பாஞ்சாலியின் புலம்பல்

author
12
0 minutes, 8 seconds Read
This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

 draupathi

ஒரு அரிசோனன்

 

நான்தான் பாஞ்சால நாட்டின் இளவரசியான பாஞ்சாலி; துருபத மன்னனின் மகளான திரௌபதி; கருப்பாக இருப்பதாலும், கார்மேக வண்ணனான கண்ணனால் உடன்பிறப்பாக ஏற்கொண்டதாலும், கிருஷ்ணை என்றும் அழைக்கப்பட்டவள்.

பெண்மையைப் போற்றும் பெருந்தகையாளர்களே!

நீங்கள் ஏன் என் பக்கம் பேசுவதில்லை?

ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதியா என்று பேசும் உங்கள் கூற்றை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்று, ஐந்து கணவர்களைக் கொண்டேனே, அதை ஏன் நீங்கள் பாராட்டிப் பேசுவதில்லை? ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்த பல மாமன்னர்களைப் புகழும் நீங்கள், என்னை மட்டும் விலைமகளைப் போல ஏன் பார்க்கிறீர்கள்?

பல்லாயிரக்கான வீரர்களைப் போரில் புறம் கண்டு, அவர்தம் தலைகளை ஒருவன் சீவி எறிந்தால் பாராட்டும் நீங்கள், அதே மாவீரன் காரணமின்றி ஒருவர் தலையைச் சீவினால், அதைக் கொலை என்றுதானே கூறுவீர்கள்! ஆக, அங்கு வெவ்வேறு அளவுகோலைத்தானே எடுக்கிறீர்கள்!

ஆனால், சிலபோது மட்டும் — புலி பசுவைத் தின்னும், ஆனால் பசு ஒருபோது புலியைத் தின்னாது என்னும் இயற்கைச் சுபாவத்தைக் காணாது – புலியா, பசுவா என்று பார்க்காது, ஒரே தராசில் ஏற்றுகிறீர்களே!

பெண்ணடிமை செய்தான் இராமன் என்று அவனைத் தூற்றுகிறீர்களே, “கற்பென்று வைத்தால் அதை ஆணுக்கும் முன்பு வைப்போம்!” என்ற கொள்கையுடன், சீதை ஒருத்தியை மட்டும் மனதில் நினத்து வாழ்ந்தானே — மக்களின் கருத்துக்காக, மன்னனின் முதற்கடமை மக்களுக்கே என்று, தன் மனைவியைத் துறந்து, தன் மகிழ்ச்சியைத் துறந்தானே – அவனது அந்தப் பேராண்மையை ஏன் பாராட்ட மறுக்கிறீர்கள்? பிறன் மனைவியை மயக்கி, அவளைத் தன் கணவனிடமிருந்து பிரித்து, அவளுக்காக நாட்டையே துறப்பவன் சிறந்தவன், நாட்டுக்காக, மனைவியைத் துறக்கும் மாவீரன் பெண்ணடிமை செய்பவனா? சொந்த நலனுக்காக நாட்டை விடவேண்டும் என்றால் நாடு நலம் பெறுவது எப்படி?

ஆண் மட்டும்தான் பிடிக்காத பெண்ணை விலக்கி வைக்க வேண்டுமா, பிடிக்காவிட்டால் பெண்ணும் அவ்வாறு செய்வதில் என்ன தவறு என்று பெண்ணுக்குத் திருமண முறிவில் முதலிடம் வைக்க முயலுகிறீர்களே – ஒரு பெண், ஒருவர் பின் ஒருவராக, ஒன்றுக்கு மேற்பட்ட கணவருடன் வாழலாம் என்ற கருத்தை ஆதரிக்கிறீர்களே, ஐவரோடு வாழ்ந்தாலும் அவர்களுக்கு மட்டுமே என் மனதில் இடம் கொடுத்திருந்தேனே, யாரையும் தூக்கி எரியவில்லையே, அதை என் போற்ற மாட்டேன் என்கிறீர்கள்?

ஏன் என் விஷயத்தில் மட்டும் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் அளவுகோலைக்கூடத் தூக்கி எரிந்து விடுகிறீர்கள்?

ஆண் ஆதிக்கத்தையே, அவர்களின் அதிகாரத்தையே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே புரட்டிப்போட்ட புதுமைப் பெண்ணாக உங்கள் கண்களுக்கு நான் தெரியாமல் போனது ஏனோ?

மகாபாரதத்தையே மாற்றி எழுதும் முயற்சியில் — என் கணவன் குடாகேசி(அருச்சுனன்)யிடம் நான்கு முறை தோற்று ஓடியவனும், போர்க்களத்தை விட்டுப் பதினான்கு முறை ஓடியவனுமான கர்ணனை உயர்த்தியும், என்னவர் அருச்சுனனைத் தாழ்த்தியும் பேசுகிறீர்களே, பலவாறு ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளும் காட்டுகிறீர்களே, இதுதான் சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் கோடாமல் இருக்க வேண்டிய சான்றோர்களான உங்களுக்கு அணியா(கலனா)?

எவருக்கும் தன் பக்கத்து வாதத்தை எடுத்துச் சொல்ல அனுமதி உண்டு. என்னைப் பொருத்தமட்டில் என் வாதத்தையே காதுறாமல், நீங்கள் நடுவராகவும், நீதியாளராகவும் ஆகிவிடுவது ஏனோ?

என் தரப்பு வாதத்தைத்தான் கேளுங்களேன்.! என் புலம்பலைச் சற்றுதான் செவிமடுங்களேன்…

…எந்தையும் தாயும் கூடிக் குலவி, மகிழ்ந்து இருந்து பிறந்த பிறப்பல்ல என் பிறப்பு. தான் அவமதித்தனால் தன்னை அவமதித்த துரோணாச்சாரியாரை வஞ்சம் தீர்க்க – தன்னைத் தேர்க்காலில் கட்டி இழுத்து வந்த அருச்சுனனுக்கே தன் மகளை மனைவியாக்கி, அவனின் உதவியுடன், தன் மகனால் மரணம் வரவேண்டும் என்று – கடும் தவமிருந்து, எரியும் நெருப்பில் பிறந்த பிறப்பு என் பிறப்பு!

வஞ்சம் தீர்க்கும் வனிதையாகத்தானே இப்பூவுலகுக்கு நான் வரவழைக்கப்பட்டேன்! வளர்க்கப்பட்டேன்! ஆசைக்கொரு பெண் வேண்டும், அவளது அழகைக் கண்டு உள்ளம் பூரிக்கவேண்டும், அவள் பூங்கொடியாக வளர்ந்து பூப்பெய்துவதைக் கொண்டாட வேண்டும், அவளைப் பொன்னாலும், மணியாலும் அலங்கரித்து, மனதுக்கேற்ற மணாளனுக்கு மனமுடிக்கவேண்டும் என்று என்னை என் தாய் ஈன்றெடுக்கவில்லையே! தீக் கடவுளல்லவா பாஞ்சாலப் பேரரசனின் (துருபத மன்னனின்) தவத்தை மெச்சி என்னைப் பரிசாக அளித்தான்! இதில் பாசமேது? அன்பேது? என் தந்தை தன் பழியைத் தீர்க்க தீக் கடவுளிடமிருந்து பெற்ற கருவியல்லவா நான்!

“அருச்சுனனே உன் மணாளன் ஆவான், அவனுக்காவே பிறந்தவள் நீ!” என்று சொல்லிச் சொல்லி வளர்த்து விட்டு, சிவனாரின் வில்லெடுத்து, நாண்பூட்டி, கீழே இருக்கும் நீரில் தெரியும் எதிரொளியில், மேலே சுழலும் ஒரு மீன் பொறியின் (மச்ச யந்திரம்) கண்ணில் அம்பெய்ய வேண்டும், அதில் வெல்பவருக்கே என் மகளைக் கொடுப்பேன் என்று அறிவித்தாரே என் தந்தை, அது எனக்கு அவர் நல்கிய பெண்ணுரிமையா? இதில் தன்வரிப்பு (சுயம்வரம்) என்ற தம்பட்டம் வேறு!

என்னடா இது, ஒருவனைச் சொல்லி இவள் மனதில் காதலை வளர்த்து விட்டோமே, இப்பொழுது கதையை மாற்றுகிறோமே என்று என்று நினைத்தாரா என் தந்தை? இல்லையே!

“அருச்சுனனைத் தவிர, வேறு யாராலும் மீன் பொறியை அடிக்க இயலாது. எனவே, நீ கவலை கொள்ளவேண்டாம், என் கண்ணே!” என்று என்னிடம் பகர்ந்தார். அந்தப் பாவி கர்ணன் அங்கு வருவான், தன் நண்பனுக்காக என்னை வெல்ல முயல்வான் என்று யார் எதிர்பார்த்தார்கள்?

“தேரோட்டியின் மகனான உன்னை நான் மணக்க மாட்டேன்! நீ இந்தப் போட்டியில் கலந்து கொள்வதை நான் அனுமதிக்க மாட்டேன்!” என்று என் உரிமையைத்தானே நான் நிலைநாட்ட முயன்றேன்! வேறெப்படி நான் அவனைத் தடுக்க இயலும்? இதைக் காட்டி நான் சாதி வெறிபிடித்தவள் என்று என்னைத் தூற்றுகிறீர்களே, ஏன் நான் என் பெண்ணுரிமையை நிலைநாட்டிக் கொள்கிறேன் என்று யாரும் எண்ணிப்பார்க்க மறுக்கிறீர்கள்?

கடைசியில் நான் மணக்க விரும்பிய அருச்சுனனே, அந்தணன் ஒருவன் வேடத்தில் வந்து என்னை வெற்றி கொண்டான். வெள்ளாடை உடுத்தி இருந்த நானும் அவன் கழுத்தில் மாலையிட்டேன். அதை எதிர்த்த அத்தனை மன்னர்களையும் – துரியன் (துர்யோதனன்), கர்ணன் உள்பட அத்தனை மன்னர்களையும் – அந்தண வேடதாரிகளான அருச்சுனனும், பீமனும் புறங்கண்டனர்.

“அந்தணா! உன் வீரத்திற்கு நான் தலை சாய்க்கிறேன்!” என்று கர்ணன் – கவச-குண்டலங்களை இன்னும் இழக்காத அக் கர்ணன் – அருச்சுனனை வணங்கி நீங்கினான். இத்தனை மாமன்னர்களை மண்ணில் வீழ்த்திய மாவீரன் அந்தணனாய் இருந்தால் என்ன, குறையில்லை என்று மனமகிழ்ச்சியுடன்தான் அவனைப் பின்தொடர்ந்தேன்.

அவன், “அன்னையே, பிச்சை பெற்று வந்திருக்கிறோம்!” என்று பூடகமாகப் பேசியது என் தலையெழுத்தையே மாற்றிப் போட்டது.

“பகிர்த்து கொள்ளுங்கள், பாலகர்களே!” என்று, என்னைப் பார்க்காமலையே பதிலளித்தாள் என் மாமியார் குந்தி – பாரை வென்ற பாண்டுவின் பெண்ணரசி.

பகீரென்றது என் நெஞ்சம். ஒரு உறையில் ஐந்து வாள்களா, இது என்ன நீதி என்று துடித்தேன். தவறை உணர்ந்த தாயும், அறநெறியின் மறுவடிவமான மூத்தவன் யுதிட்டிரனின் கருத்தைக் கேட்டாள்.

தாயின் வாக்கைப் பொய் ஆக்குவதா என்று தவித்த இருதலைக் கொள்ளி எறும்பான அவர், “தவறாகப் பேசிய சொற்கள்தானே! அருச்சுனனே வென்றான், இக்கன்னியை! அவனே மணக்கட்டும்!” என்றார்

அதைக்கேட்ட நான் கொண்ட என் மன நிம்மதி, மறுகணமே கலைந்தது.

“தாய் சொல்லைத் தட்டலாமா? பாவம் வந்து சேராதா?”. என்று அண்ணனின் மனத்தைக் குழப்பி, அவர் சம்மதத்தையும் பெற்றான் அருச்சுனன். பாவம் வந்து சேர்த்தாலும் சேரட்டும், நெறிமுறைகளை மீறவேண்டாம் என்று இயம்பிய தருமரும் தலை அசைக்க நேர்ந்தது.

தாயா, தாரமா என்னும் கேள்விக்கு அக்காலத்தில் தாய் சொல்லைத் தட்டாதேஎன்னும் பதில்தான் தலை சிறந்ததாக இருந்தது.!

துடித்தேன் நான்! அதைக்கேட்ட என் தந்தையும் துடித்தார்.

“வேதங்களும், மரபுகளும் ஆதரிக்காத ஒன்றைச் செய்து நரகப் படுகுழியில் நான் விழமாட்டேன். பாண்டவர்களே! உங்களில் யார் ஒருவர் வேண்டுமானும் என் மகளை மணந்து கொள்ளுங்கள்! ஒருவனுக்கு ஐந்து கன்னிகள் மணவாழ்க்கைப் படலாம். ஆயினும், ஒரு கன்னியை ஐவர் மணப்பதா?” என்று பொங்கி எழுந்து, “கன்னியின் அண்ணனும், கன்னியின் மாமியும் இதை முடிவு செய்யட்டும்!” என்று தனது பொறுப்பிலிருந்து நழுவினார்.

அப்பொழுதும் என் விருப்பத்தை யாரும் கேட்கவில்லை.

அப்பொழுது அங்கு வந்து சேர்ந்த வியாச மாமுனிவரிடம் — வேதங்களைத் தொகுத்து இவ்வுலகுக்கு வழங்கிய அந்த உத்தமரிடம் – அந்தணருக்கும், மீனவப் பெண்ணுக்கும் பிறந்த பேரறிவாளரிடம் – பாண்டுவின் தந்தையிடம் – அருச்சுனனின் பாட்டனிடம் — இந்த வேதனையைப் பகிர்ந்து கொண்டான் என் அண்ணன்.

“மாமுனிவரே! நீங்களே சொல்லுங்கள்! அண்ணனின் மனைவி அன்னையாவாள்! தம்பியின் மனைவி தனது மகளுக்கு இணையாவாள். அப்படியிருக்க, அண்ணன் தம்பிகளான ஐவருக்கு ஒரு கன்னியைப் பகிர்வது பாவம் ஆகாதா? நெறிமுறைகளுக்கு உகந்ததா? வேதங்களைத் தொகுத்தவரே! நீரே இதற்கு விடை அறிவீர்!” என்று அவரிடம் அறிவுரை வேண்டினான்.

முக்காலமும் உணர்ந்த அம்முனிவர் முன்னர் நடந்தவற்றை மொழிந்தார்.

“இக்கன்னி பாஞ்சாலி, முன்பிறப்பில் கணவனை வேண்டி, இறைவன் சிவபெருமான் நோக்கித் தவமியற்றினாள். ஐந்து குணங்கள் நிரம்பிய ஒரு கணவன் வேண்டும் என்று இறைஞ்சாமல், அறநெறி அறிந்த கணவன் வேண்டும், காற்றைப் போலப் வலிமை மிக்க கணவன் வேண்டும், இந்திரனைப் போன்று வீரமிக்க கணவன் வேண்டும், அழகுமிக்க கணவன் வேண்டும், சாத்திரம் பயின்ற கணவன் வேண்டும் என்று தனித் தனியாக வேண்டினாள்.

“வேண்டுவோருக்கு விரும்புவதை வரமாக அளிக்கும் முக்கண்ணனும், ‘பெண்ணே, நீ வேண்டியபடி ஐந்து கணவர்களை அளித்தேன்!’ என்று அருளினான்.

“இறைவா! இது என்ன சோதனை? நான் ஒரு கணவனை வேண்டினால், ஐந்து கொழுநன்களை அளிக்கிறீர்களே! இவ்வுலகு என்னைக் கற்பிழந்த காரிகை என்று தூற்றாதா?’ என்று கதறி அழுதாள்.

“இறைவனும், ‘பெண்ணே! உன்னுள் ஐந்து பூதங்களையும் அடக்கி ஆளும் தெய்வப் பெண்கள் உட்புகுந்து ஒன்றாகச் சங்கமிப்பர்! உனது பிறப்பும் பூவுலக மாதர் மூலம் நிகழாது, நெருப்பின் மூலமாகவே நிகழும். ஐந்து தேவர்களின் அம்சமான மனிதர்களை நீ மணப்பாய்! பொன்னையே பரிசுத்தமாக்கும் தீயில் நீ பிறப்பதனால், மாசற்றவளாக விளங்குவாய்! உலகப் பெண்களுக்கு விதிக்கப்படும் நியதி உன்னைக் கட்டுப் படுத்தாது!’ என்று வரமளித்து அருளினான்.

“எனவே, அனைத்துக்கும் விதிவிலக்கு இருப்பதுபோல, இதுவும் ஒரு விதி விலக்கேயாகும்! வருந்தற்க! நியதிக்கு அப்பாற்பட்ட இத் திருமணம் நடக்கட்டும்.   ஒருவரின் மனைவியாக அவள் விளங்கும்போது, உலக நெறிகளை மற்றவர் பின்பற்றவேண்டும். ஒருவரை நீங்கி மற்றவரிடம் அவள் புகும்போது மீண்டும் கன்னித் தன்மையை அடைவாள்!” என்று அறிவுரை நல்கினார்.

இறைவனே விதித்தபடி நடக்கட்டும் என்றுதான் விட்டுவிட்டேன். ஐவருக்கும் மனைவியானேன். ஆனால் நான் செய்தது புதுமை அல்ல. எனக்குமுன் இப்படி பல கணவன் மணம் நடந்திருக்கிறது என்றும் உரைக்கப்பட்டது. இறைவனே வேதங்களைப் படைக்கிறான் என்று அனைத்து சமயங்களும் பகருகின்றன. வேதமுதல்வனே விதித்தது எப்படி முறை அற்றது ஆகும்?

இது மட்டும்தானா நான் அனுபவித்த இக்கட்டான நிலை? எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாத இழிவல்லவா எனக்கு வந்து சேர்ந்தது!

வஞ்சக சகுனியிடம் – சூதாட்டத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் – செல்வம், வேலையாட்கள், அரசு, உடன்பிறப்புகள் மட்டுமன்றித் தன்னையும் இழந்த என் முதற்கணவர் யுதிட்டிரர், என்னையும் பணயம் வைத்து இழந்தார் – தன்னை இழந்தபின்னர் தாரத்தை பணயம் வைக்கும் உரிமை தனக்கு இல்லை என்பதை அந்த நீதிமான் அறியாது போனது ஏனோ?

இப்படிப்பட்ட ஒரு நிகழ்சிக்குத்தானே காத்திருந்தான் துரியன்!

“எமக்கு அடிமையான பாஞ்சாலியை இங்கு வரும்படி ஆணையிட்டதாகச் சொல்லி, இங்கு வரச்சொல்லு!” என்று தனது தேரோட்டியை அனுப்பினான் அந்தச் சண்டாளன்.

மாதவிடாய்க் காலம் ஆனதால், ஒற்றை ஆடை உடுத்தி, நெகிழ்வான நிலையில் இருக்கிறாள் பாஞ்சாலி. இந்நிலையில் இருக்கும் அவளை பலர் வீற்றிருக்கும் இக்கொலு மனடபத்திற்குக் கொணர்வது முறையில்லை!” என்று என்னவர் எடுத்துச் சொன்னதும் எக்காளமிட்ட அவன் செவிகளில் ஏறவில்லை.

எனக்குச் சேதி வந்ததும், “குரு வம்சத்து அரசியை ஆணையிடத் துரியனுக்கு உரிமை இல்லை!” என்று மறுமொழி அனுப்பினேன்.

“உன்னைப் பணயம் வைத்துத் தோற்றுவிட்டார் உன் கணவர். எனவே, உன்மீது உரிமை எனக்கு இருக்கிறது!” என்று சொல்லி அனுப்பினான்.

“தான் தோற்றபிறகு, என்னைப் பணயம் வைக்க அவருக்கு உரிமை இல்லை!” என்ட்று மறுத்தேன் நான்.

“இப்படிச் சொன்னால் அவள் வரமாட்டாள். அவளைப் பற்றி இழுத்து வா!” என்று தம்பி துச்சாதனனை அனுப்பினான் துரியன்.

அவன் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்ற என் நீண்ட கருநீலக் கூந்தலைப் பற்றி, என்னைத் தரையில் புரட்டி இழுத்துக்கொண்டல்லவா வந்தான் அந்தப் பாவி துச்சாதனன். அவனது தீச்செயலை யார் கண்டித்தார்கள்? இந்த முறையற்ற செயலைக் கண்டித்து எழுத ஒருவர் கூடவா இல்லது போய்விட்டார்கள், இந்தப் புண்ணிய பூமியில்?!

“மாதவிடாய் காலத்தில் இருக்கும் என்னை இந்த குரு வீரர்கள் முன்னிலையில் இழுத்து வருகிறாய். உண்மையில் இது தகாத காரியம். ஆனால் இங்கிருக்கும் ஒருவரும் இதைக் கண்டிக்கவில்லை. நிச்சயமாக இவர்களும் உன்னைப் போன்ற மனம் கொண்டவர்களே!  சீ… உண்மையில் பாரதர்களிடம் அறம் மறைந்துவிட்டதா?  உண்மையில் க்ஷத்திரிய ஒழுக்கமும் மறைந்துவிட்டதா? அல்லது ஒழுக்கத்தின் எல்லைகளைக் கடக்கும் இந்தச் செயலை, இந்தச் சபையில் இருக்கும் ஆசான்கள் அனைவரும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே!! “[1] என்று அழுதேன், அரற்றினேன்.

அந்த அத்தினாபுரத்து அரசவையில் யாரும் என் பக்கம் பேசவில்லையே, வாய் மூடி அமைதிதானே காத்தார்கள்!

“ஓ, துரோணரும், பீஷ்மரும், விதுரரும், இந்த மன்னரும் {திருதராஷ்டிரரும்} தங்கள் சக்தியை இழந்துவிட்டனரே. அல்லது, குரு வம்சத்தவர்களில் முதன்மையான இந்த மூத்தவர்கள் ஏன் இக்குற்றத்தைக் கண்டும் அமைதியாக பார்க்கின்றனர்?”[2] என்று கதறினேனே, யாராவது எனக்காகத் தமது சுண்டுவிரலைக்கூட அசைத்தார்களா?

“நீங்கள் தோற்றபின் என்னை வைத்துச் சூதாட உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? அடிமைக்கு மனைவி, மக்கள் என்ற உறவேது?” என்று இடித்துரைத்தும், இடித்த புளியாகத்தானே சமைத்திருந்தார் தருமபுத்திரர்! கடைசிவரை ஒரு சொல் கூட அவர் வாயிலிருந்து உதிரவில்லையே![3]

நீங்களும் அந்த அவையினரைப்போலத்தானே அமைதி காக்கிறீர்கள்! கேட்டால், நான் துரியன் தடுக்கி விழுந்ததைப் பார்த்துச் சிரித்தேன், கர்ணனை அவையோர் முன்னர் அவமானப் படுத்தினேன் என்று எனக்கு எதிராகவே வழக்காடுகிறீர்கள்!

தடுக்கி விழுந்தால் தாயும் நகைப்பல் என்ற பழ்மொழிப்படித்தானே நான் நண்டந்து கொண்டேன்!

என்னைத் “தாசியே!” என்று ஏசினானே துச்சாதனன், அந்த வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் மிகவும் மகிழ்ந்து அந்தப் பேச்சை அங்கீகரித்து, சத்தமாகச் சிரித்தானே, அவனைக் கடிந்து நீங்கள் ஏன் ஒரு சொல்கூட சொல்லத் தயங்குகிறீர்கள்?

ஒரு பெண்ணை எப்படியெல்லாம் அவமானப் படுத்த முடியுமோ, அப்படி அவமானப் படுத்துவதுதான், நான் என் தன்னுரிமையை நிலைநாட்டிக் கொண்டதற்கும், தடுக்கி விழுந்தவனைக் கண்டு சிரித்ததற்கும் கொடுக்கப்படும் தண்டனையா? இதை எப்படி உங்களால், பெண்மையைப் போற்றிப் பேசும் உங்களால் நியாயப்படுத்த முடிகிறது?

அச்சபையில் எனக்குப் பரிந்து பேசிய இருவர்கள் என் கணவர்களில் ஒருவரான பீமனும், துரியனின் இளையோனான. சத்திரிய மனைவி அல்லது வேறோருத்திக்கும், திருதராட்டிரனுக்கும் பிறந்த விகர்ணனும்தானே!

“சகாதேவா, நன்நெறியற்ற இச் செயலைச் செய்த அண்ணனின் கரத்தை எரிக்கிறேன்!” என்றல்லவா பீமன் பொங்கி எழுந்தார்! உங்களால் போற்றப்படும் மகாகவி பாரதியும், என் பீமனின் சொற்களைக் கவிதை மழையாய்ப் பாஞ்சாலி சபதத்தில் பொழிந்ததும் தாங்கள் அறிந்ததுதானே!

‘சூதர் மனைகளிலே — அண்ண!
தொண்டு மகளிருண்டு.
சூதிற் பணய மென்றே — அங்கோர்
தொண்டச்சி போவதில்லை.     69
‘ஏது கருதிவைத்தாய்? — அண்ணே,
யாரைப் பணயம்வைத்தாய்?
மாதர் குலவிளக்கை — அன்பே
வாய்ந்த வடிவழகை.     70

‘அவன் சுடர்மகளை, — அண்ணே,
ஆடி யிழந்துவிட்டாய்.
தவறு செய்துவிட்டாய்; — அண்ணே,
தருமங் கொன்றுவிட்டாய்.     72

‘துருபதன் மகளைத் — திட்டத்
துய்ந னுடற்பிறப்பை, —
இருபகடை யென்றாய், — ஐயோ!
இவர்க் கடிமையென்றாய்!     76
‘இதுபொறுப்ப தில்லை, — தம்பி!
எரிதழல் கொண்டுவா.
கதிரை வைத்திழந்தான் — அண்ணன்
கையை எரித்திடுவோம்.’     77

அதுமட்டுமா? துரியனின் இளையோன் விகர்ணன்தான் எப்படி எனக்காக வாதாடினான்!

“மன்னர்களே, பாஞ்சாலி கேட்கும் கேள்விக்கு பதிலளியுங்கள்.  நாம் நீதியைப் பகராமல் இருப்போமானால், நாம் நரகத்திற்கே செல்வோம்.. பிதாமகரான பீஷ்மரும், தந்தையும், அரசருமான திருதராஷ்டிரரும், உயர் ஆன்ம விதுரரும் ஒன்றும் சொல்லாமல் இருப்பது எவ்வாறு?

“எங்களுக்கெல்லாம் குருவான, மறுபிறப்பாளர்களில் சிறந்தவர்களான துரோணரும்,கிருபரும் ஏன் இங்கு பதிலளிக்கவில்லை? இந்தப் பந்தயத்தில் விருப்பம் கொண்ட சகுனியே, யுதிட்டிரனைத் தன் மனைவி பாஞ்சாலியைப்பந்தயமாக வைக்கத் தூண்டினான். இதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், பாஞ்சாலி வெல்லப்படவில்லை என்று துணிகிறேன்.”[4] என்று எடுத்துரைத்தானே விகர்ணன்!

அப்படி விகர்ணன் எடுத்துச் சொல்லியும் – தன்னை இழந்தபின், என்னை வைத்துச் சூதாடும் உரிமையை என்னவர் யுதிட்டிரர் இழந்துவிட்டார் என்று நன்னெறியை எடுத்துச் சொல்லிய போதும் — உங்களால் அறநெறித் தேவனின் மறு அவதாரம் எனப் புகழப்படும் கர்ணன் என்ன சொன்னான் என்பது, பெருந்தகையாளர்களான நீங்கள் அறியாததா!

“பாஞ்சாலிஒற்றையாடையுடன் இங்கு கொண்டு வரப்பட்டது சரியில்லாத நடவடிக்கையாக நீ கருதினால், அதற்கு நான் சொல்லும் மறுமொழியைக் கேள், விகர்ணா! ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன் என்றே விண்ணவர்கள் வழங்கி இருக்கின்றனர் இருந்தபோதிலும், ,இந்தப் பாஞ்சாலி பல கணவர்களைக் கொண்டிருக்கிறாள். ஆகையால், ், இவள் கற்பற்ற பெண் என்பது உறுதி.ஆகையால், இவளை இந்தச் சபையின் முன்பு ஒற்றையாடையில் கொண்டு வருவதோ அல்லது அவளது ஆடைகளைக் களைவதோ வியப்படைய வேண்டிய செயல் அல்ல.[5]“ என்றல்லவா இழிந்துரைத்தான்! அவன் கூறிய சொற்களைக்கொண்டு என் கற்பறத்தைக் கூறுபோட முயல்வோர்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.

பொன்னைப் புடம் போட்டுப் புனிதமாக்குவது நெருப்பில்தான்! தன் கற்பை இவ்வுலகுக்கு நிரூபிக்க, கற்புக்கரசியாம் சீதை புகுந்து மீண்டதும் நெருப்பிலிருந்துதான்!

அந்த நெருப்பில் பிறந்தவள் நான்! நான் நெருப்பானவள்! என்னிடம் மாசு இருந்தால் நான் நெருப்பிலிருந்து தோன்றி இருக்க முடியுமா? எந்த மாசையும் எரிப்பது தீ! அத்தீயின் வடிவானவள் நான்! என்னிடம் மாசு இருக்கமுடியுமா? கர்ணனின் கூற்றை — கதிரவனின் மைந்தனின் கூற்று என்று நீங்கள் மதிக்கும்போது, கதிரவனே ஒரு பகுதியான அந்த அக்கினிப் பிழம்பிலிருந்து தோன்றிய என் கூற்றை ஏற்க மறுப்பதும் ஏனோ?

அந்த வஞ்சகக் கர்ணன் என்னைப் பழி தீர்க்க அவ்வாறு கூறாதிருந்தால், என் துகில் அவையோர் முன் உறியப் பட்டிருக்காது, நான் சூளுரைத்திருக்க மாட்டேன். துரியனின் தொடை பிளக்கப்பட்டு, அவன் மரித்திருக்க மாட்டான். கர்ணன் அருச்சுனால் கொல்லப்பட்டிருக்க மாட்டான்.

பாரதப் போரே நிகழ்ந்திருக்காது!

ஒரு பெண்ணின் — மாதவிடாய்க்காலத்தில் குருதி ஒழுகும் நிலையில் உள்ள ஒரு பெண்ணின் — ஆடையைக் களைந்து, அவளது அவலநிலையை மாபெரும் சபையினர் கண்டு எள்ளாட வேண்டும் என்று கொக்கரித்த கர்ணனை — தாயென நினைக்கவேண்டிய பெண்ணினத்தையே இழிவுக்கு உள்ளாகச் செய்த அந்தப் பண்பற்றவனை –- பெண்மையைப் போற்றும் பெருந்தகையாளர்கள் பெருமை பேசுவது எங்ஙனம்?

என்மீது நீங்கள் மதிப்பு வைத்திருக்கிறீர்களோ இல்லையோ, அது வேறு விஷயம். ஒரு பெண்ணை, அவள் எப்படிப்பட்டவளாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் – அவளைப் பலவந்தப்படுத்தி, அவள் துகிலை உரைக்கச் சொன்னாலும், அப்படி உரிந்தாலும் — உங்கள் காலத்தில் அப்படி யார் செய்தாலும், செய்யத் தூண்டினாலும், அவர்களுக்குக் கொடிய தண்டனை கொடுக்கவேண்டும் என்று நீங்கள் கொடி பிடிப்பீர்களா, அல்லது   அந்தக் கயவர்களுக்கு நீங்கள் ஆலவட்டம் தூக்குவீர்களா — சொல்லுங்கள்!

தீநெறியின் முன்பு செய்வதறியாது திகைத்து அனைவரும் நின்றபோது, என் துகிலை தீயவன் துச்சாதனன் உறிய முற்பட்டபோது, என் மானத்தைக் காத்து அருளிய கண்ணன் போன்று உங்களில் ஒருவராவது இருக்கத்தானே செய்வீர்கள்!

தனது இழிசெயல் நிறைவேறாது நின்றபோது, துச்சாதனன் களைத்து வீழ்ந்தபோது பேச்சற்று நின்டற அவையோரைப் பார்த்து விதுரன் சொன்னதையே நானும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

“அறநெறிகளின் விதிகளை அறிந்து, ஒரு சபையில் கலந்து கொண்டு, ஒரு கேள்விக்கு பதில் அளிக்காமல் இருப்பது என்பது பாதி பொய்க்கு சமமாகும்.  மறுபுறம் அறநெறிகளின் விதிகளை அறிந்த ஒருவர்ஒன்றுகூடி, பொய்யான பதிலைச் சொன்னால், நிச்சயமாக பொய் சொன்ன பாவம் அவரைச் சாரும்.”

எக்காலத்திற்கும் ஒரே நெறி, ஒரே நியாயம், ஒரே அளவுகோல் என்று சொல்லும் நீதிமான்களே, சொல்லுங்கள்! இக்கால நெறிமுறையைக் கொண்டு என்னை நீங்கள் போற்றவேண்டாம், குறைந்த பட்சம், என்னைக் கொடுமைப் படுத்திய – பெண்ணடிமை செய்த பேடிகளுக்கு — உங்கள் காலப்படி என்ன தண்டனை வழங்குவீர்களோ, எப்படி ஈனர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்துவீர்களோ, அப்படி நடத்தாவிட்டாலும் போகிறது…

இதுவரை பொறுமையாக என் புலம்பலைக் கேட்டதற்கு நன்றி!

பாஞ்சாலி ஒரு பாவப்பட்டவள் என்று எனக்காக ஒரு துளி கண்ணீர் கூட சிந்தமாட்டீர்களா?

 

*******************************************************************************************************************************************************

 

 

 

[1] மகாபாரதம், மூலம், சபாபர்வம், 66ம் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளதன் தமிழாக்கம்

[2] மகாபாரதம், மூலம், சபாபர்வம், 66ம் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளதன் தமிழாக்கம்

[3] பாஞ்சாலியின் இக்கேள்விக்குக் கடைசிவரை தருமர் விடை அளிக்கவில்லை. குனிந்த தலை நிமிராமலேதான் இருந்தார் என்று மகாபாரதம் கூறுகிறது.

[4] மகாபாரதம், மூலம், சபாபர்வம், 67ம் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளதன் தமிழாக்கம்

[5] மகாபாரதம், மூலம், சபாபர்வம், 67ம் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளதன் தமிழாக்கம்

Series Navigation
author

Similar Posts

12 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    பாஞ்சாலியின் புலம்பல் பரிதாபமானதுதான். மாதவிலக்கு உள்ளது என்பது அன்று துரியோதனனின் சபையில் பகிரங்கமானது. அவளைச் சுற்றிலும் ஆண்கள்தான் இருந்திருப்பா. அரண்மனைப் பெண்கள் யாரும் அங்கு இருக்க வாய்ப்பில்லை. அப்படியே இருந்திருந்தாலும் அந்த அரச சபைப் பெண்கள் பாஞ்சாலிக்காக வாதிடும் வாய்ப்பில்லை. அன்றிலிருந்து இன்றுவரை மகாபாரதத்தில் பாஞ்சாலி என்ற பாத்திரத்துக்கு இழைக்கப்பட கொடுமை பற்றி பெண்ணியம் பேசும் பெண்கள் இதுவரை எத்தகைய குரல் எழுப்பியுள்ளனர் என்பது எனக்குத் தெரியவில்லை. கற்பில் சிறந்தவள் கண்ணகியா மாதவியா என்று பட்டிமன்றங்கள் நிகழ்ந்துள்ளன. சீதையை இராமன் சந்தேகித்தது சரியா தவறா என்று கூட விவாதங்கள் நடந்து வருகின்றன. ஆனால் ஐந்து சகோதரர்களுக்கு ஒரே நேரத்தில் பாஞ்சாலி மனைவி ஆனது சரியா தவறா என்பது பற்றி பட்டி மன்றங்கள் நடந்துள்ளதா என்பது தெரியவில்லை. அவ்வாறு அவளை இழிவு படுத்தி எழுதியதோடு நில்லாமல் அவளை பொது மண்டபத்தில் நிர்வாணமாக்கினால்தான் பாண்டவர்களை இழிவு படுத்தலாம் என்று துரியோதனன் முடிவு செய்ததாக எழுதியுள்ளது ஆணாதிக்கத்தின் உச்சம் எனலாம். அதோடு துகில் உரிய உரிய கிருஷ்ண பகவான் புதுப் புது ஆடை உடுத்தி மகிழ்ந்தது என்ன திருவிளையாடல் என்பதும் எனக்கு தெரியவில்லை.அதைவிட அவளுடைய மானத்தைக் காக்க கிருஷ்ணருக்கு (அல்லது மகாபாரதம் எழுதியவருக்கு ) வேறு உத்தி தெரியவில்லையா? பாஞ்சாலியின் புலம்பல் மூலம் நம்மை சித்திக்க வைத்துள்ள திரு ஒரு அரிசோனன் அவர்களுக்கு பாராட்டுகள். ..அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  2. Avatar
    ஒரு அரிசோனன் says:

    மேதகு Dr. ஜான்சன் அவர்களுக்கு,

    //பாஞ்சாலியின் புலம்பல் மூலம் நம்மை சித்திக்க வைத்துள்ள திரு ஒரு அரிசோனன் அவர்களுக்கு பாராட்டுகள். //

    தொடர்ந்து இரண்டாம் முறை உங்களிடமிருந்து பாராட்டுப் பெறுவது, தேனையும் பாலையும் கலந்து பருகுவது போல உள்ளது. இப்பாராட்டுகளின் மூலம் பொறுப்பென்னும் ஒரு என் தலையில் ஒரு சுமையை ஏற்றி வைத்திருக்கிறீர்கள்.

    அந்தப் பொறுப்பை உணர்ந்து எழுதிவர முயல்கிறேன்.

    வணக்கம். நன்றி.

  3. Avatar
    ஒரு அரிசோனன் says:

    மேதகு Dr. ஜான்சன் அவர்களே,

    //துகில் உரிய உரிய கிருஷ்ண பகவான் புதுப் புது ஆடை உடுத்தி மகிழ்ந்தது என்ன திருவிளையாடல் என்பதும் எனக்கு தெரியவில்லை.//

    இங்கு நான் உங்கள் கேள்விக்கு ஒரு இந்துவாகத்தான் விளக்கம் அளிக்க இயலும்.

    அதற்குமுன், பாஞ்சாலியின் மனநிலையை நாம் கண்ணுறுவோம். அத்தினாபுரமே அச்சப்படும் அளவுக்கு வீரம் படைத்த, நாடான பாஞ்சாலத்தின் மன்னன் மகள் அவள். தருமத்தில் சிறந்தவனும், ஈட்டிப்போரின் நிகரற்ற தர்மபுத்திரனான யுதிஷ்டிரன் — ஆயிரம் யானையின் பலம் பெற்றவனும், கதாயுதத்தை எடுத்தால், யாருமே எதிறக்க இயலாத பீமன் — வில்லுக்கொரு விஜயன் என்று பார்புகழும் அருச்சுனன் — உலக அழகனும், கோடாரி வீச்சில் வல்ல நகுலன் — ஆய கலைகள் அருபத்தினான்கையும் கற்றவனும், வாட்போரில் சிறந்த சகாதேவன் — இந்த ஐவரையும் கணவன்மாராகக் கொண்டவள். கௌரவ குலத்தின் அரசி. ராஜசூய யாகம் செய்து பேரரசான இந்திரப் பிரஸ்தத்தின் பட்டத்து ராணி. அவள் விரலசைத்தால் இவ்வுலகம் ஆடும்.

    அப்படிப்பட்ட அவளை, தான் அடிமைப்பட்டபின்பு, பணயம் வைத்துத் தோற்றான் அவள் கணவன். அதற்கு அவனுக்கு உரிமை இல்லை என்று அவள் வாதிட்டுப் புலம்பியும் அங்கு அவளுக்கு நீதி இல்லை. அவள் கணவர்கள் ஐவரும் அவளுக்கு இழைக்கப்பட்ட அந்நீதியை எதிர்த்து விரலசைக்கவில்லை.

    அவளுக்கு ஆதரவாகப் பேசிய இருவருக்கு (விகர்ணனுக்கும், மகாமந்திரி விதுரனுக்கும்) அந்த அவையில் மதிப்பில்லை.

    எங்கும் செல்ல இயலாத நிலையில், வேட்டை நாய்களின் முன்பு, மூலையில் முடக்கப்பட்ட முயலைப் போல நோந்து, நைந்து போனாள் பாஞ்சாலி.

    இங்குதான் மனிதரை நம்பிப் பயனில்லை, இறைச் சக்தி படைத்த — தன்னை உடன்பிறப்பாக, உயர்ந்த தோழியாக மதித்த, நீ உதவி கேட்டால், எங்கிருந்தாலும் உனக்கு நான் முன்வந்து நிற்பேன் என்று உரைத்திருந்த அந்த ஆதிமூலத்திடம் தன் ககைளை உயர்த்திச் சரணடைந்தாள் பாஞ்சாலி.

    முதலையில் வாயில் தனது காலைச் சிக்கித்தவித்த நிலையில், துதிக்கையை உயர்த்தி “ஆதி மூலமே!” என்று சரணடைந்த யானை கஜேந்திரனைப்போல, “கண்ணா! என் மானத்தைக் காப்பாற்று!” என்று சரணடைந்தாள் அந்தப் பாஞ்சாலி.

    ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள கண்ணனால் ஓடி வர இயலவில்லை, தனது இறைத் திறனால் அவளது மானத்தைக் காத்து நின்றான்.

    நம்பிய அவளுக்கு நாராயணனாகி நின்றான் கண்ணன்.

    எனக்குத் தெரிந்த விளக்கத்தை நல்கி உள்ளேன்.

    இந்து சமயத்தில் “சரணாகதி” என்று ஒரு வழி இருக்கிறது. அதை வலியுறுத்துகிறது, பாஞ்சாலி தன் இரு கைகளை உயர்த்தி சரணாகதி அடைந்த நிகழ்ச்சி.

    அவளது மானம் அங்கு காக்கப்பட்டது. மனிதரால் இயலாதது, இறையால் நடந்தது.

    சரணாகதித் தத்துவம் கிறித்தவத்தில் பேசப்பட்டிருக்கிறதா என்று தங்களிடமிருந்து அறிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்.

    1. Avatar
      I I M Ganapathi Raman says:

      டா.ஜாண்சன் கேட்டதற்கு பதில் சொல்லாமல் வேறெதையோ எழுதுகிறீர்கள்.

      அவர் கேள்வி: அரசவையில் அவளை நிர்வாணப்படுத்த துகில் உரிகிறார்கள். அதற்கு என்ன ரிஆக்சன் கிருஸ்ணரிடமிருந்து வரவேண்டும்? அதாவது தன் த்ங்கையை துகில் உரிகிறார்கள்? அண்ணன் வண்ணவண்ண சேலைகளையாத் தருவது? வேறு உத்தி தெரியவில்லையா? என்று கேட்கிறார்.

      உங்களிடம் யார் சரணகதி தத்துவத்தை விளக்கச்சொன்னா? கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லுங்கோ.

  4. Avatar
    ஷாலி says:

    //பெண்ணடிமை செய்தான் இராமன் என்று அவனைத் தூற்றுகிறீர்களே, “கற்பென்று வைத்தால் அதை ஆணுக்கும் முன்பு வைப்போம்!” என்ற கொள்கையுடன், சீதை ஒருத்தியை மட்டும் மனதில் நினத்து வாழ்ந்தானே — //

    ஜைன ராமாயணத்தில் ஏகபத்தினி விரதமில்லை. ராமனுக்கு நான்கு முக்கிய மனைவிகள். மைதிலி, பிரபாவதி, ரதிநிபா, ஸ்ரீதமா என்பவர்கள். ராமனுக்கு மொத்தம் எட்டாயிரம் மனைவிகள். லட்சுமணனுக்குப் பதினாறாயிரம். அனுமனுக்கும் பல மனைவியர். ஜைன ராமாயணங்களில் வசிஷ்டர், விசுவாமித்திர், அகஸ்தியர் வரலாறுகள் கிடையாது. மந்தரை, அகலிகை, சபரி கிடையாது.
    .dinamalar.com/supplementary_detail.asp?id=11708&ncat=23&Print=1

    வால்மீகி இராமயணத்தில் அயோத்தியா காண்டம் 8 வது சருக்கம் 12 வது ஸ்லோகத்தில் மந்தரை ராமருக்கு பல மனைவிகள் பற்றிக் கூறும் குறிப்பும், சென்னை மைலாப்பூர் இராமாயண விலாசம் என்னும் முகவரியில் உள்ள இராமாயணப் பிரசுரகர்த்தாவாகிய திரு.சி.ஆர்.சீனி வாசய்யங்கார் பி.ஏ. என்பவரால் எழுதப்பட்டு 1928ம் வருஷத்தில் அச்சிட்டு வெளிப்படுத்தியிருக்கும் இதர இராமாயணங்கள் என்னும் புத்தகத்தில்,
    இராமனுக்கு நான்கு மனைவிகள் என்றும் அவர்களின் பெயர்! 1.சீதை, 2. பிரபாவதி, 3. ரதினிபா, 4. ஸ்ரீதாமா என்பவர்கள் என்றும் குறிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் தங்கள் கவனத்திற்கு தருகிறேன்.

  5. Avatar
    I I M Ganapathi Raman says:

    மஹாபாரதம் காலத்துக்காரர்களுக்கு இராமாயணம் தெரிந்தது போல. திரெபதி இராமனைபப்ற்றியெல்லாம் பேசுகிறாளே!

  6. Avatar
    ஒரு அரிசோனன் says:

    உயர்திரு ஷாலி அவர்களே,

    தங்களது கருத்துக்களை நீங்கள் மிகவும் அழகாக எடுத்துச் சொல்வதை நான் பலமுறை படித்து இரசித்திருக்கிறேன். நீங்களே எனது படைப்புக்குக் கருத்துச் சொல்வது எனக்குப் பெருமையே. தொடர்ந்து சொல்லிவாருங்கள்.

    நீங்கள் குறிப்பிட்டுள்ள சுலோகத்தை கீழே கொடுத்திருக்கிறேன். அது கூனி மந்தரை கைகேயிக்குச் சொல்லுவது. அதற்கான விளக்கமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

    हृष्टाः खलु भविष्यन्ति रामस्य परमाः स्त्रियः |
    अप्रहृष्टा भविष्यन्ति स्नुषास्ते भरतक्षये || २-८-१२

    ஹ்ருஷ்டா: கலு பவிஷ்யந்தி ராமஸ்ய பரமா: ஸ்த்ரிய: |
    அப்ரஹ்ருஷ்ட்டா பவிஷ்யந்தி ஸ்நுஷாஸ்தே பரதக்ஷயே ||

    12. ராமஸ்ய = இராமனுடைய; பரமா ஸ்திரீய: = மற்ற பெண்கள்; ஹ்ருஷ்ட்டா கலு = மகிழ்ச்சியையே; பவிஷ்யந்தி = அடைவார்கள்; தே = உன்னுடைய; ஸ்நுஷா: = மருமகள்கள்; பரதக்ஷயே = பரதனின் குறைவு கண்டு; அப்ரஹ்ருஷ்ட்டா பவிஷ்யந்தி = மகிழ்ச்சி இன்மையை அடைவார்கள்

    இராமனின் மற்ற பெண்கள் என்பதை அவனது அந்தப்புரத்தில் அவனுக்கும், சீதைக்கும் பணி செய்பவர்கள் என்றோ, அவள்ளது அவனது பெண்கள் என்பதை மனைவிகள் என்றோ, எடுத்துக் கொள்ளலாம்.

    உன்னுடைய மருமகள்கள் ( தே ஸ்நுஷா:) என்று தெளிவாக பரதனக்குப் பல மனைவியர் என்று குறிப்பிட்ட வால்மீகி இராமன் விஷயத்தில் தெயளிவாக எழுதாததால், நீங்கள் கெட்ட விளக்கமும் ஒன்று என்று வாதிக்கவும் இடமிருக்கிறது.

    இராமனுக்கு வேறு மனைவியர் இருந்தார்கள் என்று வேறு எங்கு சொல்லப்பட்டிருக்கிறது?

    முதன்முதலில் எழுதப்பட்டதாகக் கருதப் படுவது வால்மீகி இராமாயணமே. அதை வைத்து எனக்கு மேற்கோள் காட்டுங்கள்.

    அதே வால்மீகி இராமனுக்கு சீதை பால் இருக்கும் காதலையும், நேசத்தையும் பற்றி எழுதியிருக்கிறாரே, அதை நீங்கள் படிக்கவில்லையா?

    ஜைன இராமாயணத்தை நான் படித்ததில்லை; கம்பரே வால்மீகியின் மூல இராமாயணத்தைத் தமிழ் செய்யும்போது நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறார். அதைப்பற்றியும் நான் நான்கு கட்டுரைகள் எழுதி உள்ளேன். எனது வலையத்தில் நீங்கள் அதைப் படிக்கலாம்.

    “பாஞ்சாலியின் புலம்பலில்” பாஞ்சாலி சொல்வாதைப்போலத்தானே நீங்கள் நடந்து கொள்கிறீர்கள்?

    கதையின் கருப் பொருளை விட்டுவிட்டு, பாஞ்சாலிக்காக மனமுருகி ஒரு சொல்கூட சொல்லாது — அதைப்பற்றி கருத்து தெரிவிக்காது — இராமன் சீதை மேல் அன்பு வைக்கவில்லை, அவன் பலதாரம் கொண்டவன் என்று சொல்வதன் மூலம், திசை திருப்ப முற்படுவதாக எனக்குப் படுகிறது.

    சீதையின் கோணத்திலிருந்து ஒரு கதை/கட்டுரை எழுதப் போகிறேன், அதையும் படித்துவிட்டு கருத்தை எழுதுமாறு வேண்டுகிறேன்.

    சிலவற்றில் உங்கள் நோக்கும், என் நோக்கும் ஒன்று. இங்கு வேறுபடுகிறது.

  7. Avatar
    ஒரு அரிசோனன் says:

    உயர்திரு ஷாலி அவர்களே,

    தாங்கள் குறிப்பிட்ட தினமலர் வலையத்திற்கும் சென்று படித்தேன்.

    அதில் ஜைன இராமாயணங்கள் பொது நூற்றாண்டு மூன்றுக்குப் பிறகே எழுதப்பட்டன என்றும், வால்மீகி இராமாயந்த்திற்குப் பிந்தியவை என்றும் எழுதியிருக்கிறது. மேலும்,

    “ஜைன ராமாயணத்தின் மூலம் எது என்று கேட்டால் ஆதி நூலான பௌமசர்ய என்ற பத்மன் (ராமன்) கதையை இந்திரபூதி கௌதமர் என்ற சீடருக்கு மகாவீரர் சொல்ல, பின் வழி வழியாகச் சீடர்கள் வாயிலாக வந்ததாக விமலசூரி குறிப்பிடுகிறார்.

    “ஆனால், மகாவீரர் புத்தருக்குச் சற்றே மூத்த அவரது சமகாலத்தவர். வால்மீகிக்குப் பல காலம் பின்னே வந்தவர். எனவே இக்கூற்றை ஏற்க முடியாது என்று அறிஞர் கருதுகிறார்கள். மேலும் விமலசூரியின் பௌமசர்ய நூலைப் படித்தால் கதையம்சத்தைப் பொருத்த வரையில் அத வால்மீகியின் கதைதான் என்பதில் சந்தேகமில்லை.”

    …என்றும் எழுதி இருக்கிறதே! அதுமட்டுமா…

    “ஜைன ராமாயணங்கள், பலவற்றில் காணப்படும் கதை இதுதான்:
    “சாகேத மன்னன் தசரதனுக்கு நான்கு மனைவியர். அபராஜிதா, சுமித்ரா, சுப்ரபா, கைகேயி. அபராஜிதாவின் பிள்ளை பத்மன். அவன் ராமன் என்று அழைக்கப்பட்டான்.”

    கோசாலையின் மகன் இராமன் என்பதைக்கூட, இராமனின் பெயரைக்கூட மாற்றி ezhuthiyirukkirathe! இதுவும் நீங்கள் கொடுத்த வலையத்தில்தான் உள்ளது.

    …”விமலசூரி, தான் ராமாயணத்தை இயற்றியதன் காரணத்தை அறிமுகத்திலேயே தெளிவுபடுத்துகிறார். ராமாயண நிகழ்ச்சிகள் பலவற்றை இவை எல்லாமே பொய்யாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. அறிவுக்குப் பொருந்தாது. கற்றறிந்தோர் இவற்றை நம்ப முடியாது என்று எழுதுகிறார்.”
    ஜைன ராமாயணத்தில் காணப்படும் வேறு மாற்றங்களில் முக்கியமானது ராவணனது பாத்திரம், அவன் ஜைன சமயத்தின் 63 சலாக புருஷர்களில் ஒருவன். ஜீன சுவாமியின் பெரும் பக்தன். கல்விகேள்விகளில் சிறந்தவன். தன் ஆற்றலாலும், தவத்தாலும் பல அஸ்திரங்களைப் பெற்ற பராக்ரமசாலி.

    “ஜைன ராமாயணத்தில் ஏகபத்தினி விரதமில்லை. ராமனுக்கு நான்கு முக்கிய மனைவிகள். மைதிலி, பிரபாவதி, ரதிநிபா, ஸ்ரீதமா என்பவர்கள். ராமனுக்கு மொத்தம் எட்டாயிரம் மனைவிகள். லட்சுமணனுக்குப் பதினாறாயிரம். அனுமனுக்கும் பல மனைவியர். ஜைன ராமாயணங்களில் வசிஷ்டர், விசுவாமித்திர், அகஸ்தியர் வரலாறுகள் கிடையாது. மந்தரை, அகலிகை, சபரி கிடையாது.”

    நீங்கள் குறிப்பிட்ட பகுதியும் இங்கு வந்து விட்டது.

    நீங்கள் குறிப்பிட்ட “ஜைன இராமாயனகள்” கட்டுரையை எழுதிய மு.ஸ்ரீநிவாசன்,

    “பிற ராமாயணங்களில் இரண்டாவது முறை சீதை தன் கற்பை நீரூபித்துவிட்டு, தானாகவே வெளியேறி துறவேற்று, அருகனை வழிபட்டு வாழ்கிறாள்; பிறகு சுவர்க்கத்தில் பிறக்கிறாள். லட்சுமணன் இறந்தபிறகு, ராமன் ராஜ்யத்தைத் துறந்து, ஜைனத் துறவியாகி விடுகிறான். பிறகு கேவல ஞானம் பெற்று, விடுதலை எய்துகிறான். நாலாவது நரகத்தில் உழலும் லட்சுமணனும், ராவணனும் வரும் பிறவிகளில் மோட்சம் எய்துவார்கள் என்று ராமன் தீர்க்க தரிசனம் தருகிறான். அதன்படி அடுத்து வரும் அரை காலச்சுற்றில் ராவணன் ஒரு தீர்த்தங்கரர்.
    இப்படி ஜைன தத்துவங்களைத் தாங்கி அவற்றை விளக்கும் வகையில் இயற்றப்பட்டவை ஜைன ராமாயணங்கள். ஜைன சமயத்தில் அவதாரத்திற்கு இடமில்லை. எனவே ராமன் மனிதரில் சிறந்தவன், ஒரு புரு÷ஷாத்தமனே. ஜைன ராமாயணங்கள் புராணங்களாக இருக்கின்றன. சிலவற்றின் பெயர்கள் பத்மபுராணம், ராமாயண புராணம் என்றுள்ளன. இலக்கியம் என்று பார்த்தால், வால்மீகி ராமாயணம்தான், ஜைன ராமாயணங்களல்ல.”

    … என்று முடிக்கிறார். அவர் கட்டுரையில், உங்களுக்கு வேண்டியதை மட்டும் மேற்கோள் எடுத்துக்கொடுத்தால் எப்படி?

    இராமாயணமே பொய் என்று கருதும் ஜைனர்கள் எழுதிய இராமாயணத்திலிருந்து மேற்கோள் காட்டினால்…!

    இனி மற்றவர்கள் இதைப்பற்றி கருத்துச் சொல்லட்டுமே!

  8. Avatar
    ஒரு அரிசோனன் says:

    நான் //இனி மற்றவர்கள் இதைப்பற்றி கருத்துச் சொல்லட்டுமே!// என்பதை “இனி மற்றவர்களும் இதைப்பற்றி கருத்துச் சொல்லட்டுமே!” என்று திருத்திப் படித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  9. Avatar
    ஷாலி says:

    //இறைவனே விதித்தபடி நடக்கட்டும் என்றுதான் விட்டுவிட்டேன். ஐவருக்கும் மனைவியானேன். ஆனால் நான் செய்தது புதுமை அல்ல. எனக்குமுன் இப்படி பல கணவன் மணம் நடந்திருக்கிறது என்றும் உரைக்கப்பட்டது..//

    இந்திய மரபில், பஞ்ச கன்னிகைகளாகச் சொல்லப்படும் அகல்யா, திரௌபதி, தாரா, குந்தி, மண்டோதரி ஆகியோரின் பெயரைக் காலை வேளையில் நினைவு கூர்வதே பாவங்களை அழிக்கக்கூடியது என்று கூறப்படுகிறது.

    ‘அகல்யா, திரௌபதி, தாரா, குந்தி, மண்டோதரி ததா பஞ்சகன்யா: ஸ்மரனோ நித்ய மகாபாதக நாசனம்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. மேற்சொன்ன ஐந்து பெண்களில் நால்வர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன் உறவு கொண்டிருந்தவர்கள்.

    அகலிகை- கெளதம முனிவரின் மனைவி.இவள் அழகில் ஆசை கொண்ட இந்திரன் முனிவர் வேடத்தில் வந்து இவளிடம் கூடினான்.
    தாரா-வாலியின் மனைவி.இராமனால் வாலி கொல்லப்பட்ட பின்பு சுக்ரீவன் மனைவியாகிறாள்.(வால்மீகி இராமயாணப் படி)

    குந்தி-பாண்டுவின் மனைவி.துர்வாச முனிவர் வழங்கிய வரத்தால்,சூரிய பகவான் மூலம் கர்ணனையும், தர்மதேவன் மூலம் யுதிர்ஷ்டனையும்,இந்திரன் மூலம் அர்ச்சுனனையும்,வாயு பகவான் மூலம் பீமனையும் பெற்றாள்.

    மண்டோதரி-இராவணன் இறப்பிற்குப் பிறகு விபீஷணனுக்கு மனைவியானாள்.

  10. Avatar
    ஒரு அரிசோனன் says:

    உயர்திரு IIM கணபதி ராமன் அவர்களே,

    //மஹாபாரதம் காலத்துக்காரர்களுக்கு இராமாயணம் தெரிந்தது போல. திரெபதி இராமனைபப்ற்றியெல்லாம் பேசுகிறாளே!//

    உண்மை. இராமாயண காலம் மகாபாரதத்திற்கு முன்பட்டது. மகாபாரதத்தில் இராமனைப் பற்றி பேசப் படுகிறது.

  11. Avatar
    ஷாலி says:

    //கதையின் கருப் பொருளை விட்டுவிட்டு, பாஞ்சாலிக்காக மனமுருகி ஒரு சொல்கூட சொல்லாது — அதைப்பற்றி கருத்து தெரிவிக்காது….//- ஒரு அரிசோனன்.

    “என்னுடைய பார்வையில், உலக இலக்கியங்களில், உலக வாழ்க்கையில், திரௌபதிக்கு நிகரான ஒருத்தி இன்னும் தோன்றவில்லை. யாருடைய வாழ்விலும் நேராத பல சம்பவங்கள் அவளுடைய வாழ்வில் நேருகின்றன. நினைத்துப் பார்க்க முடியாத கொடுமைகள் அவளுக்கு நேருகின்றன. ஆனால், அவள் அவற்றை கம்பீரம் குறையாத துணிவோடும் அறிவோடும் எதிர்கொள்கிறாள். பாரதப்போரில் அவள் தன் தந்தையையும் தமயனையும் ஐந்து புதல்வர்களையும் இழக்கிறாள்.

    அவற்றையெல்லாம் விட அவளைக் காயப்படுத்துவது அவளுடைய வாழ்வின் இறுதிக் கணத்தில் தருமத்தின் வடிவமாக கொண்டாடப்படும் அவளுடைய கணவன் யுதிஷ்டிரன் சொல்லும் வார்த்தை. மலைச்சரிவில் சரிந்து விழுகிற திரௌபதியை திரும்பிக்கூட பார்க்க வேண்டியது இல்லை என்று அவன் சொல்லுகிறான். தன் சகோதரர்கள் அனைவரும் பயணத்தை மேற்கொண்டு தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கவேண்டுமென்று கட்டளையிடுகிறான். இந்த உச்சக்கட்டமான துயரம் அவளை வேதனைப்படுத்துகிறது.

    இந்தக் கட்டத்தில் தான் என்னுடைய நாவல் துவங்குகிறது. தன்னுடைய முழங்கையை ஊன்றிக்கொண்டு அவள் தன் இதயத்தில் இருந்து பெருகும் இரத்தத்தினால் இமயத்தின் முகடுகளில் எழுதிய கதையாக, அவளுடைய மிகச் சிறந்த நண்பனான ஸ்ரீகிருஷ்ணனுக்கு சொல்லப்பட்ட தன் – வரலாறாக நான் இந்த நாவலைப் படைத்திருக்கிறேன். போருக்குக் காரணமானவள் பாஞ்சாலி என்கிற பழியை நீக்குகிறது என் நாவல்.”யஞ்யசேனி”.-ஒரிஸ்ஸா கொண்டாடும் படைப்பாளி பேராசிரியை பிரதிபாரே.

Leave a Reply to Dr.G.Johnson Cancel reply

Your email address will not be published. Required fields are marked *