தமிழ் இலக்கியமும் மதவாதிகளும்

author
0 minutes, 22 seconds Read
This entry is part 3 of 10 in the series 21 ஜனவரி 2018

விநாயகம் 

தமிழ் இலக்கியம் – சங்க காலம்;  சங்கம் மருவிய காலம்; காப்பிய காலம்; பக்தி இயக்க காலம்; சிற்றிலக்கிய காலம்;   விடுதலை போராட்ட காலம்; விடுதலை பெற்ற காலம்;  தற்காலம் – என்று தனித்தனியே ஒன்றன்பின் ஒன்றாக‌ வளர்ந்து வந்திருக்கிறது. பக்தி இயக்க கால இலக்கியம் சமய இலக்கியமெனப் போற்றப்பட்டு, தமிழ்மொழியின் இலக்கிய கட்டமைப்பு அடிக்கற்களுள் ஒரு பெரிய அடித்தளமாக விளங்குகிறது.  இக்காலப் பாடல்கள் இந்துக்கடவுளர்களாகிய சிவனையும் திருமாலையும் தனித்தனியாக போற்றிப்பாடப்பட்டவை.  இவர்கள் எத்தனை எத்தனை புலவர்கள் என்று நமக்குத் தெரியாது. ஆனால். இவர்களுள்  சமயக்குரவர் நால்வர் என்ற சிவனைப்பாடிய சைவப்புலவர்களும்; ஆழ்வார்கள் எனவழைக்கப்படும் வைணவப்புலவர்கள் பன்னிருவரும் இன்று சமய இலக்கியம் யாத்தவர்கள் எனவறியப்படுகின்றனர்.

எல்லா கால இலக்கியநூல்களும் தமிழரின் இலக்கிய பெட்டகங்களாக போற்றப்பட்டு வாசிக்கப்பட்டு வருகின்றன.  உலகமெங்கும் வியாபித்துள்ள தமிழர்கள் – மதம், சாதி கடந்து – அனைத்து கால இலக்கியத்தை த‌ம் முன்னோர் விட்டுச்சென்ற விலைமதிக்க முடியா சொத்து, பிறமொழிகளில் இப்படி கிடைக்காதென்றெல்லாம் பெருமைப்பட்டு தமிழின்பத்தை நுகர‌ வழி செய்கிறது.

பக்தி இலக்கியத்தின் இன்றைய நிலையென்ன?  7ம் நூற்றாண்டிலிருந்து 9ம் நூற்றாண்டு வாழ்ந்த ஏராளம் திருமால் வழிபாட்டுப் புலவர்கள் அனைவரும் எழுதியவை எங்கே போயின‌? தெரியவில்லை.  ஆனால் அவர்களுள் பன்னிருவர் யாத்தவை இன்று கிடைக்கின்றன.  காட்டுமன்னார் கோயிலைச் சேர்ந்த ஒரு வைணவ ஆசிரியர் பன்னிரு புலவர்கள் எழுதியவைகளைத் தொகுத்தார்;  இது நடந்தது 10ம் நூற்றாணடு.  அதாவது பன்னிரு புலவர்களுள் கடைசிப்புலவர் வாழ்ந்த காலம் 9ம் நூற்றாண்டு.  அவருக்குப் பின் ஒரு நூற்றாண்டு கழித்து இப்பாடல்கள் ஒரே தொகுப்பில் வைக்கப்பட்டன.  எப்புலவரின் பாடல்கள் முதலில் வைக்கப்படவேண்டுமென்ற வரிசையும் இத்தொகுப்பாளரால் முடிவு செய்யப்பட்டது.  இப்பாடலகளை அவர் தொகுக்க ஒரே காரணம் அல்லது முதற்காரணம் பன்னிருவரும் திருமாலையே முழமுதற்கடவுளாகக் கொண்டு வேறெந்த தெயவத்தையும் ஏத்தாமல் பாடியது.  பக்தி இயக்க காலத்தில் இப்படி ஒரே கடவுளை (திருமாலை) எடுத்துப் போற்றிப் பாடியவர்கள் இவர்கள் பன்னிருவர்தான் போலும்! அல்லது இவர்கள் மட்டுமே தொகுப்பாளருக்கு கிடைத்திருக்க வேண்டும்.  அன்று வாழ்ந்த – 7லிருந்து 9ம் நூற்றாண்டுவரை – ஒரு பன்னிருவர் மட்டும்தான் திருமாலையே ஏத்திப்பாடினரா?  இருக்கவே முடியாது. திருமால் வணக்கம் தமிழ்மண்ணில் தொன்மையாக இருக்க ஒரு பன்னிருவர் மட்டும்தான் கிடைத்தனரா?  புரவலர் இல்லாவிட்டால் மாபெரும் புலவனும் மண்ணில் காணாமல் போவான் எனபது ஆங்கிலப்பாவலன் கிரே ”ஒரு கல்லறைத்தோட்டத்தில் பாடிய இரங்கற்பா”’ என்ற கவிதையில் சொல்கிறான்.   கம்பருக்கும் கூட ஒரு திருவெண்ணைநல்லூர் சடையப்பச் செட்டியார் புரவலராக இருந்ததனால் இன்று நம்மிடையே வாழ்கிறாரன்றோ! இப்பன்னிருவருக்காவது ஒருவர் கிடைத்தாரே என்று நம்மை நாமே தேற்றிக்கொள்ளலாம்.

பின்காலத்தில் இராமானுஜர். வந்தார்.. அவர் இந்துமதத்தில்  விசிஷ்டாத்வைதம் என்னும் ஒரு தத்துவத்தை உருவாக்கினார். தன் தத்துவம் முன்சென்ற தொகுப்பாளரின் பாடல்களில் ஒலிக்கக்கண்டார்.  திருமால் பக்தியில் ஆழங்கால் பட்டு தம்மை மறந்த நிலையில் பாடல்கள் எழுதினார்கள் எனவே ஆழ்வார்கள் என்ற பேர்.  இவர்கள் பாடல்கள் அனைத்தையுமே தம் புதிய மதத்தின் வழிபாட்டில் கட்டாயமாக்க, இப்பாடல்கள் வெளித்தெரிந்தன‌. பின்னர் இராமானுஜர் செயல்கள்;   வகுத்த கோயில் வழிபாட்டு முறைகள்; தன் சீடர்கள் சிலரை வைத்து இப்பாடல்களுக்கு எழுதிய விளக்கவுரைகள் – எல்லாமே சேர்ந்து வைணவ சம்பிராதாயம் என்ற பெயரில் உள்ளடக்காமானது.  மேலும் – நம்மாழ்வாரின் நான்கு நூல்கள் நான்கு வேதங்களில் சாரங்களென்றும்;  திருமங்கையாழ்வாரின் ஆறு நூல்கள் வேதங்களின் ஆறங்கங்களெனவும், ஏனைய ஆழ்வார்கள் எண்மர் நூல்கள் எட்டு உபாங்கஙகளெனவும் – அல்லது ஒத்த சிறப்புடையவை – என்பது ஆசாரிய சூர்ணிகை.  வைணவர்களுக்குச் சொன்னது.  விளக்கங்கள் – அல்லது வியாக்யானங்கள் – எழதிய இராமானுஜரின் சீடர்கள் – மற்ற வைணவ ஆசிரியர்கள் – இப்படி வேத சாரங்கள் எனபதை வலுப்படுத்தினார்கள். இராமாயணம், மஹாபாரதத்தோடு இணைத்து விளக்கங்கள் கூறினார்கள்.  ஆழ்வார்களில் நம்மாழ்வார் தத்துவஞானி என்றேன். எனவே அவரின் திருவாய்மொழி விளக்கத்தைப் பெறுவதில் முதலிடம் பெற்று புகழடைந்தது.  வைணவ ஆசாரியர்கள் கொடுத்தவை ”படிகள்” எனவழைக்கப்பட்டன. மேற்சொன்ன வைணவ சம்பிரதாயம், படிகளையே ஏற்றது.  ஆனால் அப்படிகள்  மிகவும் கடினமான மணிப்பிரவாளத்தில் எழுதப்பட்டன.  மேலும் தனியன்கள் எனவழைக்கப்படும் பாடல்களையும் இப்புலவர்களின் பாடல்களோடு இணைத்தார்கள் வைணவ ஆசிரியர்கள் தாமே எழுதி..  தனியன் என்பது சிறப்புப்பாயிரம்.  இது வடமொழியிலும் தமிழிலும் யாக்கப்பட்டு இணைக்கப்பட்டது. திருவாய்மொழிக்கும், பெரிய திருமொழிக்கும் கண்ணிநுண் சிறுத்தாம்புக்கும் இருமொழிகளிலும் தனியன்கள் சேர்க்கப்பட்டன.  உய்யக்கொண்டார் திருப்பாவைக்கும், திருக்குருகை காலப்பன் பேயாழ்வார் திருவந்தாதிக்கும், மணக்கால் நம்பி பெருமாள் திருமொழிக்கும்  எழுதினார்கள். இராமானுஜர் வந்த காலத்தில் முழுத்தொகுப்புக்கும் தனியன்கள் எழுதப்பட்டு முடிந்தது.  இராமானுஜருக்குப் பின், 14ம் நூற்றாண்டில் ஒரு வைணவ ஆசிரியர் குருபரம்பரா பிரபாவம் என்ற நூலில் இப்பன்னிரு புலவர்களையும் தெய்வநிலைக்கேத்தினார். பெண்பால் புலவரை திருமாலின் துணவி (பூதேவி) அவதாரமாக்கினர்; ஆண்பால் புலவர்களையும் திருமாலின் திருமேனி, மற்றும் திருமால் ஆயுதங்கள், போன்றவைகளிலிருந்து அவதரித்தோர் என்றாக்கினார். இப்புலவர்கள் வாழ்க்கை வரலாறு இவ்வாறாக 500 ஆண்டுகளுக்குப் பின் எழுதப்படுகிறது  இது வைணவ சம்பிராதயத்தின் அடிக்கல்லாகி திகழ்கிறது.  ஆக, சம்பிரதாயத்தை இராமானுஜர் மட்டுமன்று; பிறரும் வலுப்படுத்தினார்கள்

பாடல்களுக்கு தெயவ நிலை உயர்வு கொடுக்கப்பட்டதால், மெல்ல மெல்ல பன்னிரு தமிழ்ப்புலவர்களும் பெருவாரியான கூட்டத்தினரிடமிருந்து விலக்கப்பட்டு, சிறுவாரியான வைணவக்கூட்டத்தில் சென்றடைந்தார்கள். தமிழரின் பொதுச்சொத்தான இப்பன்னிரு புலவர்களும் ஒரு சிறிய கூட்டத்தின் தனிச்சொத்தாக்கப் பட்டதை.  தவறென்று சொல்லவில்லை; விளைவு  ஒருவருக்கு இலாபம்; இன்னொருவருக்கு நட்டம் என்பதுதான் காட்டப்படுகிறது. உண்மையென்னவென்றால், தனியன்களுக்கு மட்டுமே இவ்வைணவர்கள் சொந்தக்காரர்கள். ஆழ்வார் பாடல்கள் யாராருக்குச் சொந்தம்? அதாவது, இப்பாடலகளை மற்றவர் வாசிக்கலாம். ஆனால் அவை பெரும்பக்தியோடே வாசிக்கப்பட வேண்டும்; போற்றப்படவேண்டும். இதை எப்படி எல்லாத்தமிழரும் செய்ய முடியும்?  அவை தமிழ் இலக்கியத்தின் சிறப்பான பாடல்கள் என்றுதானே வாசிக்க முடியும்?  மேலும் அப்பாடல்களில் சொல்லப்பட்டிருப்பது எவையெவை?  என்பதை அவரவர் விருப்பத்திற்கேற்ப சொல்லிவிட முடியாது.  அப்படியே சொன்னாலும், அது வைணவருக்கு அதிர்ச்சியைத்தரக்கூடாது.   இப்பாடல்கள் நமக்கு என்ன சொல்கின்றன? அவைகளின் இறைச்சிகள் யாவை? என்பனவெல்லாம் வைணவர்கள் விருப்பப்படிதான் இருக்க வேண்டும். எட்டுகோடி தமிழ்மக்களுக்கா? இவர்களுக்கு மட்டும்தானா? என்பதுதான் சங்கடமான கேள்வி.  தன் தாய்மொழியில் யாக்கப்பட்ட பாடல்களை ஒரு தமிழர் வாசிதது அவர் விருப்பப்படி புரிய அவருக்கு சுதந்திரம் இல்லை. வைணவர்கள் சொல்வதைத்தான் அவர் ஏற்க வேண்டும்.  இஃது எழுதாக் கட்டளை.  ‘’நாங்கள் எழுதிவைத்தவையே இப்புலவர்களின் பாடல்களுக்கு பொழிப்புரை, பதவுரை, விளக்கவுரை எல்லாமே…சிறிது விலகினாலோ எம்மனங்கள் புண்படும்!’’

ஆழ்வார்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் சேரா; அவை எம்மதத்துப் பாடல்கள் மட்டுமே என்று அறுதியிட்டுச் சொல்லி உரிமம் வாங்கிக்கொண்டால் எவரும் தலையிடமுடியாது.  அப்படியெல்லாம் நடக்கவில்லை.

நல்லவேளை, கம்பரின் காலம் இராமானுஜருக்குப் பின்.  எனவே அது வைணவ சம்பிரதாயத்தில் சேர்க்கப்படவில்லை.  கம்பராமாயாணம் ஒரு வைணவநூல்.  கம்பர் ஒரு பழுத்த வைணவர்.  திருவரங்கத்தில் அல்லவா இந்நூல் அரங்கேறியது!  எனினும் இது வைணவ சம்பிராதாயத்தில் சேர்க்கப்படவில்லை.  அதாவது கட்டாயம் ஆராதனையில் ஓதப்படவேண்டிய அவசியமில்லை. கம்பராமாயாணத்தை கம்பர் முழுமை செய்தாரா? இராமனை பிராமணனாக்கினாரா? என்றெல்லாம் கம்ப்ராமாயணத்தைப் பற்றி, பின்னர் கம்பரின் வாழ்க்கை பற்றியும் – கம்பரை ஏன் நாட்டைவிட்டு துரத்தினான் சோழன்? ஒட்டக்க்கூத்தருக்கும் இவருக்கும் என்ன பிரச்சினை? கம்பரின் மகன் சோழ இளவரசியை கவரப்பார்த்தானா? இல்லை, அம்பிகாபதி என்ற பாத்திரமே புனைவா? என பலபல எல்லா வகை கேள்விகளையும் விமர்சகர்களும் பொதுமக்களும் வைக்கலாம்.  இந்துக்கள், குறிப்பாக வைணவர்கள் ஒன்றும் சொல்வதில்லை.  எனவேதான் ஒரு முசுலீம் அறிஞர் (மறைந்த நீதிபதி மு மு இசுமாயில்) கம்பராயாணத்தை ஆராய்ந்து ஒரு நெடுந்தொடரை வாராவாரம் ஆனந்த விகடனின் எழுத முடிந்தது.   ”கம்பனின் மறுபக்கம்” என்ற விமர்சனத்தை புலவர் ஆ.பழநியால் வைக்க முடிகிறது.@

திருக்குறளை எடுத்தோமானால், அங்கும் இந்நிலை உருவாக வாய்ப்புள்ளது  திருக்குறள் ஒரு சனாதன மத நூலே என அடித்துச் சொல்லும் ஆங்கில நூலொன்றை@@ இம்மாதம் ஐந்தாம் தேதி மயிலாப்பூரில் வெளியிட்டார் காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் (இளையவர்)  ஆசிரியர் தொல்லியல் அறிஞர் நாக சாமி. திருக்குறளுக்கு நிறைய அறிஞர்கள் உரை எழுதியிருக்கிறார்கள். இன்னும் எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள் அவரவருக்குப் பிடித்த வண்ணம்.  பரிமேலழகர் வைணவ மதத்தின் வடிவமாகவே திருக்குறளுக்கு உரையெழுத அதை மறுத்துப்பலரும் எழதியிருக்கிறார்கள்.  வள்ளுவரின் வாழ்க்கையும் ஆராயப்படுகிறது.  அவரென்ன சாதி? (மயிலாப்பூரில் பிறந்த தலித்தே; அவ்வையாரின் அண்ணன் – இது மறைமலை அவர்கள் கட்டுரையிலிருந்து) வாசுகி என்ற பெண் உண்மையிலே வாழ்ந்தாரா? வாசுகி-வள்ளுவர் தம்பதியை வைத்து உலாவும் கதைகள் உண்மையா? என்றெல்லாம் கேட்கப்படுகிறது!  ஆனால், திருக்குறள், நாகசாமி சொல்வது போல கங்கைச்சமவெளியில் எழுதப்பட்ட இந்து தர்ம சாஸ்திரங்களின் மறுவடிவமே என்பதை இந்துக்கள் நம்பிவிட்டால், ஆழ்வார் பாடல்களுக்கு நேர்ந்த இறுதிநிலையே இதற்கும்: திருக்குறள் தமிழருக்கு பொதுமறை நீதிநூலாகாது.  இந்துக்களைத் தவிர மற்றவர் படிக்கக்கூடாதென்ற சங்கடமான காலம் வரும்.  நல்ல வேளை: இன்னும் வரவில்லை.

கம்பரைத் தமிழ் இலக்கியம் தக்கவைத்துக் கொண்டது.  திருக்குறள் இன்றும் பொதுமறையாகவே நிற்கிறது.  ஆனால், மேற்சொன்ன பன்னிரு புலவர்களின் பாடல்கள் எல்லா தமிழருக்குமில்லை.

 

@   ”கம்பரின் மறுபக்கம்”  by புலவர் ஆ.பழனி (2016)  published by New Century Book House (P) Ltd. Rs.140/-  (It’s available in the ongoing Book Fair Chennai)

@@ ‘’Thirukkural – An Abridgement of Sastras’’ by Dr R Nagaswamy (Dec 2017) Giri Trading Agency (P) Ltd. Mumbai (248 pages) Rs.150. (This publisher has a stall in the ongoing Book Fair Chennai)

 

Series Navigationநெய்தற் பத்துகேள்வி – பதில்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *