தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் இன்னும் உன் குரல் கேட்கிறது கவிதை நூலின் மீது ஒரு மதிப்பீடு

author
0 minutes, 4 seconds Read
This entry is part 28 of 41 in the series 23 செப்டம்பர் 2012


எம்.எம். மன்ஸுர் – மாவனல்லை

என்றும் இலக்கியக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னகத்தே நிறுவனம் ஒன்றை வைத்திருக்கும் புரவலர் அல்ஹாஜ் ஹாஸீம் உமர் அவர்கள், எழுத்தாளர்களின் படைப்புக்களை நூல் வடிவில் கொண்டு வருவதில் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்பட்டு வருகிறார். 2007 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த எழுத்தாளர்களுக்கு உதவும் பணி மூலம் இதுவரை முப்பது நூல்களை இலவசமாக வெளியிட்டு வசதியற்ற எழுத்தாளர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் ஆதரவளித்து ஈழத்து இலக்கிய உலகுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.

அந்த வகையில் இளம் கவிதாயினி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் இன்னும் உன் குரல் கேட்கிறது கவிதை நூல் கொழும்புத் தமிழ் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

இன்னும் உன் குரல் கேட்கிறது ஆம் அது ஏன் இன்னும் கேட்கிறது என்பதை அறிய ஆவலாய் நூலைக் கையில் எடுக்கும் போதே, இன்னும் ஓர் இளம் கவிதாயினியான வெலிகம ரிம்ஸா முஹம்மதின் கற்பனைத் திரத்தில் கணனிக் கைவண்ணத்தில் உருவான வானத்து தேவதையின் வண்ண முகப் பொழிவு கொண்ட முன்பக்க அட்டை கருத்தைக் கவரும் விதத்தில் உள் நுழையச் செய்வதில் விந்தை ஏதுமில்லை.

உள்ளே பூங்காவின் பதிப்புத்துறைச் செயலாளர், மூத்த எழுத்தாளர், அதிலும் சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ. நாகூர் கனி அவர்கள் கவிதாயினியை பூந்தமிழ் ஆசி கொண்டு பாமாலை சூட்டிச் சிறப்பித்திருக்கிறார். மூத்த கவிஞர், கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் முகப்பூ தந்து தமது கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். அதிலே இலக்கண காலத்தே இருந்தே செய்யுள் வடிவம் இன்று திரிந்து, பிரிந்து, உருமாறி இன்றைய செல்வாக்குப் பெற்றுள்ள கவி வடிவத்தைப் பற்றி விளக்கியிருக்கிறார். அதாவது ஷஷபாரதி முதல் வால்ட் விட்மன், கலீல் ஜிப்ரான், உமர் கையாம், தாகூர் போன்றவர்களின் கவிதைகளின் தாக்கம் தான் இன்றைய கவிதைகளின் உருவாக்கத்துக்குக் காரணம்|| என்பதை அழகாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

கவிதாயினி தனது முன்னுரையில் தனது கவிதைகளின் தன்மையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அவை அகம் சார்ந்த கருத்துக்களைத் தவிர பெண்ணியம், ஆன்மீகம், தனிமை, துன்பம், சந்தோசம், மலையகம் சார்ந்த பிரச்சினைகள், சமூக அவலங்கள், சீதனக் கொடுமை, சுனாமி உணர்வுகளைத் தரக் கூடிய கருத்துக்களைப் பற்றிப் பேசுகின்றன.

கவிஞை மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டிருப்பதால் மலையக மக்களின் வாழ்க்கையை, அதிலும் மலையகப் பெண்களின் வாழ்வியலினை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். அத்தகைய ஒரு கவிதையைப் பாருங்கள். பெண்ணை மாடாக உழைக்கவிட்டுத் தான் மட்டும் கிடைப்பதைச் சாராயக் கடையிலே கொட்டுகிற கொடுமையை வேறு எந்தச் சமூகத்தில் காண முடியும்? பெண்ணியம் பேசும் சீர்திருத்த வாதிகளே சற்றும் திரும்பிப் பாருங்கள் இக்காட்சியினை.

தூபங்களிட்டாற் போல
சாபங்கள் நீங்குறதேயில்ல!
வேர்வை வர ஒழைச்சும்
வேதனமோ பசியாற்றல்ல!
கோர்வையா வெலயேத்தம்
கோமானுக்கு இரக்கமில்ல!

இவ்வரிகளை இலகுவாக நாம் எண்ணிவிட முடியாது. யாரிட்ட சாபமோ மலையக மக்களின் வாழ்வில் துயரங்கள் நீங்கக் காணோம். வியர்வை சிந்தி எவ்வளவு தான் உழைத்தாலும் கிடைக்கின்ற வேதனம் வாழ்க்கைச் செலவுகளுக்குப் போதுமானதாக இல்லை. நாளுக்கு நாள் விலையேற்றம். இது தோட்ட எஜமானார்களுக்கு விளங்கவில்லையா? என்று கேட்பது போல கவிவரிகளைப் போட்டு மக்கள் மனங்களைச் சிந்திக்க வைத்திருக்கிறார். அது மாத்திரமா?

தேயில சுமை முதுகில
வாழ்க்க சுமை மனசில..
புருஷன் சம்பளத்தோட
சாராயக் கடையில..

என்ற வரிகள் தோட்டத் தொழிலாளர்களின் நிலைமையை எடுத்துக் காட்டுகிறது. இதில் ஒரு வரி வாசகர் கருத்தில் புலப்படாமல் போகிறது. ஷஷபுருஷன் சம்பளத்தோட சாராயக் கடையில|| என்ற வரிகள் உண்மையில் மனைவியின் சம்பளத்தைப் பிடுங்கிக் கொண்டு சாராயக் கடையில் போட்டானா? அல்லது தன்னுடைய சம்பளத்தைக் கொண்டு போய் சாராயக் கடையில் கொடுத்துவிட்டு தண்ணி போட்டுக் கொண்டானா என்பது புரியவில்லை. மலையக மாதுவின் மனக் குமுறல் என்ற கவிதையில் மேற் கண்ட வரிகளைக் காணலாம்.

ஏழ்மையைப் பயன்படுத்தி ஏழைச் சிறார்களை, அதுவும் பள்ளி செல்லும் சிறார்களை வேலைக்கமர்த்தி, வேலை வாங்கும் வேலை கொள்வோரை கவிஞை இப்படிச் சாடுகிறார்.

பாடசாலை பருவத்து
சிறார்களை வைத்து நிதம்
தொழில் செய்து
பிழைப்பவர்கள் சாகட்டும்..
அவரின் அந்தஸ்து சொத்தெல்லாம்
இப்படிதான் வந்ததென்றால்
கடல்பொங்கி எல்லாம் கொண்டு போகட்டும்!!!

என்று தனது மனக்குமுறலை, மனித நேயத்தை, பாசத்தைக் கொட்டியிருக்கிறார். அப்படிப்பட்ட அவர்களை சுனாமிப் பேரலைகள் கொண்டு போகட்டும் என்று கூடச் சொல்லுகிறார். அதே போல விதி வசத்தால் விலை மாதரானாலும், பணத்துக்காக ஆசைப்பட்டு வீணாகத் தமது வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்ட மாதர்களைப் புயலும் மொத்தமாக அள்ளிச் செல்லட்டும் என வேண்டுகிறார்.

விதி செய்த சதியினிலே
விலைபோகும் மாதுகளை
எப்படி நாம் காப்பாற்ற இயலும்?
வெறும் பணத்துக்காய்
ஆசைப்பட்டு
வீணாகும் சிலபேரை
மொத்தமாக அள்ளி செல்லும் புயலும்!

இன்றைய நாகரிக மோகத்தில் மூழ்கி அரைகுறை ஆடை அணிகளுடன் ஆண்களை மயக்கும் பெண்களின் பங்கைப் பற்றிச் சொல்லும் போது…

ஆடைகளில் கவனமின்றி
ஆடவரைக் கவர்கிறோம்..
வாடை பூசி வெளியேறி
வாலிபரை மயக்குகிறோம்!

மாரழகு வெளித்தெரிய
மாருதம்போல் வருகிறோம்..
பேரழகு பெண் என்று
பேச்சிலும் இதம் தருகிறோம்!

அங்கங்கள் வெளித் தெரிய தன் அழகை வெளிக்காட்டும் பெண்கள், அதுதான் தமது அழகு என எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள் என்ற இந்த வரிகள் மூலம் நாகரீக அசிங்கங்களை விளக்குகிறார்.

இன்று நான்மறை வேதங்களின் நலமிகு கருத்துக்களை மதித்து நடக்காத மனிதன், சாத்திரங்கள், மந்திரங்களை மறந்து வாழும் மனிதன், வழி தவறிப் போவது கண்டு கவிஞை மனமுறுகுகின்றார். அது மாத்திரமல்லாமல் கணவன் தான் உயிர் நீத்ததன் பின்னர் மனைவி வெள்ளாடை தரித்து வீணாக இருந்துவிடாமல் புதுமைப் பெண்ணாய் இருந்துவிடு, அடுத்தவரின் பழிச்சொல் கேட்டு பயந்து நீ கோழையாகி விடாமல் துணைவரைத் தேடிக் கொண்டு வாழும் காலமெல்லாம் வசந்தமாய் வாழ்ந்துவிடு என்று பாரதியின் புதுமைக் கருத்துக்களைக் கூறியிருக்கின்றார் இவ்வாறு..

இன்று
வேதங்கள் நிஜமிழந்து
மந்திரங்களும்
பொய்யாகிப் போனது!

ஒருவேளை..
நான் மீளாத்துயிலில்
ஆழ்ந்து விட்டால்..
காவலனைத் தேடிக்கொள்
கட்டாயம்!

என்று உபதேசமாகக் கூறிவிட்டு, இப்படியும் புத்திமதியைச் சொல்லி வைக்கிறார்.

வெள்ளாடை தரித்து நீ
வெறுமனே இருந்திடாதே..
வாழும் வரை வசந்தமாய்
வாழுவதை மறந்திடாதே!

என்பதோடு பலி சொல்லும் உலகுக்கு பயந்து நீ சாகாதே என்று அறிவுரையும் கூறுகின்றார்.

ஆணின் நிலையிலிருந்து அனுபவக் கருத்துக்களை அள்ளி வழங்கியிருக்கும் கவிதாயினி, பெண்ணியத்தைப் பற்றியும் நிறையப் பேசியிருக்கிறார் தனது கவிதையினூடே. ஒரு பெண்ணினால் ஏமாற்றப்பட்ட ஓர் ஆணின் உள்ளக் குமுறலை மாத்திரமல்லாமல் மனவேதனையையும் இப்படிக் கூறுகின்றார்.

அன்பென்று நடித்தவர்கள்
பாதியிலே மாறினார்கள்..
வாள்முனை வார்த்தைகளால்
இதயத்தைக் கீறினார்கள்!

தாலி நீ ஏற்று விட்டாய்
தாயாகவும் மாறி விட்டாய்..
தாடியுடன் அலையும் நான் – இனி
தாரம் தேடப் போவதில்லை!!!

இறைவன் யாருக்கு யார் என்பதை என்றோ எழுதிவிட்டான். அதன்படி தான் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வாழ்க்கைத் துணைவியோ, துணைவனோ அமைவதுண்டு. அதனால் அதைப்பற்றி எண்ணிக் கவலைப் படாதே என்று அறிவுரையாய்ச் சொல்லும் கருத்துக்கள் இவை.

கலங்காதே காரிகையே..
காதலுடன் உனை காப்பாற்ற
காளை ஒருவன்
வராமலா இருக்கப் போகிறான்?

யாருக்கு யார் என்று
வல்லவன் என்றோ
எழுதிவிட்டானே அன்று?

தற்காலத்தில் எழுதப்படும் கவிதைகளில் அனேகமானவை தன்னிலையை முன்னிலைப் படுத்தித் தான் எழுதப்படுகின்றன. அதிலும் அனேகமானவை காதல் கவிதைகள் தான். காதல் கவிதைகள் எழுதுவதற்கு அது ஒரு கருவியாக இன்று காணப்படுகின்றது. இந்த வகைக் கவிதைகள் மூலம் அது நிரூபணமாகின்றது. நூலில் அநேகமானவை காதல் கவிதைகளாக இருந்த போதிலும் பல் பொருள் பேசும் கவிதைகளும் காணப்படுவது சிறப்பம்சமாகும். மலையகத்தைப் பற்றிப் பாடியுள்ள கவிதைகள் யாவும் மலையக வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. இதற்கு முக்கிய ஒரு காரணம் கவிஞை மலை நாட்டைச் சேர்ந்தவராக இருப்பது தான். ஏனெனில் அவர் மலையக வாழ்க்கையை நன்கு அறிந்து தெரிந்து அனுபவ ரீதியாகப் பெற்ற அனுபவங்களைத் தனது கவிதைக்குள் கொண்டு வந்திருக்கிறார் என்பது தான் உண்மை.

இன்பமின்றி வேறு இனி ஏது? என்ற கவிதையில் காணப்படும் சில வரிகள் என்னை மாத்திரமல்ல வாசகர்கள் அனைவரையும் கவரும் என எண்ணுகிறேன்.

அருவிக்கு போகையிலே
ஆத்தங்கரை ஓரத்திலே
குடத்துடனே நீயுந்தான் இருந்தாய்..
குயிலே – குடத்தைப் போல
என் உள்ளம்
தளும்பித் தளும்பித் துடிக்கையிலே
குருவியாக நீ பறந்து சென்றாய்!

இக்கவி வரிகளைப் படிக்கும் போது எனக்கு கிழக்கிலங்கை கிராமியப் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. அப்பாடலையும் ரிஸ்னாவின் பாடலையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இரண்டிலும் என்ன வித்தியாசம் காணப்படுகிறது, எத்தகைய உணர்வினைப் பெற முடிகிறது என்பதை. இதோ பாடல்..

தண்ணிக் குடம் எடுத்து
தனி வழியே போகும் பெண்ணே!
தண்ணிக் குடத்துள்ளே
தளும்புதடி என் மனசு!

இதே கருத்தை உள்ளடக்கியதாக கவிஞர் கண்ணதாசனின் பாடல் ஒன்றும் என் நினைவுக்கு வருகிறது. இதோ:-

தண்ணிக் குடம் கக்கத்திலே கண்ணம்மா
தாகத்துக்கு தண்ணி தந்தால் என்னம்மா?

என்று தலைவன் கேட்க,

தண்ணிக் குடம் கக்கத்திலே கண்ணய்யா
கண்டவங்க தாகத்துக்கு இல்லையா

இது தலைவி மறுப்பதாக அமைந்துள்ளது. இப்படியாகப் பல ரசனைகள்; நிறைந்ததாக ரிஸ்னாவின் இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற கவிதைத் தொகுதி அமைந்திருக்கிறது. நூலில் அநேகம் காதல் கவிதைகளாக இருப்பதால் காதலர்களுக்குத் தேனாக இனிக்கும். மட்டுல்லாமல் வேறு பல்வகைப் பொருட்களிலும் கவிதைகள் இடம்பிடித்திருப்பதால் இத்தொகுதி சிறப்பு பெறுகிறது. என்றாலும் ஒரு குறை. உள்ளடக்கத்தில் 68 கவிதைகள் இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தாலும் கூட நூலில் இடம் பெற்றிருப்பதோ 56 கவிதைகள் மாத்திரமே. தவறுக்கு யார் காரணமோ???

நூலின் பெயர் – இன்னும் உன் குரல் கேட்கிறது (கவிதைகள்)
நூலாசிரியர் – தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
முகவரி – 21 E, Sri Dharmspala Raod, Mount Lavinia.
தொலைபேசி – 0775009222
வெளியீடு – புரவலர் புத்தகப் பூங்கா
விலை – 180/=

Series Navigationவிசரிகுரல்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *