தொடுவானம்    20. மனதில் உண்டான வலி

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014
                                                                                                                    டாக்டர் ஜி. ஜான்சன்
          20.  மனதில் உண்டான வலி
          கார்கள் கிரீச்சிட்டு நின்றதைக்  கண்ட இளைஞர்கள் அங்கு ஓடி அவரைத்  தூக்கினர்.நல்ல வேளையாக அவர் விபத்துக்குள்ளாகவில்லை. அங்கிருந்த சில பெரியவர்கள் சமாதானம் சொல்லி எங்களை அனுப்பி வைத்தனர். எனக்கு அவருடன் செல்ல பயமாக இருந்தது. அன்று இரவும் பயத்தால் விடிய விடிய  தூங்காமல் விழித்திருந்தேன்.
           லதாவை காட்டுக்கு அழைத்துச் சென்றதைக் கண்டித்தது  சரிதான். ஆனால் நண்பனுடன் பந்து விளையாட்டுக்குச் சென்றதைக் கண்டிப்பபதா?
          அவருடைய செய்கைகள் எல்லாம் எனக்கு வினோதமாகத் தெரிந்ததன.. அதோடு விபரீதமாகவும் புலப்பட்டது. அவரால் எனக்கு எதாவது ஆபத்து உண்டாகலாம் என்றும் என் உள்மனம் கூறியது.
          என்ன செய்வது? இன்னும் ஒரு வருடம் படித்தாக வேண்டும். விடுமுறை முடிந்ததும் நான்காம் படிவம் செல்கிறேன் அது மிகவும் முக்கியமான இறுதியாண்டு. சீனியார் கேம்பிரிட்ஜ்  பரீட்சை  எழுதவேண்டும். அது இங்கிலாந்தில்தான் திருத்தப்படும். அதில் கட்டாயம் நான் தேர்ச்சி  பெற்றாக வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால்தான் எச்.எஸ்.சி வகுப்பில் சேர முடியும். அதன் பின்புதான் பல்கலைக்கழகம் புக முடியும்.  இத்தகைய நிலையில் அப்பா என்னை நிம்மதியாக படிக்க விடுவாரா என்பது பெரிய கேள்விக் குறியாக இருந்தது.
          சுமாராகப் படிக்கும் பையன்களை அவர்களின் வீட்டில் எவ்வளவு செல்லமாக வைத்துள்ளனர் என்பதை எண்ணிப் பார்த்தேன். நன்றாகப் படிக்கும் எனக்கு இத்தகைய அவலமா என்றும் எண்ணி ஏங்கினேன்!
         அதன் பின்பு கொஞ்ச நாட்கள் நாங்கள் இருவரும் அதிகம் பேசுவதில்லை.அவர் வெளியில் செல்லும் போது முன் கேட்டைப் பூட்டி சாவியை எடுத்துச் செல்வார். அப்படிச் செய்தால் நான் வெளியில் செல்ல முடியாது என்ற நினைப்பு அவருக்கு.ஆனால் அந்த கேட் மீது ஏறி வெளியே குதிக்க
என்னால் முடியும் என்பது அவருக்குத் தெரியவில்லை.
          அந்த விடுமுறையின்போது தமிழ் முரசுக்கு கதை கட்டுரைகள் எழுதினேன்.ஒரு சிறுகதைக்கு ஐந்து வெள்ளி சன்மானம் தருவார்கள் அதை நான் கோவிந்தசாமியிடம் தந்து சேர்த்து வைப்பேன். போதிய பணம் கிடைத்ததும்  புதிய முழுக்கால்சட்டைகள்  தைத்து அவனுடைய வீட்டிலேயே
ஒளித்து வைப்பேன்..
         அப்போது இறுக்கமான முழுக்கால்சட்டைகள்  அணிவது வழக்கத்தில் இருந்தது.ஆனால் அப்பாவோ  என்னை தையல் கடைக்கு அழைத்துச் சென்று தொளதொளவென்று தைத்துத் தருவார்.இறுக்கமாக அணிந்து கொண்டு லதாவை கூட்டிச் செல்வேன் என்ற  பயம் அவருக்கு. அதனால் நான் அந்த தொளதொள முழுக்கல்சட்டைகளை உடுத்திக்கொண்டு வெளியேறி நேராக கொவிந்தசாமியின்  வீடு செல்வேன். அங்கு நான் வைத்துள்ள இறுக்கமானதை  மாற்றிக்கொள்வேன். பின்பு தான் லதாவைப் பார்க்கச் செல்வேன். லதா என்னைத்தான் விரும்புகிறாள், நான் அணியும் ஆடையை அல்லவென்பது அவருக்குத் தெரியவில்லை.
          நான் நன்றாக உடை உடுத்திக்கொண்டு வெளியில் சென்றாலே அது லதாவுக்குதான் என்று எண்ணத் தொடங்கினார். அப்படிதான் ஒருமுறை திருக்குறள் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக நன்றாக உடுத்திக்கொண்டு வெளியில் சென்றேன். திடீரென்று அவரின் கோபக்குரல் கேட்டு திரும்பி நின்றேன்.
          ” டேய்! போடா! இனிமேல் இங்கே வராதே! எங்காவது போய் பிச்சை எடுத்து சாப்பிடு! ” என உரக்கக் கத்தியவர், என்னுடைய பாடப் புத்தகங்களை தூக்கி வந்து வெளியே வீசினார்! மழை பெய்திருந்ததால் அவை அங்குள்ள சகதியில் விழுந்தன. புத்தகங்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருந்தும்கூட நான் ஏதும் சொல்லாமல் பொறுத்துக்கொண்டேன். அந்த வயதில் காதலிப்பது தவறுதான்  என்பதால். அவற்றை துடைத்து சுத்தம் செய்து உள்ளே கொண்டு வந்து மேசை மீது அடுக்கினேன்.அனால் அவர் அதோடு நிறுத்தவில்லை. என்னுடைய சட்டைகள், முழுக்கால்சட்டைகள்.காலணிகள் அனைத்தையும் வெளியே கொண்டு வந்து ஒரு பிளேடினால் கிழித்தும், வெட்டியும் சின்னாபின்னமாக்கி வீதியில் வீசினார்! அதையும் நான் போருட்படுத்தவில்லை.
          ஆனால் அதன்பின்பு அவர் சொன்னதுதான் என்னை நிலைகுலைய வைத்தது.
           ” இவை இருப்பதால்தானே அந்த தே….. உன்னைச் சுற்றுகிறாள்? ” என்று உரக்கக் கத்தினார் .
          வராந்தாவில் நின்ற நான் ஆத்திரம் பொங்க பதிலுக்குக் கூறினேன்.
          ” அந்த தே…. இந்த சட்டைகளையும் காலணிகளையும் காதலிக்கவில்லை. என்னுடைய குணத்தையும்  மனதையும் காதலிக்கும் தே….. அவள். ”  என்றேன்.
          அப்படிக் கூறிவிட்டு கோபத்துடன் வேகமாக வெளியேறினேன்.
          அன்று போட்டி முடிந்து வெகு நேரம் கழித்துதான் திரும்பினேன். அவர் வெளியில் சென்றிருந்தார். நான் படுத்துவிட்டேன். எப்போது திரும்பினார் என்பது தெரியவில்லை.
          பள்ளி விடுமுறை முடியுமுன் அங்கு காவலரக சிதம்பரம் அமர்த்தப்பட்டார். அவர் எனக்கு சித்தப்பா முறை. இளம் வயதுடையவர். குடும்பம் தமிழகத்தில் இருந்தது. அப்பாவின் சிபாரிசில்தான் அவருக்கு அந்த வேலை கிடைத்தது.அவரும் எங்களோடு அந்த கடைசி அறையில் தங்கினார். இரவி படுப்பது வகுப்பறையில்தான்.அவர் வந்த பின்பு எனக்கு கொஞ்சம் பாதுகாப்பானது. என்னிடம் மிகவும் அன்பு பாராட்டினார்.  அப்பாவின் கோபம் பற்றி அவர் தெரிந்து  வைத்திருந்ததால் அவரும் பக்குவமாக எங்கள் இருவருக்கும் மத்தியில் அவ்வப்போது சமரசம் செய்வார்.
          விடுமுறைகள் முடிந்தன.நான் கிழிந்துபோன ” ரிப்போர்ட் புத்தகத்துடன் ” பள்ளி சென்றேன். நான்  நான்காம் படிவம் புகுந்தேன்.
மற்ற மாணவர்கள் புது உற்சாகத்துடன் முதல் நாளைக் கழித்தனர். என்னால் அப்படி முடியவில்லை. எங்களின் வகுப்பு ஆசிரியர் அசோகன். முதல் நாளிலேயே அந்த கிழிழிந்துபோன ” ரிப்போர்ட் புத்தகத்தை ” அவரிடம் காட்டினேன்.அவர் மிகவும் வியந்து போனார் அது போன்ற சம்பவத்தை அவர் கேள்விப்பட்டதே இல்லை என்றார். புது புத்தகம் வேண்டுமென்றால் தலைமை ஆசிரியரின் அனுமதி வேண்டும் என்றார்.   என்னை அழைத்துக்கொண்டு தலைமை ஆசிரியரின் அறைக்குச் சென்றார். அவரின் பெயர் ஜேசுதாசன். மிகவும் நல்லவர். அவரும் அப்பாவின் செயல் கேட்டு அதிர்ந்து போனார். முதலில் அப்பாவைப் பார்க்க வேண்டும் என்றார். ஒரு கடிதம் கேட்டேன். அதையும் உடன் தயார் செய்து தந்தார்.அப்பாவைப் பார்த்த பின்புதான் புதுப்  புத்தகம் தரலாம் என்பதைக்  கண்டிப்புடன் சொல்லிவிட்டார்.
          அன்று மதியம் வீடு திரும்பினேன்.அப்பா அங்கு இல்லை. வெளியில் சென்றுள்ளார் என்று சிதம்பரம் சித்தப்பா கூறினார். மாலையில்தான் திரும்பினார். நான் கடிதத்தை அவரிடம் தந்தேன்.நாளையே வருவதாகக் கூறினார். அங்கு வந்து தலைமை ஆசிரியரிடம் என்னைப் பற்றி என்ன சொல்வாரோ  என்றும் அஞ்சினேன்
          மறு நாள் காலையில் தலைமை ஆசிரியர் என்னை வரச் சொல்வதாக தகவல் வந்தது. நன் சென்றபோது அங்கே அப்பா அமர்ந்திருதார்.
தலைமை ஆசிரியர் என்னை அமரச் சொன்னபின்பு கூறினார்.
          ” உன் அப்பாவிடம் நீ நல்ல மாணவன் என்பதையும் சிறந்த ஓட்டக்காரன் என்பதையும் கூறியுள்ளேன். இனி அப்படிச் செய்ய மாட்டார். நீ
தொடர்ந்து நன்றாகப் படி. அதோடு அந்தப் பெண்ணுடன் வெளியில் போவதை விட்டு விட்டு பாடத்திலும் ஓட்டத்திலும் தொடர்ந்து கவனம் செலுத்து.. “
            நான் மறு பேச்சு சொல்லாமல் சரி என்றேன். நான் அங்கு செல்லுமுன்பே அப்பா அவரிடம் லதா பற்றியும் சொல்லி விட்டார். சரி பரவாயில்லை.என்ற மனநிலையுடன், ஒருவிதமான நிறைவுடன் அறையை விட்டு வெளியேறினேன். அன்றே எனக்கு புது ” ரிப்போர்ட் புத்தகம் ” கிடைத்து விட்டது.
          நடந்தவற்றை லதாவிடம் கூறினேன். அவளும் கொஞ்ச நாட்கள் பார்க்க வேண்டாம் என்று கூறினாள். நானும் சரி என்றேன்.
          இனி கவலைகளின்றி பாடங்களில் கவனம் செலுத்தலாம். எதிரே இருந்த திடலில் விடியலில் ஓடலாம். அதோடு சிதம்பரம் சித்தப்பாவும்
ஓரளவு பாதுகாப்புத் தந்தார்.
          இது பள்ளி இறுதி ஆண்டு. இதில் மிகவும் தீவிரம் காட்டினால்தான் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். அப்போதுதான் தொடர்ந்து எச்.எஸ். சி. யில் சேரலாம் என்ற முடிவுடன்படிப்பில் தீவிரம் காட்டினேன்.
          பள்ளி முடிந்து சுமார் இரண்டு மணிபோல் திரும்பியதும் சாப்பிட்டுவிட்டு உடன் ஒரு வகுப்பறையில் படிக்க உட்கார்ந்து விடுவேன். இடையில் ஒரு மாற்றத்திற்காக  கட்டுரைகளும் சிறுகதைகளும் எழுதுவேன். ஓவியங்களும் வரைவேன். நண்பர்கள் யாரிமும் பேசுவதில்லை. அப்பாவுக்குத் தெரியாமல்தான் கோவிந்தசாமியையும் ஜெயப்பிரகாசதையும் பார்த்துபேசி வருவேன்.
          ஒரு நாள் சற்றும் எதிர்ப்பாராத விதத்தில் அருமைநாதன் பள்ளிக்கு வந்தது பெரும் வியப்பத் தந்தது. அவன் அப்பாவிடம் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு ஓடி பல மாதங்கள் ஆகிவிட்டன. காவல் துறையினர்கள்கூட அவனைக் கண்டு பிடிக்க முடியவில்லை. ஒரு வேளை  குண்டர் கும்பலில் சேர்ந்து விட்டானோ என்றுகூட நாங்கள் சந்தேகித்தோம். அப்போது எங்கள் வட்டாரத்தில் பயங்கரமான குண்டர் கும்பல்கள் இருந்தன. அதில் சேர்ந்துவிட்டால் உயிருடன் வெளியேற முடியாது.
          அனால் நல்ல வேளையாக அவன் அதிலிருந்து தப்பித்திருந்தான். அவனுடன் தேநீர் கடை சென்றேன். வீடு செல்லவில்லை என்றான். அங்கு போகப் பிடிக்கவில்லை என்றான். அவன் அவலக் ரோட்டில் ஒரு கட்டிட நிர்வாகத்தில காண்ட்ராக்ட் வேலை செய்வதாகக் கூறினான். முகவரியும் தந்தான். இரவில்தான் தன்னை அங்கு பார்க்கலாம் என்றான். பகலில் எங்கு வேலை என்று சொல்ல முடியாது  என்றான்.
          நாங்கள் இருவரும் சிறு வயதிலிருந்து ஒன்றாக வளர்ந்த நண்பர்கள்தான். எங்களிடையே பல ஒற்றுமைகள் இருந்தன.இருவரும் தாயுடன் சிங்கப்பூர் வந்தோம். ஒன்றாக துவக்கப் பள்ளி சென்றோம். நான் வகுப்பில் முதல்  மாணவன்.அவன் எப்போதுமே கடைசி மாணவன்தான். எனக்கு படிப்பு நன்றாக வந்தது படிக்கவும் பிடித்தது. அவனுக்கோ படிப்பு வரவில்லை. படிப்பும் பிடிக்கவில்லை. அவன்  ஒழுங்காக படிக்கவில்லை என்று அவனுடைய அப்பா கண்டித்தார். நான் நன்றாகப் படித்தும் லாதாவைக் காதலிக்கிறேன் என்று அப்பா கண்டிக்கிறார். அவன் வீட்டை விட்டு ஓடிவிட்டான். நான் எவ்வளவு இன்னல்கள் வந்த போதிலும் அனைத்தையும் சகித்துக்கொண்டு அப்பாவுடன் இருந்து வருகிறேன்!
        நாட்கள் அமைதியாக நகர்ந்த போதிலும், எனக்கு அவ்வப்போது அப்பாவால் பிரச்னைகள் கூடியதே தவிர கொஞ்சமும் குறையவில்லை. நான் லதாவைப் பார்த்து அவளுடன்  வெளியில் செல்வதாகவே நம்பினார். அதனால் நான் வெளியில் சென்று திரும்பும் போதெல்லாம், பிரச்னை எழும். செய்யாத ஒன்றை செய்துவிட்டதாக அவர் கேட்கும் போதெல்லாம் எனக்கு கோபம் வரும். அவருக்கு வரும் கோபம் பற்றி சொல்லத்
தேவையில்லை!
        அது போன்ற நேரங்களில் சிதம்பரம் சித்தப்பா எனக்கு சாதகமாகப் பேசுவது அவருக்குப் பிடிக்க வில்லை. ” இது எனக்கும் என் மகனுக்கும் உள்ள பிரச்னை. இதில் நீ தலையிடாதே.” என்றும் அவரிடம் கூற முடியவில்லை. எனக்கு உள்ளுக்குள் ஒரு விதத்தில் மகிழ்ச்சிதான்.
          ஆனால் அந்த மகிழ்ச்சி நெடு நாள் நீடிக்கவில்லை.
          ஒரு நாள் காலையில் ஒரு சீனனின் சிறிய லாரி பள்ளியின்முன் வந்து நின்றது. எங்களுடைய சாமான்கள் அதில் ஏற்றப்பட்டன. நாங்கள் மீண்டும் வேறு இடம் பெயர்ந்தோம்! சிதம்பரம் சித்தப்பா அதைக் கண்டு அப்படியே திகைத்து நின்றுவிட்டார்!
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigation
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *