நாடகம் நிகழ்வு அழகியல். ஒரு பார்வை.

This entry is part 24 of 37 in the series 18 செப்டம்பர் 2011

நாடக உலகம் இயல் இசை சேர்ந்த அழகியல் கொண்டது. முத்தமிழும் இணைந்து கிடக்கும் ஒரு பரந்த வெளியை உடையது. பெண்ணிய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு சிறந்த நாடக ஆசிரியரின் சந்திப்பு நிகழ்ந்தது. நம்மையே நாடகக் கதாபாத்திரங்களாக உணரச் செய்யும் ஒரு வசீகர வாசிப்பு அவருக்கே சொந்தம். உலகமே ஒரு நாடக மேடை. அந்த மேடையில்., எல்லையற்ற வெளியில் ”நாடக வெளி” என்ற நாடகக் குழுவை நடத்திவரும் திரு ரங்கராஜன் அவர்களின் புத்தகம் “ நாடகம் நிகழ்வு அழகியல்”.

காஸ்மிக் டான்சர் நடராஜரின் நடனம்., கூத்து ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் உடைய நூல் இது. சிதம்பர வெளியை., உள்ளிருக்கும் ஒன்றை வெளிக்கொணர்வதில் ., அதை உணர்வதில்., உணரவைப்பதில் இருக்கும் சுகம் கிடைக்கிறது நாடகம் சார்ந்து யோசிக்கும் இந்த நாட்களில்.., ( எதைப்பார்த்தாலும் ஓவியமாகவே தெரிவதாக விகடனில்., ராஜ்குமார் ஸ்தபதி போன்ற ஓவியர்கள் சொல்லி இருக்க. , எதைப்பார்த்தாலும் கவிதையாகவே நமக்குத் தோன்ற) ரங்கராஜன் அவர்களின் இந்த புத்தகம் மற்றும் அவருடன பரிச்சயம் எதைப் பார்த்தாலும் அவருக்கு நாடகமாகவே உருவாக்கம் கொடுப்பதை உணர முடிந்தது.

ஒரு பயணத்துக்கு தயாராவது போல் அவருடனான உரையாடலுக்குத் தயாராக வேண்டும் நாம். அம்பையின் ஆற்றைக் கடத்தலை அவர் வாசித்தபோது நாங்களும் ஆற்றைக் கடந்திருந்தோம். அவர் எதிர்பார்க்கும் எக்ஸ்ப்ரஷன்ஸை விட அதிகமாய் அதைக் கேட்டவர்கள் மனதில் நிகழ்வுகளும் உணர்வுகளும் ஓடியது உண்மை. எல்லாவற்றிலும் அவர் ஒரு அழகியலை எதிர்பார்க்கிறார். அதையே முன்வைக்கிறார். நவீன நாடகங்களை., அதன் அழகியல் செறிவோடு பகிரும் விதம் அருமை..

இன்றைய சூழலிலும் பெண் இருண்ட குகைக்குள்ளிருந்து வெளிவரத் துடிப்பதை., ஒரு சுதந்திர மனப்போக்குடன் வாழ துடிப்பதை ஒரு நேர்மறையான எண்ண ஓட்டத்தோடு பெண்ணியம் சார்ந்த குரலாய் தன் நாடகங்களில் பதிவு செய்திருக்கிறார் அவர். ஒரு நாடக விரும்பியாக நாடகங்களைப் பிரசுரிப்பதை வெகுஜனப் புத்தகங்கள் கைக்கொள்ளாத நிலையில் கிட்டத்தட்ட 60 சிறந்த நாடகங்களை 10 வருடங்களாக அவருடைய ”நாடக வெளி” யில் வெளியிட்டிருக்கிறார்.

நாடகம் நடத்தப்படும் மேடை முற்றிலுமாக உபயோகப்படுத்தப்படவேண்டும் என்பதிலிருந்து அதில் நடிப்பவர்கள் முழுக்க முழுக்க உள்வாங்கித் தன் உணர்வுகளோடு வெளிப்படுத்தவேண்டும் என நினைப்பது நம்மைப் போன்ற சராசரி நாடக ரசிகர்களுக்குப் புதுமையாய் இருக்கிறது. காமெடி தோரணங்களையும்., நின்ற இடத்திலேயே வெளிப்படுத்தப்படும் டயலாக் டெலிவரிகளையுமே நாடகம் என இதுவரை கண்டு வந்தவர்க்கு இவரது நாடகங்கள் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தும் என்பது நிதர்சனம். நடிப்பவர் மட்டுமல்ல பார்ப்பவரையும் அந்த உணர்வுகளோடு சிலநேரம் வாழவைப்பதே அந்த நாடகத்திலிருந்து கூடு விட்டுக் கூடுபாயும் எண்ணங்களின் வெற்றி.

தொன்மைகள் நிரம்பிய நம்முடைய திருவிழாக்கூத்துக்களில் இவருக்கு இருக்கும் ப்ரேமையையும் அபிமானத்தையும் காண முடிகிறது. தியேட்டர் என்பதே வெறும் நடிப்பாக இல்லாமல் நாம் அந்தக் காரெக்டராக இருந்தால் ஏற்படும் உண்மை உணர்வுகளின் பகிர்வாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். உடல்களைக் கடந்து ஆனால் உடல் மூலம் வெளிப்படும் மொழி என சொல்லாம். கவிதைகளையும் சிறுகதைகளையும் நாடகமாக்கும் போது அவை நினைத்தறியமுடியாத வேறொரு கோணத்தில் பரிணமித்ததை விவரிக்கிறார். கூத்துக்கள் பொழுதுபோக்கு என்பதைத்தாண்டி் மனிதன் உணர்வு ரீதியாக தன்னைப் புதுப்பித்துக் கொள்ளவும் வடிகாலாக இருந்ததையும் குறிப்பிடுகிறார்.

புரிசை நாடக விழாக்கள்.,மைக்ரே நேரேஷன் என்னும் சிறு சிறு விவரணைகளையும் நுழைந்து பார்க்கும் பார்வையை உண்டாக்குகிறது. சமகாலத்தில் பெண்ணின் இருப்பின் சிக்கல்களையும்” பனித்தீ” என்ற நாடகத்தைத் தனிநபர் கூத்தாக ”உஷாராணி” என்னும் பெண்கலைஞர் சிகண்டி பாத்திரத்தை ஏற்று ஆடியபோது ஏற்பட்ட உணர்வு விவரிப்புகளையும் யதார்த்தத்தோடு அவர் சித்தரிப்பது மனதை நெகிழ்த்தியது.

கண்ணப்பத் தம்பிரானிடம் கூத்துக் கற்க கலைஞர்கள் புரிசை நோக்கி வந்தது அவரின் பெரும் திறமைக்கான., கலைக்கான ஒரு அங்கீகாரமே. வேலம்மாள் கல்லூரி போன்ற பல கல்லூரிகளில் நாடகங்களுக்கான பயிற்சிப்பட்டறை நிறுவப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டது., புதிய தலைமுறைக்கும் ஆரோக்கியமான நாடகத்தைக் கொண்டு செல்வதாக உள்ளது.

எங்கள் கல்லூரியில் மகாராணி என்ற அக்கா கரகாட்டத்தில் ஈர்ப்பு ஏற்பட்டு கற்றுக் கொண்டு கல்லூரி ஃபைன் ஆர்ட்ஸ் போட்டிகளில் கண்ணில் ஊசி., ரூபாய் நோட்டு எல்லாம் எடுத்ததும்., கரகத்தை வைத்தபடியே புடவையை படுத்தபடி சுற்றிகட்டி கரகத்தை பேலன்ஸ் செய்ததும் நினைவில் வருகிறது. நம் நாட்டுப்புறக் கலைகளை இளைய தலைமுறை அக்கறையோடு கற்று அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது என்பது கலாசார முரண்பாடு ஏற்பட்டுள்ள இந்தச் சூழலில் சவாலான காரியமே. அதைத் தொடர்ந்து செய்து வருவதால் ரங்கராஜன் மிக ஈர்ப்புக்கு உள்ளாகிறார்.

ஆறாவயல் காளியம்மன் கோயில் திருவிழாக்களில் வருடம் தப்பாமல் கூத்து நடப்பதும் அதற்கு பெரும் செல்வந்தர்களும் பாய் தலையணையோடு சென்று களிப்பதுமான காட்சி மனதில் ஊடாடியது புரிசை நாடக விழாக்களைப் பற்றிப் படிக்கும்போது.. ஆனால் சிலசமயம் கூத்தில் கோமாளிகள் செய்யும் அட்டகாசம் வசனப் பிரட்டல் அதிகம்தான். என என் உறவினர் ஒருவர் சொல்லி இருக்கிறார்.

பேராசிரியர் ராமானுஜத்தின் கலாசாரப் பயிற்சி கொண்டவைகளாக நாடகங்கள் அமையவேண்டும் என்ற அவாவும்., புதிய ஆக்கல் என்பது மரபின் நீட்சி மற்றும் சிந்தனைத் தூண்டலே ஆகும் என்பதும்.,, ந. முத்துசாமி ஒவ்வொரு மரபுக்குள்ளும் அம்மரபு தாண்டிய புதிய கற்பனைகள் செயல்பட்டு புதிய மரபுகள் உருவாவதை இனம் காண்பதும்.,( பார்சி மரபின் தாக்கத்தில் நாடகங்கள் நடத்தப்பட்ட போது சுதந்திர வேட்கையை முன்னிருத்தி நாடகங்கள் நடத்திய) பாஸ்கரதாசின் மகள் வயிற்றுப் பேரனான முருகபூபதி புனைவின் வழி நாடகத்தைப் பார்ப்பதும் அதனால் உருவான கலை உத்வேகமும் ஆற்றுதல் தன்மையும் அழகு. தாசீசியஸின் நாடகங்கள் தட்டையாக பரிமாணங்களற்று., வெறும் இயந்திர ரீதியான கோஷங்களோடு இருப்பதாக சொல்கிறார்.

இத்தாலிய நாடக ஆசிரியர் ப்ராண்டெலோவின் ”ஆசிரியரைத் தேடிய ஆறு கதாபாத்திரங்கள்” ( SIX CHARACTERS IN SEARCH OF AN AUTHOR) ஏற்படுத்திய அதிர்வும், முருகபூபதியின்,” செம்மூதாய் ” ஏற்படுத்திய அதிர்வும் இழப்பின் வகை என்றாலும் வேறு வேறானவை.. விளிம்பு நிலை மனிதர்கள் பற்றியதான ”அரவான்” நாடகமும்.,, ”பரமபதம்” எழுப்பிய உணர்வும்., ”ஜீவப்பிரயத்தனம்” எழுப்பிய இருப்பிற்கான கேள்வியும்., அரவாணிகளின் ”உறையாத நினைவு”ம்.,,என்னை நானாக ஏற்றுக் கொள் என்ற ஏக்கமும் படித்துப் பலமணி நேரம் நீடித்தது.

கூத்தின் நவீன வடிவம்தான் நவீன நாடகங்கள் என்றும் பல்வேறு ஊர்கள் சார்ந்த கூத்துப் பாணிகளும்., கூத்து வடிவத்துக்குள்ளிருந்தே புதிய கூத்துக்கள் உருவாக்கப்படுவதும்., பார்வையாளர்களைப் பங்குபெற வைக்கும் தன்மையும் சிறப்பாக இருக்கின்றன. கூத்தின் துரிதத் தன்மை எல்லாவற்றையு விட வசீகரமானதாய்., வலிமையானதாய் துரிதசெய்தி மற்றும் எண்ணக் கடத்தியாய் இருக்கிறது.

தேசிய நாடகப் பள்ளியின் செயல்பாடு பிரமிக்க வைத்தது. இந்தி தெந்தவர்தான் படிக்க முடியும் என்பது ஒரு வட்டத்துக்குள் நிறுத்துகிறது அதை. அல்லது மனிதர்கள் கலைக்காக பல மொழிகளையும் கற்கத் தூண்டுகிறது எனவும் கொள்ளலாம். அதில் அல்காஷியிடம் பயின்ற பாரதி மணி அது பற்றி சிறப்பாக சொல்வார். பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் நாடகத்துறை ஒரு ஒரு படிப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது .கிரீஷ் கர்னாட் போன்ற கலைஞர்களும் ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய நாடகப் பள்ளி நிறுவப்படப் போராடி வருகிறார்கள்.

”மனம் பிறழ்ந்த தேவதைகளும்”., கவிஞர் ”சதாரா மாலதி”யும்., ”மணிமேகலை”யும் மனதை நெகிழ வைத்தார்கள். தமிழ் ஊடகங்களில் பெண் இழிவுப் பார்வையைச் சாடி இருந்த விதம் அருமை. திராவிட இயக்கத்தின் நாட்டுப் புறக் கலை வளர்ப்பு என்பது ஆண்டு முழுமையும் செயல் பட வேண்டியதன் அவசியம் சொல்லப்பட்டிருக்கிறது.

நோய்க்கூறான மனநிலையில் ஆழ்ந்திருந்தாலும் கிராமிய வாழ்வின் யதார்த்தத்தையும் முடிவெடுக்கும் திறமையையும் புலப்படுத்தும் அம்ஷன் குமாரின் ”ஒருத்தி ”திரைப்படமும்., சர் சி வி ராமனின் ஆவணப் படத்தில் அவரின் விருதுக்குப் பின்னான பொறாமைகள் நிறைந்த சூழலில் அவர் பதவி இறக்கம் பெற்றதும்., வித்யாசமான உணர்வுகளைத் தோற்றுவித்தது.

தமிழ் சினிமாவின் அழகிய பழைய பாடல் காட்சிகளும் வணிக மயமாக்கத்துக்கும் பின் அவற்றின் வேகமும் மாற்றமும்.,., தமிழ் சினிமாக்களில் சுருக்கமாகச் சொல்லப்படுபவையை சாலை விபத்தாகவும்., தன்னைப்போலவே இடது சாரி மனப்பான்மை கொண்ட ”கே வி ராமசாமி”யின் நட்பும்., வீதி நாடகங்களும்., அவர் வெளியிட்ட ”ஞானரதம்” அவர் எண்ணப் பிரதிபலிப்பாய் வெளிவந்ததும் , ”சதீஷ் ஆலேகரி”ன் மராட்டிய நாடகமான ”மகா நிர்வாணத்”தை அவர் மொழிபெயர்த்துத் தர தமிழினி மூலம் சமீபத்தில் புத்தகமாகக் கொண்டு வந்ததும் என சரளமாக செல்கிறது., இழப்புகள் எல்லாம் ஈடுகட்ட முடியாதவைகளே என இன்னுமொருதரம் உணர்த்தி.

நடிப்பதற்காக அல்ல படிப்பதற்காகவே உருவான நாடகமாக ”பிரதாப சந்திர விலாசம் ”தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்களை ஈர்க்கவில்லை என்பதை ”இந்திரா பார்த்தசாரதி” குறிப்பிட்டதையும்., நாடகத்தின் அழகியல் சூழல் குறித்த செறிவான பார்வை உருவாகக் காரணமான பேராசிரியர் ”இராமனுஜம்” நாடகங்கள் பற்றி அண்ணாமலையும்., ”சொல்லப்படாத சினிமா” பற்றி திருநாவுக்கரசின் தொகுப்பும்., சி. அண்ணாமலையின் பெரியார் பற்றிய ”வெங்காயம்” நாடகமும் அ. ராமசாமியின் ”ஒளி நிழல் உலகமு”ம். யதார்த்தத்தைப் பிரதிபலிக்கின்றன.

தன் வாழ்வை அதன் இன்பியல் போக்கில் வாழ்ந்த நடனக் கலைஞர் ”சந்திரலேகா” ., கர்நாடக நாடகக் கலைஞர் ”கே. வி. சுப்பண்ணா.”, தன்னிலை சார்ந்த மொழியிலேயே கவிதைகள் சிறப்பாக எழுதிய ”நகுலன்”., புளிய மரத்தின் கதை எழுதிய ”சுந்தர ராமசாமி” ( எனக்கு ஜே.ஜே சில குறிப்புகள் தான் நினைவுக்கு வரும்.) ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஒரு கலைஞனாக படைப்பின் சுதந்திரத்தை விரும்புவதும் அதன் அழகியலை நேசிப்பதும் அதைச் செதுக்கிக் கொண்டே சிறப்பானவைகளாக அடுத்த அடுத்த வம்சாவளியினரை உருவாக்குவதுமாக இந்த நாடகம் நிகழ்வு அழகியல் என்னை ஈர்த்திருக்கிறது. கதை கவிதைக்கு மட்டுமே வாசிப்பாளர்களானவர்கள் மட்டுமல்ல சினிமா நாடக உலகம் சார்ந்து இயங்கும் அனைவருமே இந்த நாடகம் சார்ந்த அழகியல் நூலையும் படித்துப் பார்ப்பது அவசியம் எனத் தோன்றுகிற்து..

நூல் :- நாடகம் நிகழ்வு அழகியல் ( கட்டுரைகள்)

ஆசிரியர் :- வெளி ரங்கராஜன்.

வெளியீடு :- அடையாளம்

விலை :- ரூ. 90/-

Series Navigationகாரணமில்லா கடிவாளங்கள்கனவுகள்
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

3 Comments

  1. Avatar
    vediyappan says:

    நாடகம் குறித்த முழுமையான ஒரு தகவலை தேனம்மையின் இந்த கட்டுரையில் காண முடிகிறது. புத்தகத்தை படிக்கத் தூண்டும் இதுபோன்ற திறனாய்வு பாராட்டப் படவேண்டியது!

  2. Avatar
    தேனம்மைலெக்ஷ்மணன் says:

    நன்றி வேடியப்பன் & ராமலெக்ஷ்மி:)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *