பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்) : 4 பதினேழாம் நூற்றாண்டு (தொடர்ச்சி) – கவிதை, ,ஓவியம் உரைநடை

This entry is part 6 of 18 in the series 2 ஜூலை 2017

– நாகரத்தினம் கிருஷ்ணா

சென்ற கட்டுரையில் பதினேழாம் நூற்றாண்டு கலை இலக்கியத்தின் தொடர்பாக நாடகத்துறையையும், நாடகவியலாளர்களையும் பார்த்தோம். இம் முறை எஞ்சியுள்ள பிறதுறைகளைக் காணலாம். பொதுவாக ஒரு நாட்டின் வாழ்க்கைத் தரம், பொருளாதாரம், அரசியல், சமூக அமைப்பு இவை அனைத்தையும் முழுமையாக விளங்கிக்கொள்ள அக்காலகட்டத்தின் கலை இலக்கியச் சான்றுகளைக் காட்டிலும் வேறு சாட்சியங்கள் இருக்க முடியா.

அ. இலக்கிய விவாத அரங்குகள்
இந்நூற்றாண்டில் கலைஇலக்கியங்கள் பெருமளவில் தழைத்தோங்கியமைக்கு , அரசைப் போன்றே நாட்டின் பெரும் செல்வந்தர்கள், உயர்குடிமக்கள் ஆகியோர் ஆதரவும் கலை இலக்கியத்துறை ஆர்வலர்களுக்கு கிடைத்த து. பிரபுக்களைப்போலவே அவர்களின் துணைவியரும் இவ்வளர்ச்சிக்கு உதவினர். அவர்கள் அவைகளில் புதிய ஓவியங்கள், நூல்கள் பற்றிய கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்ட ன, விமர்சனங்கள் வைக்கப்பட்டன. உரைநடைகளை, கவிதை நூல்களை , ஒருவர் வாசிக்க பிறர் அமர்ந்து பொறுமையுடனும் ஆர்வத்துடனும் செவிமடுத்தார்கள். உதராணமாக மதாம் ராம்பூய்யெ கூட்டிய இலக்கிய அவையில் ரீஷ்லியெ, மாலெர்ப் முதலானோர் கலந்துகொண்டனர். 1620-1625 வரை இச்சீமாட்டியின் இலக்கிய மண்டபம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கியது. அவ்வாறே மத்மஸல் ஸ்குய்தேரி என்ற சீமாட்டி ஏற்பாடு செய்திருந்த இலக்கிய அவையும் 1652-1661 ஆண்டுகளில் பெரும் பங்களிப்பை நல்கியது.
ஆ. கவிதைகள்
கவிதைக்கு அடிப்படை ஏனைய கலைகளைப்போலவே உணர்வு, மனக்கிளர்ச்சி, கற்பனைதிறன், கருத்து ஆகியவை. ஆகையால் இசை, ஓவியம் நடனம் ஆகியவற்றையெல்லாங்கூட கவிதையாகப் பார்க்கும் மனப்போக்கு அந்நாளில் இருந்தது. அந்நாளில் நாடகங்கள் அனைத்தும் கவிதை வடிவிலே இருந்தனவென்பதை நீங்கள் அற்வீர்கள்.

பிரான்சுவா தெ மலெர்ப் (François de Malherbe 1556-1628)
Francois-de-Malherbe17 ஆம் நூற்றாண்டு கவிஞர்களில் பிரான்சுவா தெ மாலெர்ப் முக்கியமானவர். பரோக், கிளாசிக் இருவகை தாக்கமும் இவருடைய கவிதைகளில் இருந்தன. நான்காம் ஹாரியின் மனைவியும் பதின்மூன்றாம் லூயியின் தாயுமான மரி தெ மெடிசியைப் போற்றும் வகையில் கி.பி 1600ல் எழுதிவெளிவந்த ‘A la Reine ‘ கவிதைப் பெரும்புகழை ஈட்டித் தந்தது. ஆனால் இவருடைய கவிதைகளில் இன்றளவும் கொண்டாடப்படும் ‘Les larmes de Saint Pierre’ இத்தாலி நாட்டு கவிஞர் ‘Luigi Tansillo’ வின் கவிதை யின் நகல் என்ற குற்றச்சாட்டு உண்டு. எனினும் பிரெஞ்சுக் கவிதைஉலகிற்கு அடித்தளமிட்டவர் மலெர்ப்.

ழான் தெ லாஃபோந்த்தேன்( Jean de la Fontaine 1621-1695)
இந் நூற்றாண்டின் மற்றுமொரு முக்கிய மான கவிஞர். நாற்பது வயதுக்குமேல் கவிதை எழுத த் தொடங்கி உலகப்புகழ்பெற்றவர். . மொலியேர், ராசின் போல் நாடகங்களை எழுத இவர் கவிதையைப் பயன்படுத்தவில்லை. மலெர்ப் போல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் இவர் கவிதை எழுத உட்கார்ந்தவரல்ல. லாஃபோந்த்தேன் கவிதைகள் ‘Fable’ எனும் நீதிக்கதைகள் வகைசார்ந்தவை, விலங்குகளை கதைமாந்தர்களாகப் பயன்படுத்தி , அவற்றினைக்கொண்டு மனிதர்களுக்கு நீதியை அங்கதச் சுவையுடன் போதித்தார்.

ஆ. ஓவியங்கள்

இந்நூற்றாண்டு ஓவியங்களின் முக்கியப்பண்புகள் : கண்களை உறுத்தாத வண்ணங்கள் , ஆர்ப்பாட்டமற்ற அமைதியான காட்சிகள், ஒளி. சமயம் மற்றும் பழங்கதைகளின் தாக்கம். லெ நேன் சகோதர ர்கள் (Les frères le Nain), ழார்ழ் துமெனில் (George du mesnil de la Four) நிக்கோலா பூஸ்ஸன்(Nicolas Poussin) ,பியர் போல் ரூபன் (Pierre paul Rubans) ஆகியோர் ஓவியர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்.

இ. உரைநடை இலக்கியம்

ரெனெ தெக்கார்த் (René Descartes 1596 -1656)
rene-descartes-37613-1-402தத்துவ வாதிகளில் ரெனெ தெக்கார்த் தனித்துவம் பெற்றவர். ரெனே வாழ்க்கையைத் தத்துவத்தின் வாழ்க்கை என ஒப்பிட முடியும். அவருடைய வரலாறு ஒரு நூற்றாண்டுகால சிந்தனையின் வரலாறு. தத்துவத்தோடு, கணிதம், இயற்பியல் மூன்றிலும் புகழடைந்தவர். இளம் வயதிலேயே வெளியுலகம் குறித்த நினைவின்றி நாள்முழுக்க சிந்தனைவயப்பட்டவராக வீட்டிலும் பள்ளியிலும் இருந்துள்ளார். இதன் காரணமாக குட்டி தத்துவவாதி எனப்பெயரிட்டு குடும்பத்தினர் அழைத்திருக்கிறார்கள். பள்ளிக் கல்வியை முடித்த போது புத்த கங்களும் பாடமுறையும் ஏமாற்றத்தை அளிக்தனவாம். ‘உலகப் புத்தக வாசிப்பும்’ ஏமாற்றத்தை அளிக்க, சொந்த வாழ்க்கையையே ஒரு புதிராக அமைத்துக்கொண்டு தேடலைத் தொடங்குகிறார். தேசாந்திரியாக ஜெர்மன், இத்தாலி, ஹாலந்து, என்று அலைகிறார். இயற்கையையும் மனிதர்களையும் நிறைய படித்தார். 1637ம் ஆண்டில் அவருடைய அறிவியல் மற்றும் தத்துவக் கட்டுரைகள் (Discours de la Méthode, la Dioptrique,les Mééores et la Géométrie) வெளிவந்த போது, பிரெஞ்சு சிந்தனை உலகில் மட்டுமின்றி உலகெங்கும் பெரும் புயலைக் கிளப்பியது. தெக்கார்த் தன்னை அறிந்த, நன்குணர்ந்த கருத்தாவாக (Sujet connaissant) எண்பித்து உலகின் உண்மைகளை கண்டவர். « சிந்திக்கிறேன், எனவே இருக்கிறேன் ! » என்ற அவருடைய சிந்தனை விவாத த்திற்குரியது. கலிலியோ புவிமைய வாத த்தினர் ஆதவுடன் தண்டிக்கப்பட்டபோது(1633), தமக்கும் அப்படியொரு பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக எச்சரிக்கையுடன், தம்முடைய « Traité du monde et de la lumière(The World) » என்ற நூலை வெளியிடத் தயக்கம் காட்டினார் என்கிறார்கள்.

பிலேஸ் பஸ்க்கால் (Blaise Pascal 1623 -1662)
தெக்கார்த்தை போலவே அறிவியல் த த்துவம் இரண்டிலும் மேதை, கூடுதலாக ஆன்மீகத்தில் கூடுதல் ஈடுபாடு. இளம் வயதிலேயே சாதி த்தவர். அறிவியல், ஆன்மீகம் இரண்டிலும் அளவற்ற ஞானம் என்கிறபோதும், மரணத்தைவெல்ல இரண்டுமே உதவ வில்லை. இளம் அறிவியலறிஞராக கணித த் துறையில் வீழ்ப்பு வடிவ இயல் (Projective geometry) மற்றும் நிகழ்தகவு கணிப்புமுறைகளை(Probability theory) அறிமுகப்படுட்தினார். இயற்பியல் துறையில் காற்றழுத்தம், வெற்றிடம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு, கோட்பாடுகளை உருவாக்கினார். வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தந்தை ஒவ்வொரு நாளும் கணக்கெழுதுவதற்குபடும் வேதனைகளைக் கண்டுமுதல் எண்கணித கணிப்பானை வடிவமைத்தபோது அவருக்கு வயது 19. பஸ்க்கால் என்றவுடன் நாம் கவனத்திற்கொள்ளவேண்டிய படைப்புகள் ஒன்று பாமரனுக்கு (provinciales), மற்றதுசிந்தனைகள் (Pensées).
பதினேழாம் நூற்றாண்டு நிறைவுற்றது.
‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

Series Navigationஅருவம்தொடுவானம் 176. முதல் காதலி
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *