ஜென் ஒரு புரிதல் – 25

This entry is part 37 of 42 in the series 1 ஜனவரி 2012

சத்யானந்தன்

பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ப்யூசனி’ன் ஹைக்கூ கவிதைகள் இவை. கடைசியில் உள்ள கவிதை எந்த மதத் துறவியும் எழுதாதது. ஜென் சிந்தனையைத் தெளிவாக்குவது.

தலையணைக்குப் பதில்
முழங்கை
மங்கிய நிலவொளியில்
என்னை எனக்கே பிடித்திருக்கிறது

—————————————-

இன்னும் இருள் முழுவதுமாகக்
கவியவில்லை
காலியான நிலங்களின் மேல்
நட்சத்திரங்கள் மின்னுகின்றன

—————————————-

பழைய கிணறு
ஒரு மீன் தாவும்
இருட்டுச் சத்தம்

—————————————-

நிலத்தை உழுகையில்
ஒரு பறவையும் பாடவில்லை
மலையின் நிழலில்

—————————————-

தவிட்டுக் குருவி
பாடும்
தன் குஞ்சு வாயைத் திறந்து

—————————————-

வசந்த மழை
கதைகள் சொல்லும்
ஒரு வைக்கோல் அங்கியும்
குடையும் நம்மைக்
கடந்து செல்லும்

—————————————

வைக்கோல் செருப்பு
பாதி மாட்டிக் கொண்டது
உறை பனி மிதக்கும்
பழைய குட்டையில்

—————————————

‘வில்லோ’ மரங்களின் இலைகள்
உதிர்கின்றன
வசந்தம் வற்றிக் காய்ந்து விட்டது
பாறைகள் இங்கொன்றும்
அங்கொன்றுமாய்

—————————————

தம் பறத்தலை ஒன்றன் பின் ஒன்றாக முடிக்கும்
மாலை கவியும் நேரம்
காகங்கள்

—————————————

சிற்றிரவு- 11 கவிதைகள்

சிற்றிரவு
கம்பளிப் பூச்சியின் மீது
பனியின் மணிகள்

சிற்றிரவு
காவலாளிகள்
நதியில் குளிக்கின்றனர்

சிற்றிரவு
ந்தியின் மெல்லிய நீரோட்டங்களில்
நண்டின் நகர்வில்
நீர்க்குமிழிகள்

சிற்றிரவு
கடற்கரையின் மீது
வீசப்பட்ட ஒரு துடைப்பம்

சிற்றிரவு
‘ஓஜ்’ நதி இரண்டடி இறங்கி விட்டது

சிற்றிரவு
கிராமத்துக்கு வெளியே
ஒரு கடை திறந்து விட்டது

சிற்றிரவு
சரிவுகளில் உடைந்து
ஒரு வளர்பிறை

சிற்றிரவு
மலை ரோஜா ஒன்று
பூத்திருக்கிறது

சிற்றிரவு
அமுங்கும் அலைகள்
யாரோ விட்டுச் சென்ற
ஒரு தீ

சிற்றிரவு
தலையணை அருகே
ஒரு திரைச்சீலை
வெள்ளியாகிறது

சிற்றிரவு
யூயி கடற்கரையில்
அழுந்திய பாதச் தடங்கள்

——————————————–

நாணலால் நதியில் சலசலப்பு
வெகு தூரத்தில்
காட்டு வாத்து

———————————————-

பேரிக்காய் மரத்தின்
வெண்மைப் பூப்பு
நிலவொளியில் வெள்ளை
ஆடையில் ஒரு
பெண் ஒரு கடிதத்தை வாசிக்கிறாள்

———————————————-

நிலவொளியில் ஒரு வௌவால்
அலைபாயும்
பிளம் மரப் பூப்பின் மேலாக

———————————————-

பெரிய வெள்ளைக்
காட்டுப் பூ பூவின் முன்
கத்திரிக்கோல் தயங்கும்
ஒரு நொடி

———————————————-

ஒரு கோடாலியின் வெட்டு
பைன் மர வாசனை
குளிர் காலக் காடு

———————————————-
மேலைக் காற்றில்
கிழக்கே குவியலாகும்
உதிர்ந்த சருகுகள்

———————————————-

வானத்தின் மீது
காட்டு வாத்தின்
கீறல்கள் – நிலவு அதை
இறுக்கி நிறுத்தும்

———————————————-

நிர்தாட்சண்யம்
மணி ஒலி
மணியை விட்டு நீங்கையில்

———————————————-

இள வேனிற்கால மழை
நதியை நோக்கி நிற்கும் வீடுகள்
இரண்டு

———————————————-

மாலைக் காற்று
தண்ணீர் உறிஞ்சும்
கொக்கின் கால்களை

————————————————-

குளிர்கால நதி
அதில் மிதந்து கீழே வரும்
புத்தருக்கு அர்ப்பணித்த மலர்கள்

———————————————————–

அறுவடை நிலா
அவன் வீடு
தேடி வந்தது
அவன் உருளைக்கிழங்குகளைத்
தோண்டி எடுத்துக் கொண்டிருந்தான்

————————————————–
அவன் கூரையில் இருக்கிறான்
மனைவியிடமிருந்தும் குழந்தைகளிடமிருந்தும்
தப்பிக்க
அது எவ்வளவு உஷ்ண்மாக இருக்கிறது

—————————————————

வறண்ட வயல் வெளியில்
புனித அப்பாட்
கழித்துக் கொண்டிருக்கிறார்

———————————————–

வசந்தம்

இந்த வருடத்தின் முதல் கவிதை
எழுதி
அசுர தன்னம்பிக்கையில்
ஒரு ஹைகை கவிஞன்

பகல்கள் நீண்டு விட்டன
வாலாட்டிக் குருவி ஒன்று
பாலத்தை நோக்கிக் கீழே
இறங்கி வருகிறது

வசந்த கால மாலையில்
ஒரு பிட்சுவின் வெள்ளைத்
தோள் பட்டை
உறங்கிக் கொண்டிருக்கிறது

வசந்தத்தின் இள மாலையில்
ஒரு நரி
தன்னை நல்லவனாக
உருமாற்றிக் கொண்டு விட்டது

ஒரு மெழுகுவர்த்தி பீடத்தில்
இருந்த ஒளி
இன்னொரு மெழுகுவர்த்திக்கு
இடம் மாறியது
வசந்த இளங்காலை

ஒரு பூனைத் தூக்கம்
போட்டு எழுவதற்குள்
இந்த வசந்த காலப் பகல்
இருட்டி விட்டது

தரையின் மீது தலையணை
யாருக்காக
இந்த வசந்த விடியற்காலை

——————————————————

வசந்த கால மழை
——————–

வசந்த கால மழை
கிட்டத்தட்ட இருட்டு
ஆனாலும் இந்நாள்
நீண்டு கொண்டே இருக்கிறது

வசந்த கால மழை
கடற்கரையில் சிறிய கிளிஞ்சலை
நனைக்குமளவு

வசந்த கால மழை
கூரையின் மீது குழந்தையின்
துணிப் பந்து
நனைந்து கொண்டிருக்கிறது

——————————————————
நிலவொளி
மேற்கே நகர
பூ இதழ்களின் நிழல்
கிழக்கே நகர்கிறது

இந்தக் கடுங்குளிரில்
பழைய புத்தர் மரச்சிலை
கணப்பில் எரிக்கத் தோதாயிருக்கும்

Series Navigationசிந்தனைச் சிற்பிசமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 52
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *