தற்கால மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு

author
16
0 minutes, 35 seconds Read
This entry is part 12 of 18 in the series 23 ஏப்ரல் 2017

ஆதிவாசி

“தமிழ்நாட்டுக்கு உள்ளேதான் வேலை தேட வேண்டிய நிலை இப்போது இருக்கிறது. மற்ற மாநிலங்களில் பெரும்பாலும் ஹிந்தி பேசுகிறார்கள். எனவே,  ஹிந்தி கற்றுக்கொள்வதன் மூலமாக தமிழர்களுக்கு மற்ற மாநிலங்களில் வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. எனவே, ஹிந்தியைக் கட்டாயமாகக் கற்றுங்கொள்ளுங்கள், என் தமிழர்களே.”

 

இதைச் சொன்னவர் யார் ?

 

“ஆங்கிலம் போலவே, ஹிந்தியும் அம்மொழி  பேசாதவர்களுக்கு ஒரு அயல் மொழிதான். இந்தியாவின் அதிகாரபூர்வ மொழியாக ஹிந்தியை அறிவிக்கும் அரசியலமைப்பின்  பகுதி XVIIஐ அப்படியே நெம்பியெடுத்து அரேபியக் கடலில் தூக்கிப் போடுங்கள்.”

 

இதைச் சொன்னவர் யார் ?

 

இரண்டையும் சொன்னவர் ஒருவரே. :)

 

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் !

 

1938ல் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் ஹிந்தி படிப்பதைக் கட்டாயமாக்கிய அதே இராஜாஜிதான், ஹிந்திக்கு எதிராக “இந்தியா முழுவதுமான” ஒரு போராட்டத்தைத் திருச்சிராப்பள்ளியில் 1965ல் ஆரம்பித்தார்.

 

இந்த எதிர்முனை மாற்றத்துக்கு என்ன காரணம் ?

 

தேவை இல்லாதபோது எதையும் மக்கள் பயன்படுத்த மாட்டார்கள். மக்கள் பயன்படுத்தாத எதுவும் அழிந்து போகும்.  மூளைக்கும் சரி. மொழிக்கும் சரி – இந்தப் பொதுவிதி பொருந்தும்.

 

மனிதரின் அடிப்படைத் தேவை பொருளாதாரமே. பொருளாதாரம் தரும் மொழிகள் உயிருடன் இருக்கும். மற்றவை மெல்ல கெடும்.

 

1938ல் தமிழர்கள் மற்ற மாநிலங்களுக்குச் சென்று பொருளாதாரத்தில் வெற்றிக் கொடி நாட்ட ஹிந்தியை ஆதரித்தார் இராஜாஜி.

 

இது தமிழ்நாட்டுக்கு உள்ளே அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தமிழைப் பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்காது.

 

தமிழ்நாட்டுக்கு வெளியே ஹிந்தியை வைத்து வேலை வாய்ப்பு; தமிழ்நாட்டுக்கு உள்ளே தமிழை வைத்து வாழ்க்கை என்று இருந்திருக்கும்.

 

ஆனால், 1956ல் ஹிந்தியை அரசு மொழியாக ஆக்கும் முயற்சி வெற்றி பெற்று இருந்தால் மாநில மொழியைப் பயன்படுத்தும் அவசியம் இல்லாது போகும் சூழல் உண்டாகி  இருக்கும்.

 

ஏனெனில், இந்தியாவானது ஒரு ஸோஷியலிஸ டெமாக்ரஸியாக நேருவினால் ஆக்கப்பட்ட காலம் 1956 – 1965கள். அந்த இந்தியாவில், அரசு நிறுவனங்கள் தவிர வேறு பெரிய நிறுவனங்கள் இல்லை. பொருளாதார வளர்ச்சி அரசு நிறுவனங்களை அண்டியே இருந்தது.

 

கொட்டாம்பட்டியில் இருக்கும் குமார், அதே ஊரில் இருக்கும் தனது நிலத்தைப் பதிவு செய்ய, சேலத்தில் இருக்கும் பஞ்சாயத்து போர்டுக்குச் சென்று ஹிந்தியில் மனு எழுதி, ஹிந்தியில் பட்டாக்கள் எழுத வேண்டிய நிலைக்கு இந்த நேருவியச் சட்டம் கொண்டு போயிருக்கும்.

 

இந்த நிலையை நீங்கள் கற்பனை செய்து பார்க்க வேண்டியதில்லை. உங்கள் கண் முன்னாலேயே இதற்கான ஒரு மிகப் பொருத்தமான உதாரணம் நடைமுறையில் இக்காலத்திலும் உள்ளது.

 

நம் தமிழ் டிவி சேனல்களில் அதிகாலையிலும் நள்ளிரவிலும் நடக்கும் கிறுத்துவ எழுப்புதல் நிகழ்ச்சிகளைப் பார்த்து வருகிறீர்கள். தமிழர்கள் இரண்டு பேர் டிவியில் கத்துவார்கள். அதைத் தமிழ்ச் சேனல்கள் ஒளிபரப்பும். ஒளிபரப்புவதைப் பார்ப்பதும் தமிழர்கள்தான். ஆனால், ….

 

கத்துகிறவர்களில் ஒருவர் ஆங்கிலத்தில் கத்துவார். அவரும் தமிழர். அவருடன் இருக்கும் இன்னொரு தமிழர், ஆங்கிலத்தில் இருக்கும் கத்தலைத் தமிழில் மொழிபெயர்த்துக் கத்துவார். இந்த ஆங்கில-தமிழ்க் கத்தல்களைக் கேட்பவரும் தமிழரே. இவர்கள் அனைவருமே தமிழ் எழுதப் படிக்கப் பேசத் தெரிந்த தமிழர்தாம். இடையில் சம்பந்தம் இல்லாத ஆங்கிலம் ஏன் ?

 

இதைப் போன்றதொரு ஆங்கிலத் திணிப்பு, தமிழ் இழிவு வேறு ஏதும் உண்டா ?

 

ஆனால், தமிழகத்தில் ஒருவர்கூட இந்த ஆங்கிலத் திணிப்பை, தமிழ் அழிப்பை எதிர்த்ததில்லை. காலனியப் பிரச்சாரத்தின் வலு அத்தகையது.

 

இராஜாஜி 1956ல் ஹிந்தித் திணிப்பை எதிர்த்து இருக்காவிட்டால் ஹிந்தியும் இப்படித்தான் ஆகி இருக்கும். தமிழன் குமாருக்கு, அவனுடைய கொட்டாம்பட்டி பற்றி ஹிந்தியில் ஒரு அரசு ஊழியர் சொல்ல வேண்டிய நிலை உருவாகி இருக்கலாம்.

 

இரண்டு தமிழ் தெரிந்த தமிழர்கள், தமிழைப் பயன்படுத்தாமல் ஹிந்தியில் அவர்கள் வீட்டுப் பிரச்சினையைப் பேசிக் கொண்டு இருப்பார்கள். ஜெபக் கூட்டத்து ஆங்கிலம் போல.

 

பொருளாதாரத்துக்குப் பயன்படாத தமிழ் அழிந்திருக்கும்.

 

இதையே, இராஜகோபாலாச்சாரியார் மிகக் கடுமையாக எதிர்த்தார்.

 

காலனியத்தை ஆதரித்தவர்களான ஜஸ்டிஸ் பார்ட்டியினர், இனவாதி ஈவெரா, அலங்காரப் பேச்சு அண்ணா போன்றோரின் ஹிந்தி எதிர்ப்பில் இருந்து காலனியத்தை எதிர்த்த இராஜாஜியின் ஹிந்தி எதிர்ப்பு முற்றிலும் வேறுபட்டது.

 

இந்தத் தீராவிட இயக்கத்தார் 1938லும் ஹிந்தியை எதிர்த்தார்கள் – மற்ற இந்தியரோடு தமிழன் இணைந்து விடக்கூடாது என்பதற்காக.

 

1965லும் ஹிந்தியை எதிர்த்தார்கள் – மற்ற இந்தியர்கள் தமிழனோடு இணைந்து விடக் கூடாது என்பதற்காக.

 

அதாவது, தமிழரை மற்ற இந்தியரிடம் இருந்து பிரிக்கவே தீராவிடத்தார் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து போராடி வருகிறார்கள்.

 

தமிழரை, அவர்களுடைய தாய்மொழியை வளர்க்கும் பாதுகாக்கும் உத்தரவாதத்துடன், மற்ற இந்தியரோடு ஹிந்தியில் இணைவதற்காக இராஜகோபாலாச்சாரியார் போராடினார். தமிழர் மட்டுமல்லாது, பிற மாநிலத்தவரின் மொழி பாதுகாப்புக்காகவும் அவர் போராடினார்.

 

தீராவிடத்தாரோ தமிழரைத் தனிமைப்படுத்தி, ஆழாக்குக்குள் வடக்கு தெற்கு அரசியல் நடத்துகிறார்.

 

(தெளிவுபடுத்தி விடுகிறேன். தீராவிடம் =  திராவிட இயக்கங்கள் + தமிழ்த் தேசிய இயக்கங்கள்)

 

தீராவிடத்தார் மட்டும் ஏன் தமிழரைத் தனிமைப்படுத்த முயல்கிறார்கள் ?

 

1938ல் இராஜாஜி கொண்டு வந்த ஹிந்தி கற்கும் வாய்ப்பை எதிர்த்து முதன் முதலில் உண்ணாவிரதம் (?) இருந்தார் ஒருவர்.

 

அவருடைய பெயர்: ஸ்டாலின் ஜெகதீசன்[1]

 

1956ல் இராஜாஜி நடத்திய “அகில இந்திய” ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில் ஒருவர் இவ்வாறு பேசினார்: “இன்றைய இந்தப் புதிய ஹிந்தியானது மதவெறியின் அடையாளம்; இது மதத்தின் அடையாளம்”.

 

அவருடைய பெயர்: ஃப்ராங்க் அந்தோணி[2]

 

 

ஃப்ராங்க் அந்தோணி எனும் ஆங்க்லோ இந்தியர் எதிர்க்கும் மத அடையாளம் என்ன என்பதை புத்திக்கூர்மையுள்ள உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. ஒரு மதத்தின் அடையாளம், மதவெறியின் அடையாளமாகத் தமிழ்நாட்டில் இந்த மொழி விஷயத்தில் இதுவரை ஆகவில்லை. ஆனால், இனவாத ஈவெரா வழி வந்த தீராவிடர்கள் சொல்லி வருகின்றனர் – “ஹிந்தியைத் திணிப்பதன் மூலம் இந்து மதத்தைத் திணிக்கிறார்கள்”.

 

உண்மையில் ஹிந்தியை தமிழ்நாட்டில் எதிர்த்ததில் சைவ சமய ஆதீனங்களின் பங்கு அதிகம். உண்மை அங்கனம் இருக்க, ஹிந்தியை திணிப்பது இந்து மதத்தைத் திணிப்பது என்று பேசுவது, இந்து மதத்தில் இருந்து தமிழர்களின் இலக்கியத்தையும் வரலாற்றையும் பிரித்து அழிக்கும் ஒரு கிறுத்துவ முயற்சியே.

 

நிச்சயமாக ஹிந்தியானது ஒரு மத அடையாளமாக இருந்ததில்லை தமிழகத்தில்.

 

பஞ்சாபில் இருந்தது.

 

அங்கிருந்த சீக்கியர்கள் பஞ்சாபிய மொழி அடிப்படையில் தனி மாநிலம் கேட்டனர். அப்படிச் செய்தால் ஹரியானாவிடம் இருந்து பிரிந்து சீக்கிய மதத்தினர் அதிகமாக இருக்கும் மாநிலமாக பஞ்சாப் ஆகிவிடும்.

 

மத அடிப்படையில் பாரதத்தின் பெரும்பகுதிகளை பாகிஸ்தானாகவும், (தற்போதைய) பங்களாதேசமாகவும் முகமதியருக்கு வெட்டுக் கொடுத்து இரத்தம் உறையாத காலத்தில், இக்கோரிக்கை நேருவுக்கு அச்சத்தை உண்டாக்கியது. பஞ்சாப் மத அடிப்படையில் தனி நாடாகிவிடும் என்று அவர் அஞ்சினார்.

 

பஞ்சாபிய மொழி அதிகம் பேசும் இடங்களில் இருக்கும் ஹிந்தி பேசுவோர்களிடம், இந்த நேருவிய அச்சத்தை, நேருவின் காங்கிரஸ் கட்சி பரப்பியது. அச்சத்தின் காரணமாக, மொழி அடிப்படையில் மாநிலம் பிரிவதை அங்கு ஹிந்தி பேசியவர் எதிர்த்தனர்.  நேருவிய காங்கிரஸ் இந்த எதிர்ப்புக்கு அமைப்புபூர்வ ஆதரவுகளைத் தந்தனர்.

 

அந்த பஞ்சாபிய பிரதேசங்களில் ஹிந்தி பேசுபவர்களாக இருந்தவர்கள் இந்துக்களே. இதன் காரணமாக, ஹிந்தி கற்கும் வாய்ப்புக்கு ஒரு மத அடையாளமும் ஏற்பட்டது.

 

இதனை சீக்கியர்களுக்கும், இந்துக்களுக்குமான பிரச்சினையாக கருத்துப் பரப்பல்கள் செய்தனர் இந்திய விரோதிகள். இங்கனம் மொழியோடு மதத்தை இணைக்கும் வெறுப்புப் பிரச்சாரம் காலிஸ்தான் இயக்கத்தில் முடிந்தது.

 

தமிழகத்திலோ ஹிந்தித் திணிப்பை (ஹிந்தியை அல்ல, திணிப்பை) எதிர்த்து நிற்பது இந்து மதமே. ஆனால், இதனை மறைத்து, மொழிப் பிரச்சினையை மதப் பிரச்சினையாகத் திரித்துத் திணிக்கின்றனர் தீராவிடர்கள்.

 

காலிஸ்தான் போன்ற ஒரு பிரித்தாளும் பயங்கரவாத இயக்கத்தை, தமிழகத்தில் உருவாக்கவே இன்றும் ஹிந்தி எதிர்ப்பு ஒரு கருவியாகப் பயன்பட்டு வருகிறது.

 

ஒன்று தெளிவு.

 

தமிழ்நாட்டில் தமிழர்கள் முன்னேறவேண்டும், மற்ற இந்தியர்களுக்குத் தமிழர்கள் தலைவர்களாகி, மற்ற இந்தியரையும் முன்னேற்ற வேண்டும் என நினைக்கின்றனர் தேசிய வாதத் தமிழர்கள்.

இவர்களை எதிர்ப்பவரோ, தமிழர்கள் தமிழ்நாட்டைத் தாண்டிவிடாமல், ஆங்கிலேய அடிமைகளாக, இந்தியாவில் இருந்து பிரிந்து தனிநாடாக இருக்க வேண்டும் என நினைக்கும் தீராவிடவாத டமிளர்கள்.

 

ஒருவர் எதிர்க்கும் ஹிந்தித் திணிப்பு மற்றவரிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டது; மட்டுமல்ல, முற்றிலும் எதிரானதும்கூட.

 

இக்காலத்துக்கான தீர்வு

 

நேருவிய ஸோஷியலிஸத்தில் இருந்து உலகமய பொருளாதாரக் காலத்துக்கு வந்துவிட்டதால், நாம் நேருவிய ஸோஷியலிஸ காலத் தீர்வுகளை முன்னிறுத்துவது இந்த 21ம் நூற்றாண்டிலும், விரைந்து வரப்போகும் 22ம் நூற்றாண்டிலும் உதவாது.

 

ஹிந்தியையும், தமிழையும் எங்கே பயன்படுத்துவது என்பது குறித்து, இதில் ஒரு தேசியவாதத் தமிழனாக, தீர்வுகளை முன் வைக்கிறேன்:

 

  1. தமிழ்நாட்டில் தமிழர்கள் மத்திய, மாநில அரசு அமைப்புகளோடு தொடர்புகொள்ள, அவரவர் வாழ்க்கையை நடத்தத் தமிழையே பயன்படுத்த வேண்டும்.

 

உதாரணமாக, தமிழக நீதிமன்றங்களில் தமிழே பயன்படுத்தப்பட வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தேவைகளுக்காக, எல்லா வழக்குகளும், எல்லா தொடர்புகளும் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். உச்ச நீதி மன்ற வழக்கு விவரங்கள், தமிழ் உட்பட, அனைத்து மாநில மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட வேண்டும். உடனுக்குடன்.

 

  1. மாநில அரசு அமைப்புகள் மற்ற மாநில, மத்திய அரசமைப்புகளோடு தொடர்புகொள்ள, அவரவர் பணிகளை நடத்திக் கொள்ள ஹிந்தியையே பயன்படுத்த வேண்டும்.

 

  1. மத்திய அரசு செய்ய வேண்டியவை:

 

3.A. உலகச் சந்தையில் அதிகம் புழங்கும் மொழிகளில் இந்தியர் தொழில் நுணுக்கங்கள் (technology) கற்க, தொழில்கள் (business) கற்க வழி செய்ய வேண்டும். ஆரம்பநிலை பள்ளிகளில் இருந்தே.

 

3.B. சந்தைப் பொருளாதாரத்தில் ஆங்கிலம் மட்டுமல்லாது, மற்ற மொழிகளிலும் இந்தியரின் தொழில்கள் நடக்கச் சந்தைகளை உருவாக்க உதவிகள் தரவேண்டும்.

3.C. உலகமயமாகும் சூழலில், உலகமயப் பொருளாதாரம் கொண்ட  ஐரோப்பிய, முகமதிய, அமெரிக்க, ஆசிய நாடுகளோடு உறவுகொள்ள வேண்டி உள்ளது. இந்த நாடுகளின் மொழிகளில் டெக்னாலஜிகள் மற்றும் தொழில்கள் இந்தியா முழுவதும் கற்பிக்கப்பட வேண்டும். அதாவது ஆங்கிலம் மட்டுமல்லாது ஃப்ரெஞ்ச், அரபி, ஜப்பான், கொரிய, சிங்கள, நேபாள், ஸ்பானிஷ் போன்ற மொழிகளில்.

 

சந்தையில் தொழில் வாய்ப்பு அடிப்படையில், இந்த மொழிகளை மத்திய அரசானது தேர்ந்தெடுத்துக் கல்வி தர வேண்டும். ஆரம்பநிலை பள்ளிகளில் இருந்தே.

 

3.D. மக்கள் அவரவருக்குத் தேவையான உலக மொழியில் தொழில்களும், தொழில்நுணுக்கங்களும் கற்றுக் கொள்ளலாம்.

 

பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில் ஃப்ரெஞ்ச் பாடமொழியாக இருப்பதையும், அது ஃப்ரான்ஸுடன் தொழில் தொடர்புகளைக் கொள்ள உதவுவதையும் கவனியுங்கள்.

 

  1. மாநில அரசுகள் செய்ய வேண்டியவை:

 

4.A. மற்ற மாநிலங்களோடு தொழில்கள் நடத்தத் தாராளவாத சுதேசிச் சந்தைகளை உருவாக்க வேண்டும்.

 

உதாரணமாக, தமிழ் மட்டுமல்லாது மற்ற மாநில மொழிகளிலும் தொழில்கள் நடக்கத் தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும்.

 

4.B. இந்த சுதேசிச் சந்தையில் அதிகம் புழங்கும் மொழிகளில் தமிழர் கல்விகற்க வழி செய்ய வேண்டும். ஆரம்பநிலை பள்ளிகளில் இருந்தே.

 

4.C. தமிழர் தமிழரோடு செய்யும் தொழில்களை ஊக்குவிக்க வேண்டும். இந்த உள்ளூர் தொழில்களுக்குத் தாராளவாதப் பொருளாதார முறையை கொணர வேண்டும்.

 

4.D. உலகில் எங்கெல்லாம் மிகச் சிறந்த அறிவு மூலங்கள் இருக்கின்றனவோ, அவற்றை அவரவர் மாநில மொழிக்கு உடனுக்குடன் கொண்டு வரவேண்டும். தமிழக அரசு தமிழுக்குக் கொண்டு வரவேண்டும். அப்படியே ஒவ்வொரு மாநிலங்களும்.

 

4.E. மாநிலங்களின் சுதேசியப் பொருளாதாரத்தை லாபகரமானதாக ஆக்க வேண்டும். உதாரணமாக, தமிழகத்தில், தமிழர்கள் தமிழர்களுடன் செய்யும் தொழில்களை ஊக்குவித்து, மொழிபெயர்த்த அறிவுச் செல்வங்கள் மூலம் மேம்படுத்தி, சுதேசியப் பொருளாதாரத்தையும் வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்க வேண்டும்.

 

4.F. ஒவ்வொரு மாநில அரசும் பிராந்திய மொழியில் டெக்னாலஜியையும் தொழில்களையும் கற்பிக்க வேண்டும். ஆரம்பநிலை பள்ளிகளில் இருந்தே.

 

4.G. ஒவ்வொரு மாநில அரசும் மற்ற மாநிலத்து மொழிகளிலும் டெக்னாலஜியையும் தொழில்களையும் கற்பிக்க வேண்டும். ஆரம்பநிலை பள்ளிகளில் இருந்தே.

 

  1. இந்தக் கல்வி வாய்ப்புகளில், மாணவரும் பெற்றோரும் அவரவருடைய தேர்வை அவர்களே தேர்வு செய்துகொள்ளட்டும்.

 

இம்முறையினால் ஒரு மொழியில் தொழில்நுணுக்கமும், தொழிலும் கற்றவருக்குப் பிறமொழி கற்க வேண்டிய கட்டாயம் இல்லை.

 

பிறமொழியினருடன் தொழில் செய்ய விரும்புபவருக்கு அவசியமற்ற மொழி கற்க வேண்டிய கட்டாயமும் இல்லை. உதாரணமாக, ஸ்பெயின் நாட்டோடு தொழில் செய்யும் தமிழருக்கு ஆங்கிலம் கற்க வேண்டிய அவசியம் இல்லை. ஸ்பானீஷ் மொழி கற்பதே போதுமானது.

 

இத்தீர்வால், உலகமெங்கும் தமிழருக்கு (இந்தியருக்கும்) வாய்ப்புகள் திறக்கும்.

 

மொழிபெயர்த்தல் துறையில் வேலை வாய்ப்புகள் பலமடங்கு அதிகரிக்கும்.

 

மொழிபெயர்ப்பாளர்கள் அதிகமாக அதிகமாக மொழிப் பிரச்சினைகளும் இந்தியாவில் அழிந்து அழிந்து போகும்.
அவ்வகையில் தமிழர்கள் மட்டுமல்லாது இந்தியர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது மூன்று மொழி அறிந்தவர்களாக இருப்பர்.

 

பக்தி இலக்கியம் படைத்த தமிழர்கள் தமிழையும் வளர்ப்பர். திரைகடலோடிய தமிழர் தமிழரையும் வளர்ப்பர்.

 

சுருக்கமாகச் சொல்கிறேன்: பலமொழிக் கல்விமுறை வேண்டும்.[3]

[1] தாளமுத்து, நடராசன் போன்ற ஹிந்துக்கள், இனவாதி ஈவெரா மற்றும் அலங்காரப் பேச்சு அண்ணாவின் கருத்துப்பரப்பல்களால் கவரப்பட்டு, தங்களுடைய நலிவு உற்ற உடல்நிலையையும் பொருட்படுத்தாமல், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்துகொண்டார்கள். உடல் நலிவு காரணமாக சிறையில் இறந்தார்கள். ஆனால், இரவில் நிறைய சாப்பிட்டுவிட்டு பகலில் உண்ணாவிரதம் இருப்பதாகச் சொல்லிக் கொண்ட ஸ்டாலின் ஜெகதீசனுக்கே அதிகக் குரல் கொடுத்தார் அண்ணா. 10 வாரங்கள் உண்ணாவிரதம் (?) இருந்த ஸ்டாலின் ஜெகதீசனுக்கே அதிக முக்கியத்துவம் தந்தார். “இன்று ஜகதீசன் இறந்தால் அவரிடத்தை நிரப்ப நான் பத்து பேருடன் அமருவேன். அவர் இறந்தால் நீங்களும் இறக்கத் தயாராகுங்கள்” என முழக்கமிட்டார். இந்தி எதிர்ப்பு நிகழ்ச்சிகளில் ஸ்டாலின் ஜெகதீசனுடைய் படமே பிரதானமாக முன்னிறுத்தப்பட்டது. அவரை தியாகியாக்கி, ஹிந்தி எதிர்ப்புக்கு ஆதரவான படைப்புகள், அவரது படத்துடன் ஹிந்தி எதிர்ப்புக்கு ஆதரவான செய்தித் தாள்களிலும், இதழ்களிலும் வெளியாகின. (படிக்க: விடுதலை, 31 மே 1938, தலையங்கம்.) இராப்பட்சணம் செய்த ஸ்டாலின் ஜெகதீசன், உடலை விட்ட தாளமுத்து மற்றும் நடராசனுக்கு இணையான தியாகியாக ஆக்கப்பட்டார்.

 

[2] படிக்க: Language Conflict and National Development: Group Politics and National Language Policy in India, by Jyotirindra Das Gupta

[3] பன்மையே இந்துத்துவம்.  இந்துத்துவமே இந்தியத்துவம்.

Series Navigationநாசா விண்வெளி ஆய்வகம் அண்டக்கோள்கள் ஆராய 10 சதுர விண்சிமிழ்களை ஏவத் திட்டமிட்டுள்ளது2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு
author

Similar Posts

16 Comments

  1. Avatar
    O. நடராசன் says:

    இந்துத்துவ, பார்ப்பனீய சிந்தனையின் வெளிப்பாடே இந்தக் கட்டுரை. எப்படியாவது ஆரியர்களின் இந்தியைத் தமிழர்கள் மேல் திணித்து, தமிழை அழிக்க கொக்கின் தலையில் வெண்ணை வைக்கிறார் இந்தக் கட்டுரையாளர். ஆதிவாசி எனும் பெயர் வைத்திருப்பவர் பார்ப்பனீயத் தலைவரான இராசாசியைப் பாராட்டலாமா? இராசாசி இந்தியை எதிர்த்தார் என்று சொல்லி இருப்பது கண்டிக்கத் தக்கது. பாஜக புழக்கடை வழியாக இந்தியை நுழைத்து கால் பதிக்க முயலுகிறது.

  2. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    தமிழ்நாட்டின் தற்கால மொழிப் பிரச்சனைக்கு ஓர் ஆலோசனை

    தமிழ்நாடு இந்தியக் குடியரசில் உள்ளது. ஆங்கிலம் துணை மொழியாக இருப்பினும், இந்திய அரசாங்க ஆட்சிமொழியாக இந்தி நீடித்திருக்கத் தேர்வு செய்யப்பட்டது. இப்போது இந்தியாவில் இந்தி மொழி பேசுவோர், அறிந்தோர், தெரிந்தோர், புரிவோர், ஆதரவு அளிப்போர், இருக்கட்டும் அது என்போர் 55% – 60% இருக்கலாம் என்பது என் யூகிப்பு.

    கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டுவரும் திராவிடக் கட்சிகள் இந்தி வெறுப்பைத் தூண்டி, தூண்டித் தமிழர் இந்தி படிப்பைத் தடுத்து, ஆங்கிலத்திலே நீடிக்கலாம் என்று மனப்பால் குடித்து தமிழரைத் தனிமைப் படுத்தி விட்டன ! தமிழ்நாட்டைத் தனித்தீவாய் ஒதுக்கிவிட்டன ! தமிழரில் சிலர் “நாங்கள் இந்தியரில்லை. இந்தி மொழி எமக்கு அன்னிய மொழி” என்று தாமாகத் தம்மைப் பிரித்துக் கொள்வது, மொழியைப் புறக்கணிப்பது மிகவும் விந்தையாக உள்ளது !!!

    ஆங்கிலத்தின் அரை ஆயுள் [Half Life] 50 ஆண்டுகள். ஒவ்வோர் 50 ஆண்டுகட்குப் பிறகு ஆங்கிலப் பயன்பாடு இந்தியச் சட்டசபையில் பாதியாகும். அதாவது மத்திய அரசில் ஆங்கிலப் பயன்பாடு குறைந்து கொண்டே போகும். இந்திப் பயன்பாடு மிகுதியாகிக் கொண்டே போகும்.

    டெல்லிக்குச் செல்லும் தமிழக உறுப்பினர் ஆங்கிலத்தில் பேசினால் இனிமேல் பதில் இந்தியில் வரும். இந்தி தெரியாத தமிழ் உறுப்பினர் டெல்லி சட்டசபையில் விழித்துக் கொண்டிருப்பர் !!! தமிழில் பேசி ஆங்கிலத்திலோ, இந்தியிலோ மொழி பெயர்க்கலாம் என்பது கால விரையமாகும். பேச்சு தடைப்படும். மேலும் மொழிபெயர்ப்புகள் 70%-80% துல்லிமம்தான் செய்ய முடியும்.

    புலி வருது ! புலி வருது !! என்று அலறிய திராவிடக் கட்சிகள் இப்போது நிஜமாகப் புலி வருவதை [இந்தி திணிப்பு] எதிர்பார்க்க வில்லை. புலியை அடிக்க இப்போது [2017 ஏப்ரல்] தமிழகத்தில் நிலையான ஆளும் கட்சி கூட இல்லை !!!

    தற்போது உடனே செய்ய வேண்டியவை :

    1. தமிழர் /திராவிடர் /தமிழ்நாடு இந்தியை மத்திய அரசாங்க மொழியாய் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    2. இந்தியைத் தமிழகக் கல்விக்கூடங்களில் இலவசமாய்க் கற்றுக் கொடுக்க வேண்டும்.

    3. தமிழக முதல் அமைச்சர் மற்றும் சில அமைச்சர்கள் இந்தி மொழி பேச, எழுதத் தெரிந்தவராய் இருக்கப் பயிற்சி அவசியம்.

    4. டெல்லி சட்டசபைக்குச் செல்லும் தமிழக உறுப்பினர் கட்டாயம் இந்தி மொழி படித்திருக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    5. தமிழ் நாட்டில் விரும்புவோர் இந்தி மொழி கற்றுக் கொள்ள போதிய வசதி செய்ய வேண்டும். [மாலைக் கல்வி, விடுமுறை நாள் பயிற்சி]

    சி. ஜெயபாரதன், கனடா

  3. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    தமிழ்நாட்டின் தற்கால மொழிப் பிரச்சனைக்கு ஓர் ஆலோசனை -2

    அடுக்கு மொழி அண்ணா தொடுத்த மொழிப்போரில் முதலில் தமிழர் பலர் பலியாகி, 50 ஆண்டுகளாகத் திக்குமுக்காட வைத்து விட்டது இந்தச் சிக்கலான மொழிப்புரட்சி.

    என் வேண்டுகோள், மீண்டும் திராவிடப் புத்திசாலிகள் இந்தி மொழி எதிர்க்க ஒரு குருச்சேத்திரக் குடும்பச் சண்டையைத் துவங்கி அப்பாவித் தமிழர் பலியாகக் கூடாது என்பதுதான்.

    சிலர் பற்றிய தீயிக்கு நீரடிக்கிறர். சிலர் மண்ணெண்ணை ஊற்றுகிறார்.

    சி. ஜெயபாரதன்

  4. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    தமிழ்நாட்டின் தற்கால மொழிப் பிரச்சனைக்கு ஓர் ஆலோசனை -3

    வேற்றுமையில் ஒற்றுமை என்று பீற்றிக் கொள்ளும் இந்தியர்களால் ஏன் பல மொழிகளை ஆட்சி மொழியாக ஏற்க முடியவில்லை?​ என்று ஒரு நண்பர் என்னைக் கேட்டார்.

    அதற்கு என் பதில் இது :​

    பன்மொழிச் சட்டசபை காதிற்குத் தேனாய் இனிக்கிறது.ஆனால் டெல்லி சட்டசபை அனுதின நடப்பு மீன்சந்தை ஆகிவிடும். 18 -20 மொழிகளில் பல்வேறு உறுப்பினர் பேசும் போது, குறிப்பாக ஒருவர் தன் மொழியில் பேசும் போது 98% வேற்று மொழி பேசுவோர் அனைவரும் கொட்டாவி விட்டுத் தூங்குவார். இரண்டு மொழிக்கு [இந்தி + ஆங்கிலம்] மேல் ஆட்சி மொழிகள் இருந்தால், காலநேரம் மொழி பெயர்ப்பிலே வீணாகிக் குழப்பம் உண்டாகும். மொழிபெயர்ப்புகள் 75%-80% துல்லிமத்தில்தான் இருக்கும். மொழிக்கு மொழி கருத்துக்கள் மாறுபடும். சட்ட விதிகள் மொழிக்கு மொழி வேறுபடும். இருபது மொழிக்காரர்கள் தம்தம் மொழியில் தொடர்ந்து தர்க்கமிடும் போது பொறுமையாய் அமர்ந்து பிறர் கேட்க முடியுமா ? தலைவலியில் எழுந்து ஓடமாட்டாரா ? அல்லது காதைப் பொத்திக் கொள்ள மாட்டரா ?

    இந்திய மொழிகள் அனைத்தும் சட்டசபை ஆட்சி மொழியாவது, அரசியல் சட்ட ரீதியாக இந்த நூற்றாண்டில் நிகழாது.

    சி. ஜெயபாரதன்

    1. Avatar
      BSV says:

      இந்திய மொழிகள் அனைத்தும் சட்டசபை ஆட்சி மொழியாவது, அரசியல் சட்ட ரீதியாக இந்த நூற்றாண்டில் நிகழாது.

      How do you say that? We can change the law because no law is immutable.

  5. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    தமிழ்நாட்டின் தற்கால மொழிப் பிரச்சனைக்கு ஓர் ஆலோசனை -4

    தற்போதைய தமிழகப் பிரச்சனை நீர், எரிசக்தி. தமிழ்நாட்டுத் தொழிற்துறைகள் விருத்தி, விஞ்ஞான அறிவு வளர்ச்சி. பயனற்ற இந்தி மொழிப் பிரச்சனையைத் திராவிட கட்சிகள் 100 ஆண்டுப் போராய் நடத்தி தமிழரைப் பிரித்து, தமிழ்நாட்டைத் தனித்தீவில் வைத்துள்ளன.

    இப்போது தமிழ்நாடு இந்தியாவில் தனிநாடுதான் !!! தனிப் பாதையில் போவது தமிழர் /திராவிடர்/தமிழ்நாடுதான் !!!

    எரியாத நெருப்பைத் தூண்டி, [இந்தி மொழிப்போரை இந்திய மதப்போராய் மாற்றி] மீண்டும் தீப்பற்ற வைக்கும் திராவிடக் கட்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கட்சி மண்ணெண்ணை வாங்கிக் கொடுக்கிறது !!!

    சி.ஜெயபாரதன்

  6. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ஒருவர் இப்படி நடப்பை எழுதிச் சொன்னார் :

    ஆட்சிமொழிக்கான பாராளுமன்ற குழு மற்றும் துணை குழுக்களின் செயல்பாடுகள் அனைத்தும் இந்தியிலேயே நடந்தது. குழுக்களில் பெரும்பான்மையானோர் அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டனர். இந்த சூழலில் அலுவல் சார்ந்த தலைவர் என்ற முறையில் சிறிய மாற்றங்களை கூட செய்யமுடியாது. அதிக பெரும்பான்மை இருக்கும் பட்சத்தில், அதனை நிராகரிப்பதற்கு அலுவல் சார்ந்த தலைவருக்கு [நிதி அமைச்சர் ப. சிதம்பரம்] இல்லை

    அலுவல் சார்ந்த தலைவராய் இருந்த ப. சிதம்பரம் பரிந்துரைகளை நிராகரிப்பதற்கு அதிகாரம் இல்லாத சமயத்தில் அலுவல் சார்ந்த தலைவராய் நீடிப்பத்தில் பயன் ஒன்றும் இல்லை என்று அந்த தலைவர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும் . அதை விட்டுவிட்டு எனக்கு அதிகாரம் இல்லை நான் தலைவராக நீடிப்பதற்கு காரணம் தன்னுடைய நிதியமைச்சர் பதவி பறிபோய்விடக்கூடாதே என்ற பயம் தான்.

    எனது பதில் இதுதான் :

    தமிழக உறுப்பினர் ஒருவருக்கு [ப. சிதம்பர்] இந்தி தெரியா விட்டாலும் அவருக்கு நிதி அமைச்சர் பதவி அளித்திருப்பது பெருமைப்படத் தக்கது. சட்டசபை நடப்புகள் பெரும்பாலும் இந்தி மொழியில் நடக்கும் போது புரியாமல் விழிப்பது, இந்திய நிதி அமைச்சருக்கு அவமானம் இல்லையா ? ஆங்கிலத்தோடு இந்தியும் தெரிந்திருந்தால் தமிழக நிதி அமைச்சருக்குத் தகுதி, வெகுமதி அதிகம் அல்லவா ? இந்தியர் வரிப்பணத்தில் பிழைக்கும் தமிழக நிதி அமைச்சர் இந்தி மொழி அறிந்திருப்பது அவசியம் இல்லையா ? ஆங்கிலம் மட்டும் போதாது.

    சி. ஜெயபாரதன்

    1. Avatar
      BSV says:

      என்ன எழுதுகிறார் என்றே புரியவில்லை. அலுவல் சார்ந்த தலைவர் என்றால் என்ன பொருள்? ஆங்கிலத்தில் சொல்ல முடிந்தால் புரியலாம்.

        1. Avatar
          BSV says:

          அப்படி எந்த பதவியும் மத்திய அரசில் இல்லை. எனவே எந்த பெயரில் அப்பணி வழங்கப்படுகிறதோ அதைச் சொன்னால் என்னால் பதில் போட முடியும். I need the official name. Do you mean he was the Chairman of Parliament related Committee on Official Language?

  7. Avatar
    சுப. சோமசுந்தரம் says:

    இந்தி தெரியாமல் தமிழக எல்லை தாண்ட இயலாது’ என்பது வேடிக்கை. பிழைப்பு தேடி எந்தவொரு இடத்திற்கும் செல்பவர் அவ்விடத்திற்கான மொழியை சில காலத்தில் பழகிக் கொள்ளுதல் நடைமுறை. வெளியுலகத் தொடர்பிற்கு நமக்கு வரலாற்றுப் பிழையாய் அமைந்த ஆங்கிலம் போதுமானது. பெரிய பூனைக்குப் பெரிய வழி, சிறிய பூனைக்குச் சிறிய வழியா? ‘இன்னொரு மொழி (அதிலும் இந்தி) கற்பதில் என்ன தவறு ‘ என்பது முற்போக்கான சிந்தனையன்று. மேம்போக்கான சிந்தனை. அவ்வளவே. ஆங்கிலம் நம் மொழியினின்றும் வேறுபட்டு நிற்பது- மேலை நாட்டுச் சாமி நம் மண்ணின் சாமியிடம் ஒட்டாததைப் போல. வடக்கிருந்து வந்த பெருந்தெய்வங்கள் நம் மண்ணின் மணத்தோடு தோன்றிய கிராம தேவதைகளைக் கபளீகரம் செய்ததைப் போல, வடக்கத்திய மொழி நம் மொழி அடையாளத்தை அழிக்க முற்பட நாம் வாளாவிருப்பதா? அழிந்து வரும் விலங்கினத்தைக் காக்க முனைவது போல், நம் மொழி காக்க திராவிடக் கட்சிகளை இழுக்க வேண்டியதில்லை. தமிழராய் இருத்தலே போதுமானது. பாஜகவின் புறக்கடை யுத்தம் கயமைத்தனம். Unity is noble. Uniformity is fascist. ஒரு நாடாயிருக்க ஒரு மொழி என்ற அவசியமில்லை. இதற்கு வேறு எந்த நாட்டையும் பார்க்க வேண்டிய தேவையும் இல்லை. நமது பன்மைத்துவத்தின் சிறப்பும் அதுவே. நாமே உலகிற்கு நல்ல உதாரணம்.

  8. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    https://mail.google.com/mail/u/0/#inbox/15bd2f79b68dd6a4

    ////மத்திய அரசின் இந்தித்திணிப்பு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்கள் தனித்த அடையாளத்தோடும், பண்பாட்டு விழுமியங்களோடும், பாரம்பரிய மரபுகளோடும் சங்கமித்து வாழும் ஒன்றியமாகும். அத்தகைய தேசிய இனங்களின் அடையாளங்களை அறவேயொழித்து, அகன்ற பாரதத்தை உருவாக்குவதற்கு முன்முயற்சியாக ஒற்றை அடையாளத்தை முன்னிலைப்படுத்தி இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைக்கிற வேலையினைக் கனக்கச்சிதமாகச் செய்து வருகிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. அதற்கு முதற்படியாக மாநில மொழிகளின் முக்கியத்துவத்தைக் குறைத்து இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணித்து வருகிறது. எவ்வித இலக்கண, இலக்கிய, வளமோ, பாரம்பரியமோ, வரலாற்றுப் பின்முலமுமோ ஏதுவுமற்ற இந்தியையும், எவராலும் பேசப்படாத சமஸ்கிருதத்தையும் முதன்மைத்துவம் செய்யப் பாஜக அரசானது கங்கணம் கட்டிக்கொண்டு வேலைசெய்து வருகின்றது.

    கடந்த 2011ஆம் ஆண்டில் காங்கிரசு – திமுக ஆட்சியில் அன்றைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் தலைமையில் இயங்கிய நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்குத் தற்போது குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளிலும், கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை இந்தியைக் கட்டாயமாக்கவும், அரசு விளம்பரங்களில் இந்திக்கு முக்கியத்துவம் அளிக்கவும், மத்திய, மாநிலங்களுக்கிடையேயான நடைமுறைகளில் இந்தியை முதன்மைப்படுத்தவும் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், பாராளுமன்றத்தில் குடியரசுத்தலைவர், பிரதமர், அமைச்சர் பெருமக்கள் யாவரும் இந்தியை அறிந்திருப்பார்களேயானால் அவர்கள் இந்தியிலேயே பேசுவதற்கும் இச்சட்டம் வழிவகுக்கிறது. காங்கிரஸ், பாஜக இரு தேசிய கட்சிகளில் எது அதிகாரப்பீடத்தை அலங்கரித்தாலும் இந்தியைத் திணிக்க முற்படுகிறது என்பதே நிதர்சனம். அவைகளுள் இந்தித் திணிப்பை செயலாக்கம் செய்யும் விதமும், செயல்பாட்டின் வீரியமும்தான் வேறுபடுகிறது.

    மத்திய அரசானது, தமிழர் நிலத்திலும் இந்தியை இறக்குமதி செய்ய முற்படுமேயானால் அது மிகப்பெரிய எதிர்வினையைத் தமிழர்களிடம் ஏற்படுத்தும். நடராசனும், தாளமுத்துவும், கீழப்பழுவூர் சின்னச்சாமியும், சிவகங்கை இராஜேந்திரனும், கோடம்பாக்கம் சிவலிங்கமும், விருகம்பாக்கம் அரங்கநாதனும் போராடி உயிர்நீத்த தமிழ்மண்ணில் இந்தித் திணிப்பையும், ஆதிக்கத்தையும் அவரது வழிவந்த மானத்தமிழ் பிள்ளைகள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆகையினால், அந்நியமொழியை வேர்பரப்புகிற வேலையைக் கைவிட்டு மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அந்தந்த மாநிலங்களில் அவரவர் தாய்மொழிக்கே முதன்மைத்துவம் தரப்பட வேண்டும். தமிழர் நிலத்தில் இந்தியைத் திணிக்கும் முயற்சியை முற்றுமுழுதாகக் கைவிட வேண்டும். இதனைச் செய்யத்தவறும் பட்சத்தில், சல்லிக்கட்டு உரிமைக்காகத் தமிழர் நிலத்தில் இளையோர் கூட்டம் நிகழ்த்திய தைப்புரட்சி போல, உயிர்மொழி தமிழைக்காக்க மொழிப்புரட்சி வெடிக்கும் என எச்சரிக்கிறேன். /////

    அதாவது கடந்த 50 ஆண்டுகளாக இந்தி மொழி தமிழ்நாட்டில் ஆமை வேகத்தில் நுழைந்து இப்போது வேரிட்டதை முற்றிலும் தமிழ்த் தேசீயக் கட்சிகள் தடுக்க முடிவைல்லை. இன்னும் இந்த பயனற்ற, பலனற்ற, பாழான மொழிப் போரை நூறாண்டுப் போராய்த் தொடர்ந்து இப்போது தீவிரமாக்க தமிழ்த் தேசீயக் கட்சித் தலைவர் சீமான் தலைதூக்கியுள்ளார்.

    அதாவது சீமான் பின்னால் நின்று கொண்டு, முன்னே கவசமாய் நிறுத்தி இன்னும் சில அப்பாவித் தமிழரைப் பலிகொடுக்கப் போகிறார் என்று நான் எச்சரிக்கை விடுகிறேன்.

    சி. ஜெயபாரதன்

  9. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    இந்தி மொழியைத் தமிழ்நாட்டின் கல்வி மொழியாக, பேச்சு மொழியாகத் திணித்திடப் பா.ச.க.அரசு கடற்புயல்(சுனாமி) வேகத்தில் செயல்படுகிறது. அதே வேகத்தில் தமிழைப் புறந் தள்ளித் தீர்த்துக் கட்டவும் முயல்கிறது.

    அண்மையில் பா.ச.க. அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முதல் கட்டமாக நடுவண் பள்ளிக் கல்விவாரியப் (C.B.S.E.) பள்ளிகளிலும், கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளிலும் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாய மொழிப்பாடமாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மாநில அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயமாக்கிட,மாநில அரசுகளிடம் பேச்சு நடத்தப்படும் என்றும் நடுவண் அரசு கூறுகிறது.
    நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர், தலைமை அமைச்சர், அமைச்சர்கள் இந்தி தெரிந்தால், இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்றும் புதிய சட்டம் கூறுகிறது. அத்துடன் அவர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே இந்தியாவில் எங்கு பேசினாலும் இந்தி தெரிந்தோர் இந்தியில் மட்டுமே பொது நிகழ்வுகளில் பேச வேண்டும் என்றும் கூறுகிறது.

    மேற்கண்ட புதிய ஆணைகள், கடந்த 2011ஆம் ஆண்டு (02.06.2011), நடுவண் அரசில் காங்கிரசு – தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்த போது, உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் தலைமையில் இயங்கிய “அலுவல் மொழிக்கான நிலைக்குழு”வின் (Committee of Parliament on Official Language) பரிந்துரைகளே ஆகும். அப்பரிந்துரைகளை ஆறாண்டுகள் கழித்து இப்போதுள்ள பா.ச.க. அரசு ஏற்றுச் சட்டமாக்கியுள்ளது.
    இந்திய அரசில் காங்கிரசு இருந்தாலும், பா.ச.க. இருந்தாலும், அது இந்தித் திணிப்பை தொடரும் என்பதற்கு இதுவே தக்க சான்றாகும்.

    அசாம் தலைநகர் கவுகாத்தியில் 18.04.2017 அன்று நடந்த இந்தி பரப்பலுக்கான கூட்டுக் குழுக் கூட்டத்தில் பேசிய நடுவண் அமைச்சர் வெங்கையா(நாயுடு), இந்தி பேசாத மாநிலங்களில் மக்கள் தங்களுக்கிடையே உரையாடும் பொழுதும் இந்தி மொழியில் பேசுமாறு வலியுறுத்தினார்.

    இந்தித் திணிப்பு என்பது மொழி ஆதிக்கம் மட்டுமன்று; அது ஆரிய ஆதிக்கத்தின் இன்னொரு கூறு! தமிழினத்தை ஆரியம் எப்போதுமே பகையினமாகக் கருதும்!

    தமிழ்நாட்டில் இந்தி கல்வி மொழியாகிவிட்டால், வடநாட்டவர்கள் இங்கு போட்டித் தேர்வுகள் எழுதி தமிழ்நாட்டின் அதிகார வருக்கத்திலும், வேலை வாய்ப்பிலும் பேராதிக்கம் செலுத்துவார்கள். மண்ணின் மக்கள் வேலையற்ற அகதிகளாக வெளியே தள்ளப்படுவார்கள்!

    இந்தி படித்தால் வடநாட்டில் வேலை கிடைக்கும் என்று பம்மாத்து செய்தார்கள்; இப்போதே வடநாட்டவர்கள் வந்துதான் தமிழ்நாட்ட்டின் வேலை வாய்ப்புகளைப் பறித்துக் கொண்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் இந்தி கல்வி மொழியாகி விட்டால், தமிழர்களின் கதி என்னவாகும்?

    தமிழ் மொழி காக்க – தமிழர் உரிமை காக்க – ஆதிக்க இந்தியை அடித்து விரட்ட வேண்டியது கட்டாயக் கடமையாகும். எனவேதான், ஆதிக்க இந்தியைத் தடுக்க இந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது!

    கோரிக்கைகள்

    மக்களவை மாநிலங்களவைகளில் முன் இசைவு கேட்காமல், அமைச்சர்களும் உறுப்பினர்களும் தமிழில் பேசுவதற்கான உரிமையும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.

    நடுவண் பள்ளிக் கல்வி வாரிய (C.B.S.E.) மற்றும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்குவதைக் கைவிட்டு, தமிழ்நாட்டில் அவற்றில் தமிழைக் கட்டாய மொழிப்பாடமாக்க வேண்டும்.

    தமிழைக் கட்டாய மொழிப்பாடமாக ஏற்றுக் கொள்ளாத நடுவண் வாரிய மற்றும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளை நடத்த தமிழ்நாடு அரசு இசைவு வழங்கக் கூடாது. அவற்றைக் மூடச் செய்ய வேண்டும்.

    இந்திய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டின் எதிர்ப்புக் குரலை வலுப்படுத்தும் வகையில் தமிழ் மக்களும், இளைஞர்களும், இன உணர்வாளர்களும் இப்போராட்டத்தில் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

    தலைமைச் செயலகம்
    தமிழ்த்தேசியப் பேரியக்கம்
    பேச: 7667077075, 9840848594
    முகநூல்: http://www.fb.com/tamizhdesiyam
    ஊடகம்: http://www.kannotam.com
    இணையம்: tamizhdesiyam.com

  10. Avatar
    Suvanappiriyan says:

    சவுதி வருவதற்கு முன்பு எனக்கு இந்தி தெரியாது. இன்று இந்தி மொழியையும் அரபி மொழியையும் சரளமாக பேசுகிறேன். வந்த ஆறு மாதத்திலேயே சரயமாக பேச கற்றுக் கொண்டேன்.

    எனவே முன்னேற்றத்துக்கு ஹிந்தி கற்றே ஆக வேண்டும் என்பது பசப்பு வார்த்தை.

Leave a Reply to சி. ஜெயபாரதன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *