நீங்காத நினைவுகள் – 7

This entry is part 4 of 23 in the series 16 ஜூன் 2013

 

    “ஆசாரம்”  என்னும் சொல்லுக்குத் தமிழ் அகராதியில், அதற்குரிய பல்வேறு பொருள்களிடையே, “சுத்தம்” என்னும் பொருளும் தரப்பட்டுள்ளது. இந்தியாவில் சில சாதியினர் – முக்கியமாய்ப் பார்ப்பனர்கள் – மிகவும் ஆசாரம் பார்ப்பவர்கள்.  ஆசாரம் என்கிற பெயரில் அவர்கள் அடித்து வந்துள்ள கூத்து நகைப்புக்கு மட்டுமல்லாது, அருவருப்புக்கும், கண்டனத்துக்கும் உரியதாகும். இப்போது அது பெருமளவு போய்விட்டாலும், பெருங்காயச் செப்பு காலியான பிறகும் வாசனை அடிப்பது போல் 80-90 வயதுகளில் உள்ளவர்கள் ஓரளவு அந்தப் பழக்கங்களை இன்னமும் பிடித்து வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

        ஆசாரமாக இருப்பதாக, அல்லது சுத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக, நினைத்துக்கொண்டு, கீழ்ச் சாதியினர் என்று தங்களால் முத்திரை குத்தப்பட்ட சக-மனிதர்களை எந்த அளவுக்குத் தாங்கள் புண்படுத்தியும் கேவலப்படுத்தியும் வந்துள்ளார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாமலா இருந்திருக்கும்?  இப்படி ஒரு கேள்வியை எழுப்புவதற்குக் காரணம், சிலநாள் முன்பு ஒரு மேட்டுக்குடி நண்பர் பிராமணர்கள் அறியாமையால் செய்த பிழை அது என்று சொல்லி அவர்களுக்கு வக்காலத்து வாங்கிப் பேசியதுதான்.

           இதில் இன்னொரு வேதனையான வேடிக்கை என்ன வென்றால், இவர்களால் இவ்வாறு சிறுமைப் படுத்தப்பட்ட “கீழ்ச் சாதி”  மக்களுக்குத் தாங்கள் அவமானப்படுத்தப் படுகிறார்கள் என்பதே பல காலம் தெரியாமல் இருந்து வந்துள்ளதுதான்.  ஏனெனில் அந்தச் சிறுமையை உணர்ந்து, சினங்கொண்டு அவர்கள் சீறி எழுந்திருந்திருப்பின், அத்தகைய பாவத்தைச் செய்துவந்த மனிதத்தன்மை யற்ற அம்மனிதர்கள் வாழ்ந்த இடங்களில் புல் முளைத்துப் போயிருந்திருக்கும்.

 

        இதில் இன்னும் ஒரு வேடிக்கை என்ன வென்றால், இந்த உயர்ச் சாதி மனிதர்கள், ஆசாரத்தின் பெயரால், தங்கள் சாதியைச் சேர்ந்தவர்களையும் கூட அவமனப்படுத்தி வந்துள்ளதுதான்!

        எங்கள் உறவினர் – ஒரு பெண்மணி – கொஞ்சமும் கல்வியறிவு இல்லாதவர் – இருந்தார். நம்பமுடியாத அளவுக்கு ஆசாரம் கடைப்பிடித்து வந்தவர். அவர் வீட்டுத் திண்ணையில் ஒரு “பிராமணர்” வந்து உட்கார்ந்து சென்றாலும், அவர் சென்ற பின் அவர் உட்கார்ந்திருந்த இடத்தைச் சாணித் தண்ணீர் தெளித்து மெழுகுவார்.  தெருவில் நடந்து வந்த போது, எதிர்ப்பட்டிருக்கக் கூடிய பிராமணர் அல்லாதார் மீது அவர் இடித்திருக்கக் கூடுமாம்! தம் ஜாதிக்காரர்களையே இந்தப் பாடு படுத்தியவர், “தீண்டத்தகாதவர்கள்” என்று முத்திரை குத்தப்பட்டவர்களை எந்தப் பாடு படுத்தியிருக்கக் கூடியவர் என்பதைக் கற்பனை செய்து பார்க்கவே அருவருப்பாக இருக்கிறதல்லவா!

 

        இத்தகையோரின் செயல் மனிதத் தன்மையற்றது என்று சுட்டிக்காட்டினால், “சுத்தம்” என்பதன் கீழ் அருவருக்கத்தக்க இப்பழக்க வழக்கங்களைழ்ச் சிலர் நியாயப்படுத்தி அவற்றுக்கு வக்காலத்து வாங்குவார்கள்.

 

        தம் வீட்டுத் திண்னையில் எவரேனும் அந்நியர் வந்தமர்ந்தால், அவர் சென்ற பின் அவர் அமர்ந்திருந்த இடத்தைச் சாணி போட்டுத் துப்புரவு செய்யும் இந்த ஆசாரக்காரப் பெண்மணிக்கு அவருடைய கடைசி நாள்களில் என்ன நேர்ந்தது, தெரியுமா? காலஞ்சென்ற அப் பெண்மணியைக் கேவலப் படுத்தும் பொருட்டு இக்கட்டுரை எழுதப்படவில்லை.  இந்த அளவுக்கு  “ஆசாரம்” பார்க்காவிடினும், அதன் பெயரால் இன்றளவும் ‘தனியான உண்ணுமிடம்’, ‘தனியான தம்ப்ளர்-டவரா’ , ‘மறைப்புத் தட்டி’ என்றெல்லாம் தலித்துகள் விஷயத்தில் உணவு விடுதிகளில் கடைப்பிடித்து வரும் ஓட்டல் முதலாளிகள், அதே போல் தம் வீடுகளிலும், குடியிருப்புகளிலும், தெருக்களிலும், இன்ன பிற இடங்களிலும் தீண்டாமையைக் கடைப்பிடித்துவரும் மனிதர்கள், கோவில்களுள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைவதை எதிர்ப்பவர்கள் முதலானோர், தம் இறுதி நாள்களில் இந்த மூதாட்டிக்கு நிகழ்ந்த அவலத்தை எண்ணிப் பார்க்க வேண்டும் என்று சுட்டிக்காட்டுவதற்காகவே இது நினைவுகூரப்படுகிறது.

 

        இறுதி நாள்களின் போது இவருக்குக் கண்பார்வை போய்விட்டது. (தீண்டாமையைக் கடைப்பிடிப்பவர்களுக்குக் கண்பார்வை போய்விடும் என்று நீதி வழங்குவதாய் யாரும் நினைத்துவிட வேண்டாம். அப்படியாயின், இந்த நாட்டில் பலகோடி மக்கள் குருடர்களாக இருப்பார்கள்.) பார்வையை இழந்த பின் தம் ஆசாரங்களைக் கடைப்பிடிக்க இந்த மூதாட்டியால் முடியாமல் போயிற்று.  பிற பிராமணர்களின் வீடுகளில் கூட அவர் உணவு உண்ண மாட்டார்.  தாமே ஆற்றுக்குப் போய்ப் புதிதாய் ‘ஓடுகால்’ பறித்து அதனின்று “மடி” யாய்ப் புதிதாய் ஊறிய நீரைச் சுமந்து கொண்டுவந்து அதைத்தான் சமைக்கப் பயன்படுத்துவார். கண்பார்வை போனதன் பின் அது அவருக்கு இயலாது போனது.  எனவே சில ஆசார வழக்கங்களை அவர் கைவிடும்படி நேர்ந்தது.

 

எங்கள் வீட்டிலிருந்து அவருக்கு அவ்வப்போது பலகாரங்கள் போவதுண்டு.  ஓர் அமாவாசை நாளன்று அவரது இரவுப் பலகாரத்துக்காக  என் அம்மா ஒரு   சம்புடத்தில் எண்ணெய்-மிளகாய்ப்பொடி தடவிய சில இட்டிலிகளைப் போட்டு என் தங்கையிடம் கொடுத்து அனுப்பினார்.

 

        எங்கள் கிராமத்தில் ஒரு பெரிய வெற்றிடம் உண்டு. அதில் வீடுகள் இரா. பொட்டல் வெளி. அதைக் கொட்டாரம் என்று அழைப்பார்கள். அதைக் கடந்துதான் அந்த மூதாட்டியின் வீடு இருந்த தெருவுக்குச் செல்ல வேண்டும். இட்டிலிச் சம்புடத்துடன் என் தங்கை அந்தப் பகுதியைக் கடந்துகொண்டிருந்த போது, மாடு ஒன்று எதனாலோ மிரண்டு கொட்டாரத்துள் ஓடி வந்தது கண்டு பயந்து போய் அவள் ஓடத் தொடங்கியதில், கால் தடுமாறி விழ நேர்ந்துவிட்டதால், அந்தச் சம்புடமும் தரையில் விழுந்து  உருண்டது. அதன் மூடி திறந்து கொண்டுவிட்டதால், உள்ளே இருந்த இட்டிலிகள் தெரு மண்ணில் விழுந்தன. மாடும் வேறு திக்கில் ஓடி மறைந்தது. என் தங்கை அந்த இட்டிலிகளில் ஒட்டிக்கொண்டிருந்த மணலைத் தன் பாவாடையில் துடைத்தாள். எனினும் மணல் முழுவதுமாய் நீங்கவில்லை. பின் அவற்றை மீண்டும் சம்புடத்தில் போட்டு மூடி எடுத்துக்கொண்டு அந்த மூதாட்டியின் வீட்டை யடைந்து, பயந்துகொண்டே, அதை அவரிடம் கொடுத்தாள்.

 

        அவர் சாப்பிட்ட பின் சம்புடத்தைத் திரும்ப எடுத்துப் போவதற்காக என் தங்கை காத்திருந்தாள்.  இட்டிலிகளைத்   தொட்டுத் தடவியதுமே, “இட்டிலியில மண் ஒட்டிண்டிருக்கே? கீழே போட்டுட்டு எடுத்து         ண்டு வந்தியா?” என்று அவர் வினவினார்.

        என் தங்கை நடந்தவற்றை உள்ளபடி அவரிடம் தெரிவித்தாள் – தன் பாவாடையில் அவற்றைத் துடைத்தும் அவை முற்றாகப் போகாத்து உட்பட.

 

        அவளுக்கு அடிகிடி படவில்லையே என்று விசாரித்த பின், “அதனாலென்ன? பரவால்லே. கொடத்துலேர்ந்து தண்ணீர் எடுத்து இட்டிலிகளை அலம்பிக் குடு. நான் சாப்பிடறேன்!” என்றார் அந்த மூதாட்டி!

 

        என் தங்கை அவ்வாறே செய்த பின் அவற்றை உண்டு அவர் பசியாறினார்.

 

        வீடு திரும்பிய அவள் நடந்ததையெல்லாம் எங்களுக்குத் தெரிவித்தாள்.  கேட்டதும், என் அம்மாவின் கண்களில் நீர் மல்கியது. “எப்படிப்பட்ட ஆசாரக்காரர்! கடைசியில் இப்படி ஆயிற்றே!” என்று வருந்தினார்.

 

        அப்போது அருகில் இருந்த எங்கள் அப்பாவின் கண்களும் கலங்கிவிட்டன. எனினும்,  “திண்ணையில ஒரு பிராமணன் உட்கார்ந்துட்டுப் போனாலும் அந்த இடத்துல சாணி தெளிச்சிண்டிருந்த அவளோட ஆசாரம் இப்ப எங்கே போச்சு?” என்று சொல்ல அவர் தவறவில்லை.

 

jothigirija@live.com

Series Navigationபோதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 24தூக்கு
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

27 Comments

  1. Avatar
    IIM Ganapathi Raman says:

    என்னால் அந்த பாட்டியை வெறுக்க முடியவில்லை.

    அண்ணாத்துரை முதலமைச்சர் ஆனதும் எழுதினார்:

    “நான் ஒரு சூழ்நிலைக்கைதி!’

    என்ன பொருள்? “என் தவறுகளைப் பொறுத்தருள்க. அவைகளுக்கு நான் காரணமன்று!” என்றுதானே?

    அப்பாட்டி சிறுமியாயிருக்கும்போதே ஆச்சாரங்கள் இல்லாமல் மதம் அனுசரிக்கப்படாது என்று போதிக்கப்பட்டு வளர்ந்தவள்.
    இங்கு ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும்: பெண்ணுக்கும் ஆணுக்கும் ஒரு பெரிய வேறுபாடு பயம். அதாவது மதவழியாக வரும் ‘பயம்’ எவ்வளவுதான் போதிக்கப்பட்டாலும் ஆண் ஒரு கட்டத்தில் காம்ப்ரமஸ் பண்ணிக்கொண்டு விடுவான். பெண் ‘தெயவம் நம்மைச் சும்மா விடாது’ என்ற பயத்தினால் விடாமல் – எவ்வளவுதான் பொருந்தாதென்றாலும்- பிடித்து வாழ்வாள். That is why they are easily cheated by fake samiars and also, joshiars. Just have a glance at the questions addressed to joshiars in any weekly. Mostly women.

    பாட்டி அப்படித்தான் வாழ்ந்தாள். ஆச்சாரங்கள் ஒரு சிறு பழதாகிவிட்டாலும் இறை நம்மை எடுத்துக்கொள்ளாது தள்ளிவிடும் என்ற பயமே காரணம்.

    இதற்கு அடிப்படை காரணம். ஆச்சாரம் போதிப்போர் ”அவை நிரந்தரமல்ல; காரண காரியங்களால் இடம் பொருள் ஏவலகளால் சில சமயங்களில் தன்னாலேயே மாறுவன; மாறித்தான் ஆக வேண்டும். அப்படி மாறும்போது அவை அனாசாரங்கள் எனப்பயப்பட வேண்டா” என்றும் சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும். உண்மையும் அதே. டென்னிசன் அதைச் சொல்வது:

    Ring out the old; ring in the new
    Lest one good custom should corrupt the world.

    அதாகப்பட்டது ஒரு ஆச்சாரம் முன்னாளில் சரி; பின்னாளில் அதே ஆச்சாரம் சமூக மாற்றங்களினால் பிறருக்கோ தமக்கோ தீங்கிழைப்பின் அதை விட்டுவிடலாம்; அல்லது கொஞ்சம் மாற்றிக் கொள்ளலாம் என்று டென்னிசன் சொல்கிறார்.
    தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் என்று நாம் பெற்ற மஹனையே பார்க்க வேண்டுமென்று தமிழர் சொன்னாரன்றோ?
    அப்பாட்டிக்கு இப்படி முதலிலேயே சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தால், அவர் இப்படி பயந்து பயந்து தன் வாணாளைக் கெடுத்திருக்க மாட்டார். Lets not blame the arrow.

    …to be cont’d

  2. Avatar
    IIM Ganapathi Raman says:

    மதம் இருவகையில் அனுசரிக்கப்படலாம் என்று இந்துப் பெரியோர்கள் சொல்லியிருக்கின்றார்கள் ஆதிகாலமுதல்.

    ஒன்று: அர்ச்சனம்’ இரண்டு: பாதசேவனம்.

    அதாகப்பட்டது முதல் வகையில் ஆராதனைகள்; பூஜை புனஸ்காரங்கள், வேள்விச்சடங்குகள் எனவரும். இவை ஆச்சாரங்களினாலேயே செய்யப்படுவன.

    பாதசேவனம் எனபது முதல் வகையில் சொல்லப்பட்டவைகளைச் செய்யவியலாதோருக்காக. அவரவர் தமதமர் முடிந்த வழியிலே இறைவணக்கம் செய்து வாழ்தல். இந்த காண்ட்ராஸ்டை பெரியபுராணம் திண்ணப்பர் கதையில் சொல்கிறது. காலையில் பார்ப்பன பூஜாரி முதல் வழி பூஜை நடாத்திவிட்டுச் செல்ல, இரவில் திண்ணப்பர் சிவலிங்கத்துக்கு மாமிசத்தையும் தன் வாயிலிட்டுக்கொணர்ந்த ஆற்றுநீரை (உமிழ்நீர்தான்) தெளித்துவழிபட்டதாக.

    இருவரும் தமதே உயர்வு என்று சொல்லலாகாது என்பதையும் இப்படி உயர்வு என்று நினைத்து ஆதிகால பார்ப்ப்னருக்கு இறைவன் சொன்னதாக கதைகள் உள.

    ஆச்சாரங்கள் என்றாலே வெறுக்கும்படி என்ற தோரணை தரும்படி இக்கட்டுரையிருந்தால் அது சரியன்று எனபது என் தாழ்மையான அபிப்பிராயம்.

    Please note: NO ACHCHAARAMS, NO TEMPLE WORSHIP :-P

    When God is willing to accept both equally well, why to deride one over the other? Only one condition should be overwhelmingly prevail and that was well said by Tennyson.

    Let the old custom be reviewed periodically, and, if need be, revised or laid to rest wholly – all in PUBLIC INTEREST.

    Applying this rule, untouchability is to be thrown out lock, stock and barrel!

  3. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    நல்ல மனித நேயப் பகிர்வு கிரிஜா. திண்ணையில் திருமதி சீதாலட்சுமி அம்மாள், தனது “வாழ்வியல் வரலாற்றுக் கட்டுரைகளில்” பகிர்ந்த சில ஆசாரக் கருத்துக்களை நான் மீள் பதிவாக இங்கே இடுகிறேன்:

    ///எனக்கு கிருஷ்ணா ஶ்ரீனிவாஸ் என்று ஒரு நண்பர் இருந்தார். அவர் ஆங்கிலக் கவிஞர்களுக்காக ஓர் அமைப்பு வைத்திருந்தார். மேலும் “ POET “ என்ற மாதப் பத்திரிகை ஒன்றும் நடத்தி வந்தார். உலகில் பல நாட்டி லிருந்து கவிஞர்கள் கவிதைகள் அனுப்புவார்கள். அவர் மனைவியின் பெயர் கோதை. இருவரும் ஆச்சாரமானவர்கள். இவர்கள் அமைப்பின் செயலாளர் ஓர் முஸ்லீம். பெயர் சையத். இவர் நியூ காலேஜில் ஆங்கிலப் பேராசிரியரக இருந்தார். கிருஷ்ணாவிற்குக் குழந்தைகள் கிடையாது. சையத்தைத் தன் மகன் என்று சொல்வார். சையது வீட்டிற்கு வந்தால் இரவு தான் தன் வீட்டிற்குத் திரும்புவார். உணவு, சிற்றுண்டி எல்லாம் கிருஷ்ணா வீட்டில்தான். அடிக்கடி தண்ணீர், காபியும் குடிப்பார் .ஒரு நாள் கூட அவர்களின் ஆச்சாரம் அவரைக் காயப்படுத்திய தில்லை. அவர்கள் ஆச்சாரத்தை வெளிக்காட்டாமல் விருந்தினர்களைப் பரிவுடன் கவனிக்கும் குடும்பம். எனக்கு இந்த குடும்பத்துடன் நல்ல பழக்கம். அதுமட்டுமல்ல, அந்த அமைப்பில் நானும் ஓர் உறுப்பினர். மாதம் தோறும் நடக்கும் கூட்டத்திற்குத் தவறாமல் போவேன். மற்றவர்கள் ஆரம்பத்தில் கிருஷ்ணாவைச் சரியாகப் புரிந்து கொள்ள வில்லை. பின்னால் புரியவும் உயர்ந்த நிலையில் உள்ளவர்களும் வீட்டிற்கு அடிக்கடி வருவர். பத்மஶ்ரீ பட்டம் கிடைத்தது. அவருக்கு வயதாகிவிட்ட படியால் அவருடைய அமைப்பில் உயர்திரு பத்மநாபன் ஐ.ஏ எஸ்அவர்கள் பொறுபெடுத்துக் கொண்டு உதவி செய்ய ஆரம்பித்தார். இவர் இல்லத்திற்கு உயர்திரு அப்துல் கலாம் அவர்களும் வருகை புரிந்திருக் கின்றார். எடுத்தவுடன் காரண மாகத்தான் நல்ல காட்சியை முன் நிறுத்து கின்றேன்.////

    ///இனி கசப்பான செய்திகள் தொடரும்.

    என்னுடைய ஆறு வயதில், குழந்தைப் பருவத்தில் நான் வெறுத்த சாதி. பிறந்தவுடன் பெற்றவர் சுதந்திரப் போராட்டத்திற்குச் சென்றவர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலானவுடன் வீட்டிற்கு வந்தார். அதென்ன சொந்த வீடா? ஓர் வீட்டில் கிணற்றடி பக்கத்தில் ஓர் அறை. ஒண்டுக் குடித்தனம். ஆசையுடன் பள்ளிகூடத்திலிருந்து வந்தேன். அம்மாதான் “அப்பா” என்று அடையாளம் காட்டியது. உடனே அவர் மடியில் உட்கார்ந்து கொஞ்சிக் கொண்டிருந்தேன். ஒரு மணி நேரம் கூட ஆகியிருக்காது. அந்த வீட்டுக்காரம்மாள் வந்து கத்தினார்கள்

    அவர்கள் ஆச்சாரம் போய்விட்டதாம். என் அப்பா எல்லா சாதிகளுடனும் சேர்ந்து வாழ்ந்ததால் பிராமணீயம் தீட்டுப் பட்டுவிட்டது. இது பிராமணர்கள் வாழும் வீடு. அவர் இங்கே உட்காரக் கூடக் கூடாது. உடனே அவர் வெளியே போக வேண்டும்.

    என் அம்மாவிற்கு அப்பொழுது 23 வயது கூட நிரம்பவில்லை. பல ஆண்டுகள் பிரிந்திருந்த கணவனுடன் சேர்ந்து சில மணி நேரம் கூட இருக்க முடியாமல் செய்தது பிராமண ஆச்சாரம். அம்மா ஓவென்று கத்தி அழுதார்கள். நான் கோபத்துடன் அந்த அம்மாவை முறைத்தேன். அப்பாதான் சமாளித்து சமாதானம் செய்துவிட்டு வேறு வீடு பார்த்து கூட்டிச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்று விட்டார். என் மனத்தில் ஆறாத புண் ஏற்பட்டுவிட்டது. எங்களிடம் ஒரு சாதி மட்டுமா விளையாடியது. சாதியையே வெறுக்க வைத்தது இந்த சமுதாயம்.///

    சி. ஜெயபாரதன்

  4. Avatar
    Needhidevan says:

    In the present social structure in Tamilnadu there is no direct competition , either in village agrarian environment or in government jobs. The other forward communities and OBCS and most suppressed OBCS oppose and show antagonism towards dalits. It shows it all boils down to economic rivalry.

  5. Avatar
    ushadeepan says:

    இத்தனை ஆண்டு காலம் கழித்து இந்த அரதப் பழசை நீங்கள் ஏன் தோண்டுகிறீர்கள்? பாம்பையும், பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை அடி முதலில் என்று சொன்னவர்களே “இதெல்லாம் இப்பப் பேசிப் புண்ணியமில்லை“ என்று இருக்கிறார்கள். யாரை ஒதுக்கு ஒதுக்கு என்று ஒதுக்கினார்களோ அவர்கள் சரி ஒதுங்கிக்கிறோம் என்று தங்கள்பாட்டைப் பார்த்துக் கொண்டு போய் ஆண்டுகள் பலவாயிற்று. எதையெல்லாம் இவர்கள் மேல் சுமத்தினார்களோ அதையெல்லாம் இப்போது மற்றவர்கள் விடாமல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே?

  6. Avatar
    IIM Ganapathi Raman says:

    உஷா தீபன் என்ன விளைவுகள் இந்நினைவலைகள் ஏற்படுத்துமென்பதை இப்போதே சொல்லிவிட்டார். அதையே நானும் நினைத்து இப்படி எழுதலாமென்றிருந்தேன்:
    “நீங்காத நினைவுகள் ஒரு தொகுப்பு நூலாக வரின் ஆசிரியர் இந்த எபிசோடை (அல்லது நினைவலைகளை) வெட்டி வெளியிடுவது நன்று”
    கிட்டத்தட்ட கால்டுவெல் செய்த மாதிரி. அவர் நாடார்களைப் பற்றி ஒரு நூல் எழுதினார். அஃதில் அம்மக்கள் எப்படி இருண்ட வாழ்க்கை (அவரின் அந்நாட்கணக்கின்படி) வாழ்கிறார்கள்; அவர்களை எப்படி வெளிச்சத்துக்கு கொண்டுவருவது என்பதாக அந்நூல். அதில் பல அம்மக்களின் சிலரை வருத்தியதாகத் தெரிந்தவுடன் அந்நூலைச் சென்சார் கூடச் செய்யாமல் அப்படியே வெளிவராமல் தடுத்துவிட்டார். அந்நூலின் பிரதி இலண்டன் மியுசியத்தின் ஒருபகுதியான இந்தியா ஹவுசில் மட்டுமே கிடைக்கும்.
    சுஜாதாவுக்கும் இன்னிலை வந்தது என்பது தெரியுமல்லவா? இரத்தம் ஒரே நிறம் என்றவர் நாவலை குமுதம் நிறுத்திவிட்டது ஏனென்றால் குமுதம் ஆசிரியருக்குக் கொலைமிரட்டல் வந்தது.
    ஜோதிர்லதா கிரிஜா இப்படி எழுதிக்கொண்டு போனால், அவரை அவர் ஜாதியினர் தள்ளிவைக்கும் நிலை வரலாம். பாரதியாரைச் செய்தது போல.
    கசப்பான உண்மைகள் சொல்வது நம் நாட்டில் நன்றன்று. அப்படியே சொன்னாலும் எப்படிச் சொல்ல வேண்டும்? சொல்லாமல் சொல்ல வேண்டும். “Tell all the truth; tell it slant”
    அடுத்த எபிசோடின் புளியோதரை எப்படி புது மாதிரி செய்வது (அதாவது 10 நாட்கள் கெடாமல் இருக்கவேண்டும்). மார்கழிக் கோலங்கள் எப்படி போடுவது சென்னை மவுண்ட் ரோட்டில் மீண்டும் ட்ராம் விட்டலென்ன என்றெல்லாம் எழுதுவாராயின் அவரும் சேமமாக இருப்பார்; திண்ணை வாசகர்கள் மனங்களும் நோகாதன்றோ? Just a suggestion in larger public interest, Ma’m.

  7. Avatar
    ஷாலி says:

    ஆசாரம் என்பதன் இலக்கணம்
    ஸமயாசாரம், மதாசாரம் என்று சொல்லும்போது ஒரு மதத்தின் நெறி முழுவதையும் “ஆசாரம்”என்பது குறிப்பிடுகிறது. ஆனால் பொதுவிலே ஒருத்தர் ஆசாரமாயிருக்கிறார். என்றால், மடி-விழுப்பு என்று இரண்டு சொல்லிக் கொண்டிருக்கிறோமே (வார்த்தையிலாவது இன்றைக்கு வரையில் இருக்கிற ‘மடி’அடியோடு மறந்து போய்விடக் கூடாதென்றுதான் இந்த உபந்நியாஸமெல்லாம் பண்ணுவது) அதிலே மடியாயிருப்பது என்றுதான் வைத்துக் கொண்டிருக்கிறோம். மடி, விழுப்பு பார்க்கிறதுதான் ஆசாரம்;சாஸ்திரத்தில் சொன்ன பிரகாரம் ஒருத்தர் சிகை வைத்துக் கொண்டிருக்கிறார். கச்சம் போட்டு வேஷ்டி கட்டிக் கொண்டிருக்கிறார். புண்ட்ர தாரணம் (நெற்றிக்கிடுதல்) பண்ணிக் கொண்டிருக்கிறார், நாள் நக்ஷத்ரம் பார்த்துக் காரியம் பண்ணுகிறார், க்ளப்புக்கு (ஹோட்டலுக்கு) ப் போவதில்லை, எவர்ஸில்வரில் சாப்பிடுவதில்லை என்றால் அவரை ஆசாரமாயிருக்கிறார், orthodox என்கிறோம்.
    இப்படியாக ஒரு மதத்தின் எல்லா நெறிகளுமே அதன் ஆசாரந்தானென்றாலும், வெளி வாழ்க்கையில் அதன் கட்டுப்பாட்டுபடி நடந்து கொண்டு, அதில் சொல்லியிருக்கிற வெளியடையாளங்களான சின்னங்கள் முதலியவற்றை மேற்கொண்டு நடந்து காட்டுவதே குறிப்பாக ஆசாரம், ஆசாரம் என்று வழங்குகிறது.
    ஆனால் ஆசாரம் என்பது முழுக்க வெளி விஷயந்தான் என்று நினைத்து விட்டால் அது தப்பு. வெளி ஸமாசாரங்களாலேயே உள் ஸமாசாரங்களை, உள்ளத்தை உயர்த்திக் கொள்ள உதவுகிறதுதான் ஆசாரம்*. அதோடுகூட நேராக உள்ளத்தின் ஸமாசாரங்களையும், வாழ்க்கை நெறிகளையுங்கூட ஆசார சாஸ்திரங்களிலே சொல்லியிருக்கிறது.
    ‘ஆசாரம்’என்பதைத் தமிழிலே நேராக ‘ஒழுக்கம்’என்று சொல்லிவிடலாம். “உயிரினும் ஓம்பப்படும்”என்று திருவள்ளுவர் எதைச் சொல்லியிருக்கிறாரோ, அப்படி நம் பிராணனைவிட உசந்ததாகக் கருதி எதை ரக்ஷிக்க வேண்டுமோ அந்த தர்ம வழியே ஆசாரம். தர்மம் என்கிறது அகம், புறம் எல்லாவற்றிலும் எல்லா அம்சங்களையும் தழுவுகிற விஷயமல்லவா?
    இங்கிலீஷில் ‘ character’ என்பதாக ஒருத்தனின் உள் ஸமாசாரமான குணத்தையும்,
    ‘conduct’ என்று அவனுடைய வெளி ஸமாசாரமான நடத்தையையும் சொல்கிறார்கள். ஆசாரம் என்பதும் ஒழுக்கம் என்பதும் காரெக்டர், கான்டக்ட் ஆகிய இரண்டையும் ஒன்றாக்கிச் சேர்த்துக் கொடுப்பது. இது வெறுமனே morality,ethics என்று சொல்கிற இஹ வாழ்க்கைக்கான நன்னெறிகளாக மட்டுமில்லாமல் பர லோகத்துக்கும் உதவுவதான காரியங்களை ஸம்ஸ்காரங்களை, சினனங்களை, விதி நிஷேதங்களை (இன்ன செய்யலாம், இன்ன செய்யக்கூடாது என்பவற்றை) யும் சொல்கிறது.
    புற விஷயம் மாதிரியிருந்தாலும் அக விஷயத்துக்கும் உபகாரம் பண்ணும்படியாகவும், இம்மைக்கு மட்டுமில்லாமல் மறுமைக்கும் உதவுவதாகவும் நம்முடைய ஆன்றோர்கள் வகுத்துத் தந்திருக்கிற முறையே ‘ஆசாரம்’.
    தெய்வத்தின் குரல் –மூன்றாம் பாகத்தில் பெரியவாள் விளக்கம்,
    http://www.kamakoti.org/tamil/3dk116.htm

  8. Avatar
    தேமொழி says:

    பாவம் அந்தப் பாட்டிம்மா, எனக்கென்னவோ அவருக்கு மிகவும் சுத்தம் பார்க்கும் Obsessive–compulsive disorder என்ற மனநோய் இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. அது 50% போல பரம்பரையாகவும் வர வாய்ப்பிருக்கிறது. குடும்பத்தில் அப்படி உள்ளவர்களிடம் இருந்து அவருக்கும் வந்திருக்கலாம். அது மன நோய் என்றே கண்டுபிடிக்கப் படாமல் சரியான வைத்தியமும் கொடுக்கப் படாமல் போய் விட்டிருக்கலாம்.

    ……. தேமொழி

  9. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    ஸ்……..சப்பா அன்பர் ஷாலியின் மணிப்ரவாளத்தைப் பார்த்து மூக்கில் விரல் வைத்தேன். கடைசியில் தெய்வத்தின் குரலில் இருந்து என்று போட்டு விட்டீர்களே

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      மஹா பெரியவாள் எழுதியது மணிப்பிரவாளமன்று. அதில் வரும் வடமொழிச்சொற்கள் பொதுவாக எல்லாத் தமிழரும் அறிந்தவையே. அப்படி அறிந்தவைகளைபோட்டு எழுதுவது மணிப்பிரவாளாகாது. அறியாச்சொற்களைபோடடு ஒரு குறிப்பிட்ட கூட்டமாந்தர்களுக்கு மட்டுமே எழுதுவெதே மணிப்பிரவாளம் The ulterior motive is to restrict readership only to the high brahmins. தெய்வத்தில் குரல் என்ற மஹா பெரியவாளின் பிரசங்கத்தொகுப்பு அனைவருக்கும் படிக்கற்பாலாதாக தொகுக்கப்பட்ட்வொன்று. Its aim is therefore obviously public interest (Hindu public interest) Never to show off his punditham.

      எங்கு பொது தமிழருக்குத் தெரியாதென அச்சப்பட்டாரோ அங்கு அவரே தமிழாக்கத்தையும் கொடுத்தே எழுதியிருக்கிறார். இதே இங்கே:

      //சினனங்களை, விதி நிஷேதங்களை (இன்ன செய்யலாம், இன்ன செய்யக்கூடாது என்பவற்றை) யும் சொல்கிறது.//

  10. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ அறியாச்சொற்களைபோடடு ஒரு குறிப்பிட்ட கூட்டமாந்தர்களுக்கு மட்டுமே எழுதுவெதே மணிப்பிரவாளம் The ulterior motive is to restrict readership only to the high brahmins.\

    அப்பட்டமான பொய்

    தமிழும் சம்ஸ்க்ருதமும் கலந்து எழுதப்படும் நடை மணிப்ரவாளம். அவ்வளவே. அது ஒரு மொழிநடை.

    க்றைஸ்தவர்கள், ஜைனர்கள் என பலருக்கும் பொதுவானது மணிப்ரவாள மொழிநடை.

    ஜைனர்களின் ஸ்ரீ புராணம் மணிப்ரவாளத்திலானது. இது ஊர் உலகத்திற்குத் தெரிந்த விஷயம்.

    It is utterly ridiculous and foolish to say that Shri Puranam was written with the ulterior motive to restrict readership only to the high brahmins.

    அய்….. நாலு முழத்திற்கு எழுதித் தன் புளுகை உண்மை என சாதிக்க முனையலாம்.

    திரியிலிருந்து விலகியதற்கு என் க்ஷமாயாயனம். உண்மையை முன்வைத்து இத்துடன் அமைகிறேன்.

  11. Avatar
    கவிஞர் இராய செல்லப்பா, நியூஜெர்சி. says:

    இளமையில் உறுதியோடு பின்பற்றும் பல கோட்பாடுகளை முதுமையின் கட்டாயத்தால் விலக்க வேண்டி வரும் என்ற யதார்த்தத்தை மட்டுமே சொல்ல வந்திருக்கிறார் கதாசிரியர். அதை சாதி என்ற வார்த்தையைப் பயன் படுத்தாமலேயே சொல்லும் ஆற்றல் நிச்சயம் அவருக்கு உண்டு. ஏன் செய்யவில்லை என்பது கேள்வி. ஒருவேளை, அந்த மூதாட்டி மீது இவர் குடும்பத்திற்கு அடிநாளில் காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டிருந்து, இன்றும் மறையாமல், அது இப்படி வெளிப்பட்டதோ? – நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      அவர் சொல்ல வந்தது அப்படியன்று என்பது என் பார்வை.

      Jothirlathaa Girija முதுமையில்தான் விலக்கனேரிடும்; விலக்க வேண்டுமேன்று சொல்லவில்லை.

      ஒருவேளை ஒரு மூதாட்டியை வைத்துச் சொன்னதால் அப்படி நீங்கள் எடுத்திருக்கிறீர்கள்.

      அவர் சொல்லவந்தது என்னவென்றால்,

      ஆசாரங்கள் பேணுதல் பிற மக்களைவிட தாங்கள் உயர்ந்தோரென்னும் கர்வநினைப்பையும் அல்லது பிறமக்களால் தம் ஆச்சார்ங்கள் பிழைபடுதலால் அம்மக்களைவிட விலகி வாழவேண்டும்; அப்படியே அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டு ஆச்சாரம் பிழைபட்டால் சுத்திபரிகாரம் பண்ண வேண்டும் பண்ணுகிறார்கள் –

      இவையெல்லாம் நல்ல மனிதரின் பண்பாடுகளல்ல. இதை இறைவன் பெயரால் செய்வது கொடுமை –

      இக்கருத்துக்களை நமக்குக்காட்ட அவர் சந்தித்த ஒரு மூதாட்டியை பயன்படுத்துகிறார்.

      இதுதான் என் பார்வை.

  12. Avatar
    IIM Ganapathi Raman says:

    அண்டப்புழுகு என்ற தனிநபர் தாக்குதல் உங்கள் தரத்தைக் குறைக்கும். என் கருத்தை நான் சொல்கிறேன். அதில் தவறு உண்டென்றால், திண்ணை வாசகர் முன் வையுங்கள். அவர்கள் முடிவு செய்யட்டும். இங்கு நான் உங்கள் ஜாதிபற்றியா பேசினேன்? ஏன் ஆவேசம்? ஒருவேளை ஹை பிராமின்ஸ் என்றவுடன் வருத்திவிட்டதோ ? ஏழு மலையானே காப்பாற்று இவரகளை!

    மணிப்பிரவாளம் ஜைனர்கள் முதலில் கைக்கொள்ளக் காரணம் அவர்களில் பலர் வடவர்கள். ஜைனம் தமிழ்மண்ணில் பிறந்தவொன்றன்று. அவர்கள் அப்படிச் செய்தது தமிழர்களிடையே வியப்பு கலந்த மரியாதையைத் தந்தது. தமிழர்கள் தம் மக்களைவிட அந்நியர்களுக்கு மரியாதை செய்பவர்கள். இது வரலாற்றுணமை. எனவேதான் வந்தேறிகள் தமிழகத்தை ஆண்டார்கள். ஜைனர்கள் செய்தது முட்டாள்தனம். Their religion didn’t take roots in Tamil soil.

    அவர்களைக் காப்பியடித்தார்கள் வைணவ உரைகாரர்கள். ஜைனர்கள் எழுதியவைகளையும் வைணவ ஆச்சாரியர்கள் உரைகளும் பாமர மக்களை மிரள வைத்து விலக்கியவை. குறிப்பாக வைணவ ஆச்சாரியர்கள் எழுதியவை நான் சொன்னமாதிரியேதான்: The ulterior motive is to restrict readership only to the high brahmins. அவர்கள் எழுதியவை ஹை பிராமின்ஸ்களுக்கு மட்டுமே. அதாவது பண்டிதர்கள். ஓரளவுக்கு அவர்கள் இப்படி ரெஸ்ட்ரிக் பண்ணியதை பிராமணீயக்கூறுகளில் ஒன்று. i.e. தேவரகசியங்கள் பிராமணருக்கே போயடையவேண்டும். அதிலும் ஹை பிராமின்ஸ். அதையே கேட்கிறீர்கள்! செந்தமிழில் எழுதப்பட்டவை ஆழ்வார்களின் பாசுரங்கள். ஆழ்வார்களுக்கு இன்னொரு பெயரே: செந்தமிழ்ப்பாடுவார். தெரிந்து கொள்ளுங்கள்.

    அப்படிப்பட்ட செந்தமிழ்ப் பாசுரங்களுக்கு வைணவ உரைகாரர்கள் எழுதிய வியாக்கியானங்கள் (படிகள்) மணிப்பிரவாளத்திலேதான். காரணம் அதிலுள்ள சூசுமங்களை ஹை பிராமின்ஸ்களுக்கு விளக்கவே. மட்டுமா? அப்படிகளுக்கு இன்னொரு பெயர்: பகவத் இரகசியங்கள். ஆக இறைவனைப்பற்றியவை இரகசியங்கள். ஏனென்றால் அது ஹை பிராமின்ஸ்களுக்கு மட்டுமே போய்ச்சேர வேண்டும்.

    சைவம் இந்த பந்தாவைப் பண்ணவில்லை. சைவத்திலும்தான் ஹை பிராமின்ஸ் உண்டென்று கிருஸ்ணகுமாருக்கு நன்றாகவேத் தெரியும். எல்லாமே தமிழ்; செந்தமிழ். விளக்கமும் செந்தமிழ். கொடுத்தவர் ஹி பிராமின்ஸ மட்டுமல்லாம் எவரும் கொடுக்கலாம். எனவே சைவம் தமிழால் தமிழர்களிடையே போய்ச்சேர்ந்தது. மணிப்பிரவாளத்தால் வைணவம் சைவத்திடம் தன்னிடத்தை இழந்தது.

    நினைவிற்கொள்க: வைணவ ஆச்சாரியர்கள் எழதியவையே உரைகள் எனப்பட்டன. Only they had legitimacy in worship. அவர்கள் அனைவருமே ஹை பிராமின்ஸ். பிறரும் முயன்றார்கள். அவை தமிழர் உரை என்று இழிவாக அழைக்கப்பட்டன. ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே அவ்வுரைகள் அழிந்துபட்டன. ஹை பிராமின்ஸ் என்றாலே உணர்ச்சிவசப்படும் கிருஸ்ணகுமார் இதை அண்டப்புழுகு என்றால் எனக்கு மகிழ்ச்சியே.

    மணிப்பிரவாளமென்பது பவளமும் முத்தும் கலந்த அணியென்று உவப்பார்கள். அதை மஹா பெரியவாளின் நடையில் காணலாம். வைணவ உரைகளிலும் இரசிக்கிறேன்.

    அதே நடையை எப்படி சிதைப்பது என்பதை இங்கே காணலாம்: //என் க்ஷமாயாயனம்//

    மஹாப்பெரியவாள் மஹாதான். எனவேதான் தமிழில் விளக்கினார். திருக்குறளை மேற்காட்டினார். கிருஸ்ணகுமார் எப்படி எல்லாருக்கும் புரிகிறமாதிரி மணிப்பிரவாளம் எழுதுவது என்று மஹாப்பெரியவாளில் தெய்வத்தின் குரலை திரும்பத்திரும்ப படித்து தெரிந்து கொள்ளலாம். Practice makes perfect.

  13. Avatar
    paandiyan says:

    கவிஞர் இராய செல்லப்பா தன்னுடைய கோணத்தில் ஒரு கருத்து சொல்லி இருகின்றார் அது அவருடைய உரிமை , அதை மறுப்பது கட்டுரையாளர் இஷ்டம் இதில் நீங்கள் யார் இங்கு அவருக்கு பதில் சொல்வது ? இப்படிதான் உங்கள் பல பின்னூட்டம் இருகின்றது . ஒரு வேலை மதசார்பின்மை சேர்டிபிகட் இங்கு ஒரு சில “அரசியல்வாதிகள் ” கையில் இருப்பது போல திண்ணை பின்னூட்டம் எப்படி என்று உங்களிடம் ஒரு சேர்டிபிகட் நாங்கள் வாங்கவேண்டுமா முதலில் ???

  14. Avatar
    IIM Ganapathi Raman says:

    கவிஞர் இராயப்பா ஜோதிர்லதா எழுதியவைகளைப்படித்து தான் எப்படி புரிகிறேன் என்று சொல்லி விட்டார். அஃது அவர் உரிமை. அதைப்படித்து அதைத் தவறு என்று சொல்வது பிறரின் உரிமை. எப்படித்தவறு என்று என் புரிதலைச்சொல்லி விளக்குகிறேன். இஃதெப்படி ஒருவர் உரிமையை ஒருவர் பறித்ததாகும்?

    நீங்கள் சொலவ்தை ஏற்றுக்கொண்டால், ஜோதிர்லதாவின் இந்த எபிசோடைப்படித்த ஒருவர், இக்கட்டுரை ஆச்சாரங்களை கண்மூடித்தனமாக பேணுதலைச் சரியென்று போற்றுகிறது என்பார். அது தவறான புரிதல் என்று சொன்னால் நீங்கள் இடைப்புகுந்து எப்படிச்சொல்லாமென்பீர்கள் போலிருக்கிறது. அவர் உரிமையைப்பறிப்பதாக அல்லவா சொல்வீர்கள்! Now you may know where you have gone wrong.

    To express a view is to exercise a right. To express a contrarian view is an equal right.

    //”I do not agree with what you have to say, but I’ll defend to the death your right to say it.” // Unless you accept this French maxim, don’t come to open democratic society. Allow freedom of expressions to all – equally, not selectively.

    நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பது உங்களைப்போன்றோருக்கு ஒரு பாடத்தைக்கற்றுக்கொடுக்கவே; அதாவது, நீதி என்று வந்துவிட்டால், இவர் வேண்டும்; அவர் வேண்டப்படாதவர் என்ற பாரபட்சம் மனதில் அடியில் ஒட்டிக்கொண்டால் நீதி தவறும். நல்லவர்கள் தண்டிக்கப்பட்டு குற்றவாளிகள் விடுவிக்கப்படுவார்கள். பின்னூட்டமிடுவோரும் அப்படியிருத்தல் நன்று.

    சரி கிடக்கட்டும்., உங்கள் புரிதல் என்ன? ஜோதிர்லதா கிரிஜா காட்டிய மூதாட்டியின் ஆச்சாரங்களைப்பற்றி அவர் சொன்னதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? அவர் கடுமையாகப்பேசியிருக்கிறார். கட்டுரையை நன்றாகப் படியுங்கோ.
    கட்டுரைப்பொருளையொட்டி பேசுக. இருவர் பேச்சில் இடையில் நீங்கள் நுழைந்து சட்டாம்பிள்ளைத்தனம் செய்யும் ஆர்வத்தை கட்டுரைப்பொருளின் மேலும் வைக்கலாமே?

  15. Avatar
    Indian says:

    Apology up front for writing in English due to lack of written skills and knowledge of Tamil.
    My 2 cents on this article. Why this article in the first place? Aasarm, madi are hardly practiced by anyone. Yes, this article has a place, probably over fifty years ago.I feel sorry for the elderly woman. She was simply a victim of her time and did not know any better. I believe such discriminations against people did not exist prior to British Invasion. Risely’s nasal index and classification and ENFORCEMENT of Indians into over 2000 different castes was beginning of such discrimination.
    By the way,caste discrimination was practiced by one and all and not just by Brahmin community. Dare I say this that more Brhamins fought against this evil than any other group. Pity that these minority group are held in contempt and ridiculed by one and all including some from their own rank. Probably Jews of nazi Germany could be compared to this group, bearing guilt and blame for all our society’s malaise.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      இந்தியனின் ஆங்கிலக் கருத்துகளைப் படித்துவிட்டு, ஜோதிர்லதா கிரிஜாவின் கீழே காணும் தமிழ்க்கருத்துக்களையும் படியுங்கள். ஒன்று புரியும். அதாகப்பட்டது: கட்டுரையைச் சரியாகப்படிக்காமல் பின்னூட்டமிடும் கூட்டம் பெருகிவிட்டதென்று.

      //இப்போது அது பெருமளவு போய்விட்டாலும், பெருங்காயச் செப்பு காலியான பிறகும் வாசனை அடிப்பது போல் 80-90 வயதுகளில் உள்ளவர்கள் ஓரளவு அந்தப் பழக்கங்களை இன்னமும் பிடித்து வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

      ஆசாரமாக இருப்பதாக, அல்லது சுத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக, நினைத்துக்கொண்டு, கீழ்ச் சாதியினர் என்று தங்களால் முத்திரை குத்தப்பட்ட சக-மனிதர்களை எந்த அளவுக்குத் தாங்கள் புண்படுத்தியும் கேவலப்படுத்தியும் வந்துள்ளார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாமலா இருந்திருக்கும்? இப்படி ஒரு கேள்வியை எழுப்புவதற்குக் காரணம், சிலநாள் முன்பு ஒரு மேட்டுக்குடி நண்பர் பிராமணர்கள் அறியாமையால் செய்த பிழை அது என்று சொல்லி அவர்களுக்கு வக்காலத்து வாங்கிப் பேசியதுதான்.//

      ஆக, வக்காலத்து வாங்குவோர் இன்றுமுண்டு என்று இந்தியன் பின்னூட்டம் காட்டுகிறது. என்னே இயற்கை!

      நம் எழுத்தாளர் ஒரு சிலர் இன்னும் இருக்கிறார்கள் என்று ஆதங்கப்பட்டு நமக்குச் சொல்கிறார். ஒட்டு மொத்த சாதியை wholesale condemnation பண்ணவில்லை.

      பாரதியார் மீண்டும் நினைவுக்கு வருகிறார்:

      அவரிடம் அவருக்குத் தெரிந்த ஜாதிக்காரர் கேட்டார்:

      “இப்படி பார்ப்பன ஜாதியைத்திட்டுகிறீரே! தப்பாகத்தெரியவில்லையா? எல்லாரும் நீர் சொல்கிறமாதிரி இருக்கா?//

      “ஆயிரம் பார்ப்பனர்களுள் ஒரு பத்துபேரைத்தான் நான் சொல்றேணன். ஏன் மத்தவாளெல்லாம் கோபப்படவேண்டும்?”

      OVER.

      ஆச்சாரம் (தவறுதலாகப் புரியப்பட்டவையை மட்டும் இங்கு சுட்டப்படுகின்றன‌. ஏனெனில் ஆச்சாரங்கள் தேவை, ஆச்சாரங்கள் இல்லாவிட்டால் கோயில்கள் இருக்கா) பார்ப்பவர்களைக்காட்டிலும் ஆச்சாரத்திற்கு (அதாவது எழுத்தாளரின் சொற்களில் ‘புண்படுத்தும், கேவலப்படுத்தும் ஆச்சாரங்கள) வக்காலத்து வாங்குபவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.

      ( Please bear in mind. All my references to the poet (not only here, but in many of my feedback comments and essays if they appear) come from two major books I have read and been re-reading: one you can get easily; and the other, rarely:

      1. பாரதியும் நண்பர்களும் – by இரகுநாதன் (avaialble in Delhi Tamil Sangam Library still)
      2.என் கணவரின் சரித்திரம் – by செல்லம்மா பாரதி. She didn’t write it as she was not good at Tamil writing. But she told all which was taken down. A poignant book in reading many parts of which a sensitive reader will break down emotionally. U need mental strenght to read through [(available in Madura Coats Library for Mill hands (Laborers)] Now not available perhaps because the Mills itself was closed down)

      1. Avatar
        IIM Ganapathi Raman says:

        These reminiscences of J. Girija, in this episode refer only to the Tamil brahmins of orthodox variety: their acts of commissions and omissions should not be viewed along with such acts of others. Indian is attempting to gloss over that.

        The contours and characteristics of, say, a Pillai’s practice of untouchability (read about that in Maraimalai’s reminiscences of his visit to Tuticorin to participate in the anniversary of Savia Sithantha Kazhagam, or the infamous Uthapuram’s incidents recently happened and written about in NYT and broadcast in BBC) or a Maravar’s, or Vanniyar’s (y’day Dharmapuri incident of a dalit woman not permitted to worship in the temple with her vanniyar husband) are different from those of an orthodox Brahmin. By clubbing them together, Indian becomes eligible to be a member of the exclusive club of very Tamil Paarppnars the writer is lambasting here.

        English should be met with English. So, may Thinnai allow this.

    2. Avatar
      Mahakavi says:

      Well said. The British started playing one Indian vs another just like they did with the kingdoms all over India. It is unfortunate that they classified people as Brahmins and non-Brahmins. Why give a primary name to a minority population and make the rest (majority) as non–? Anyway Brahmins became victims of circumstances. They worked for the British government for a living. They also worked as accountants and managers for several Chettiars and Naadaars in subservient roles. As someone pointed out earlier they started the aachaaram business because they believed in hygiene and cleanliness over wealth. If they told the “untouchable” to walk at a distance from their houses it was because the so-called low-class people made a living by killing cattle—eating beef and processing the leather. For the brahmins who practiced aachaaram such activities are anathema.

      Overall such “discrimination” is now obsolete. Even those people who were the so-called second and third rank in the caste classification did practice the discrimination. But they were exempted by the paguttaRivu vaadhigaL when they resorted to violating the civil rights of Brahmins by cutting their sacred threads and tufts.

      They say you pay a price for the sins committed by your forefathers. The current crop of poor brahmins in the villages and small towns bear the brunt of discrimination now. The well-heeled brahmins have migrated north and west.

      My overall impression is to forget the past and keep moving forward but not to kill talent and hard work of those whose ancestors practiced some discrimination. I have more to say on the subject but let me stop here.

  16. Avatar
    RUTHRAA (E.PARAMASIVAN) says:

    பூஜ்யஸ்ரீ புண்ணிய பௌராணிக ரத்ன சாஹரம் கணபதி ராம் அவர்களே

    உங்கள் சப்பளாக்கட்டைகளின் நாராசம் தாங்க முடியவில்லை.ஆசாரம் பற்றி ஆசிரியர் எழுதியது அவரது எழுத்துரிமை.அதற்கு விமர்சனம் எழுதுவது என்னும் பின்னூட்ட உரிமையும் அடுத்தவரது எழுத்துரிமை.இப்படியெல்லாம் எழுதக்கூடாது என்றும் அந்த “தொடரை”வெட்டி இடுங்கள் என்றும் சொல்லும் அதிகாரத்தை தாங்களே கையில் எடுத்துக்கொண்டு,அக்ஷ்ர ஆசாரத்தை செய்வது எந்த வகையில் ந்யாயம்? சமஸ்கிருதத்தில் புண்படுத்தினாலும் சரி மணிப்ரவாளத்தில் புண் படுத்தினாலும் சரி அது “புண்ணிய”மொழி அல்ல.சரம் என்பது அசைதல்.அசரம் என்பது அசையாது இருத்தல்.சராசரம் என்பது இரண்டையும் உள்ளடக்கிய பிரபஞ்சம் ஆகும்.எனவே சராசரி “மனுஷ்யனே” பிரபஞ்ச மனிதன்.தீட்டு மடி என்னும் அடம்பிடிக்கும் பிடிவாதங்களால் இந்த “பிரபஞ்சத்தையே”தள்ளி வைக்கும் மஹானுபாவர்கள் பிரபஞ்சம் ஒரு பூஜ்யம் எனும் சூன்யவாதத்தை அல்லவா பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள்.ஆசாரம் என்பதும் இந்த சராசரித்தனத்தின் “பெரிய”அல்லது “பொது”வாழ்க்கையைத்தான் வலியுறுத்துகிறது.ஒரு “சொம்பு ஜலத்தில்”சுத்தப்படுத்தும் மானுட நேசமற்ற வாழ்க்கை முறையை அது சுட்டவில்லை.ஆசாரம் என்பதே அக்ரஹாரம் சேரி என்ற வித்தியாசங்களை நீக்க வந்த “பொது வாழ்க்கையைத்தான்” குறிக்கிறது.குறுமதியாளர்களின் குறுக்கீட்டில் தான் இந்த சாதிக்கொடுமைகள் வந்தன.ஆனால் அதை இன்னும் வேறு”பாஷையில்” பாஷ்யங்கள் சொல்லி குழப்பம் செய்வதே இன்றைய அறிவு ஜீவிகளின் வேலையாய் இருக்கிறது.அதற்கு ஒத்துப்பாடும் கணபதிராம் களின் “பௌராணிகங்கள்” இங்கு தேவையில்லை.

    இப்படிக்கு
    ருத்ரா இ.பரமசிவன்.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      சிலேடையைப் புரிய வைப்பதற்கு ஒரு தொடக்க கல்வி திண்ணை வாசகருக்கு நடாத்தவேண்டும் போலிருக்கிறது.

      நினைவலைகள் தொகுப்பாக வரும்போது இதை நீக்கிவிடுவது நன்று! இல்லாவிடில் சாதியைவிட்டு தள்ளிவைக்கப்படுவீரென எழுத்தாளருக்கு ஒரு எச்சரிக்கை விட்டது ஒரு சிலேடை. அதற்கு பாரதியாரின் வாழ்வைக்காட்டியதும் கால்டுவெல்லில் ‘சானார்கள்’ நூலைக்காட்டியதும் படிப்போருக்கு சுவாராசியத்தைக்கொடுக்கவே.

      புரிதலில் இவ்வளவு பிரச்சினையா ?

  17. Avatar
    RUTHRAA (E.PARAMASIVAN) says:

    மதிப்பிற்குரிய திரு.கணபதிராமன் அவர்களுக்கு

    சிலேடையை புரியவைத்து புகட்டுவதாயிருந்தால் அது எழுதப்பட்ட நோக்கமே அடி பட்டு போய்விடும்.இந்து மதம் இந்த சிலேடைகளால் பின்னப்பட்டது தான்.”சிவலிங்கத்தை”அடையாளப்படுத்தி தான் கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இயற்கையியல் எனும் ஞானம் கூட இப்படி எல்லோராலும் தெரிந்து கொள்ளபடுவதில் அரசர்களின் அவர்களை அண்டியிருக்கும் குருமார்களின் செல்வாக்கைப் பிடுங்கிக்கொள்ளுமே என்று “அறிவு”எனும் அர்த்தத்தோடு வந்த வேதம் “ரகசியம்” எனும் “குப்த ஞானம்” ஆயிற்று.”நான்கு மறைகள்” என்று “தீர்ப்பு” சொல்ல வந்ததும் அந்த ரகசியம் காப்பாற்றத்தான். அதிலும் இந்த வர்ணாசிரமம் என்பது இன்றைய பொருளாதார உற்பத்திமுறை பகுப்பாக அதாவது “ஆடம்ஸ்மித்”சொன்ன டிவிஷன் ஆஃப் லேபர் மாதிரி இருந்தால் இந்நேரம் நம் நாடும் மேலை நாடுகள் மாதிரி வளர்ந்து இருக்குமே.ஒரே வீட்டில் பிராமணர் ஷத்திரியர் வைசிகர் சூத்ரர் என்று எல்லோருமே ஒரு நேச பாவனையில் இருப்பார்களே.இப்போது பாருங்கள் சமுதாய சீர்திருத்த சட்டங்களால் இன்று எல்லா தொழில் புரிவோர்களும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள்.அதிலும் சில கசப்பான முரண்பாடுகள் தலை தூக்கத்தான் செய்கின்றன.எதிர்க்குரல்கள் சில ஆண்டுகளாக ஏற்பட்டுத்தான் இருக்கின்றன.இந்த குரல்கள் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளாக எழுப்பப்பட்ட போதெல்லாம் அரசாங்கத்தின் வாளாலும் ஆண்டவனின் “தீர்ப்புகள்” போல் என்று ஸ்லேடைகளாலும் அல்லது ஸ்லோகங்களாலும் அமுக்கப்பட்டு விட்டன. இப்போது ஸ்லேடைகள் புரிந்து போனதால் தான் இவ்வளவு பிரச்னைகளும்
    சூடுபிடித்துக்கொண்டிருக்கின்றன.

    திருமூலன் எனும் இடையன் சொன்ன உண்மை உருவத்தின் சிலேடையை இப்போது இப்படித்தான் சொல்லி புரிந்து கொள்ளவேண்டும்.

    “சாதியை மறைத்தது மாமத யானை
    சாதியில் மறைந்தது மா”மத” யானை ”

    முதலில் சொன்னது “பிறப்பொக்கும்” யாவர்க்கு என்றது.அடுத்து வந்தது தான்
    பிறப்பு வகுக்கும் என்று சொன்னது.இரண்டாவது தான் கோத்ரம் மற்றும் ப்ராமண ஷத்ரிய எனும் ரத்தம் சிந்தும் ரத்த ஆறுகளை வரலாற்றில் ஓடச்செய்தது.இந்த சிலேடையை புரியாதவர்கள் எவரும் இல்லை.

    ===============================ருத்ரா இ.பரமசிவன்.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      திருமூலர் என்ற சித்தர் எழுதியது நன்றாக இருக்கிறது. பொருளும் அசத்தல்.

      அவரை திருமூலன் என்ற இடையன் எனச்சொல்லலாமா? In bad taste !

  18. Avatar
    ஷாலி says:

    பின்னூட்டமிடும் வாசகன் கட்டுரையாசிரியருக்கு ஆதரவாகவோ,எதிராகவோ,அல்லது வேண்டுகோளாகவோ எதையும் எழுதலாம்.அதை ஏற்றுக்கொள்வதும்,எடுத்தெறிவதும் அவர் பொறுப்பு. சப்ளாகட்டை பின்னணியில் திரு.பரமசிவனார் ஆடும் ருத்ரதாண்டவத்தைப் பார்த்து, திரு.கணபதி ராமன் எங்கே பயந்து விடுவாரோ என்று பார்த்தேன். “புரிதலில் இவ்வளவு பிரச்சினையா?” என்று எழுதி ஆட்டத்தை அடக்கி விட்டார்.சபாஷ்! தொடர்ந்து எழுதுங்கள்.

  19. Avatar
    IIM Ganapathi Raman says:

    எழுத்தாளர்களும் சித்தர்களைப்போலத்தான். நான் சொல்வது ‘எழுத்தாளர்களை’.

    உள்ளேயிருந்து கொண்டே ஆனால் ஒட்டாமல் இருக்கும்போது வெளிவரும் கருத்துக்களே எழுத்துக்களாகும். சித்தர்கள் சமூகத்தைவிட்டு ஓடாமல் உள்ளேயிருந்து கொண்டே அதன் அசிங்கங்களை நம்க்குச் சொன்னார்களல்லவா ? அதைப்போல.

    ஆங்கில நாவலாசிரியை ஒருவரைப்பற்றி இப்படிக் குறிப்பிடுவர் (அவரின் படத்தைபோட்டு இலண்டன் 10 பவுண்டு கரன்ஸியாகப்போகிறது! என்றால் அவர் எப்படிபட்டவர்? இன்றைய செய்தித்தாள்களைப்படிக்கவும் ) She is in it; but not of it.

    This episode and the previous one show the writer Jyotirlatha Girija as a member of that club of writers to which Jane Austen belongs!

    ‘Not of it’ என்றால் கம்பிளிட்டான்னு எடுக்கக்கூடாது. அவரவருக்குப்பிடித்த மாதிரின்னு அர்த்தம்.

    அதாகப்பட்டது, They differ in degree not in kind. ஆனால் இப்படி இருந்தால் வசவுகள் வரத்தான் செய்யும். உஷா தீபன் ஒரு போடு போட்டாரல்லவா?

    But heart is the lonely hunter. Let the heart continues its reminiscences.

  20. Avatar
    ருத்ரா இ.பரமசிவன் says:

    ஷாலி அவர்களே.

    நாதஸ்வரத்திற்கு தான் ஒத்து ஊதுவார்கள்.சப்பளாக்கட்டைகளுக்குமா
    உங்கள் சப்போர்ட்கட்டைகள்?அதௌ கீர்த்தனாரம்பத்திலே…என்று அவர் ஆரம்பித்ததும் நீங்களும் “திலே திலே திலே”என்று பின் பாட்டு பாடுவதும் வெகு நன்றாகத்தான் இருக்கிறது.உங்கள் சுண்டல் ஊசும் வரை தான் மணிப்ரவாள சத்தங்கள்.

Leave a Reply to கவிஞர் இராய செல்லப்பா, நியூஜெர்சி. Cancel reply

Your email address will not be published. Required fields are marked *