நரகம் பக்கத்தில்…..(நிறைவுப் பகுதி)

This entry is part 17 of 19 in the series 13 ஏப்ரல் 2014
“புதிய உலகை
புதிய உலகை
தேடிப்போகிறேன்
என்னை விடு!விழியின் துளியில்
நினைவைக் கரைத்து
ஓடிப் போகிறேன்
என்னை விடு!

பிரிவில் தொடங்கிப் பூத்ததை
பிரிவில் முடிந்து போகிறேன்!
மீண்டும் நான் மீளப் போகிறேன்
தூரமாய்  வாழப்போகிறேன்”

அறைக்குள் இருந்து திவ்யாவின் குரலில் இனிமையான பாடல்  கணீரென்று ஒலித்து கதவையும் தாண்டி எட்டிப் பார்த்தது.

கோகிலா…நம்ம திவ்யாவுக்கு ரொம்ப நல்ல குரல்வளம்…நன்னாப் பாட்டுப் பாடறா… நம்ம ராஜேஷ் பாடச் சொல்லியிருப்பான் போல….புதிதாக வெட்கப்பட்டுக் கொண்டே சொல்கிறார் ராஜேஷின் அப்பா.

நீங்க ஒட்டுக் கேட்டீங்களா….? இந்த வயசில்  நீங்க இப்படிச் செய்யறது கொஞ்சங்கூட  சரியில்லை…ஆமா…..என்று இழுக்கிறாள் கோகிலா.

பக்கத்து வீட்டுக்கு கூட அவ பாடின பாட்டு ஓடிப் போயிருக்கும்…உனக்குக் கேட்கலை பாரேன்…உன் காதை கவனிக்கணும் என்றவர் , நீ முதல் முதல்ல ஒரு பாட்டு பாடினியே…”மல்லிகை என் மன்னன் மயங்கும்…பொன்னான மலரல்லாவோ….” என்று ஹம்மிங் செய்தவர் ..ஆளுக்கொரு நினைவு..யாரை விட்டது…? ம்ம்ம்ம்….நீ நிம்மதியாத் போய்த் தூங்கு…நீ நினைச்சது நடந்தாச்சு. நாளையிலேர்ந்து உனக்கு கூடமாட ஒத்தாசைக்கு உரிமையா மாட்டுப் பொண்ணும் வந்தாச்சு..என்று சொல்லிச் சிரிக்கிறார்..

அதிருக்கட்டும். எனக்கும் கேட்டுது அவ பாடற சத்தம்…ம்கும்…என்ற கோகிலா….அவா ரெண்டு பேரும் சௌஜன்யமா, சந்தோஷமா இருந்தா அதுவே  போதும்.. எனக்கு  வேற ஒண்ணும் வேண்டாம்.. திவ்யா ரொம்ப தைரியசாலிங்க. யாருக்கும் பயப்பட மாட்டா..அவங்க அம்மா கூட என்கிட்டே சொன்னாங்க,.பார்ப்போம். இருந்தாலும் இந்தக் காலப் பெண்கள் எங்க காலம் மாதிரி இருக்க முடியாது. எங்க காலத்து மரியாதை..என்ன? பண்பு என்ன? அடக்க ஒடுக்கம் என்ன…?

என்ன நீ பாட்டுக்கு என்ன என்ன என்ன….ன்னு கே பி சுந்தராம்ம்பாள் ஸ்டைலில் பாட ஆரம்பிச்சுட்டே….எங்கேயோ கேட்ட குரலா இருக்கேன்னு படத்தோட இருக்கற முருகன் முழிச்சுண்டு.வந்து “அழைத்தாயா…அவ்வையே?” ன்னு வேலும் கையுமா நிக்கப் போறான்……

நீ தான் பாவம்…நிறைய விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும்ன்னு நினைக்கிறேன்…சொல்லிக் கொண்டே விளக்கை அணைத்தார்.

அடுத்த சில நிமிடத்தில் அவர்களது அறையில்  ஆழ்ந்த குறட்டை ஒலிகள்  நீயா… நானா… என்று போட்டி போட ஆரம்பித்தது.

வழக்கம் போல இன்று வெள்ளிக்கிழமை என்ற நினைப்பு வந்ததும், போர்வையை உதறி விட்டு எழுந்த கோகிலா, காலை வேலைகளுக்குப் பரபரத்தாள். அவள் எழுந்து இரண்டு மணி நேரமாகியும், திவ்யாயின் திவ்ய தரிசனம் காணாது மெல்ல முணு முணு த்துக் கொண்டாள். வயசாக வயசாக தனியா எந்தக் காரியமும்  பண்ண முடியலை, பையனுக்கு ஒரு கால்கட்டைப் போட்டால் வரும் மாட்டுப்பொண்ணு வீட்டை, சமையலைப் பார்த்துப்பாள்னு  நான் கனவு கண்டா, வந்தவளுக்கும் நான் தான் பண்ணிப் போடணும் போலருக்கே…மனத்தின்  ஏமாற்றம் பாத்திரங்களோடு சேர்ந்து  ஒலித்தது.

அன்றைய செய்தித்தாள் செய்திகளில் மூழ்கிப் போன கணவரிடம், “என்ன பரிச்சைக்கு படிக்கறேளா ….?’ நான் ஒருத்தியா இன்னும் எத்தனை காலம் தான் இப்படி தனியா அடுக்களையைக் கட்டிண்டு அழணுமோ தெரியலை. அவலை நினைச்சு உரலை இடிச்ச கதையா இருக்கு.

காப்பியை விட மனைவியின் வார்த்தைகள் சுடச்சுட இருப்பதாகத் தெரிந்தது அவருக்கு.

குளித்துவிட்டு வந்த ..ராஜேஷ்…..”மா….காஃபி ரெடியா’ ? வழக்கம் போலத் தான் கேட்டான்.

தயாராக காப்பியை ஆற்றிக் கொண்டே வந்தவள், ‘இந்தா.’ என்று நீட்டிவிட்டு  ,திவ்யா இன்னுமா எழுந்திருக்கலை ? இன்னைக்கு வெள்ளிக்கிழமை வேற.

ம்ம்ம்.,….எனக்கு இன்னிக்கு ரொம்ப முக்கியமான வேலை, ஒரு ப்ராஜெக் விஷயம்  இருக்கு….அது என்னவாச்சோ தெரியலை…நான் சீக்கிரமாக் கிளம்பணும். அவள் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கறேன்னு சொன்னாளேன்னு சரின்னேன்.. இதோ எழுப்பறேன்….என்றவனிடம்,

பரவாயில்லை….விடு….நீ கிளம்பு…இன்னிக்கு நான் பார்த்துக்கறேன்…அம்மாவின் குரலில் தெரிந்த விரக்தியை கவனிக்கத் தவறவில்லை ராஜேஷ்..

அதற்குள் திவ்யா எழுந்து விட்டதன் அடையாளமாக பாத்ரூம் கதவு சாத்தப்படும் ஓசை கேட்கிறது.

சிறிது நேரத்தில் அவனுக்காக கட்டி வைத்த டிபன் டப்பாவை எடுத்துக் கொண்டு, பாத்ரூம் கதவைத் தட்டி…தான் கிளம்புவதாகச் சொன்னபோது ,

“இன்னிக்கு வெளிய போறோம்….ஞாபகம் இருக்கு தானே..சீக்ரம் வந்துரு…’ அவளது குரல் மட்டும் வெளியே வந்தது.

சரி சரி…என்று சொல்லிவிட்டுக் கிளம்பிப் போகிறான் ராஜேஷ்.

*   *   *    *    *     *     *    *    *

ஆபீசில் அவனது தலை தெரிந்ததும், அத்தனை பேர்களின் முகத்திலும் புன்னகை..ராஜேஷுடன் நெருங்கிப் பழகும் அரவிந்த் மட்டும் கூடவே ஓடி வந்தான்…….என்ன ப்ரோ …இவ்ளோ சீக்கிரம் ஆபீஸ் வந்துட்டீங்க….எல்லாம் நல்லாப் போச்சு தானே..குனிந்தபடியே .ரகசிய குரலில் கேட்டுவிட்டு நிமிர்ந்து பதிலுக்குக் காத்திராமல் ராஜேஷின் அறைக் கதவைத் திறந்து கொண்டு  தானும் அவனோடு சேர்ந்து உள்ளே நுழைந்து ஏஸி யைப் போட்டுவிட்டு  நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

ம்ம்ம்ம்…எனிதிங் ஸ்பெஷல்…..? இது என்ன ஃபைல்….? என்று அதை எடுத்துத் திறந்து பார்த்தவன்….அதிர்ச்சியுடன்,
என்னப்பா…..என்று  அரவிந்தை கேள்விக் குறியோடு பார்த்தவன் ….ஹேய்….இது எப்ப வந்தது….? இது தான் நம்ப கம்பெனியோட தலையெழுத்தை மாத்துற மேட்டர் இப்போ…என்று ஆச்சரியம் கலந்த குரலில் ராஜேஷ் பதறிப் போய் கேட்கிறான்..

எஸ்….பாஸ் …….! அந்த பெங்களூர் ப்ராஜெக்ட்….கை விட்டுப் போறாப்பல இருக்காம்.. அதோட ரிபோர்ட். தான் இது.

ஹெட் ஆபீஸ் சொல்லிட்டியா?

ம்ம்….மெயில் போட்டாச்சு…ஃ போனும் பண்ணி சொல்லியாச்சு….உங்களுக்கும் ஃ போன் பண்ணிப் பார்த்தோம்….சுவிட்சுடு ஆஃப்  தான் வந்தது..

நம்ப  குல்கர்னி மேடத்துக்குத் இந்த விஷயம் தெரியுமா? பதறினான் ராஜேஷ்.. எத்தனை கஷ்டப்பட்டு இந்த ஆர்டருக்காக லைன் போட்டு வெச்சிருந்தேன். இப்படி …அநியாயமா..? என்றவன்….ஒரு நாலு லட்சம் தள்ளிவிட்டிருந்தால் போதும் ஆர்டரை தள்ளிடலாம்….
பின்னே…இந்த ஒரு ப்ராஜெக்ட்  கிடைச்சா  அடுத்த அஞ்சு வருஷத்துக்கு கவலையில்லை.  முப்பது கோடி ஒரே இடத்தில். எப்டி தவறிப் போச்சு..

சின்ன ஹோல்….!

என்னது…எப்படி….எங்கே….?

நீங்க தான்…..உங்க கல்யாணம்….லீவு…..நீங்க பேசி வெச்சிருந்ததை அடுத்தவங்களால பேச முடியலை….நான் கூட உங்களைத் தொடர்பு கொள்ள முயற்சி பண்ணேன்….முடியலை.

இது எப்போ?

நேத்து தான் வந்திருக்கு…எனக்கும் இந்தப் ப்ராஜெக்ட் கை விட்டுப் போனதில் ரொம்பவே வருத்தம் தான் ப்ரோ.

சர்ஜாப்பூர்ல முப்பது கோடிக்கு ‘வில்லா’ஸ் கட்டற ப்ராஜெக்ட். எத்தனை மாதங்களாகப் போட்ட பிளான்……ரொம்ப ‘ப்ரெஸ்டிஜியஸ்  ப்ராஜெக்ட்’ அது….அது எப்படிப்பா…..கை நழுவிப் போக விடறது… டெண்டர் ஓபனிங்குக்கு  கூட நான் போயிருந்தேனே..

மேடம் என்ன சொன்னங்க….? ஆவலானான் ராஜேஷ்.

ரொம்ப அப்செட் ஆனாங்க…..மற்றபடி…அர்ஜெண்ட் மீட்டிங் ஒண்ணு இருந்தது…உடனே கிளம்பிப் போயிட்டாங்க…ப்ரோ..

சரி…விடு..நான் உடனே பெங்களூர்க்கு பேசறேன்…ஐ வில் கெட் பேக் திஸ்….! சொல்லிக் கொண்டே கைபேசியை எடுத்து எண்ணை தட்டி…..ஹலோ….திஸ் இஸ் ராஜேஷ்….ஹியர்…”

அடுத்த சில வார்த்தைகளில், ராஜேஷின் முகம் பிரகாசமடைந்து…..கைபேசியை அணைத்துவிட்டு, ஹேய்…ப்ரோ….ஒன் மோர் சான்ஸ்…
நான் இன்னிக்கே பெங்களூர் போறேன்…..உடனே ஒரு டிக்கெட்டுக்கு சொல்லிடு…ஈவ்னிங் ப்ளைட்….ஒகே .

இப்பத் தான் கல்யாணம் ஆகியிருக்கு…வீட்டில்..என்ன சொல்வாங்களோ..?.தயங்கினான் அரவிந்த்.

நோ..வே…..இதை விட எதுவும் பெரிசு இல்லை. இது தான் நம்ப லாங் டைம் கோல் …..நீங்க டிக்கெட் பாருங்க ப்ரோ.

டன் ….என்றவன்…அதானே..நீங்க இருந்திருந்தா… இப்ப வேற மாதிரி இருக்கும்….அதான் மேடமும் சொன்னாங்க…!

எனி…வே…இந்தத் தமிழ் வருடப்பிறப்புக்கு அந்த ஆர்டர் நம்ப  கைக்கு வந்துடும்னு சொல்லுங்க.ப்ரோ…

எஸ்….ஜய வருடத்தின் ஆரம்ப வெற்றி நமக்குத் தான். ராஜேஷா கொக்கா….எப்டியாவது காக்கா பிடிச்சு கொண்டு வந்துட மாட்டேன்.

அது சரி…அதான் நீங்க அங்கே…நான் இங்கே…!

ஐ….நீட் ஆல் த ரிலேடட் ஃ பைல்ஸ் இன் திஸ் மேட்டர்
….ப்ளீஸ்…!

ஓகே…பாஸ்…..என்று அரவிந்த் நகர்ந்தான்.

வீட்டுக்கு ஃபோன் போட்டு…..சொல்ல வேண்டும்…நினைத்துக் கொண்ட ராஜேஷ் ,..அடுத்தடுத்த வேளைகளில் மறந்தும் போனான்.

மாலையில் அவசர அவசரமாக வீட்டுக்குச் சென்ற ராஜேஷ், “திவ்யா…..இன்னைக்கு இப்போ நைட் ஃபிளைட்’ ல நான் பெங்களூர் போகணும்……அங்கேர்ந்து சர்ஜாப்பூர்….நாளைக்கு ஒரு முக்கியமான மீட்டிங்….இருக்கு…கோவிச்சுக்காதே….ப்ளீஸ்…என்றதும்,

எனக்குத் தெரியும்……உங்களுக்கு மட்டும் ஆபீஸ்…..!வேலை எல்லாம் இருக்கலாம்…கல்யாணம் எந்த விதத்திலும் உங்களுக்கு பாதிப்பைத் தந்து விடக் கூடாது…ஆனால் நான் மட்டும் வேலையை ரிஸைன் பண்ணிட்டு கல்யாணம் ..பண்ணிக்கணும்…என்ன நியாயமோ?  வெளில போகலாம்னு இருந்தேன்….இப்போ எனக்கு மூடி அப்செட்.. சரி..எப்போ வருவே ராஜ்…நீ ? முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள் திவ்யா. அதின் ஏமாற்றம் டன் கணக்கில் கொட்டிக் கிடந்தது.. ஒற்றைத் தாமரையாய் முகம் மலராமல் போகன் வில்லா மலர்கள் போல விரக்தியோடு இருந்தது..

ரொம்ப முக்கியம் திவ்யா. நம்ப கல்யாணத்தால தான் இப்படி ஒரு நிலை….நீ வருத்தப் படாதே….உனக்கு என்ன வேணும் கேளு….வாங்கிண்டு வரேன். தினம் ஃபோன் பண்றேன்.ரெண்டு நாளாகும்…திவ்யா…..என்றவனை

ப் பார்த்தாள்.அப்போ….நானும் வேலைக்குப் போறேன்….சரின்னு சொல்லு….எனக்கும் என்னோட ‘ ஜாபை’ விட்டுட்டோமேன்னு ஒரே ஃபீலிங்கா இருக்கு. இப்படி ரூமில் அடைந்து கிடக்கப் பிடிக்கலை.. நானும் போகட்டுமா? சந்தர்ப்பம் பார்த்து கேட்டுப் பார்த்தாள் திவ்யா.

அப்டியா……உனக்கு ரொம்ப ஆசையா இருந்தா கிளம்பு…நீயும் வேலைக்குப் போகலாம்…அதுக்காக வருத்தப் படாதே.
நான் அம்மாகிட்ட சொல்லிக்கறேன்…ஓகேயா….? அப்போ , நான் கிளம்பட்டா….

அவள் முகத்தில் ஒரு மின்னல் வெளிச்சம்…மெல்ல ஏர் பேக்கில் இதையும்  வைக்கட்டுமா என்று கேட்டுக் கொண்டே இரண்டு ஷர்ட்டை எடுத்து வைத்தவள், தாங்க்ஸ் ராஜ்…இந்த சந்தோஷத்தை நிச்சயமா நான் அம்மாகிட்ட சொன்னால் ரொம்ப சந்தோஷப் படுவா.என்றாள் .

சொல்லிடு…சொல்லிடு….என்ற ராஜ்… கிளம்பினான். பின்னாலேயே வந்த திவ்யாவின் முகத்தில் ஏகப்பட்ட பிரகாசம். விஷயம் புரியாமல் கோகிலா விழித்தாள் .

ஹாலுக்கு வந்தவன், அம்மாவிடம்..அப்பா வந்ததும் சொல்லிடும்மா என்று சொல்லிவிட்டுக் கிளம்புகிறான்..திவ்யாவைப் பார்த்து தலைசைத்ததும்…..

அவள்…அம்மா….நானும் வேலைக்குப் போகலாம்னு இருக்கேன்….எனக்கு இப்படி இங்கே தனியா இருக்கப் பிடிக்கலை . ஒரே போரிங் . எப்டித் தான் நீங்க, அம்மால்லாம் வீட்டில் அடைந்து கிடக்கறீங்களோ…என்று சிலிர்த்துக் கொண்டவளாக தோளைக் குலுக்கிக் கொள்கிறாள்.

வாசலில் ராஜெஷுக்காக வந்து நின்ற ஆபீஸ் காரில் ஏறியதும், கார் கிளம்பியது. ராஜேஷின் முகத்தை கண்ணாடி மறைத்து மூடியது.

அவன் சென்ற அரை மணி நேரத்தில் வாசலில் இன்னொரு கால்டாக்சி வந்து நின்று ஹாரன் அடிக்கும் சத்தம் கேட்டு திவ்யா அவசரமானாள்.

கைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டே ,….அறையிலிருந்து வெளிப்பட்டு, வாசலில் எட்டிப் பார்த்தவள்…..வேகமாக உள்ளே சென்று….ஒரு ஷாப்பர் பேக்குடன் வெளிப்பட்டு,’அம்மா நானும் அம்மா வீட்டுக்குப் போயிட்டு வரேன்…ராஜ் கிட்ட சொல்லியாச்சு…..என்று சொல்லிக் கொண்டே செருப்பை மாட்டிக் கொண்டு படி இறங்கி காரில் ஏறிக் கொண்டாள்.

கார் போவதையே  பிரமிப்புடன் பார்த்துக்  கொண்டிருந்த கோகிலாவுக்கு,.என்ன செய்வதென்றே புரியவில்லை. கோபமும், ஆற்றாமையும், எரிச்சலும் சேர்ந்து கொண்டு  அழுகையே  வந்தது. இதற்காகவா  கல்யாணம் செய்தோம்….?  தப்புப் பண்ணிட்டோமோ.? ராஜேஷ் தங்கமான பையனாச்சே….கிளியை வளர்த்து பூனைகிட்ட கொடுத்துட்டோமோ…? வீடு சொர்கமா மாறும்னு நம்பி நரகத்துக்குப் பக்கத்தில் வந்துட்டோமே….கன்னாப் பின்னாவென்று மனம் கலங்கித் தான் போனாள் கோகிலா.

இவர் வந்தால் என்னவென்று சொல்வது? யோசித்துக் கொண்டிருக்கும் போதே கணவரின்  ஸ்கூட்டர் தூரத்தில் தெரிந்தது.

கோகிலா,விஷயத்தைச் சொல்லத்  தயாராகக் காத்திருந்தாள். மனம் எரிமலையொத்த அழுத்தத்தில் கனன்றது.

ராஜேஷ் நிம்மதியாக பெங்களூர் நோக்கிப் பறந்து கொண்டிருந்தான். அவன் மனதில் வேறு கவலைகள். திவ்யாவை சமாதானம் செய்து விட்ட திருப்தி.

திவ்யா, தன் பிறந்த வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்…அவளது மனத்துள் ராஜேஷிடம் தனது ஆசையைச் சொல்லி சம்மதம் வாங்கிக் விட்ட  நிறைவும், மகிழ்வும்.நிரம்பி வழிந்தது.

கோகிலா ஏன்..இன்னிக்கு வாசல்ல வந்து நிக்கறா…? அப்போ.,.வீட்டில் ஏதோ பிரச்சனை நடந்திருக்கு….என்று மனதை தைரியப் படுத்திக் கொண்டே , வாசலில் வந்து ஸ்கூட்டரை நிறுத்தினார் ராஜேஷின் அப்பா.

*    *    *     *      *     *    *   *   *இரண்டு நாள் கழித்துத் தான் வருவேன் என்று சொல்லிவிட்டுச் சென்ற ராஜேஷ் அடுத்த நாளே வந்து விட்டான்.

வீட்டுக்குள் நுழையும் போதே…அம்மா…அம்மா…..போன காரியம் சக்ஸஸ் ….. எந்தப் பிரச்சனையும் இல்லாமே முடிஞ்சது..இனிமேல் தான் இருக்கு…வேலை பெண்டு கழண்டுடும். அடிக்கடி நான் பெங்களூர் போக வேண்டி வரும்…என்று ஷீ வைக் கழட்டியபடியே சொன்னவன், ஆமா…திவ்யா வந்தாச்சா? என்கிறான்.

என்னடா ரெண்டு பேருமா சேர்ந்து நாடகம் போடறேளா?.தமிழ் .வருஷப்பிறப்பும் அதுவுமா அவள் வீட்டிலயே இல்லை..நீ போன கையோட அவளும் பையைத் தூக்கிண்டு கிளம்பிட்டா……நான் ஒண்ணு நினைச்சேன் அது ஒண்ணு நடக்கறது.

எதும்மா…? அவ வேலைக்குப் போகணும்னு ரொம்ப ஆசைப் படறா. போயிட்டு வரட்டுமே. அவளோட செலவுக்கு ஆச்சு.

வேலைக்குன்னு போகாமலே அவளுக்கு ஒரு பொறுப்பும் தெரியலை. பெரியவாகிட்ட எப்படி நடந்துக்கணும்னு கூட சொல்லித் தரலையா? ன்னு சந்தேகமா இருக்கு. ஆரம்பமே இப்படி இருந்தா…அடுத்தது எப்படிப் போகும்னு சொல்லியா தெரியணும் ? என்னமோ போ…எதுக்கும் நீ கொஞ்சம் ‘இது’வாவே இரு. ஆரம்பத்தில் குனிஞ்சா அப்பறம் வாழ்நாள் பூரா குட்டுப் பட வேண்டியது தான்.

நம்ப அப்பா மாதிரியா?

அதைச் சொல்லலை…..நீ தான் ஆபீஸ் விஷயமா பெங்களூர் கிளம்பினே. கூடவே அவளும் கிளம்பிட்டா….எல்லாம் உன்கிட்ட சொல்லியாச்சாம். குரலும் , தொனியும் வேறு விதமாக ஒலித்ததைக் கண்ட ராஜேஷ்….மனசுக்குள் ‘கல்யாணத்துக்கு முன்னால இருந்த அம்மா வேற….இப்பப் பேசற அம்மா வேற..’ என்று தோன்றியது/

இதை , இந்த எண்ணத்தை வளர விடக் கூடாது. அப்பறம் வீடே நரகமாயிடும். நான் மத்தளமாயிடுவேன் …அவன் .நினைத்ததும்
”தொம்’ மென்ற சத்தத்துடன் வந்து விழுந்தது அடுக்களையில் சாமான்கள்.

அம்மா…என்னாச்சும்மா…? இப்போல்லாம் கிட்சன் உனக்கு குருக்ஷேத்ரம் நடக்கற இடமாட்டமா இருக்கா….? சமையலுக்கு ஆள் போட்டுடவா.

நன்னாப் போடுவே….இத்தனை காலம் கண்ணுக்குத் தெரியாதது இன்னைக்கு தெரிஞ்சுடுத்தா?  நான் ஒண்ணும் உன் பொண்டாட்டியை சமைக்கச் சொல்லிட மாட்டேன்…பயப்படாதே…..ஒரே நாள்ல இப்படிச் சாய்ஞ்சு போகும் என்னோட படின்னு யார் கண்டா?

ஐயோ….அம்மா…..அவ அம்மா வீட்டுக்கு போயிருக்கா…நான் வரும்போது என்னையும் அங்கே வந்து அவளை அழைச்சுக்கச் சொல்லி ஃ போனில் சொன்னாள் . நான் தான் உன்கிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்னு இருந்ததா, நேரா இங்கே வந்துட்டேன்.

கோகிலாவின் முகத்தில் லேசான மாற்றம்…மனம் தடுமாரியதற்கான அறிகுறி அதில் தெரிந்தது.

அப்படி  என்னடா விஷயம்…? என்கிட்டே தனியாப் பேசற அளவுக்கு…..ஏகப்பட்ட சந்தேகத்துடன் பார்த்தாள் அம்மா.

அம்மா…..ஒரு சாதாரண நிலம் இருக்குன்னு வெச்சுக்கோ….அது பூரா என்ன இருக்கும்…? சொல்லு பாப்போம்.

என்னடா விளையாடறியா? எனக்கே பாடம் சொல்லித் தர வந்தியா….? சாதாரண நிலத்தில் கல்லும் மண்ணும் தான் இருக்கும்..வேறென்ன? அதுக்கு.

ம்ம்ம்ம்…..அதே நிலத்தைப் பச்சைப் பசுமையா விளையும் பூமியா நினைச்சுப் பாரேன்….!

கற்பனையிலா…..? கஷ்டம்டா….அதே தரிசாத் தான் தெரியும்.

ம்ம்…தரிசா இருக்குற நிலத்தை பொன் விளையற பூமியா பதப்படுத்த என்ன செய்யணும்..?

மண்ணோட மண்ணாக் கிடந்து கஷ்டப் படணும் …காத்திருக்கணும். பொறுமையா…!

கரெக்ட். அது மாதிரி தான்….நமக்கு ஒண்ணை நமக்கு சாதகமா மாத்தணும்னா அதோட நாமும் போராடணும் இல்லையா..?

ம்ம்…அதுக்கென்ன இப்போ…? இதச் சொல்லத் தான் தனியாப் பேசணும்னு சொன்னியா….யாராவது கேட்டால் சிரிப்பா.

நான் சொல்ல வந்ததை அமைதியாய் முழுசாக் கேளேன்.

ஒரு பேச்சுக்கு சொல்றேன்…..ஆபீஸ்ல ஒரு ப்ராஜெக்ட் கிடைக்க நாங்க எப்படில்லாம் குட்டிக் கரணம் போடறோம்…எத்தனை விஷயங்களை யோசிக்கறோம்…அமைதியா காயை நகர்த்தறோம்….முதல்ல நஷ்டம் அடைஞ்சாலும்…பின்னால வரப் போற நிம்மதியான லாபத்து மேல கண் வைச்சுண்டு  ஒரு சேல்ஸ் க்ளோஸ் பண்ண மனசுக்குள்ள கணக்கு போட்டுண்டே வெளில ஒண்ணுமே  தெரியாமல் சாயற பக்கம் சாஞ்சுண்டு கவளைஞ்சு கொடுத்துண்டு போகலையா?

எனக்கும் ஆரம்பத்துலேர்ந்து  ‘லேடி பாஸ்’ தான் இருந்தாம்மா ..உனக்கே தெரியுமே…..அவாள்லாம் எடுக்கும் அதிரடி முடிவுகளை நன்னாப் புரிஞ்சுண்டு என்னையே நான் இவ்வளவு தூரத்துக்கு வளர்த்துண்டு வந்திருக்கேன். ஸோ ….இந்தக் காலத்துப் பெண்களுக்கு சுயமா சிந்திக்கிற தன்மை அதிகமா இருக்கறதால சுதந்திர உணர்வும் நிறையவே இருக்கு , கூடவே ஈகோவும் வந்துடுது..திவ்யாகிட்டயும்  ‘ஈகோ’ இருக்கு. அவளுக்கு இருக்குற ஈகோவை நான் தப்பும் சொல்லக் கூடாது. அதுவே அவளோட சுபாவமும் இல்லை.

முதல்ல…அவள் வழிக்கே தான் இனி நான் போகப் போறேன். நீ என்னோட அம்மா…உனக்கு என்னைப் புரியும். நீ தான் இப்ப எனக்கு சப்போர்ட்டா இருக்கணும். இந்தக் காலத்தில்  கணவன் மனைவிங்கற உறவுகள்ல கிடைக்கும் பரஸ்பர மரியாதையை விட நண்பர்களா இருந்துண்டு கிடைக்கிற உரிமை தான் குடும்பத்துக்கே நல்ல அஸ்திவாரமா அமையறது..அவளும் நன்னா படிச்சிருக்கா.  அவள் வேலைக்குப் போகட்டும். அங்கேர்ந்து கூட பொறுப்புகளைக் கத்துக்கலாம் இல்லையா?

திவ்யாவுக்கு வேலைக்குப் போகணும்னு தான் ஆசை. அப்படித்தான்.அவளோட சுதந்திரத்தை அவள் ரொம்ப விரும்பறா…..அதில் யாரும் புகுந்து விடக் கூடாதுன்னு கவனமா இருக்கறதா நினைச்சுக்கறா. ஒரே பெண்ணா இருந்திருக்கா இல்லையா?

அவளோட சுதந்திரத்தில்  நாம தலையிட்டால்  அவள் உள்ளுக்குள்ளே  உடைஞ்சு போவாள். இந்த ஒரு சின்ன விஷயம் தான் நாளைக்குப் பூதாகாரமா உருவெடுக்கும்.ஒரு பெரிய கப்பல் மூழ்கறதுக்கு ஒரு சின்ன துளை போதுமில்லையா.? அதனால தான் சொல்றேன்., அவளை நீ ஆரம்பத்திலயே உனக்கு ஏத்தவளா திருத்தணும்னு , மாத்தணும்னு நினைக்காதே.

அவளே ஆசைங்கற நரகத்துக்குள்ளே சிக்கித் தவிக்கிறாள். அதையும் நான் தப்பாச் சொல்லலை. . அப்படிப் பார்த்தால் ஒவ்வொருத்தரும் ஏதோ ஒரு நரகத்துக்கு பக்கத்துல தான் தெரியாமல் உழன்றுண்டு இருக்கோம்.  இதோ…எனக்கு இருக்கு பாரு…இந்த சிகரெட். பழக்கம்…..உங்களுக்கெல்லாம்  பிடிக்கலை..ஆனால் எனக்கு இதை விட முடியலை..ம்ம்ம்.

சொல்லுடா…நான்…இல்லையில்ல....நீ என்ன சொல்ல வரே…..நாங்க தான் என்ன செய்யனும்னு..பொறுமை இழந்து பேசினாள் கோகிலா.

இரும்மா….அதான் சொல்லிண்டு வரேனே..

இந்த நேரத்தில் தான்  நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் பொறுமையும் அமைதியுமா இருந்து ஓவர் ஆக்ட் கொடுக்காமே என்னோட ஒத்துழைச்சால்  போதும்….திவ்யா,,,நம்ம திவ்யாவா ஆயிடுவா.

நீ சுத்தப் பைத்தியக்காரனா இருக்கியே…..அவ மாறுவாள்னு தோணலை.

அவளுக்கு ரொம்பப் பக்கத்தில் ஆசைங்கர நரகம் இருக்கு. அதைத் தான் அவ சொர்கமா நினைக்கறா…நினைச்சுட்டுப் போகட்டும்..எனக்கு அது புரியலைன்னா தான் கஷ்டம். எனக்கு அது புரிஞ்சு போச்சு. அதை அவளுக்கும் புரிய வைக்கறது தான் என்னோட கடமை. அதுக்கு ஆகும் நேரம் காலம் வருஷம் எல்லாம் நான் அனுபவிச்சுத் தானே ஆகணும்.

அப்போ புதுச் செருப்பு கடிக்கும்னு உனக்கும் தெரியும்…அப்படித்தானே.
அம்மா….நானும் என்னோட கோப தாபத்தை வெளிய கொட்டினால்…வீணா வீடே கெட்டுப் போய்டும். இத்தனை படிச்சு சம்பாதிச்சு என்ன உபயோகம்னு நீயே  சொல்லு,? அவள் வீட்ல இருந்துண்டு நாள் பூரா  என்ன செய்யப் போறா…? அட்லீஸ்ட் அவளோட செலவுகளை அவள் ஆசைப் படறதை அவளே வாங்கிக்கட்டுமே…அந்த உரிமையைக் கூடவா நான் தரக் கூடாது…?
இல்லடா…வீட்டில் கூட மாட எனக்கு உதவியா….

நீயும் இத்தனை காலமா இந்தக் குடும்பத்துக்கு சமைச்சுப் போட்டு பாத்துண்டு….உனக்குன்னு என்ன வாழ்க்கை வாழ்ந்தே…நீ?

கொஞ்சம் உனக்காக யோசி…உன் இஷ்டப்படி இரு..!  சமையலுக்கு ஆள் போட்டுக்கலாம்.
எப்பவும் அதே மாதிரி கட்டுக் கோப்பா…இருக்கணும்னு நினைக்கறதை விடும்மா…புதுமையான உலகத்துக்கு ஏத்தாமாதிரி உன்  மனசைப் புகுத்திக்கோ.திவ்யா, . அவாத்துல எவ்ளோ சந்தோஷமா இருந்தா தெரியுமா? அதே சந்தோஷத்தை அவளுக்கு இங்கேயும்  கொடுக்கணும்னு நினைக்கறேன்.
உனக்கு ஒண்ணு சொல்லட்டுமா…? இந்த ஆசைக்கு வில்லனே….எதிர்ப்பு தான்.
யாராவது அந்த ஆசையை எதிர்த்தா மட்டும் தான் அதுக்கு வீம்பு அதிகமாகும்….வேண்டாததை செய்யத் தூண்டும்.
ஆசையை எதிர்க்காமல்….கேட்டதை கொடுத்துண்டே இருந்து பாரு…எதிர்ப்பில்லாத ஆசை….! சப்புன்னு போகும்..
ஆசையே…….இது நரகம்னு.  அங்கேர்ந்து ஒடிடும்….எல்லாமே எந்த எதிர்ப்புமே இல்லாமல் கிடைச்சாச்சுன்னா அங்கே  ஆசைக்கு என்ன வேலை சொல்லு..அவளோட இந்தச் சின்னச் சின்ன  ஆசைகளை நிறைவேத்தறதுல  எனக்கும் சந்தோஷம் நிச்சயமா இருக்கும்மா.சரி…நீ இவ்வளவு சொல்றே…நான் கேட்டுக்கறேன்….ஏன்னா எனக்கும் திவ்யாவை பிடிக்கும். அவ இஷ்டப் படி வேலைக்குப் போகட்டும்.

அப்போ….நீயும் கிளம்பு. நாம ரெண்டு பேருமே அவாத்துக்குப் போய்ட்டு திவ்யாவை கையோட அழைச்சுண்டு வந்துடலாம். அவள் ரொம்ப சந்தோஷப் படுவா..

மகன் சொல்லும் நியாயத்துக்கு கொஞ்சம் மனசுக்குள் இடம் கொடுத்துத் தான் பார்ப்போமே ….என்று கணக்குப் போட்ட கோகிலா…..சரி வா என்று கிளம்புகிறாள். அச்சாரமாக  ராஜேஷின் முதல் ஆசை எதிர்ப்பில்லாமல் நிறைவேறி பிள்ளையார் சுழி போட்டது..

இந்த தமிழ் வருஷப் பிறப்புலேர்ந்து நான் மகன் மெச்சும் மாமியார் என்று தனக்குள் சொல்லிச் சிரித்துக்  கொண்டே கிளம்பினாள்  கோகிலா..

——————————————————————————————————————

Series Navigation
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *