியது
விளிம்பிலுள்ள அலங்காரங்களிலும்
அதைச் சுற்றியுள்ள சுவரிலும்
சிக்கிக் கொள்ளாதே
நடு சாமத்தில்
நிலவு சுனையின் மையத்தில்
வீழ்ந்து ஒளிரும்

ஒப்பற்ற பாக்களின் பள்ளத்தாக்கு
————————————–
ஓடையிலிருந்து ஒலிகள்
புத்தரின் பாக்களாகத்
தெறிக்கின்றன
ஆழ்ந்த உட்பொருளை
ஒருவரின் உதடுகள் மட்டுமே
உச்சரிக்கும் என்று சொல்லாதே
இரவும் பகலும்
எண்பதாயிரம் கவிதைகள்
ஒன்றன் பின் ஒன்றாக உதிக்கின்றன
உண்மையில்
ஒரு வார்த்தை கூட
உச்சரிக்கப் படவில்லை

முடிவுப்புள்ளி இல்லை
————————–
(நம் நம்பிக்கையின் படி யானையின் காலை முதலை பற்றியதும் யானையின் கூக்குரல் கேட்டு விஷ்ணுவின் சக்கரம் வந்து யானையைக் காப்பாற்றியது. பௌத்தத்தில் அது கருடன் வந்து காப்பாற்றியதாக உள்ளது. 2. இந்தக் கவிதையில் அவர் குறிப்பிடும் தாமரை விஷ்ணுவின் நாபி கமலத்தில் உள்ளது)

முழு உலகமும் தெளிந்து ஏதுமற்றதாய்
பத்து திக்குகளிலும்
முடிவுப்புள்ளியே இல்லை

இருந்தாலும்
கவனம் கூர்ந்தால் ஒன்றே ஒன்று உள்ளது
நாம் பின்னோக்கிப் பார்க்கும் போது
பிரம்மாண்ட கருடனின் மீது பறந்தபடி
உலகை விட்டு வெளியேறினோம்
தாமரையின் குழிவினைத் தொட்டு
தண்டின் ஆழத்தில்
வானும் மண்ணும் என்றுமே
பிரியாத இடத்தில் வாழவென

தொன்மையான நதி
————————
(டிராகன் என்பது சீன நம்பிக்கையின் படி
உயர்ந்த ஒல்லியான ஒரு மிருகம். நீண்ட
குஞ்சங்கள் போன்ற வடிவில்
தலையைச் சுற்றி ஏகப் பட்டவை இருக்க
நெருப்பைக் கக்கும்)

எல்லோரது ஞாபகங்களையும் விஞ்சி
தொன்று தொட்டு
தெள்ளியதாய் வெள்ளி போலப்
பிரகாசிப்பதாய்
நிலவொளி ஊடுருவியதின்
காற்று உலுக்கியதின்
எந்தச் சுவடும் அதன் மேல் இல்லை

இன்று இந்த ஆற்றுப்
படுகையின் ரகசியத்தை வெளிக்
கொணரத் துணிய மாட்டேன்
ஆனால் அது ஒரு சுருண்டிருக்கும்
நீல டிராகன்

பனித் தோட்டம்
——————-
(ஷென் குவாங்க் என்னும் குரு பற்றி தொடக்கத்தில் குறிப்பிட்டோம்)

ஆறு இதழுள்ள பூக்கள்
நிலமெங்கும் தெனபடும்
உறைந்தனவாய்
சொர்க்கமும் பூமியும்
இந்தத் தூய நிறத்துக்குள்
கலந்து மறைந்தன

“பைன்” மரமும் “செடர்” மரமும்
கற்படிக்கட்டுகள் அருகே
இன்றும் பசுமையாய் நிற்கின்றன
ஷென் குவாங்க்
பெரிய கப்பல் போன்ற மனத்தை
நழுவ விட்டிருக்க வேண்டும்

அமர ஜோதியின் ஆலயம்
—————————–
மலைத்தொடர்
தண்ணீருக்குள் தென்படும் கற்கள்
இவை யாவுமே
விசித்திரமானவை அபூர்வமானவை

இந்த அழகான நிலப்பரப்பு
அதைப் போன்றவர்களுக்கே சொந்தமானது
இதை நாம் அறிவோம்

மேலுலகங்களும் கீழுலகமும் ஒன்றே
தூசியின் ஒரு துகள் கூட இல்லை
அமைதியும் பூரண ஞானச் சேர்க்கையுமே உள்ளன

பிரபஞ்ச ஒளியின் தலைவாயில்
———————————–
(இந்தக் கவிதையில் குறிப்பிடப் படும் சுதானா பாஞ்சால நாட்டு இளவரசன். அவன் ஞானம் தேடி ஜப்பான் சென்றதாகவும் ஒரு மாயக் கோவிலின் கதவுகள் திறந்து அவனுக்கு ஞானம் கிடைத்ததாகவும் பௌத்த நம்பிக்கை)

பரிவின் மகோன்னதமான ஒளி
இவ்வுலகின் ஒவ்வொரு பகுதியையும்
ஒளிமயமாக்கும்

ஒரு சிறுவனாக சுதானா
கதவுகள் திறக்கக் காத்திருந்தான்

வெற்றுலகு உன் பார்வைக்கு
அகப்படுமென்றால்
அவனுக்குத் திறந்து வழிவிட்ட
கதவுகள் அதே போல
உன் விரல் பட்டதும் திறக்கும்

ஒகி-நொ-கெ (ஸடோரி கவிதை)
————————————-
வருடக் கணக்கில்
நான் நிலத்தைத் தோண்டினேன்
நீல வானைத் தேடி எடுக்கவென
தோண்டத் தோண்ட புழுதி
கிளம்பி என் மூச்சை அடைத்தே பலன்
ஒரு நாள் பின்னிரவில்
ஒரு உடைந்த செங்கல் தட்டுப் பட்டது
அதை உதைத்துக் காற்றில் வீசினேன்
என்னையுமறியாமல் நான்
வெற்று வானின் எலும்புகளை
நொறுக்கி விட்டதைக் கண்டேன்

Series Navigationஈடுசெய் பிழைகோ. கண்ணன் கவிதைகள்.
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *