நினைவுகளின் சுவட்டில் (96)

This entry is part 6 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

எனக்கு இப்போது நினைத்துப் பார்க்க ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து….” என்று எதற்கெடுத்தாலும் கோஷமிட்டு தன் தாய் நாட்டுப் பற்றையும் தமிழ் பற்றையும், தம் பெருமையையும் இரைச்சலிட்டுச் சொல்லும் அந்த கோஷத்திலேயே எல்லாம் முடிந்து விட்டதாக நினைக்கும் ஒரு இயக்கம் முளை விட்டு இன்று ஒரு பலத்த சக்தியாக விளங்கும் நிலையில் தமிழும் தமிழ் நாடும்
எந்த நிலையில் இருக்கிறது எனபது நமக்குத் தெரியும். ஒரு கலாசார வறுமை. சிந்தனை வறுமை. இதை நான் எழுத ஆரம்பித்ததிலிருந்தே சொல்லி வருகிறேன்.

ஆனால் இன்றும் கூட அந்த கோஷங்களைக் கற்காத ஒடிஷாவில் பழ்ம் குடிகள் வசிக்கும் பிராந்தியத்தில் ஒரு முகாமில், பல பிராந்தியக் காரர்களும், பல மொழி பேசுபவர்களும் ஒரு சில வருட பிழைப்பிற்காகக் குழுமியுள்ள அந்த முகாமில், கலை என்றும், இலக்கியம் என்றும் சிந்தனை உலகம் என்றும் என்ன சாத்தியம்? ஆனால் ஆச்சரியப் படும் வகையில் கலை, இலக்கியம், சினிமா பற்றியெல்லாம் எனது ஆரம்பப் பாடங்களைக் கற்றதும், அவற்றில் அன்றைய சிகரங்களை அறிமுகப்படுத்திக்கொண்டது, பின் என் வாழ்க்கை முழுதுமான தேடலின் பாதையை நிர்ணயித்ததும் அந்த முகாமில் கழித்த ஆறு வருடங்களில் தான்.

ஒரு பஞ்சாபி தன் பிழைப்புக்காக தாற்காலிகமாக எழுப்பிய தார்ப்பாலின் கொட்டகையில் தான் (நினைவில் மறுபடியும் பதித்துக் கொள்ளவும் நான் பேசுவது 1952 – 1956 காலத்தில்) அந்தப் பஞ்சாபிக்கு வரவு செலவு கணக்குப் பார்க்கத் தெரியும். அவன் சினிமா அந்தக் காலத்து வெகு ஜன ஹிந்தி சினிமாவை விட மோசம். அந்த முகாமின் கலவையான மக்கள் கூட்டத்தில் ஒரிய மக்கள் தான் அதிகம். பின் வங்காளிகள், பஞ்சாபிகள், தமிழர், மலையாளிகள் எல்லாம் சேர்த்தால் கொஞ்சம் முன் பின்னாக ஒரே அளவில் ஒரிய மக்களின் எண்ணிக்கைக்கு சமமாக இருப்பார்கள். ஆனால் சினிமா பார்ப்பது ஒரிய மக்கள் இல்லை. மற்ற மொழிக் காரர்கள் தான்
.
அங்கு தான் அந்தக் கொட்டகையில் தான் மார்லன் ப்ராண்டோ நடித்த On the Water Front பார்த்தேன். Paul Muni நடித்த Good Earth பார்த்தேன். ரஷ்ய இரண்டாம் உலக யுத்தத்தில் ஸ்டாலினின் சாகஸம் நிறைந்த தலைமையை பிரசாரம் செய்த Fall of Berlin பார்த்தேன். Judgement at Nuerenberg பார்த்தேன். நியூ தியேட்டர்ஸின் பி.ஸி. பருவா தேவதாஸாக நடித்த வங்க மொழி தேவதாஸ் படமும். கே.எல். சைகல் தேவதாஸாக நடித்த ஹிந்தி படமும் பார்த்தேன். ஒரு சிறைச்சாலையையே களனாகக்கொண்டு அதில் சிறையிருந்த ஆயுட் கைதிகள் ஒவ்வொருவரின் வாழ்க்கை யையும் சொல்லும் தபன் சின்ஹாவின் லோஹோ கொபொட் (இரும்புக் கிராதி) என்ற படமும் பார்த்தேன். கொலைக் குற்றவாளிகள் தான், ஆனால் அவர்கள் மனமும் அன்பு நிறைந்தது. அவர்கள் மனம் இளகும் தருணங்களும் இருந்தன அவர்கள் நேசித்த உயிர்களும் இருந்தன. அவர்களும் மனித ஜீவன்கள் தான் என்று சொல்லும் படம். அந்த காலத்துக்குச் சற்றுப் பிந்தி இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலோ அல்லது 19-ம் நூற்றாண்டின் பின் வருடங்களிலோ வங்காளாத்தில் பிரபலமாக இருந்த போவல் சன்யாசி கதையை தபன் சின்ஹா எடுத்திருந்த ரத்ன தீப் என்ற படமும் பார்த்தேன். அதுவே ரத்னதீபம் என்று தமிழிலும் வந்தது என்ற செய்தியை பத்திரிகைகளில் படித்தேன். ஜோகன் என்ற மிகச்சிறந்த ஹிந்தி படமும் அங்கு தான் பார்த்தேன். ஸ்ரீ ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸா என்ற வங்காளிப் படம் அவருடைய வாழ்க்கையை ஆதாரித்தது, விவேகானந்தர் அவருடைய சீடரானதும், அவர் காலத்திய கிரீஷ் சந்திர கோஷ் நடத்திய நாடக வாழ்க்கையும் அவர் நாடகத்தைப் பார்க்க பரமஹம்சர வந்ததும், அதில் பரம ஹம்சர் தன் நினைவிழ்ந்து பரவசமானதும் ஒரு பரம புருஷரின் வாழ்க்கையும் அவரது காலத்தையும் வெகு சிரத்தையுடன் சித்தரித்திருந்த படம் அது. கிரிஷ் சந்திர கோஷ் அவரை அழைத்துச் செல்வதும், பரம ஹம்சர் டிக்கட் வாங்கணுமே என்று சொல்வதும், நீங்கள் ஒன்றும் கொடுக்க வேண்டாம், வாருங்கள் போதும், எனபதும் பரமஹம்ஸர், “கீ ரே, கேனோ(ம்) திபோ நா, பூரோ ஏக் டகா திபோ”, என்று அவர் சொல்லும் அந்த வெகுளித்தனம் மிகுந்த, சாது பாவனையில் சொல்லும் அழகும் இன்றும் என் நினைவிலிருந்து அழியவில்லை. இந்த டார்ப்பாலின் கொட்டகையில் தான் சத்யஜித் ரேயின் பாதேர் பஞ்சலி பார்த்தேன். வருடம் அனேகமாக 1955.

இதற்கு முன் என் நண்பன் மிருணால் காந்தி சக்கரவர்த்தி கல்கத்தாவுக்கு விடுமுறையில் சென்ற போது பாதேர் பஞ்சலி பார்த்துவிட்டு வந்து ஒருபெரிய கூத்தடித்தான். இந்த மாதிரி ஒரு படம் இந்தியாவில் எந்த மொழியிலும் வந்ததே கிடையாது. இந்த சிகரத்தைத் தொடுவது இனி எந்த மொழியிலும் சாத்தியமில்லை. வங்காளியில் வேண்டுமானால் இந்த சிகரத்தைத் தொட எல்லாரும் முயல்வார்கள்” என்று சொல்லிக்கொண்டே இருந்தான். ஆபீஸில் மற்ற நண்பர்கள் எல்லாம், “ஏய் பங்காளி பாபூ, பஸ் கர், பஹூத் ஹோகயா, ஜ்யாதா பக் பக் ந கர்” “போதும் ரொம்பவும் துள்ளாதே,” என்று அவன் வாயடைப்பார்கள். “ நீ பெங்காளி படமே அத்தனையும் பார்த்தது கிடையாது. இனி இருக்கு, பஞ்சாபி, தமிழ், ஹிந்தி எல்லாம். அதுவும் பார்த்தது கிடையாது. பின்னே எப்படி இது வரைக்கும் இந்தியாவிலே இந்த மாதிரி படமே வந்தது கிடையாதுன்னு சொல்றே. இது வரைக்கும் நீ எத்தனை படம் பாத்திருக்கே” ஒரு பங்காளி படம் சரி பாத்துட்டே நல்லாருக்கு. உனக்குப் பிடிச்சுப் போச்சு. அதோட நிறுத்து” என்று சொல்வேன்.

ஆனால் அது புர்லாவில் அந்த தார்ப்பாலின் கொட்டைகைக்கு வந்து பாதேர் பஞ்சலி பார்த்ததும், மிருணாலின் உற்சாகம் எனக்குப் புரிந்தது. அது ஒரு அனுபவம். இதுகாறும் கிட்டியிராத அனுபவம். இது போன்று ஒரு படம் வந்ததில்லை தான். பின் நான் மிருணாலிடம் அவன் உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டேன். பின் அவனோடு அங்கு வரும் எல்லா வங்காளிப் படங்களுக்கும், செல்வது வழ்க்கமாயிற்று. அந்த தார்ப்பாலின் கொட்டகை தான் எனக்கு ஒரு பயிற்சித்தளமாக, என் ரசனையை வளர்த்துக் கொள்ள வழிகாட்டிய என்னைப் பண்படுத்திய ஒன்றாக இருந்தது.

அதே தார்ப்பாலின் கொட்டகையில் தான் நான் சிவாஜி கணேசனின், அவருக்கும் கதைவசனம் எழுதிய மு.கருணாநிதிக்கும் பெரும் புகழையும் சம்பாத்தியத்தின் உச்சத்தையும் அடையும் பாக்கியத்தைத் தந்த பராசக்தி ஆபாச இரைசலை அங்கேதான் பார்த்தேன். அந்த பஞ்சாபி பிழைப்புக்குத் தான் அந்த சினிமா கொட்டகை நடத்தினான். கலைச் சேவைக்கு அல்ல. ஆனாலும் அங்கு சத்யஜித் ரேயின் பாதேர் பஞ்சலியும் பார்க்க முடிந்தது மார்லன் ப்ராண்டோவின் On the Water Front – ம் பார்க்க முடிந்தது. ஒரு சகாப்த புருஷனாக, நடிப்பின் உச்சமாக, நாம் கொண்டாடும், தமிழ் சினிமாவின் புரட்சி கர திருப்பமாக நாம் கொண்டாடும் பராசக்தியையும் அங்கு நான் பார்த்தேன். 1953 என்று நான் நினைக்கிறேன். வங்காளம் அந்த சமயத்தில் ஒரு சத்யஜித் ரேயைத் தந்து ஒரு புதிய நாம் எண்ணிப் பாராத திருப்பத்தைத் தந்தது. நாமும், “கலை முதலாக தொழில் முறையாவும் காத்து வளர்ப்பது தமிழ் நாடாச்சே. கல் தோன்றி மன் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடியாயிற்றே. அங்கே ஒரு சத்யஜி ரே என்றால், இங்கு நாமும், கண்களைப் பிதிக்கிக்கொண்டு, மூஞ்சியைச் சுளுக்கி, அடுக்கு மொழியில் இரைச்சலிடும் ஒரு நடிகர் திலகத்தைத் தரவேண்டாமா? தந்தோம். எது எது சினிமா அல்லவோ, அது அத்தனையையும் அங்கே தெரிந்துகொண்டேன். அதைக்கண்டு வெகுதூரம் ஒதுங்கவும் அந்த தார்ப்பாலின் கொட்டகையும், சிவாஜி கணேசனும், மு. கருணாநிதியும் தான் எனக்குக் கற்றுத் தந்தார்கள். ஒரு படம், என்ன வென்று நினைவில் இல்லை, ஜெமினி கணேசனும், சிவாஜி கணேசனும் ஒருத்தருக்கொருத்தர் உரக்க இரைச்சலிட்டுக்கொண்டு வசனம் பேசி சண்டை யிடுவார்கள். அவர்கள் ஒவ்வொருவர் கையில் ஒரு துப்பாக்கி எதிராளியைக் குறி வைத்திருக்கும். ஆனால் இவர்கள் நீண்ட வசனங்கள் பேசி ஒருத்தரை ஒருத்தர் வசை மாறி பொழிந்து கொள்வாரகள். என்ன செய்ய? வசனம் பேச, மூஞ்சியை எத்தனை விதமாக கோணலாக்கிக் கொள்ள முடியுமோ அத்தனை விகாரமாகக் கோணலாக்கிக் கொண்டு… அடக்க வயிற்றுப் போக்கு இருந்தால் தான் மூஞ்சி அத்தனை கோணலாகும். விழிகள் பிதுங்கும். ஜெமினி கணேசனும் உச்சத்தில் இருக்கும் மூன்று நடிகர்களில அவரும் ஒருத்தராயிற்றே,. சிவாஜி கணேசனுக்கு ஈடு கொடுக்க வேண்டாமா? அவரும் துப்பாக்கியைக் குறி வைத்து வீர வசனம் பேசவேண்டாமா? கருணாநிதி காட்டியவழியில் வசனம் அரை மணிநேரம் மூச்சு விடாமல் கத்தினால் தானே அது கலைப் படமாகும். வெற்றிப் படமாகும். அந்தக் கொட்டகை தான் எனக்கு எங்கு ஆபாசமும் இரைச்சலும் நிறைந்திருக்கும் என்றும், எதை ஒதுக்க வேண்டும் என்றும் கற்றுக் கொடுத்தது.

இதற்கு எதிராக புரட்சி செய்கிறேன் என்று மூக்கின் மேல் ஒரு விரலை வைத்து சிந்தனைச் சிற்பி போஸ் கொடுக்கத் தொடங்கிய, அந்த போஸுக்கு உரியவரான ஸ்ரீதருக்கு தமிழ் நாட்டில் தகுதிப் பத்திரம் வழங்கக் காரணமான “கல்யாண பரிசு” படத்தையும் அந்த கொட்டகையில் தான் பார்த்தேன். இதற்குப் பிறகு ஸ்ரீதர் இன்னொரு வகை கலைஞர் ஆகிவிட்டார். தமிழ் நாட்டில் கலை என்றால் கோமாளித்தனமும் உடன் வரவேண்டுமே. ஒரு பத்திரிகையில் ஒரு கேள்வி ஸ்ரீதரிடம். “நீங்கள் சத்யஜித் ரே மாதிரி படமெடுப்பீர்களா?” அதற்கு, மூக்கின் மேல் ஒரு விரல் வைத்த சிந்தனை போஸ் கொண்ட புகைப்படத்தின் பக்கத்தில் அவர் பதில் “ ஏன் முடியாது? ஏன் முடியாது? ஏன் முடியாது?” எதையும் மூன்று முறை சொல்வது தான் தமிழ் சினிமா மரபு. தமிழ் பஜனை சம்பிரதாயம். அப்போது தானே மக்கள் மனதில் பதியும்? இதே மரபில் தான் பாலசந்தர் என்ற ஏதோ ஒரு இமையம், படங்களில் இங்கிலீஷ் தமிழ் இரண்டிலும் வசனம் பேசுவார்கள். “ What I mean is, என்று சொல்லி உடனே, நான் என்ன சொல்றேனா…” என்று இழுக்க வேண்டும். தமிழ் தெரிந்தவர்களுக்க் இங்கிலீஷ் வசனம் புரியாமல் போய் விடக்கூடாது. இங்கிலீஷ் படம் பார்த்து அங்கங்கே சிரித்துவிட்டு வருபவர்களுக்கு தமிழ் புரியாமல் போய்விடக்கூடாது என்று இங்கிஷ் வசன்ம். இதுவும் ஒரு புரட்சி தான். இப்படிக் கழிந்தது என் புர்லா வாசம்

தமிழ் நாட்டில், புர்லா மாதிரி ஏதோ ஒரு தாற்காலிக குடியிருப்பு வேண்டாம். 1950- 1956 என்று அரை நூற்றாண்டு பின்னால் தள்ளிப் போகவும் வேண்டாம். ஒரு பஞ்சாபி தன் தார்ப்பாலின் கொட்டகையில் காட்டிய மாதிரி ஒரு புறநகர் பார்வையாளருக்கு மார்லன் ப்ராண்டோ, பால் முனி, சத்யஜித் ரே, தபன் சின்ஹா, ஸ்ரீதர், சிவாஜிகணேசன் என்று அவரவர்க்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளட்டும் என்று ஒரு கலவை கிடைக்க இன்றாவது தமிழ் நாட்டில் சாத்தியமா? இந்தக் கேள்வியை நான் நியாயமாக 1950-களின் தமிழ் நாட்டில் என்று கேட்டிருக்க வேண்டும். 1961-.ல் நான் சென்னைக்கு விடுமுறையில் வந்திருந்த போது அதாவது புர்லாவில் பார்த்த 7/8 வருடங்கள் கழித்து, ப்ராட்வேயில் ஒரு சின்ன தியேட்டரில் சத்யஜித் ரே படம் ஓடுவதாக பத்திரிகையில் படித்து போனேன் எனக்கு சென்னை பரிச்சயமில்லை. தி.நகரிலிருந்து ப்ராட்வேக்கு தேடிப் போனேன். மாடியில் ஒரு சின்ன ஹாலில் தான் அந்த தியேட்டர் இருந்தது. அதிகம் போனால் 100 பேர் உட்காரலாம். சுமார் இருபது பேர் படம் பார்க்க வந்திருப்போம். மேலே நான் எதுவும் சொல்ல வேண்டிய தில்லை. எது எது நம்மைப் பாதிக்கும், எதில் நம் ரசனை இருக்கிறது என்று ஒரு சமாசாரம் இல்லையா.? 1946=ல் ரத்தன் என்ற ஒரு ஹிந்தி சினிமா வந்தது. மதுரை சித்ரகலா ஸ்டுடியோவில் பார்த்தேன். அதன் பிறகு தமிழ் படங்கள் ஹிந்தி சினிமா மெட்டுக்களை போட்டி போட்டுக்கொண்டு காப்பி அடித்தன. அவாரா என்ற ஹிந்தி படத்தில் ராஜ் கபூர் போட்டிருந்த பிர்ம்மாண்ட செட்டைப் பார்த்த பிறகு, தமிழ் படங்களும் செட் போட ஆரம்பித்தன. இதெல்லாம் உடனே பற்றிக் கொள்ளும். ரசனை என்கிற வஸ்து இருக்கிறதே அது தான் நமக்கு ஒத்துக் கொள்ளாது. ஒவ்வொரு மனித சமுதாயத்துக்கும் ஒரு கலாசார முகம், ரசனை வாசனை இருக்குமே தனித்து. நமக்கு என்று இருக்கும் கலாசாரம் என்னதான் முக்கி முக்கி எடுத்தாலும், அது தனக்கு வேண்டியதைத் தான் எடுத்துக்கொள்ளும்.

1956 – களின் கடைசியில் நான் தில்லி வந்ததும், எனக்கான தேர்வுகளைச் செய்துகொள்ள தில்லி நிறைய வாய்ப்புக்களை அள்ளிக் கொடுத்தது. தில்லியில் சினிமா தியேட்டருக்கு நான் போவது என்பது வெகு அபூர்வமாகவே ஆயிற்று. வந்ததும் இரண்டு பில்ம் சொசைட்டியில் உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டேன். மாதம் எட்டு ஒன்பது உலகத்து எல்லா நாடுகளிலிருந்தும் வரும் சிறந்த படங்களை மிகக் குறைந்த செலவில் நான் பார்க்கமுடிந்தது. ஒரு பெர்க்மன் படம் பார்க்க ஐந்தாறு மைல் பின் இரவில் நடந்து போய் பின் நடு இரவில் திரும்ப வேண்டுமென்றால் நடக்கத் தயங்கியதில்லை. பாகவத மேளா பார்க்க வேண்டுமென்றால், மழையில் நனைந்து கொண்டே வயல்களினூடே ஆறுமைல் நடந்து அங்கேயே இரவு ஒரு திண்ணையில் படுத்து பின் காலை எழுந்து நடக்கவும் தயங்கியதில்லை. சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் இருந்த நாட்கள் அவை.

———————

Series Navigationவாழ்வியல் வரலாற்றின் சிலபக்கங்கள் –24கான் அப்துல் கஃபார் கான் மற்றும் இஸ்லாமிய சான்றோர்கள்
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    knvijayan says:

    வெ.சா. உண்மையாக சொல்லுங்கள் ஒரு படத்தில் கூட சிவாஜி ஒழுங்காக நடிக்கவில்லையா.

  2. Avatar
    கௌதமன் says:

    @knvijayan, அவர், தன் கருத்தைக் கூறியுள்ளார். திமுக வினர் தமிழ் தமிழ் என்று பேசியே, அவருடைய கருத்துப்படி இருந்த தமிழ் கலச்சாரத்தை கொலை செய்து விட்டனர் என்ற ஆதங்கம் அவருக்கு.

    வீர பாண்டிய கட்டபொம்மனைச் சொன்னால் ஓவர் ஆக்டிங் என்பார்கள். வ. உ. சி படம் என்று சொன்னால் மிகையான பிரதிபலிப்பு, அப்படி எந்த சுதந்திர போரட்ட வீரரும் வாழவில்லை என்பார்கள்.

    எம்.எஸ்.வியின் கச்சேரிக்குப்பின், ரஷ்ய அரங்கத்தில் அனைவரும் எழுந்து நின்று, வெகு நேரம் கை தட்டிய அதே ரஷ்ய மக்கள், பதேர் பஞ்சலி படத்தை ரசிக்கவில்லை. அவர்களுக்கு புரியவில்லை அல்லது ஜீரணிக்க முடியவில்லை என்று அர்த்தம் கொள்ளலாம்.

    ஆயினும் திரு. வே. சா. அவர்கள் உணர்த்துவதைப் போல, தமிழர்கள் தங்களை தாங்களே தாழ்த்திக்கொள்வதில் நம்பர் ஒன். பெங்காலிகள் அப்படி இல்லை என்பதும் உண்மையே. காலனி ஆதிக்கத்தின் சொச்சங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *