ஜென் ஒரு புரிதல் – பகுதி 31

This entry is part 14 of 31 in the series 19 பிப்ரவரி 2012

“காரி ஸ்னைடர்” தற்போது எண்பத்து இரண்டு வயதான அமெரிக்கக் கவிஞராவார். “பீட்ஸ்” என அறுபதுகளில் அறியப்பட்ட காலகட்டத்து அமெரிக்கக் கவிஞர்களுள் ஒருவர். ஸான் “பிரான்ஸிஸ்கோ மறுமலர்ச்சி ” என்னும் புதுக்கவிதை எழுச்சிக்காலத்தில் ஒரு முக்கியமான முன்னோடி. புலிட்ஸர் பரிசைப் பெற்ற இவர் இருபதாம் நூற்றாண்டின் மிகப் பிரசித்தி பெற்ற “ஸுஸுகி” என்னும் ஜென் சிந்தனையாளரால் ஈர்க்கப் பட்டவர். இவரது கவிதைகளில் சில ஒரு மேற்கத்தியரின் ஜென் பற்றிய புரிதலாகக் காணக் கிடைக்கின்றன. ஸ்னைடர் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹன் ஷன் என்னும் ஜென் ஆசானின் கவிதைகளை மொழி பெயர்க்குமளவு அவரால் பாதிக்கப் பட்டார். ஸ்னைடரின் சில கவிதைகளை வாசிப்போம்.” பூமிப்பா” என்னும் கவிதை மானுடமும் பிரபஞ்சமும் இணையும் புள்ளி துல்லியமாய்ச் சித்தரித்து ஜென் பற்றிய புரிதலில் நம்மை மேலெடுத்துச் செல்லும்.

கோபுர உச்சியில்
___________
ஒவ்வொரு காய்ந்த புல்வெளியும் வளாகமாகிவிடும்
திறந்த வழிகள் யாவும் போக்குவரத்தில் திணறுகின்றன
படிப்பாளிகளின் ஆய்வுகளால் கல்விக் கூடங்கள் நிறைந்திருக்கின்றன
நகர மக்கள் மெலிந்தும் கருத்தும்
இந்த நிலம் கிட்டத்தட்ட நிஜமானது
மேற்கில் சரியும் இதன் பொன்னிறப் பள்ளத்தாக்குகளும்
பறவைகள் அடைந்த மத்தியப் பள்ளத்தாக்கு
நீண்ட கடற்கரைகள்
கிட்டத்தட்ட மெக்ஸிகன் மலைகளைத் தொடும்
வரிசையான கிரானைட் சிகரங்களின் பெயர்கள்
கிட்டத்தட்ட மறந்து விட்டன
கிழக்காகப் பாயும் ஒரு நதி பாலைவனத்தில் முடியும்
கிறீச்சிடும் அணிலகள் ஏறுமாறான பாளங்களின் இடையே
ஒரு ஆத்மாவைப் போல ஒரு பனிமுகட்டில் பனித் தட்டு
இங்கு தான் நாம் பத்து மணி நேர உறக்கத்துக்குப் பின்
புத்துணர்ச்சியுடன் விழித்தெழுகிறோம்
ஒரு நாள் முடிவில் நீண்ட நடை பழகி
நம் பாரங்களைப் பனியிடம் விட்டு
பெயர்களே இல்லாத அதே பழைய உலகத்தில் விழிக்கிறோம்
ஏதுமில்லை என்றும் புதுமையான கல் தண்ணீர்
விடியற்காலையில் சில்லெனப் பறவையின் அழைப்புகள்
நீண்ட வாலுடன் ஜெட் விமானத்தின் புகைத்தடம்
ஒரு நாளோ பத்து லட்சம் நாட்களோ
சுவாச்த்துடன் பின் நகரும்
இன்றைய வரலாற்றினின்றும் இறங்கு முகமாக
ஒரு வகையான பனி யுகம் பரவும் பள்ளத் தாக்குகளை நிரப்பும்
மண்களுக்குச் சவரம் செய்து, வயல்களை சமன் செய்து
நீ அதில் நடக்கலாம்,
அதனுள் வாழலாம், அதனுள் வாகனம் ஓட்டிச் செல்லலாம்
அது உருகி
உறைந்த இதயங்களுக்குப் பின் எது முளை விடுமோ
அதற்கென
சதைத் துருவப்பட்ட பாறைகள்
மலை முகட்டில் புழுதிப் புயல்கள்
காட்டுத் தீயில் இருந்து வெள்ளைப் புகை
தூரத்துப் பள்ளத்தாக்கின் மேல் மாலை இருள் போலக் கவியும்
இது ஒரே உலகம் தான்
பாறையும் நதிகளும் முதுகெலும்பாய்
சரளைகளும் மண்ணும் மணலும் சிறு புற்களும்
உப்புப் படிவங்களும் தேனடைகளும்
இங்கே நதிநீரோட்டத்தில் கீழே
இருபது லட்சம் மக்களும்

______________________________________________
பூமிப் பா
_______

உன்னைப் பார்த்துக் கொண்டே
இருக்கச் செய்யுமளவு அகண்டது
உன்னை நகர்ந்து கொண்டே இருக்கச் செய்யுமளவு
திறந்தது
உன்னை நேர்மையாய் இருக்கச் செய்யுமளவு காய்ந்தது
உன்னைக் கடுமையாய் இருக்கச் செய்யுமளவு குத்தும் கூர்மையுள்ளது
வாழ்ந்து கொண்டே இருக்குமளவு பசுமையானது
உனக்குக் கனவுகளைத் தந்து கொண்டே இருக்குமளவு
வயது முதிர்ந்தது

_________________________________________

அனைவருக்கும்
_______________

ஆ! செப்டம்பர் மாத மத்தியில்
உயிருடனிருப்பது
ஒரு நீரோட்டத்தை
அளைந்து கடப்பது
வெற்றுக் கால்கள்
கால் சராயை மடித்து விட்டு
கைகளில் காலணிகள், முதுகில் பைச் சுமை
பிரகாசமான வெயில்
தண்ணீரில் தென்படும் பனிக்கட்டிகள்
வடக்கு மலைத் தொடர்கள்

சலசலத்துப் பளபளக்கும்
பனி முக்ட்டு நீரோடைகள்
கால் விரல்கள் போன்று உறுதியான
சிறு கற்கள் பாதங்களை நெருடும்
பனியில் மூக்கில் நீர் வழியும்
உள்ளே மலைமுகட்டு இசை
உள்ளத்து இசை பாடும்

என் பற்றுக்கு உறுதி கூறுவேன்
_______________________
என் பற்றுக்கு உறுதி கூறுவேன்
ஆமைத் தீவு என்னும் இம்மண்ணுக்கு
அதில் வாழும் உயிர்களுக்கும்
ஒரு இயற்கைச் சூழல்
அதன் பன்முகத் தன்மையில்
சூரியனுக்குக் கீழே
மகிழ்ச்சியான பரஸ்பர ஊடுருவல்
அனைவருக்குமாய்

கவிதை எனக்கு எப்படி வருகிறது
________________________
அது கற்பலகைகளுக்குக் கீழிாருந்து
தட்டுத் தடுமாறி வரும் இரவில்
என் கூடாரத்து முற்ற நெருப்புக்கு
அஞ்சி அதன் வீச்சுக்கு அப்பால்
காத்திருக்கும்
நான் அதைச் சந்திக்கச் செல்வேன்
வெளிச்சத்தின் விளிம்பிற்கு

__________________________________

வடிவமானதேதுமில்லை பொருட்படுத்தாதே
________________________________

தகப்பன் தான் வெற்றிடம்
மனைவி அலைகள்

அவர்தம் குழந்தையே பொருள்

அவன் தாயுடன் பொருண்மை செயற்பட
அவர்களின் குழந்தையே உயிர்
ஒரு மகள்
மகள் ஒரு மகா தாய்
அவள் தாய் / சகோதரன்
பொருள் என்னும் காதலனுடன்
பெற்றெடுக்கிறாள் மனத்தை

_____________________________

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 7) எழில் இனப் பெருக்கம்பழமொழிகளில் ஒற்றுமை
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *