தாரை தப்பட்டை – விமர்சனம்

This entry is part 8 of 16 in the series 17 ஜனவரி 2016

tharai1விளிம்பு நிலை மனிதர்கள் படும் இன்னல்களை சொல்லும் படம் என்று சொல்லி ஒரு…………………………….

முதலாளித்துவமும், ஆதிக்க வர்க்கமும் தங்கள் சுய நலத்திற்கு பயன்படுத்திக்கொள்வதால் ஒரு சமூகத்தின் ஏணிப்படிகளில் கட்டகடைசியாக தேங்க நேர்ந்தவர்களின் இன்னல்களை எதிர்பார்த்து படத்திற்கு போனால், பெருத்த ஏமாற்றம்.

ஏமாற்றம் என்னவெனில், சமூகத்தின் ஏணிப்படிகளில் கட்டகடைசியாக தேங்க நேர்ந்தவர்கள் தங்கள் சுய நலங்களுக்காக தங்களையே வருத்திக்கொள்வதும் , புறமுதுகில் குத்திக்கொள்வதும் தான் படமாக்கப்பட்டிருக்கிறது. சன்னாசி மேல் சூறாவளிக்கு காதல். சூப்பரான காதல். வரலட்சுமியில் வசனங்களை கேட்டால் நமக்கே காதல் வந்து விடுகிறது. அப்படி காதல். ஆனால், சன்னாசி எவனோ ஒரு டிரைவரை நம்பி சூறாவளியின் காதலை உதாசீனப்படுத்துகிறான். அதாவது சமூகத்தின் படி நிலைகளில் கட்டக்கடைசியாக நிற்கும் ஒருத்தியின் காதலை, அதே படியில் நிற்கும் சன்னாசி புரிந்துகொள்ளவில்லை.. புறம் தள்ளுகிறான். கேட்டால், எங்கோ எவனோடோ சந்தோஷமாக இருக்கட்டும் என்கிற எண்ணமாம். எங்கோ எவனோடோ இருந்தால் மட்டும் சந்தோஷம் வந்துவிடுமா? காதலனுடன் பசியோடே கிடப்பதும் போராடுவதும் கூட சுகம் தானே.. இதை புரிந்துகொள்ளாதவனாக சன்னாசியை ஏன் காட்ட வேண்டும்? அல்லது விளிம்பு நிலை மனிதர்கள் உண்மையிலேயே இப்படித்தான் மந்த அறிவுள்ளவர்களாக, உணர்ச்சிகளால் உந்தப்பட்டு முட்டாள்தனமாக யோசிப்பவர்களாக  இருப்பார்கள் என்று காட்ட விழைகிறாரா கதாசிரியர்?

தன்னை நம்பாத சன்னாசி, தன் காதலை நம்பாத சன்னாசி மாறாக, எவனோ ஒரு டிரைவரை நம்புகிறான்.

உண்மையில் தாரை தப்பட்டை தமிழ் நாட்டு பெண்களுக்கு ஒரு பாடத்தை சொல்வதாகவே நினைக்கிறேன். அது, முட்டாளை நம்பிச்செய்யும் காதலால் சேற்றில் விழுந்து நாறத்தான் வேண்டியிருக்கும் என்பதுதான் அது.

அந்த வகையில் தாரை தப்பட்டை ஒரு நல்ல கருத்தை சொல்வதாகவே நான் நினைக்கிறேன். ‘ நான் கடவுள்’, ‘பரதேசி’ போன்ற படங்களுக்காவது உழைக்க நிறைய இருந்தது. இந்த ஓட்டை விழுந்த கதையை படமாக்க இரண்டு வருடங்கள் ரொம்ப ரொம்ப அநியாயமாகப்படுகிறது.

விபசாரம் ஆதி தொழில்.

வாடகை தாய்மை, தற்போதைய நவீன யுகத்தின் தொழில். இங்கே அமேரிக்காவில், இதற்கு நல்ல பேமென்ட் உண்டு. எனக்கு தெரிந்து ஒருவர் அம்முறையை பயன்படுத்தி பிள்ளை பெற்றுக்கொண்டார். விலை நூறு ஆயிரம் டாலர்கள்.

இதே போல் முகம் சுளிக்க வைக்கும் வாழ்வியல்கள் இன்னமும் நம்ம சுற்றி அனுமதித்துக்கொண்டே தான் இருக்கிறோம். இத்தனை கஷ்டப்பட்டு ஒரு வாழ்க்கையை வாழ்வானேன். ரயில் நிலையங்களில் தண்டவாளத்தை சுத்தம் செய்யவும், சாக்கடைகளை சுத்தம் செய்யவும் மனிதர்கள் இன்னமும் பயன்படுத்தப்படுகிறார்கள். வேலையை செய்ய ஆள் எப்போதும் இருந்தால், மாற்றத்துக்கான தேவை எப்படி உதிக்கும்? ஒரு மாற்றத்துக்கான விதையை தருவிக்கும் தேவையை உருவாக்க, அந்த வேலையை நிராகரிக்கவேண்டிய பொறுப்பு தங்களிடம் இருப்பதை உணராத அந்த மந்த மூளைகள் மீது வெறுப்பு வருகிறது. எவனாவது கொடி பிடித்து, கோஷம் போட்டு, தொண்டை தண்ணீர் வற்ற கத்தி மாற்றத்தை கொண்டு வந்தால், அங்கே வந்து சப்பனாங்கால் போட்டு உட்கார்ந்துவிட்டு, அடுத்த மாற்றம் வரும் வரை மறுபடி செக்கு மாடாகிவிடுவார்கள்.

இங்கே அமேரிக்காவில் லேபர் பெரும் பிரச்சனை. நான் லண்டனில் வேலை பார்த்தபோது ப்ளம்பர் வேலை செய்பவர்கள் வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்வார்கள் என்றார்கள். ஒருமுறை வந்தால் சுமார் நூற்றைம்பது பவுண்டுகள். ஒரு மாதம் வேலை செய்தால், நிச்சயம் ஒரு கணிணி பொறியாளரை விட மூன்று மடங்கு அதிகம் சம்பாதிக்க முடியும். ஆனால் வர மாட்டார்கள். வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டுமே. இதை கருத்தில் கொண்டு தான் அமேரிக்காவில் இந்த வருடத்திலிருந்து அடுத்த பத்து வருடங்களுக்கு லேபர் விசாக்களின் எண்ணிக்கையை நானூறு சதவீதம் அதிகப்படுத்தியிருக்கிறது. இருந்தாலும் ஆள் கிடைப்பது அத்தனை சுலபமில்லை.

அமேரிக்கா அமேரிக்காவாக இருப்பதற்கும் , ஜப்பான் ஜப்பானாக இருப்பதற்கும், இந்தியா இந்தியாவாக இருப்பதற்கும் ஸ்திரமான காரணங்கள் இருக்கிறது.

விளிம்பு நிலை மனிதர்கள் மாற்றத்தை எதிர் நோக்குகிறார்கள் தான். ஆனால் அந்த மாற்றத்துக்கான தேவையை உருவாக்குவது குறித்தான யாதொரு சிந்தனையும் அற்றுத்தான் இருக்கிறார்கள்.

அதை மறைமுகமாக அதுவும் ஒரு விபத்தாய் குத்திக்காட்டியதற்காய் தாரை தப்பட்டை பார்க்க வேண்டிய படமாக ஆகிறது. நான் அனைவரும் பார்க்க வேண்டிய கதையின் ஓட்டை இது.

– ஸ்ரீராம்

Series Navigationரிஷியின் 3 கவிதைகள்தொடுவானம் 103. உடலியல் அறிமுகம்
author

ராம்ப்ரசாத்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *