பசுமை வியாபாரம்

This entry is part 2 of 7 in the series 5 ஏப்ரல் 2020

கொரானா உபயம் .கடந்த இரண்டு நாட்களாய் வழக்கமாய் காய்கறிகள் வாங்கும் கடை இல்லாமல் போய் விட்டது.

கொஞ்ச தூரம் சென்று பசுமைக்காய்கறிக்கடைக்குள் நுழைந்தேன்.

” இதுகளெ வாங்கறதுக்கு விசத்தியே சாப்பிடலாம் “

வெளியே வந்து கொண்டிருந்தவர் உரக்கவே முணுமுணுத்தார்.

“ விசகாய்கறியெ  சாப்புடறம்ன்னுதானே இங்க  வர்ரம் . இது என்ன புதுசா “ என்றேன்

“ இல்லெ. இந்த வெலைய்க்கு இதுகளெ வாங்கறதுக்கு  விசம் பரவாயில்லைன்னு ஏதோ வெறுப்புலே மனசுலே வந்திருச்சு.அதுதா அப்பிடிச் சொல்லிட்டன்.நியாயமா கூட எனக்குத் தோணலே”

” உம்..”

“ தெரியாமெச் சொல்லிட்ட மாதிரிதா இருக்கு ..”

“ ஏதோ வேகத்திலெ சொல்ல வேற மாதிரி அர்த்தம் வந்திரும். அதுக்கு ஆளாகக் கூடாது “

அவரும் ஆமோதித்தபடி மறுபடியும் கடைக்குள் சென்று காய்கறிகளை தேடத் தொடங்கியது  ஆறுதலாக இருந்தது.

   பசுமை வியாபாரம் இப்போது பல இடங்களில் கொடிகட்டிப் பறக்கிறது. ஆரோக்யம் தேடும் மக்கள் விலை அதிகம் என்றாலும் ரசாயனக் கலப்பில்லாத காய்கறிகள், உணவுப்பொருட்களை வாங்க ஆசைப்படுகிறார்கள் .

        இயற்கை வேளாண் விளை பொருள்கள் அதிகமான அளவில் சந்தைக்கு வரும் காலங்களில் க்ரீன் மார்க்கெட்டிங் என்ற வார்த்தை வெகு சாதாரணமாக புழக்கத்தில் வந்துவிட்டது.  இயற்கை விளை பொருட்களை வாங்குவதாகச் சொல்வது,  உபயோகிப்பது ” பேசனாக ”மாறிவிட்டது 

அவை சுகாதார அளவில் பாதுகாப்பானவை  செயற்கை உரங்கள் பயன்படுத்துவதில்லை  அதனால் அவற்றின் மீதான வசீகரத்தையும்  தந்திருக்கின்றன

 பசுமைச்  சூழல் , அவற்றை மேம்படுத்தும்  நடவடிக்கைகள் என்பவை  உடனடியாக நினைவுக்கு வரும் . இது சார்ந்த வார்த்தைகள் சமீபமாய்   அதிகப் புழக்கத்தில் இருந்தாலும்  90கள்  முதலே அதிகம்  பிரயோகிக்கப்பட்டன . கார்ப்பரேட் சமூகம்  பொறுப்புணர்வு பற்றிய பிரஸ்தாபங்களின் போது   பசுமை வியாபாரமும்  புழக்கத்தில் வந்துவிட்டது  எதிர்காலத்  தலைமுறையினரை  மனதில் கொண்டு இந்த வார்த்தை உச்சரிக்கப்படுவதாய் சொல்லப்பட்டது.

பசுமை நுகர்வு   என்பது பல நாடுகளில்  ஓர்  இயக்கமாகவே  நடைபெற்று வருகிறது.  உலகில் வெப்பமாதல் பற்றிய   விவாதங்களின்போது இந்த வார்த்தையும் சூடாகிவிட்டது.  இந்த பூமியைச்  சுத்தமானதாக  வெப்பம் குறைக்கும் முயற்சியில் இவற்றின் பயன்பாடு அதிகமாகிவிட்டது 

4 P கள்   இதனூடே விவாதிக்கப்படுகின்றன. Product , Price , Place , Promotion   என்பவை அவை.    பொருள்  எனப்படும்போது  சுற்றுச்சூழலுக்கு  அபாயம்  தராதது என்ற பொருளிலும்  விலை என்கிற போது சாதாரணப் பொருட்களுக்கு தரும் விலையைக் காட்டிலும்  கொஞ்சம் அதிகமானதாக இருக்கிறது . ,  இதை விற்க  தனி இடங்கள்  என்பதாகவும்,     தனி வியாபாரம்  எண்ணங்கள்,   செயல்கள் என்பதாகவும்  உணரப்பட்டிருக்கிறது 

    எல்லாவற்றிலும்  பிராண்ட்  அவசியமாகிவிட்டது  நிலைத்துவிட்ட பிராண்ட்டுகள்  லாபத்தை  அள்ளிக் கொடுக்கின்றன. பிராண்ட் இருக்கிறதா  என்று பார்த்து பொருட்களை   வாங்குவது  பேஷன்  என்று நிலை வந்து  விட்டது . வியாபார தந்திரங்களில்,  விளம்பரங்களில் பிராண்ட்டை நிலைநிறுத்துவதும் முக்கியமாகிவிட்டது  விளம்பர யுகத்தில்   இந்த பிராண்டட்  மோகத்தை  மீறி  இயற்கை விளைபொருள்களை  விற்பனை செய்வதும்  ஒரு சாசகமே .

 பின்னலாடை தரப்படுத்தலில்  பிராண்ட் அமைப்பில்  SA 8000, SA 14000 போன்றவை  பிரபலமானவை ,  இதுபோல்  iso14040   என்பது  சுற்றுச்சூழல் குறித்து வரும்  போது  வாழ்நாள் சூழலில் மதிப்பீடுகள்  திட்டம் பற்றி பேசப்பட்டது.  விளைந்து சந்தைக்கு வர இருக்கும்  பொருளின் சூழல், சக்தி,    சிக்கனமும்  வலியுறுத்தப்பட்டது

 இவையெல்லாம்  பசுமைப் புரட்சியின் பின் விளைவுகளாகவும்  பார்க்கப்பட்டது .

 வேளாண்மை  உற்பத்தியைப் பெருக்க பயிர்செய்கை நுட்பங்கள்  இந்திய சுதந்திரத்திற்கு பின் வெகுவாக நடைமுறைக்கு வந்தன. அது சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களில் பசுமைப் புரட்சியைக் கொண்டு வந்தது. பல மூன்றாம் உலக நாடுகளில் வறுமை, பட்டினி சாவு நாட்களில் புதுமைப் புரட்சி முன்நின்றது .

உயர் மகசூல் வகைகள் உருவாயின . தீவிர விவசாய முறைகளில் பூச்சிக்கொல்லிகள் தந்த உபாயம் பூச்சி மேலாண்மை வரைக்கும் சென்றது . பசுமைப் புரட்சி,  பூச்சிக்கொல்லி,  கலப்பு நைட்ரஜன் வளர்ந்த நாடுகளிடமிருந்து வளரும் நாடுகளுக்கு  பாரங்களை ஏற்றின ஐம்பெரும் பூதங்களும் கேடுகள் என  வந்துவிட்டன.இயகை விவசாய் இடுபொருட்கள், உரங்கள் போன்றவை ரசாயன உரங்களை விட விலையில் குறைவே . ஆனால் உழைப்பு சற்று அதிகமே. சரியான இயற்கை  வேளாண்மை சார்ந்த புரிதல் இருந்தால் வேளாண்மைத் தொழிலில் இருந்து அதிகளவில் மக்கள் வெளியேறுவதைத் தவிர்க்கலாம் என்கிறார்கள்.. பல விவசாயிகள் இரசாயனஉரங்களால் வரும்  புற்று நோயால் அவதிப்பட்டு கொண்டே அத்தொழிலைச் செய்வதும் ஒரு முக்கிய கோணம்

 நுகர்வோர் அணுகுமுறைக்குச் சவாலாய் தினப்படி வாழ்க்கை அமைந்துவிட்டது.  நுகர்வோரின் வாங்கும் சக்தி என்பது அவரின் பொ ருளாதார நிலை,  சமூகநிலை,  அவரின் மனநிலை சார்ந்த விவசாயிகளால் கட்டமைக்கப்பட்டது.

 பசுமை வியாபாரம் என்பது இன்று உலக அளவிலான  ஒரு விசயமாகி ஆகிவிட்டது. இதை  வற்புறுத்தும்,  கடைபிடிக்கும் நாடுகளில் இந்தியா,  இங்கிலாந்து,  தாய்லாந்து ஆஸ்திரேலியா,  கனடா,  சீனா போன்றவை முன்னிலையில் உள்ளன .

.அவை முத்திரையிடப்படுதல்  அல்லது எக்கோ லேபிளிங்கில்  கவனம் செலுத்துகின்றன.

 இந்த முத்திரை பசுமை வியாபாரத்திற்கு முக்கியம் தவறாத்தாகிவிட்டது .முத்திரைகள் மூலம் பலரின் கவனத்தைக் கவர வேண்டியிருக்கிறது.  சுற்றுச்சூழல்,  உடல்நிலை, இயற்கை விடயங்களை கவனத்தில் கொண்டு பசுமை வியாபாரம் நுகர்வோருக்கும் முக்கியமானதாகி விட்டது.

மாடி வீட்டுத் தோட்டம் அமைத்தல், வீட்டில் உள்ள காலி இடங்களில் காய்கறிகளை விளைவித்தல் என்பது எளிமையான இதன் செயல் வடிவங்கள்தான்.. நேரம் வசதி உள்ளவர்களுக்கு இவையெல்லாம் கை கூடும்.

கொங்குப்பகுதியில்தான் இப்போது அதிக அளவிலான புற்று நோய் மருத்துவமனைகள் இருக்கின்றன என்பது பழைய செய்தியாகி விட்டது.

ஏழைகளுக்கு இருக்கவே இருக்கிறது ரசாயன விளைபொருட்களும் அதிலுள்ள கொஞ்சம் விஷமும் என்பது விரக்தியில் வரும் வார்த்தைகளாகி விட்டன.

 எங்கள் வீட்டு மாடிவீட்டுத்தோட்டக்காய்கறிகள் இந்த வாதங்களுக்கெல்லாம் ஒரு மாற்றாக பலரின் பார்வையில் படுவது குறித்த மகிழ்ச்சி எனக்குண்டு.

” கறி திங்கறது சைனாக்காரன்

கைகழுவறது நாம “

 என்று வசவு பாடி நழுவாமல் மாடி வீட்டுத்தோட்டம் பற்றி விசாலமாய் நினைத்துப் பார்க்கலாம்.

Series Navigationகதை அல்ல உரைவிருதுகள்
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Comments

  1. Avatar
    ஷாலி says:

    // கொங்குப்பகுதியில்தான் இப்போது அதிக அளவிலான புற்று நோய் மருத்துவமனைகள் இருக்கின்றன என்பது பழைய செய்தியாகி விட்டது.
    ஏழைகளுக்கு இருக்கவே இருக்கிறது ரசாயன விளைபொருட்களும் அதிலுள்ள கொஞ்சம் விஷமும் என்பது விரக்தியில் வரும் வார்த்தைகளாகி விட்டன.//

    அன்றைய பயிர் விளைச்சலுக்கு காரணமான “பசுமை புரட்சி” ,இரசாயன உரங்களும்,வெண்மைப் புரட்சி பிராய்லர் கோழி,ஜெர்சி பசு பால்களும் பஞ்சத்தை போக்கியது என்பது உண்மைதான். ஆனால் அந்த கெமிக்கல்களை உண்டு வளர்ந்து உயிர் வாழும் மக்கள் உடலில்… இன்று வளரும் புற்றுக்களுக்காகவே புற்றீசலாய் புறப்பட்டு விட்டன புற்று நோய் மருத்துவ மனைகள். ஆம்! பசுமை புரட்சியின் பக்க விளைவுகள் புற்றுக்களாய் பற்று வரவு!

    ரசாயன ஊசியால்.வளரும் பிராய்லர் கோழி இறைச்சி உண்டவர்களுக்கும், ஜெர்சி கலப்பின பால் குடித்து வளர்ந்தவர்களுக்காகவே ஒவ்வொரு ஊரிலும் குழந்தை இன்மை கருத்தரிப்பு மையங்கள் ( Infertility Centre) பெருகி விட்டன. ஆறு வயது சிறுமி பருவம் எய்தும் பரிதாபம் நிகழ்கிறது. இன்றைய அரசுகளின் தாராள உலகமாக்கல் கொள்கையால்….தற்சார்பு பொருளாதாரம் என்பது கானல் நீரே!

    நம்மால் முடிந்த தற்சார்பு பொருளாதாரத்திற்காக….குறைந்த பட்சம் நம் வீட்டின் முன்னால் ஒரு முருங்கை மரத்தையாவது நட்டு வளர்க்க வேண்டும்.நான் சொல்வது குடிசை வாசியை…..மாடித் தோட்ட வீட்டுக்காரர்களை அல்ல….

Leave a Reply to ஷாலி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *