டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 5

This entry is part 10 of 29 in the series 12 மே 2013

டிடிங்……ட்டிங்…….டிடிங்…….டிடிங்……ட்டிட்டிங்……ட்டிட்டிடிங்…….டிங்க்க்க்க்க்க்க்க்…….தொடர்ந்து அவசர அவசரமாக அடித்த அழைப்பு மணியின் சத்தத்தில் கார்த்திக்கின் அம்மா கல்யாணி, சற்றே பரபரப்பானவளாக……யாரா வேணா இருந்துட்டுப் போகட்டும்…. அதுக்காக இப்படியா.. காலிங் பெல்லை….பூஜை மணி அடிக்கிறா மாதிரி அடிக்கறது……என்று கோபத்தோடு சொல்லிக் கொண்டே “வரேன்…..வரேன்….வரேன்…..வரேன்….” காலிங் பெல் ஒரு தடவை அடிச்சா போதாதா…இது வீடா இல்லை செவிட்டு ஆஸ்பத்திரியா…..இப்படி நூறு தடவை அடிச்சு சுவிட்ச்சை கைல பேத்து எடுத்துண்டு வரேன்னு யாருட்டயாவது சவால் விட்ட மாதிரின்னா இருக்கு….நல்ல கூத்து….சொல்லிக்கொண்டே கதவைத் திறக்கவும்…எதிரில் அழகான பெண் ஒருத்தி முகமெல்லாம் மின்னலடிக்க…..புயலாக நேரே ஓடி வந்து கல்யாணியை அப்படியே இறுக்கக் கட்டிக் கொண்டு …”அத்தை…..நான் லாவண்யா ….வந்திருக்கேன்…..” என்று செல்லமாகக் கொஞ்சிக் கொண்டே சொல்லவும்.

அடடா….லாவண்யாவா…கண் கண்ணாடியை கொஞ்சம் சரி படுத்திக் கொண்டு பார்த்துவிட்டு .வா…வா ….என்ன திடு திடுப்புன்னு வந்து நிக்கறே…. நீ மட்டும் தனியாவா வந்தே…? அப்பா…..அம்மா வராளோ ….? ஆள் அடையாளமே தெரியாத…நீ என்னமா அழகா சினிமாக்காரியாட்டமா வளர்ந்துட்டே.ஒரு போன் பண்ணி சொல்லியிருக்கப் படாதோடி…..கார்த்திக்கை அழைச்சுண்டு வர அனுப்பியிருப்பேனே….என்று தனது தம்பி மகளை அணைத்துக் கொண்டே…” டேய் கார்த்திக் யாரு வந்திருக்கா பாரேன்……நம்ம லாவண்யா தனியா வந்திருக்கா .சமத்து…எவ்வளவு உசரமா அழகா இருக்கா பாரேன்…. என்றவள்..

நீ தானா காலிங் பெல்லை இந்த அடி அடிச்சது. நான் யாரோன்னு நெனைச்சேன்….அப்பறம்….பரீட்சை எப்போ முடிஞ்சது..நன்னா எழுதியிருக்கியா? நல்ல வேளையா நீ இப்போவாவது அத்தையைப் பார்க்கணும்னு புறப்பட்டு வந்தே…..நேக்கு கூட மாட வீட்டு வேலை செய்ய ஒத்தாசையா இருக்கும்…என்று சொல்லிக் கொண்டே..சரி கையக் கால அலம்பீண்டு வா….சாப்பிடத் தரேன். அன்னிக்குப் கடைசியாப் பார்த்தப்போ நண்டு மாதிரி இருந்தே…. இப்போப் பாரேன்… பந்தயக் குதிரை போல், வாட்ட சாட்டமா வளர்ந்து நிக்கறே. சுய வரத்தில் எத்தனை ராஜகுமாரன் மயங்கி விழப் போறானோ ? பாவாடை தாவணியில் பார்த்த உருவமா….? நேக்கு இந்தப் பாட்டு தான் ஞாபகத்துக்கு வரது….நீ அப்படியே அச்சு அசலா என் தம்பியையாக்கும் கொண்டிருக்கே….ஆத்துப் பொண்கள் அப்பாவை கொண்டிருந்தால் அதிர்ஷ்டமாக்கும்…தெரியுமா? என்று லாவண்யாவின் முதுகை லேசாகத் தட்டி விடுகிறாள் கல்யாணி.

வெட்கத்தில் கன்னம் சிவந்து போய் நெளிந்த லாவண்யா…..அத்தை….எங்கே கார்த்திக், அப்பறம் அத்திம்பேர்….? ரெண்டு பெரும் வீட்டில் தானே இருக்கா..? என்று கேட்கவும் கார்த்திக்கின் முகம் தெரிந்ததும்….ஹாய் என்று கையை அசைக்கிறாள்.

கார்த்திக் இதோ…இங்கே தான் இருக்கான்….அவனோட அப்பா தான் பெங்களுர் போயிருக்கார்…வர ரெண்டு நாள் ஆகும். டூட்டில போயிருக்கார். நீ வா உள்ளே.என்று சொல்லிக் கொண்டே குளியலைறையை நோக்கி விரைகிறாள் கல்யாணி.

கார்த்திக் அறைக்குள் இருந்து எட்டிப் பார்த்தவன்…..ஹாய்….பென்சில்…இப்போ நீ ஏணி மாதிரி இருக்கே….! எப்போ வந்தே..?

டேய்…கார்த்தி……இன்னுமாடா உன் குசும்பு போகலை…நான் பென்சில்னா நீ குண்டுப் பேனா…..! நான் ஏணி ன்னா …நீ ஸ்டூல்டா……ஸ்டூல்…! வாயைக் கோணி அழகு காமித்த படியே அழுத்தம் திருத்தமாகச் சொல்லவும். இருவரும் சேர்ந்து சிரித்துக் கொண்டனர்…..”வாயாடி…வங்கம்மா…..மாறவே இல்ல நீ…அதே வாய்…அதே திமிர்……ஆமா..என்ன திடீர்னு எங்க ஞாபகம் உங்களுக்கு? சாதாரணமா கூப்பிட்டால் பிகு பண்ணிக்குவே….இப்போ என்னடான்னா சொல்லாமக் கொள்ளாம வந்து நிக்கறே? ஏதாவது பிளானா? சோழியன் குடுமி சும்மா ஆடாதே….இப்படி எதுவோ சொல்லுவா இல்ல….!

போடா லூசு…! என்றவள், அத்தை….இந்தக் கார்த்தியைப் பாருங்கோ கேலி பண்றான்….என்று சிணுங்கியபடியே உள்ளே போகிறாள்.

அத்தை மறுபடியும் குளித்து விட்டு வந்ததைப் பார்த்து…ஏன் அத்தை இப்போ தானே நீ குளிச்சுட்டு வந்தா மாதிரி இருந்தது…அதுக்குள்ளே .ஏன் மறுபடியும் குளிச்சே?

அடி அசடே…..நான் ஏற்கனவே குளிச்சாச்சு…..மடியாத்தான் வந்தேன்….நீ வந்து என் மேலே விழுந்து கட்டிப் பிடிச்சே…விழுப்பாயிடுத்து….இதுவே வேற யாராவதா இருந்திருந்தால் நடக்கறதே வேற…தெரியுமா சேதி…..உன்னை ஒண்ணும் சொல்ல முடியலையே….அதான் இன்னொரு குளியல். இப்போ போய் பூஜைல உட்காரணம்…அப்பறம்…. லாவண்யா…..கார்த்தியை வாடா போடான்னெல்லாம் நீ கூப்பிடக் கூடாது…. நாளைக்கு கலியாண மாப்பிள்ளை ஆகப் போறவன் ! அவன் இப்போ ஆபீசுக்கு போய் சம்பாதிக்க ஆரம்பிச்சாச்சு…தெரியுமோன்னோ….மரியாதையா பேசணும்….புரிஞ்சுதா? என்று குரலில் குழைந்து குழந்தைக்கு சொல்வது போல சொல்லிவிட்டு “நாராயண நாராயண நாராயண நாராயண…நமோ நமஸ்தே…என்றபடியே பூஜை அறைக்குள் நுழைகிறாள் கல்யாணி.

சரி அத்தை….கார்த்தியைப் பார்த்தால் எனக்கு மரியாதையும் வரலை…பயமும் வரலை….சின்ன வயசுல விளையாடினது தான் ஞாபகத்துக்கு வரது…நான் என்ன செய்யட்டும், என்று லாவண்யா அத்தையிடம் உரிமையாகப் பேசிக் கொண்டு பூஜை அறையின் வாசலில் நின்றாள் .

கார்த்திக் மனசுக்குள் திக் திக் என்று இருந்தது.இந்த மாமா சும்மா இருக்காம தன்னோட சோட்டா பாமை அனுப்பி வெச்சிருக்கார்…..அது வெடிக்கறதுக்கு முன்னாடி அதை புஸ் புஸ் பண்ணிடணும்…நமக்கு வில்லிகள் எங்கேங்கேர்ந்தெல்லாம் வருவாங்கன்னு சொல்ல முடியாது போலிருக்கே….ஒருவேளை இது அம்மாவோட கைங்கர்யமாக் கூட இருக்கலாம்…யாரு கண்டா..? .எல்லாம் அழகா ஆஸ்கார் அளவுக்கு நடிக்க பழகிண்டு இருக்கா….ம்ம்….கிரேட்..! என்று நினைத்தபடி கார்த்திக் கிளம்பும்போது…அவனது ஐ ஃபோன் கதறியது…..

Oppa Gangnam Style
Gangnam Style
Najeneun ttasaroun inganjeogin
yeojaKeopi hanjanui yeoyureul
aneun pumgyeok inneun
yeojaBami omyeon simjangi
tteugeowojineun yeojaGeureon
banjeon inneun yeoja
Oppa Gangnam Style Gangnam Style
Op, op, op, op Oppa Gangnam Style
Gangnam Style
Op, op, op, op Oppa Gangnam Style..

கைபேசியின் அவசரம் தெரியாமல்..பாடலை ரசித்தபடியே அத்தோடு சேர்ந்து கூட பாடிக்கொண்டே,ஃபோனை எடுக்காமல் அதைத் தொடர்ந்து பாடவிட்டுக்கொண்டு இருந்தவன் கடைசியாக மெல்ல எடுத்து டிஸ்ப்ளேயைப் பார்க்கவும் அதில் கௌரி காலிங் என்று மின்னிக் கொண்டிருந்தது. அவனுக்குள் ஆனந்த அதிர்ச்சி.

ஹேய்……குட் டே…! என்ன ஆபீஸ் இல்லையா? நானும் லீவு போடவா ? எங்கியாவது ஜாலியா….ஒரு ரவுண்டு…..என்று கிசு கிசுக்கவும்…..
கார்த்திக்கின் குரலைத் தடுத்து பதட்டத்தோடும், அழுகையோடும் திக்கித் திணறி வந்தது கௌரியின் குரல்……

கார்த்திக்…….என்னோட அப்…..அப்பாவுக்கு விபத்து …..இன்னிக்குக் கார்த்தால ..ஆக்ஸிடெண்ட்டாகி அதுல தவறிப் போயிட்டார்……நீ….நீ…..உடனே வரணம்..உங்கம்மாட்டக் கூட சொல்லிடு. என்று மேற்கொண்டு பேசமுடியாமல் கதறி அழுகிறாள்.

அப்படியே அதிர்ச்சியில் உறைந்தவனாக. ….ஏய்…கௌரி…நீ என்ன சொல்றே ….மாமாவா? வாட்….?ஓ … மை காட்….என்னால நம்பவே முடியலையே….இரு… இரு.. .இதோ….கிளம்பிட்டேன்….இப்போ வரேன்….அவனையும் அவளது அதே பதற்றம் தொத்திக் கொண்டது.

அம்மா….அம்மா…நம்ம கௌரி இல்ல….அவளோட அப்பா இன்னைக்குக் கார்த்தால ஆக்ஸிடெண்ட்டுல செத்துப் போயிட்டாராம்….இப்போ தான் போன் பண்ணி தகவல் சொன்னா ….அப்படியே கிளம்பு போயிட்டு வந்துடலாம்…என்று சொன்னவனைப் பார்த்ததும்…

அச்சச்சோ….எப்படீடா……என்று ஆரம்பித்தவள் ….இவன் சொன்ன “நம்ம கௌரி ” நினைவுக்கு வரவும்…”அதுக்கு நீ ஏண்டா இந்த பதறு பதறரே …..அவா யாரோ….? நாம யாரோ? .நாம ஏன் போகணும்…..?அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்….அப்பறமா ஒரு நாளைக்கு அந்த மாமிக்கு ஃபோன் பண்ணி துக்கம் விசாரிச்சாப் போதும்…நீ உன் பாட்டுக்கு ஆபீசுக்குப் போ. அவா என்ன நமக்கு ஒட்டா…..உறவா….என்ன? நமக்கென்ன இப்போ அவாத்தில் ஜோலி……அவ என்னத்துக்கு நோக்கு போன் பண்ணி சொல்லணும்? ஆனாலும் அந்தப் பொண்ணு கௌரிக்கு இவ்வளவு திண்ணாக்கம் ஆகாது…..சர்வ சாதாரணமாக ஒரே வரியில் சொல்லி விட்டு தன் வேலையைப் பார்க்கிறாள்…

ம்ம்ம்மா…..கெளரிம்மா…! என்கிறான் தொடர்ந்து.

அதுக்கென்ன? மறுபடியும் சொல்றேன் நன்னாக் கேட்டுக்கோ….அவா யாரோ….நாம யாரோ? அங்கெல்லாம் நாம போயி நிக்கணும்னு ஒண்ணும் அவசியமில்லை தெரிஞ்சுதா…? பொண் பார்க்கப் போனோம்….சரிப்பட்டு வரலை…..அத்தோட முடிஞ்சது. லாவண்யா…..கார்த்திக்கோட டிபன் பாக்ஸை கொண்டு வா…மேடை மேலே வெச்சுட்டு வந்துட்டேன் கை மறதியா….பார்த்து எடுத்துண்டு வந்து கொடு அவன்கிட்ட……டேய்..கார்த்தி…லீவுக்கு இவ நம்மாத்துக்கு வந்திருக்கா…சாயந்தரம் கொஞ்சம் ஆபீஸிலிருந்து சீக்கிரமா வந்து எங்காவது வெளில வாசல்ல அழைச்சுண்டு போய்ட்டு வா…..அவள் கேட்டதை வாங்கிக் கொடு…என்ன….ஏன் இப்ப இப்படி மூஞ்சியை தூக்கி வெச்சுண்டு போற….! சந்தோஷமா சிரிச்ச முகமா இரேன்….இங்க….நம்மாத்துலையா எழவு விழுந்திருக்கு…..உன் மூஞ்சி இப்படி அறுந்து தொங்கறதுக்கு ? என்று சொல்லும் அம்மாவை பார்க்க முதல் முறையாக வெறுப்படைந்தான் கார்த்திக்.

ச்சே…..என்ன மனசு இது…! எண்ணிக்கொண்டே…அருகில் வைத்த கண் எடுக்காமல் வந்து நின்ற லாவண்யாவிடம்…..நீயாவது என்னோட வரியா? ஜஸ்ட் பார்த்துட்டு வந்துடலாம். ப்ளீஸ்…என்பது போல ஒரு பார்வை பார்த்ததும்…..

அவள் துள்ளிக் கொண்டு கிளம்பினாள் ….அத்தை…நான் கார்த்தியோட போயிட்டு வரேன்…சும்மா ஒரு ரவுண்டு…என்றவள் …அத்தையின் பதிலுக்கெல்லாம் காத்திராமல் கார்த்தியோடு அவன் ஸ்டார்ட் செய்த பைக்கில் தொத்திக் கொண்டாள் .

ஹோண்டா பைக் பறந்தது. கார்த்திக்கின் மனசெல்லாம் கௌரிக்காக அழுதது. பின்னால் அமர்ந்திருந்த லாவண்யா சொர்க்கபுரில் மிதந்து கொண்டிருந்தாள்.

நீங்க ரெண்டு பேரும் எங்கயாக்கும் போறேள் ..? அவசரமாக வெளியே வந்த கல்யாணிக்கு தூரத்தில் மறைந்து கொண்டிருந்த பைக் மட்டும் கண்ணில் தெரிந்தது.

நடப்பது ஓன்றுமே புரியாமல் கார்த்திக்கின் பின்னால் அமர்ந்து கொண்டு தெருக்களை வேடிக்கை பார்த்தபடியே வந்து கொண்டிருந்தவள்…..”கார்த்தி….யாராத்துக்கு போறோம் இப்ப நாம? யாருக்கு என்னாச்சு…? என்று கேட்கிறாள்….லாவண்யா.

கௌரி…..ஆத்துக்குப் போறோம்…அவளைத் தான் நான் கல்யாணம் பண்ணுவதாக இருந்தது. இப்போ ஒரு திடீர் விபத்து. …..! அவளோட அப்பா இன்னைக்கு கார்த்தால ஒரு ஆக்ஸி டெண்டுல தவறிப் போயிட்டாராம்….பாவம்.

அப்படியா..அச்சச்சோ பாவமே…அதுக்குத் தான் அத்தை அப்படி கோச்சுண்டாளா…? இந்தப் பெரியவாளுக்கு எப்பவுமே ஐயோ பாவமே பார்க்கத் தெரியாது போல. நான் கூட நம்ம அத்தை ரொம்ப ரொம்ப நல்லவான்னு நினைச்சேன்.இந்த அத்தையும் பாட்டி மாதிரியே தான் இருப்பா போலிருக்கே.

ஏய்…வாயாடி …சந்தடி சாக்குல நீ சிந்து பாடாதே…உன்னோட அருமை அத்தைக்கிட்டே போட்டுக் கொடுத்துடுவேனாக்கும்.அப்புறம் என்னாகும் தெரியுமா? அடுத்த பஸ் எப்போன்னு கேட்டுண்டு ஓடுவே நீ….என்று சீரியஸாக சொல்லிக் கொண்டான்.

சரிடா நான் ஒண்ணும் உன்னோட அருமை அம்மாவை பத்திப் பேசலை இனிமேல்…..இன்னும் எத்தனை தூரம் இருக்கு அவாத்துக்கு..? என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள் லாவண்யா.

இதோ வந்தாச்சு…..அங்க போய் அடக்க ஒடுக்கமா இரு….பல்லை இளிச்சு வைக்காதே என்ன? என்று அதட்டி வைக்கிறான்.

நேக்கு நீ சொல்லித் தரியாக்கும்…முத்தல்ல நீ தான் கௌரியைப் பார்த்து குழையாமல் இருக்கணும் தெரிஞ்சுக்கோ..என்று சிடு சிடுக்கிறாள்.

அம்மா தாயே….அமைதியா வாயேன்….பதிலுக்கு பதில் கொடுக்காட்டி உன்னால மூச்சு விடவே முடியாதோன்னு தோணறது…சொல்லிக் கொண்டே ஒரு பூமாலை கடையில் நிறுத்தி ரோஜா மாலை ஒன்றை வாங்கி லாவண்யா கையில் கொடுத்து இதை பத்திரமாப் பிடிச்சுக்கோ உதிரக் கூடாது…என்று சொன்னதும்….அவள் கார்த்தியை பார்த்த விதத்தில் எதோ புது மாதிரியாக இருந்தது.

நீ ரோஜா மாலை வாங்கி என் கையில் தந்த விஷயம் என் அம்மாவுக்குத் தெரிஞ்சால் அவ்ளோதான்…..உன் கதை கந்தலாயிடும்…என்று நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறாள் லாவண்யா.

டீ … சீரியஸா இருக்கும்போது ஏண்டி உன் புத்தி இப்படி கோணலாப் போறது..?

ம்ம்ம்..இப்போ நீ நேரா வண்டியைப் பார்த்து ஓட்டு…பதிலை நான் அப்பறமா சொல்றேன்….என்று நொடித்துக் கொண்டாள் .

கௌரி வீடு வந்து விட்டதன் அடையாளமாக அங்கு ஒரே கூட்டமும், அழுகை சத்தமும்…கேட்டுக் கொண்டிருக்கிறது. கௌரியின் அலுவலகத்தில் இருந்து பலர் வந்து நின்று கொண்டிருந்ததால் ஒரே கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது.

ஸ்கூட்டரும்..காருமாக அந்தத் தெருவையே அடைத்து கொண்டிருந்தது…கார்த்திக்கிற்கு சோகம் மனத்தைக் கவ்விக் கொண்டது. பாவம் ஈஸ்வரன் சார்….எவ்வளவு பளிச்சென்று இருந்தார் என்று நினைத்துக் கொண்டான்.

அடுத்த சில நிமிடங்களில் கௌரியின் வீட்டு வாசலுக்கு சிறிது அருகில் இருக்கும் ஒரு சந்தில் வண்டியை நிறுத்தி விட்டு ரோஜா மாலையை லாவண்யாவின் கையிலிருந்து தான் வாங்கிக் கொண்டு மெள்ள மெள்ள நடந்து கூட்டத்தைக் கடந்து உள்ளே நுழைகிறார்கள்.

கார்த்திக்கின் முகத்தைக் கண்டதும் தான் தனக்கு உயிரே வந்தது போலே எழுந்து ஓடி வந்து ஓவென்று அழுது கொண்டு தயங்கியபடியே ஒரு கணம் நின்று விட்டு லேசாக கார்த்திக்கின் தோளில் சாய்ந்து கொண்டாள் கௌரி. அவள் உடல் குலுங்கி குலுங்கி பயத்தில் நடுங்கியதை கார்த்திக்கால் உணர முடிந்தது.

கையிலிருந்த ரோஜா மாலை உதிர்வதைக் கண்டு லாவண்யா அதை வாங்கிக் கொண்டவள் கௌரியை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் .
கௌரியின் கண்கள் லாவண்யாவை அந்த அழுகையிலும் கவனிக்கத் தவறவில்லை.

கார்த்திக்…..என்னோட அப்பா என்னோட அப்பா….பொட்டலமா….பொட்டலமா…கார்த்தால வாக்கிங் போனவர்…இப்படித் தான் வந்து சேர்ந்தார்….என்று கையைக் காட்டி அழுதபடி திக்கி திக்கி சொல்லிக் கொண்டிருந்தாள். அவளது கண்களும் முகமும் அழுது அழுது சிவந்து இருந்தது. திடீரென்று தலையில் அடித்துக் கொண்டு அழத் தொடங்கினாள் …அப்பா….என்று கத்திய அவளைச் சமாதானம் செய்ய அருகில் இருந்தவர்கள் இறுக்கப் பிடித்துக் கொள்ள….கார்த்திக் எதோ வார்த்தைகள் சொல்ல முயற்சிக்க அது அவனுக்கே கேட்காமல் வார்த்தைகள் வெளியேறாமல் நின்றது. தான் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்தபடி நின்று கொண்டிருந்தான் கார்த்திக்.

கண்ணாடி பெட்டிக்குள் வெள்ளைப் போர்வையால் மூடி வைக்கப் பட்டிருந்த ஈஸ்வரனின் முகம் மட்டும் அப்படியே மாறாமல் தூங்குவது போலவே இருந்தது.

அதிர்ச்சியில் உறைந்து போய் அழக் கூட முடியாத நிலையில் கௌரியின் அம்மா சித்ரா அவரது முகத்தை மட்டும் வெறித்துப் பார்த்த படியே அமர்ந்திருந்ததைப் பார்த்து மெல்ல அங்கு சென்று அருகில் அமர்ந்து கொண்ட கார்த்திக், ஆன்ட்டி ….என்று மென்மையாகச் சொல்லி அழைக்கவும்…

திரும்பி ஒரு பார்வை பார்த்தவளாக, இப்படி தவிக்க விட்டுட்டு போய் சேர்ந்துட்டாரே…..கௌரிக்கு கல்யாணம் பண்ணி மாலையும் கழுத்துமா பார்க்கணும்னு துடியாய் துடிச்சாரே…. இப்போ அவரை மாலையும் கழுத்துமா பார்க்க வெச்சுட்டு போய்ட்டாரே ….நாங்க என்னத்தச் செய்வோம்….? என்று ஈனஸ்வரத்தில் அழுது கொண்டே நா தழு தழுக்க சொல்கிறாள் சித்ரா. ஈஸ்வரனின் அண்ணாவும், மன்னியும் அவளைச் சமாதானப் படுத்தியபடி தட்டிக் கொடுத்தனர்…

அழாதேங்கோ….அழாதேங்கோ…ப்ளீஸ்….தைரியமாயிருங்கோ …..யாருமே இதை எதிர்பார்க்கலே…..என்ற கார்த்திக் மேற்கொண்டு எதுவுமே பேசாமல் மௌனமானான்.

அங்கு வந்திருந்தவர்களில் சிலர் அந்த சோகமயமான சூழ்நிலையிலும் கூட ஒருவருக்கொருவர் கார்த்திக்கையும் கெளரியையும் பார்த்து ஏதோ கிசு கிசுத்துக் கொண்டிருந்தது போலிருந்தது அவனுக்கு.

அடுத்த சில மணி நேரத்தில் ஈஸ்வரனின் இறுதியாத்திரை துவங்கவும் அந்த வீடு கூட்டம் கலைந்து அழுகை சத்தம் ஓய்ந்து மௌனத்தில் மூழ்கியது. யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பும் முன்பு கௌரியை லேசாக ஒரு பார்வை பார்த்து விட்டு லாவண்யாவுடன் மெல்ல வெளியேறினான் கார்த்திக்.

கூட வந்த அந்தப் பெண் யாராயிருக்கும் ? நேரடியாகக் இப்போ கேட்கவும் முடியாதே என்று அழுகை நிறுத்திய கௌரியின் மனது அந்த இக்கட்டான நேரத்திலும் கேள்வி கேட்டு பதில் கிடைக்காமல் ஏங்கித் தவித்தது.

0 0 0 0 0 0 0 0

நான் வரதுக்குள்ளே அப்படி என்ன தலை தெறிக்க ஓட்டம் இந்த கார்த்திக்கு….சரியாச் சொல்லாம கொள்ளாமல்….அவாத்துக்குப் போக வேகித்து….வரட்டும்…வரட்டும்…என்று கோபத்தோடு கல்யாணி மகனை மனசுக்குள் திட்டிக் கொண்டிருந்தாள். அதே சமயம், இன்னைக்கு இவன்கிட்ட நேரடியா என் மனசில் தோன்றியதைப் பேசிட வேண்டியது தான். லாவண்யா முறை பொண்ணு தான். பேசாமல் காதும் காதும் வெச்சா மாதிரி சிம்பிளா ஒரு கல்யாணம் பண்ணி வெச்சிட வேண்டியது தான். சொந்தம் விட்டுப் போகாது. சொத்தும் வெளிய போகாது. ஏகப்பட்ட சொத்து….சொந்தத்துக்குள்ள இருந்தால் தான் பாதுகாப்பு. லாவண்யாவும் என்கிட்டே அத்தை அத்தைன்னு ஆசையா அன்பா இருக்கா. அழகாவும் இருக்கா. இன்னும் என்ன வேணம்….வயசு வித்தியாசம்னு கூட ஜாஸ்தி இல்லை…வெறும் எட்டு வருஷம் தான்…எல்லாம் போதும் பார்த்துக்கலாம்…நான் எது சொன்னாலும் பொறுமையாக் கேட்டுக்கறா. எப்படியாவது இவர்கிட்டையும் பேசி ஒரு முடிவு எடுக்கணம்.
தம்பியும் , சுமதியும் கூட காரணமில்லாமல் பெண்ணைத் தனியே அனுப்பி இருப்பாளா…? அவாளுக்கும் மனசுக்குள்ள ஒரு எண்ணம் இருக்கணும். அவாளுக்கு வாய்விட்டு கேட்க தயக்கமோ என்னமோ? பாவம்…அதான் பெண்ணை அனுப்பி பார்த்திருக்கா…நானே இப்போ போன் பண்ணிப் பேசறேனே….நினைத்தபடியே கைபேசியில் தம்பி மனைவி சுமதியின் எண்ணை அழுத்திவிட்டு காத்திருக்கிறாள் கல்யாணி.

கல்யாணிக்கா….சொல்லுங்கோ நான் சுமதி தான் பேசறேன்…லாவண்யா என்ன பண்றா?

அவள் கார்த்தியோட எங்கியோ வெளில போயிருக்காள். என்று சந்தோஷமாக கல்யாணி சொல்வதை கேட்ட சுமதி.

ஏன்…? எதுக்கு? எங்கே போயிருக்கா ? என்று லாவண்யா அவனோட வெளியில் போவது பிடிக்காததைப் போல குரல் கம்முகிறது சுமதிக்கு.

அதைப் புரிந்து கொண்ட கல்யாணி, ஆமாம்…இப்போ வந்துடுவா…பக்கத்துல தான் போயிருக்கா…லாவண்யாவுக்கு கல்யாணத்துக்கு பார்க்க ஆரம்பிச்சுட்டியா? என்று கேட்கவும்.

ஆமாமா…பார்த்தாச்சு….என்னோடஒண்ணு விட்ட மாமா பையன் கிரீஷ், அமெரிக்காவில் நல்ல வேலையில் இருக்கான்…அவனுக்குத் தான் நம்ம லாவண்யாவைக் கொடுக்கலாம்னு நெனைச்சுண்டு இருக்கோம்…அவா வந்து இவளைப் பார்த்து பிடிச்சுப்போய் பேசியாச்சு. அதை உங்ககிட்ட சொல்லிட்டு ஒரு வாரம் இருந்துட்டு வா லாவண்யா அப்பறமா நாங்க வந்து அழைச்சுண்டு போறோம்னு சொல்லித் தான் அவளை அங்கே அனுப்பி வெச்சேன்..சொன்னாளோ ….எங்க ரெண்டு பேருக்குமே ஆபீசில் ஆடிட்டிங் வேலை ஜாஸ்தி..சரிக்கா… மத்ததை நான் அங்கு வந்து பேசிக்கறேன்….என்று போனை வைப்பதில் குறியாக இருந்தாள் சுமதி. அவளுக்கு என்ன அவசரமோ?

சுமதி சொன்ன விஷயம் கல்யாணிக்கு தன் எண்ணத்தில் மண் வீசியது போலிருந்தது….அப்போ நான் நினைச்சதெல்லாம் அவ்ளோ தானா? என்ற ஏமாற்றம்.

ஒரு வாய் வார்த்தைக்குக் கூட கார்த்தியை பற்றி சுமதி விசாரிக்காமல் இருந்தது கல்யாணியின் மனசுக்கு இன்னும் என்னவோ போலிருந்தது. அதைவிட லாவண்யாவுக்கு கல்யாணம் நிச்சயமாகிவிட்டதே என்ற வருத்தம் வேறு மனதை கவ்விக் கொண்டது. இவனுக்கென்ன குறைச்சல்.?..இந்த லாவண்யா இல்லாட்டா ஒரு சரண்யா பொறக்காமலா இருந்திருப்பா…பெரிய பீத்தல்…! அமேரிக்கா மாப்பிள்ளையாம்….! எனக்கும் ஆப்பிரிக்காவிலேர்ந்து மாட்டுப் பொண்ணு வருவாளாக்கும் என்று சொல்லிக் கொண்டவள்…கருமம்..கருமம்..நான் ஏன் இப்படி உளறரேன் என்று தலையில் அடித்துக் கொண்டே கல்யாணி எந்த வேலையிலும் தன்னை ஈடு படுத்திக் கொள்ள முடியாமல் தவிக்கிறாள். மனசு பூரா வடபோச்சே….நிலைமை தான்.

எப்படியாவது இந்த லாவண்யாவுக்கும் முன்னாடி நம்ம கார்த்திக்குக்கு நல்ல இடத்தில் இது போல இல்லைன்னு ஒரு கல்யாணம் பண்ணி அவா மூஞ்சில கரியைப் பூசணம் .மனசுக்குள் சபதம் போட்டவளாக மீண்டும் சுமதிக்கு போன் செய்து, கார்த்திக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு பொண்ணு பி டெக் , விப்ரோவில் நல்ல வேலை…பொண்ணுக்கு அம்பதாயிரம் சம்பளமாம்..கார்த்திக்கு அவளை ரொம்பப் பிடிச்சுப் போச்சு..அனேகமா கூடிய சீக்கிரம் இந்தாத்துலயும் கொட்டுமேள சத்தம் கேட்குமாக்கும் என்று இந்தக் க்ஷணத்தில் சுமதியிடம் நான் தோற்றுப் போகலை என்ற நிம்மதி பெருமூச்சு விட்டபடி பதிலுக்கு சுமதி பேசிய எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமலே போனை வைத்தாள் கல்யாணி.

அச்சச்சோ…இத்தனை நேரம் நாம அந்த கௌரியைப் பத்தி தானே சொல்லிண்டு இருந்தோம்…என்று தோன்றவும், இருந்துட்டுப் போகட்டும்…அப்பறமா பொண்ணு மாறிடுத்துன்னு சொன்னாப் போறது என்று சமாதானமானாள்.

வாசலில் கார்த்திக் வந்ததற்கு அடையாளமாய் பைக் உறுமி நின்றது. லாவண்யா வந்ததன் அடையாளமாக அழைப்பு மணி தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தது.

நாம போயிட்டு வந்த இடம் தெரிஞ்சா இப்போ அம்மா பத்திரகாளியாட்டம் போடுவா பாரேன்…..என்று கார்த்தி சொல்லும் போதே கதவு திறந்தது.

கல்யாணி கடுப்போடு நின்றிருந்தாள் …உங்க ரெண்டு பேரோட மூஞ்சிலயும் தான் நீங்க எங்க போயிட்டு வந்திருக்கேள்ன்னு எழுதி ஒட்டியிருக்கு..இவன் சொன்னால் கேட்க மாட்டான்….பின்புறமா வந்து குளிச்சுட்டு ஆத்துக்குள்ள வரணம்..தீட்டு…என்று சொல்லிவிட்டு படக்கென கதவைச் சாத்துகிறாள்.அதில் அத்தனை கோபமும் , ஏமாற்றமும் தெரிந்தது. அவளது மணக்கண் முன்பு கௌரி வந்து அழுவது போலவே இருந்தது. கல்யாணி எகத்தாளமுடன் முகத்தை நொடித்துக் கொண்டாள் .

0 0 0 0 0 0 0

(தொடரும்)

Series Navigationமுனைவர் க.பஞ்சாங்கத்தின் சிங்கப்பூர் பயணம்நீங்காத நினைவுகள் – 2
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    ஈஸ்வரனின் மரணம்..லாவண்யாவின் வரவு. அவளுக்கு அமெரிக்காவில் மாப்பிள்ளை. கார்த்திக் லாவண்யா கெளரி வீடு சென்றது. அவள் யார் என்று கெளரி துக்கத்திலும் குழம்புவது.கல்யாணியின் ஏமாற்றம். கதை கொஞ்சங் கொஞ்சமாக சூடு பிடிகிறது. கார்த்திக் கெளரியின் கரம் பிடிப்பானா என்ற ஆவலைத் தூண்டிவிட்டுள்ளார் கதாசிரியர் ஜெயஸ்ரீ சங்கர்.சரளமான மொழியில் இப்பகுதி எழுதப்பட்டுள்ளதால் படிக்க சுலபமாக இருந்தது..வாழ்த்துகள் . அன்புடன் டாக்டர் ஜி.ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *