நகர்வு

author
0 minutes, 1 second Read
This entry is part 26 of 37 in the series 22 ஜூலை 2012

சாந்தாதத்

    அடுத்து என்ன செய்வது எனும் குழப்பத்துடன் பால்கனியில் நின்று கொண்டிருந்தான் கணேசன். எதிரில் சற்றே முயன்றால் தொட்டுவிடலாம் என்றளவு அருகாமையில் கம்பீரமாகத் தென்பட்டது புதிதாய் எழுந்து கொண்டிருந்தது அக்கட்டடம். அன்றுதான் ஜந்தாம் தளத்திற்குக் கூரை போடப்பட்ட அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு குளுமை கலந்த புத்தம் புது சிமெண்ட் வாசனையைக் காற்றில் அனுப்பிக் கொண்டு சலனமற்ற ஞானி போல் நின்று கொண்டிருந்தது. ஊர்..உத்தியோகம்..பயணம்… போக்குவரத்து.. இப்படி எக்கவலையுமில்லாமல் இது … சிறு பிள்ளைத்தனமாய் ஒரு எண்ணம். அப்போதைய அவன் நிலைமை அவ்வாறாக இருந்தது. இன்னும் சில மாதங்களில் இவன் நினைக்கும்.. இவனை அலைக்கழிக்கும் அத்தnaianaiனை அம்சங்களையும் அவை தொடர்பான உளைச்சல்களையும் உணர்வுகளையும் கொண்ட நிறைய மனிதர்களுக்கு அது ஒரு சுமை தாங்கியாகப் போகிறது என்பது அவனுக்குத் தோன்றவில்லை.

 

    இப்படி வந்து மாட்டிக் கொண்டு விட்டோமே… ஆயாசமாக இருந்தது அவனுக்கு. சகி..இதுவும் ஒரு அனுபவம் என்று ஒரு சுய சமாதானமும். வேறெதுவும் செய்ய முடியாத் நிலை. இன்னும் இரு தினங்களுக்கு ரயில்கள் ஓடாதாம். மக்களுக்கு பெரிய அபகாரத்தைத் திட்டமிட்டுவிட்டு.. சிறு உபகாரமாய் அதை இருபது நாட்களுக்கு முன்பே அறிவித்திருந்தது போராட்டக் குழு. கணேசனின் இப்பயணம் ஒன்றரை மாதம் முன்பே திட்டமிடப்பட்டு இருவழிப் பயணத்துக்காக முன்பதிவும் செய்தாகிவிட்டது. ஊர் விட்டுக் கிளம்பி எட்டு நாட்களாகி விட்டிருந்தது.

     “தெரிந்து தெரிந்து இப்ப அங்க போகணுமா? ரயிலே ஓடலின்னா எப்படி திரும்பி வருவீங்க? ”கிளம்பும்போதே சுகுணா எச்சரித்தாள்.

     “அதெல்லாம் அவ்வளவு சீரீயஸா இருக்காது. அந்த ரூட்ல ஒண்ணு ரெண்டு ரயிலாவது ஓடும்.  ஒரு வேளை அந்த ரயில் ரோக்கோ கான்சல் ஆனாலும் ஆயிடலாம். இப்ப நான் போய்தான் ஆகணும். வறப்போறது கல்யாண சீசன். பொன் வைக்க இடத்தில் பூ வைக்கற மாதிரி பத்து பேர் முன்னால் நகைங்க உடம்பெல்லாம் பளபளன்னு மின்ன ஆசைப் படுவாங்கில்ல…”

 

    அவன் நினைத்ததற்கு நேர்மாறாய் ஒரு ரயில் கூட ஓடவில்லை. நாளைக்கும் ஓடாது. ரயில்வேக்காரர்களுக்குப் பயம் தண்டவாளத்திலேயே சமையல் சாப்பாடு தூக்கம் டிராமா கூத்து பேச்சுன்னு நடக்கும்போது ரயிலை ஓட்டி.. ஏதாவது விபரீதம் நடந்தால் பின் விளைவாய் பூகம்பமும் சுனாமியும் தொடரும்.. இருக்கும் பிரச்சனைகள் போதாதா என்று  என்றுதான் அதி ஜாக்கிரதைபட்டு அந்த வழியின் அத்தனை ரயில்களையும் ரத்து செய்து விட்டார்கள். நாளைக்கு மறுநாள் ரயில் ஓடினாலும் அதில் கால் சுண்டு விரல் நகத்திற்குக் கூட இடமிருக்காது. பஸ்ஸில் போனால்..? அங்கு மட்டும் எப்படி இடம் கிடைக்கும்? ரயில் கூட்டத்திற்கு இப்போது அதுதானே புகலிடம்? ஒரு வேளை முட்டிமோதி இடம் பிடித்தாலும் அந்த பஸ் ஒழுங்காக ஊர்போய்ச் சேரும் என்பதற்கான உத்தரவாதம் கிடையாது. பஸ் தொடும்  எல்லைப் பிரதேசங்களில் கல் வீச்சு நடந்து பலத்த சேதமாம்.. ஏதோ இந்தியா – பாக்கிஸ்தான் பார்டர் போல்? சரி.. நிலைமை  சரியாகும் வரை பொறுத்திருக்கலாமென்றால் ஊரில் தலைக்கு மேல் வேலைகள் வரிசை கட்டிக் காத்திருக்கின்றன. என்ன செய்தால் இந்த ஊரை விட்டு நகர முடியும்?

    சென்னையிலிருந்த வந்த சுகுணாவின் அழைப்பு அப்போதைக்கு அவனை பாலகனியினின்று நகர்த்தியது.

     “நேற்று வரை நேரமில்லன்னீங்க.அந்தப் போராட்டக்காரங்க புண்ணியத்துல எதிர்பாராம நேரம் கிடைச்சிருக்கு. நாளைக்கு சார்மினார் பக்கம் போய் முத்து வாங்கிடுங்க. என்னென்ன வேணும்னு நான் சொன்னது ஞாபகமிருக்கில்ல?”

     “என்ன நீ.. பேப்பர் படிக்கிறதில்லையா? ரயில் ஓடலங்கறது மட்டுமில்ல. இங்க ஸ்கூல் காலேஜ், லோக்கல் பஸ், ஆபீஸ்னு எதுவுமே நடக்கறதில்ல. இந்த இலட்சணத்தில் இப்ப ரெண்டு நாள் பந்த் வேற. கடையெல்லாம் திறக்கமாட்டாங்க. சோறு தண்ணிக்கே சிரமமா இருக்கு. எப்படி சமாளிக்கறீங்கன்னு கேக்காம முத்தாம் பவளமாம். இங்க வரப்பல்லாம் வாங்கிட்டு வரேன். அதெல்லாம் என்னதான் செய்யற? எனக்குத் தெரியாம பிஸினஸ் ஏதாவது பண்ணிட்டிருக்கியா?”

     “ஆமா. நீங்க பண்ற பிஸினஸ் பத்தாதாக்கும், கல்யாணம் கார்த்திகை திருவிழான்னு போறப்ப அசல் தங்கத்தைப் போட்டுட்டுப் போனாக் கூட சந்தேகமாகப் பார்க்கறாங்க. பிழைப்புக்கு உங்களுக்கு வேற எதுவும் கிடைக்கல..”

    “விடு.மின்னுவதெல்லாம் பொன்னல்லன்னு நினைக்கறாங்க போல. நான் டீல் செய்யறதுலயும் கொஞ்சத்துக் கொஞ்சம் தங்கம் இருக்குடி. ‘ஒன் கிராம் கோல்ட்’னு உனக்குத் தெரியுமில்ல. சகி.. இன்னும் மூணு நாள்ல எப்படியாவது வந்து கேக்றேன்..”

    இவள் எப்பவும் இப்படித்தான். இங்க தொட்டு அங்க தொட்டு கடைசியில் என் வேலையில்தான் கைவப்பா..’ கணேசன் எரிச்சலுடன் நினைத்துக் கொண்டபோது மல்லய்யா வந்தான். எதிரில் எழும்பிக் கொண்டிருக்கும் அக்கட்டிடத்தின் வாட்ச்மேன். சித்தாளும் கூட. இங்கு வந்த முதல் நாள் இரவு பால்கனியில் நின்றிருந்தபோது ‘சாருக்கு எந்த ஊர்?” என்று அவன் ஆரம்பித்த பழக்கம். குணம் வந்து கொஞ்ச நேரம் பேசிவிட்டுப் போவான். என் வேலை மார்க்கெட்டிங் ஆதலால் அடிக்கடி இந்தப் பக்கம் வருவதால் தெலுங்கு புரியும். தெலுங்கு ” போன்ற” மொழியில் நான் அவனுடன் பேசுவேன்.

 

     “ ஹோட்டல்னா பரவாயில்லை. லாட்ஜில் சாப்பாடு கெடைக்காதே. என்ன சாப்பிடாங்களோ, எப்ப சாப்பிட்டிங்களோ. ரெண்டு சப்பாத்தி கொண்டு வரலான்னு நெனச்சேன். நாங்க செஞ்சதை நீங்க சாப்பிடுவீங்களோ மாட்டீங்களோன்னு. இதோ.. இதைச் சாப்பிடுங்க…”

    உப்பு நீரில் வேகவைக்கப்பட்ட கடலைக்காயை உரித்து வாயில் போட்டுக் கொண்டபோது அப்போதுதான் குழைக்கப்பட்டது போன்ற சிமெண்ட் வாசம் போல் ஒரு பிரமை.

    “என்ன சார்.. நல்ல தண்ணீலதான் வேக வச்சோம்”

    “ஜயோ. அதில்லப்பா.. யாரோ வந்து வாழப் போற கட்டடத்துக்காக பொழுதெல்லாம் எப்படி உழைக்கறீங்க நீங்கள்லாம். அது நினைவுக்கு வந்து..”

     “அது சரி.. நாளைக்கு நீங்க கெளம்பரதா  இருந்தீங்களே, என்ன செய்யப் போறீங்க? ஏன் .. இதப் பத்தி மொதல்லயே தெரியாதா உங்களுக்கு?”

    “தெரியும் மல்லய்யா. ஒண்ணும் ஆகாதுன்னு அசட்டு நம்பிக்கை. இப்ப முழிச்சிட்டு நிக்கறேன். பார்க்கலாம். இன்னுக்கு உங்களுக்கு வேலை தினத்தையும் விட அதிகமா.. நெட்டி முளைச்சிருக்குமே…”

    ஒரு கணம் போல் சும்மா இருந்து  பின் பேசிய மல்லய்யா முகத்தில் வேதனை தெரிந்தது.  இருளின் அடர்த்தியுடனான துயரம். குல்லியமாய் உணர முடிந்தது

“ சொல்லட்டுமா சார். செங்கல் செங்கல்லா அடுக்கி நாஙக கட்டற கட்டிடம்.  கட்டி முடுஞ்சி நீள அகலமா  எழுந்து நிக்கற அதைப் பார்க்கற்ப்போ நாங்க பட்ட சிரமமெல்லாம் ரொம்பச்சின்னதாத் தெரியும். அவவளவு நிறைவா இருக்கும். ஆனா இப்ப இதோ.. இந்த வேளையில் அது நடக்காது சார்” அரை குறை வெளிச்சத்தில் கறுப்பாய் கோட்டோவியம் போலத் தெரிந்த அந்தக் கட்டிடத்தை வெறித்தான் மல்லய்யா. ஏதோ தப்பாக நடந்திருக்கதெனப் புரிகிறது.  அவனே சொல்லட்டும் என் இருந்தான் கணேசன்.

   “ உங்க ஊருக்குக் கிளம்ப முடியலங்கற விசனத்தில் நீங்க இருக்கீங்க. எஙக் ஊருக்குக் கிளம்பவேண்டியிருக்கேன்னு நாங்க தவிச்சிட்டிருக்கோம். இனிமே நெருப்பு எங்க வயித்துலமட்டுந்தா சார். “

    “ஆந்திரக்காரனுங்க இனிமே இங்க பிழைப்பு நடத்த விட மாட்டாங்களாம். இவ்வளவு காலம் எங்க வயித்துல அடிச்சது போதும். எல்லோருமா உங்க ஊர் போய்ச் சேர்ற வழியைப்பாருங்கன்னு  இந்த தெலுங்கானா ஆளுங்க கறாரா சொல்லிட்டாங்க.மிரட்டறாங்க. எங்க காக்கிநாடாவிலே  எக்கச்செக்க போட்டி. ஏகமா சிரமப்பட்டாச்சு. இந்த ஊரு பெருகிய பட்டணமில்லையா.. தினத்துக்கு ஆயிரம் கட்டுமானம் நடந்திட்டே இருக்கும்.. கால் ஊனிக்கலாம்னு நாங்க ஒரு கூட்டமா இங்க புறப்பட்டு வந்தோம். இத்தனை வருசமா எல்லாம் நல்லாத்தான் போய்ட்டிருந்தது. இப்பதான் ஒரு எழெட்டு மாசமா பிரச்சனை பண்ணிட்டிருக்காங்க. ஏன் சார்.. எல்லோருமே தெலுங்குக்காரங்கதான். பின்ன எதுக்கு இப்படி…?

     அவனுக்கான பதில் எளியவன் என்னிடம் ஏது? அது எவ்வளவு இலகுவான விசயமா இருந்தால் இப்படி நீட்டித்துக் கொண்டே போகாதே?.. நினைத்தபடி நிசபதம் காத்தான். கணேசன் . மல்லய்யாவின் துயரத்தை விட மோசமாக இருந்தது இந்த மெளனம். திரும்ப அவனே பேச ஆரம்பித்தான். மடை திறந்தாகிவிட்டது. வெள்ளம் கொட்டத்தானே செய்யும்..

 

     ‘நேத்தி கும்பலா வந்து எச்சரிச்சுட்டுப் போனாங்க. திரும்ப இன்னிக்கு மதியமும் வந்தாங்க. கூரை போட்டாச்சு. மத்த வேலைல்லாம் நாங்க பார்த்துப்போம்.. நீங்க நடையைக் கட்டுங்கன்னு கத்திட்டுப் போனாங்க. இந்த பில்டிங்னு இல்ல. சிட்டில எல்லா இடத்திலயும் இதே பிரச்சனைதான். எங்க பில்டர் தெலுங்கானா மனுசன். அவங்க சொல்றது நியாயம்தானேங்கறாக. இப்படித் திடீர்னு சொன்னா எப்படின்னு எங்க சலபதிசார். அதான் எங்க பெரிய மேஸ்திரி.. எவ்வளவோ சொல்லிப் பார்த்தாரு. பில்டர் சார் நெஞ்சுல ஈரமே  இல்லாமப் பேசறார். பஞ்சம் பிழைக்க வந்த எங்களுக்கு யூனியனா இருக்கு..?”

இவ்வளவு விவகாரமாய்ப் பேசுகிறானே..! வியப்பாக, பரிதாபமாக இருந்தது. “ கவலைப்படாதெப்பா. நீ பயப்படறாப்பல எதுவும் நடக்காது..”வேறென்ன சொல்ல முடியும் என நொந்துகொண்டான் கணேசன்.

     “எங்க சலிபதிசாரும் இப்படித்தான் சொல்றார். பெரிய இடத்துல பேசிட்டிருக்காராம். நாளைக்கு தெரியலாம்னார்..”

    மறுநாள் பொழுதெல்லாம் டி.வி, செல், புத்தகம், பேப்பர், பிஸ்கட், பழம் கழித்துவிட்டு ராத்திரி மல்லையாவுக்காக காத்திருந்தான்.

     “நாளைக்கு ரயில் ஓடாதாம்.  எப்படிப் போவீங்க? ” கரிசனத்துடன் கேட்டபடி மல்லையா வர..”””””    நான் போறது இருக்கட்டும். உங்க சல்பதி சார் என்ன சொல்றார்?” அதே கரிசனத்துடன் கணேசன். தன் திரும்புமுகப் பயணம் இப்போது இரு கோடுத் தத்துவமாகிவிட்டிருந்தது அவனுக்கு.

     “என்ன சொல்றார்.. இன்னும் நாலஞ்சு நாள்ல குடும்பத்துடன் அவங்க ஊர் பீமாவரத்துக்குப் போய்டப் போறாராம். அஸ்திவாரமே ஆட்டம் கண்டப்புறம் நான்ங்க என்ன செய்ய முடியும். மூட்டை முடிச்சு கட்ட வேண்டியதுதான்..”

     “அப்ப நீங்கள்லாம் என்னதான் செய்யணும்கறாரு அவன்?”

     “அதப் பத்தி அவர் ஏன் சார் கவலைப்படணும்? ஊர் பக்கம் போய்ச் சேருங்கன்னு சொல்றார். எங்களுக்கு என்ன பத்திரத்திலயா எழுதிக் கொடுத்தாரு? தெனக் கூலிங்கதான நாங்க..”

     “ அது இருக்கட்டும். இப்படி வருஷ நடுவுல கிளம்பினா அவர் பிள்ளைங்க படிப்பு என்னாறதாம்..? ஒரு வருஷம் வேஸ்டாயிடும் கூட நினைக்காம. நின்னு போராடிப் பார்க்கலாமில்ல..”

     “அதெல்லாம் முடிஞ்சு போன கதை. விடுங்க. அவரு பொழைச்சிப்பாரு எங்க இருந்தாலும். அங்க போன உடனே பிள்ளைங்கள இதே வகுப்புல சேர்க்க ஏற்பாடு பண்ணிட்டாராம். பெரிய இடத்துல பேசிட்டிருக்காருன்னு நேத்தி சொன்னேன் இல்ல. இதான் போலிருக்கு. கொள்ளு முன்னால் வச்சா படுத்த குதிரையும் எழுந்து பறக்கும்னு சொல்வாங்களே. அத விடுங்க சார். நீங்க  பத்திரமா போயிடுவாங்க..”

     “என்ன செய்யப் போறப்பா..?”

சின்னதாய் சிரித்து ‘நமஸ்தே சார்’ சொல்லி விட்டுக் கிளம்பிய மல்லய்யாவிடம்… “  ஒரு நிமிடம் இருப்பா..” என்ற கணேசன் ஒரு கணத்திற்கும் குறைவான நேரத்தில் மீண்டும் சுதாகரித்துக் கொண்டு          ..” ஒண்ணுமில்ல. போய்ட்டு வாப்பா. தைரியமா இரு..” என்றார்.

—————————————————————

Series Navigationதாவரம் என் தாகம்பிறை நிலா
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *