ஜென் ஒரு புரிதல் – பகுதி 21

This entry is part 3 of 39 in the series 4 டிசம்பர் 2011

பகுதி இருபதைத் தொடர்ந்து ‘மட்ஸுவோ பஷூ’வின் கவிதைகள்:

யாரும் இந்தப் பாதையில்
பயணிக்கவில்லை
என்னையும் மாரிக்கால மாலைப்
பொழுதையும் தவிர

வருடத்தின் முதல் நாள்
எண்ணங்கள் வருகின்றன
தனிமையும்
மாரிக்கால மாலை கவியும்
நேரம்

ஒரு பழைய சுனை
ஒரு தவளை தாவிக் குதிக்கும்
‘தொபக்’

பழைய இருண்ட
தூங்கி வழியும் சுனை
திடீரென விரையும் தவளை
தாவும் – தண்ணீர் தெரிக்கும்

மின்னல்
கொக்கின் கூவல்
இருளைக்
குத்தித் துளைக்கும்

தட்டாம் பூச்சிகளின்
ஒலிப்பில்
அது எவ்வளவு சீக்கிரம்
இறக்கும் எனக்
கட்டியம் கூற
ஏதுமில்லை
வறுமையின் குழந்தை
அவன் திரிகையில்
மாவை அரைத்த படி
நிலவை நோக்குகிறான்

நீ வந்து தனிமையைப்
பார்க்க மாட்டாயா?
‘கிரி’ மரத்தின்
ஒரே இலை

கோவிலின் மணிகள் ஓய்கின்றன
பூக்களின் மலர்ச்சி நிற்கிறது
நிறைவான ஒரு மாலைப் பொழுதில்

காற்றில் ஒரு
பாலே நடனம்
இரட்டை வெண்மையாய்
இரண்டும் பட்டாம் பூச்சிகள்
அவை சந்திக்கின்றன
கலவி கொள்கின்றன

அடர்ந்த கரு மேகங்கள்
திப்பித் திப்பியாய்
வானில் திரியும்
இப்போது பார்
நிலவொளியில் மலைகளின்
எழிலை

மலை முகட்டில்
மரங்களில்லா ஊதா நிறச்
சரிவுகள்
வானில் பிரதிபலிக்கும்
மலையுச்சி ஆபரணங்கள்

கப்பரையை அழகூட்ட
மலர்களால் நிரப்புவோம்
சோறு இல்லாத காரணத்தால்

இப்போது பனி படர்ந்த இரவில்
கழுகுகளின் கண்கள்
இன்னும் கருமையடைந்து விட்ட வேளை
சிறு பறவைகளின் சிணுங்கல் சத்தம்

கடல் நீர் கரையைத் தொடும் இடத்தில்
சிறிய கிளிஞ்சல்கள்
“புஷ் க்ளோவர்” (ரோஜா நிற ஜப்பானியக் காட்டுப் பூ)
இதழ்கள்

வெள்ளை செர்ரி மலர்களுக்கு மேல்
வெள்ளை மேகம் போன்ற பனி மூட்டம்
அதிகாலையில் ஒளிரும் மலைகள்

புலர் காலையில்
சீழ்கை அடிக்கும் சிறு பறவைகள்
கருமையான தனிமையை
இனிமையாய் ஆழப்படுத்தும்

மலைரோஜா இதழ்கள்
உதிர்ந்து உதிர்ந்து
உதிர்கின்றன இப்போது
நீர்வீழ்ச்சி இசை

நானா?
நான் எனது சொற்ப
காலை உணவை
“மார்னிங் க்லோரி”
பூக்களைப் பார்த்தபடி
கழிப்பவன்

கடல் அபாயகரமாக
மேலெழுந்து “ஸடோ”
தீவை முழுகடிக்கப் பார்க்கிறது
விரவியிருக்கும் நட்சத்திரங்கள்
மௌனத்தில்

பெருமை மிக்க நிலவுக்கு
நன்றி
கரிய மேகங்களே
வாருங்கள்
எங்கள் கழுத்துக்கு ஓய்வு தர

செர்ரி மரத்துக்குக் கீழே
ஸூப், காய்கறித் துண்டு
மீனும் மற்றயவையும்
மலரிதழ்களும் சேர

பசி மிகுந்த கழுதை
மிகவும் ஆர்வத்தோடு
பூக்களை ரசிக்கும்
எங்களைத் தாண்டிப்
போய்
மரணத்தைத் தழுவியது

வசந்தம் வாடி மறைய வேண்டுமா?
எல்லா பறவைகளும் மீன்களும் அழும்
சோகையான உஷ்ணமில்லாத
விழிகள் கண்ணீர் சிந்தும்

பெண் பட்டாம் பூச்சி
பூந்தோட்டத்தின் மீது
பறந்து
தன் இறகுகளில்
வாசனை பூசிக் கொள்கிறது

தொங்கு பாலம் மரக்கட்டைகளுடன்
மௌனமாயிருக்கிறது
நூல் பந்தாகச் சிக்குண்ட
நம் வாழ்வைப் போல

ஆயிரம் தலைவர்கள்
வெற்றிச் சபதம்
செய்தனர் இங்கே
நீண்டுயர்ந்த புற்கள்
அவர்களது நினைவுச் சின்னங்கள்

மலர்ந்து வரும் உன்
கல்லறையில் நாம்
மீண்டும் சந்திப்போமா?
இரண்டு வெள்ளைப் பட்டாம் பூச்சிகள்

செதுக்கப் பட்ட கடவுள்கள்
எப்போதோ போய் விட்டனர்
கோயில் பலி பீடம்
கீழே உதிர்ந்த சருகுகள்

குளிர்காலத்தின்
சில்லென்ற முதல் மழை
பாவம் குரங்கே!
நீயும் நெய்த தொப்பியைப்
பயன் படுத்தி இருக்கலாம்

மேலும் வாசிக்க
விளக்கில் எண்ணையில்லை
ஆ! என் தலையணையில்
நிலா ஒளி

வாழும் மகன்கள்
மூதாதையர் கல்லறைகளுக்குச்
செல்கின்றனர்
தாடியும் வளைந்த ஊன்று கோல்கள் சகிதம்

Series Navigationயானையைச் சுமந்த எறும்புகள்காணாமல் போன ஒட்டகம்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *