பிறவிக் கடன்!

author
0 minutes, 0 seconds Read
This entry is part 13 of 29 in the series 3 நவம்பர் 2013

வெ.சந்திராமணி

அதிகாலை நான்கு மணியில் இருந்து தன்னந்தனியாக கிச்சனுக்கும் ஹாலுக்கும்
நடையாய் நடந்து கொண்டிருந்த சந்திராவுக்கு தூக்க கலக்கம், கண் எரிச்சல்,
கோபம் எல்லாம் ஒன்றாய் கொழுந்து விட்டு எரிந்த கொண்டிருந்தது. காரணம்
இரவு தூங்கவே இல்லை . குழந்தை சீனு உறங்க 2 மணி ஆகிவிட்டது.
‘ஒரு நாளா, இரண்டு நாளா… எட்டுமாசமா இதே கதைதான்!
நிம்மதியா ஒரு நாள் தூங்க முடியுதா… என்ன வரம் வாங்கி வந்திருக்கேனோ!
என்ன செய்வது என் தலையெழுத்து… கஷ்டம் எப்ப இது தீருமோ?’
முணுமுணுத்துக்கொண்டிருந்தாள் சந்திரா.
‘இதற்குதான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா?’ என்பது போல நாளும் பொழுதும்
இப்படிதான் சந்திராவுக்கு நகர்கின்றன.
‘எனக்கு இந்தக் கல்யாணமே வேண்டாம்னு சொன்னேன்.
கேட்டார்களா? இல்லையே! ஆம்பளை தனியா காலம் தள்ளிடலாம். பொம்பளை நீ என்ன
செய்வ? உனக்குன்னு ஒரு துணை வேணாமா! உனக்குன்னு ஒரு குடும்பம் வேணும்னு
சொல்லி சொல்லியே… கல்யாணத்தைப் பண்ணி வச்சாங்க.
கல்யாணமும் ஆச்சு. அப்பவும் விட்டாங்களா… மூணு மாசம் போனதுமே ‘என்ன
சந்திரா, வயதுல புழு பூச்சி வைக்கலையா? இன்னுமா நீ குளிக்கிற? அடுத்த
முறை பார்க்கும் போது நான் முழுகாம இருக்கேன்னு இனிப்பான செய்தியா
சொல்லுனும்…’ போவோர் வருவோர் எல்லாம் படுத்தினாங்க.
இப்ப குழந்தையும் கையுமா இருக்கேன். பார்க்க நாதியில்லை. அப்பவே அம்மா
போய் சேர்ந்திட்டாள்! புருஷன் வீட்டில் அணுசரனை இல்லை. இப்ப நான் படுற
பாடு எனக்குத்தானே தெரியும்.’ தன் சோகங்களை தனியாகவே புலம்பிக்கொண்டு
கிச்சனில் இருந்தவள், சீனுவின் அழுகையை கேட்டதும் கோபம் மூக்கில்
நுழைந்து கண்ணில் எரிமலையாய் வெடித்தது.
அப்போது தான் புரண்டு படுத்த ராஜா,
“ சந்திரா, இங்க கொஞ்சம் வந்து பாரு… சீனு உச்சா போயிட்டு அழுவுறான்”
என்று கண்களைக் கூட திறக்காமல் சொன்னான் ராஜா.
“எல்லாத்துக்கும் நானே வரணும். ஷெல்பில் தான் ஹக்கீஸ் இருக்குல. அதை
எல்லாம் எடுத்து மாத்துங்கோ” என்றவள் இண்டக்ஷன் ஸ்டவ்வில் பால்
காய்ச்சிக் கொண்டிருந்தாள் சந்திரா.
“ம்ஹூம் என்னால முடியாது” என்ற படி மறுபக்கம் திரும்பி படுத்துக்கொண்டான் ராஜா.
ராஜாவின் பொறுப்பற்ற செயலும், கொஞ்சம்கூட இரக்கமற்ற பதில் சந்திரா மனதில்
முள்ளாய் குத்தியது. அப்படியே சுவரில் மோதிக்கொண்டு அழுதாள் சந்திரா.
சீனுவின் அழுகை நின்றபாடில்லை. போட்டி போட்டுக் கொண்டு குழந்தை
அழுதுகொண்டிருப்பதை வேடிக்கையா பார்க்க முடியும்?
ஓடி வந்து, “ என்னப்பா… என் செல்லம்… பவுனு… ஏன்டா அழுவுற? அம்மாவை
ஏன் இப்படி படுத்துற… பசிக்குதா?” என்று கொஞ்சியவள், புட்டியில் இருந்த
பாலை கொடுத்தாள்.
பால் உள்ளே போனதும் அழுகை நின்றது குழந்தைக்கு.
ராஜாவை பார்க்கையில் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இருந்தாலும், அவனும்
ராத்திரி 11 மணி, 12 மணி வரைக்கு முழிச்சுக்கிட்டுதானே இருக்கான்.
காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு தினமும் வேலைக்கு போயிட்டு
வர்றவனுக்கு உடம்பு அசதியாகத்தான் இருக்கும். இருந்தாலும் கொஞ்சம்
ஒத்தாசை பண்ணலாம்ல…
‘நான் என்ன எந்திரமா? நான் அடிமை வேலைக்காரியா?’
தனக்குள் கேள்வியை கேட்டுக்கொண்டு மறுபடியும் புலம்பலை ஆரம்பித்தாள்.
தினமும் அதிகாலை 4 மணிக்கு எழும்பி, குழந்தைக்கு பால் கலந்து
கொடுத்துவிட்டு, ஏழு மணிக்கே வீட்டை விட்டு ஆபிஸ் கிளம்பிவிடும்
புருஷனுக்கு டிபன், லஞ்ச் ரெடி பண்ணி அவரை அனுப்பி விட்டு, அப்பறம் வீடு
பெருக்கி, கடை கண்ணிக்கு போய்வந்து, இந்தக் குழந்தை வைச்சிக்கிட்டு,
பிறகு குளிச்சி இப்படி ஒவ்வொரு வேலை செய்து முடிக்கவே தினமும் இரவு 10-11
ஆகிவிடும்.
அப்புறம் மறுபடியும் அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கணும். கணவனிடம்
இருந்து எந்த உதவியும் ஆதரவும் இன்றி தன்னந்தனியாக சுழலும் அவளது மன
உளைச்சலையும், சுமையையும் பங்கிட அவன் தயாராக இல்லை.
“நான் புருஷன் அப்படித்தான். எனக்கு வெளியில் ஆயிரம் வேலை.
சம்பாதிக்கிறது மட்டும்தான் புருஷ லட்சணம். அதுல குறைவைச்சா கேளு.
மற்றபடி அதை செய்; இதை செய் என்று நீ ஒண்ணும் அதிகாரம் செய்ய வேண்டாம்”
என்பான் ராஜா.
இதையும் மீறி ஏதாவது உதவிக்கேட்டால் தேவையில்லாத பிரச்சனைகள் வரும்.

“ என்ன ரொம்பதான் பிலிம் காட்டற? ஊருல உலகத்துல யாரும் புள்ள
பெத்துக்கலையா… வளர்க்கலையா… என்னமோ நீ தான் உலகத்துலயே முதல்முதலா
புள்ளை பெத்துக்கிட்டவ மாதிரி நடந்துகிற… பேசுற… பிள்ளைகளை
கவனிச்சுக்கொண்டு மத்தவங்க எல்லாம் வீட்டு வேலை செய்யலையா?
பார்க்கலையா… ரொம்பதான் ஆடற… பாரு, இப்படியே நீ இருக்கிறது உனக்கு
நல்லது இல்லே. வாய்க்கு வாய் பேசறதுக்கு ஒரு நாள்… உன் வாயாலேயே உன்
வாழ்க்கையை கெடுத்துக்கப்போற பாரு…” என்று ஏகத்துக்கு ராஜாவும்
பேசுவான்.
சுகங்களை பகிரும் கணவன் சுமைகளையும் பகிரும் போது தானே மனைவிக்கு
மகிழ்ச்சி. இது புரியாமல் இருக்கிறானே ராஜா!
இதை யாரிடம் சொல்வது?
சந்திராவின் மனக்குமறல்களைக் கொட்டித் தீர்க்க வசதியாக வந்து சேர்ந்தார்
தூரத்து சொந்தமான செவ்வாபேட்டை ஆயா.
தன் அந்திம காலத்தில் பேத்தியோடும். பேத்திக்கு பிறந்த எள்ளு பேரனை
கொஞ்சவும் நேரம் போனது ஆயாவுக்கு.
தன்னால் முடிந்த சின்னசின்ன வேலைகளை செய்து கொடுத்தார் ஆயா.
சந்திராவுக்கு கொஞ்சம் விடுதலை. மன இறுக்கம் குறைந்தது.
ஒரு நாள் மாடியில் பேரனோடு விளையாடிக்கொண்டிருந்த ஆயாவிடம், “ ஏன் ஆயா,
நீ எல்லாம் எப்படி பத்து பிள்ளைகளைப் பெத்து ஆளாக்கின. எனக்கு ஒண்ணுக்கே
விழிபிதுங்குதே” என்று கேட்டாள் சந்திரா.
“ ராஜகுமாரி கண்ணு…( சந்திராவை இப்படித்தான் ஆயா அழைப்பது வழக்கம்)
வாழ்க்கைக் கணக்கு இன்னும் உனக்குப்புரியல… இந்த உலகத்துல மனுஷ ஜென்மம்
எடுத்தா, அவரவர் கடனை அவங்கவங்கத்தான் தீர்க்கணும். இப்போ, கைக்குழந்தை
வைச்சுக்கிட்டு கஷ்டப்படுறேன்னு புலம்பறயே நீ… நீ குழந்தையாக இருந்தப்ப
என்னாபாடு படுத்தினேன்னு தெரியுமா? உங்க அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டாள்
தெரியுமா? எனக்கும் தெரியும்!
இப்ப நிறைய வசதிகள் வந்திட்டு. கை தட்டினா ஆட்டோ வருது. தெருவுக்கு ஒரு
டாக்டர் இருக்காங்க. முப்பது வருஷத்துக்கு முன்னாடி எவ்வளவு சிரமம்
தெரியுமா? நீ பிறந்து ஆறுமாசம் வரைக்கும் ஏதாவது உடம்புக்கு வந்துகிட்டு
இருக்கும். பாவம் அம்மா தவிப்பாள். தலைநிக்காத உன்னை பக்குவமா தூக்கி
கிட்டு பத்து மைல் நடந்தே ஓடுவாள். டாக்டரை பார்த்துட்டு வீடு திரும்ப
மணி பத்தாயிடும் தெரியுமா? இப்ப இருக்கிற பஸ் வசதி எல்லாம் எங்கே அப்ப
இருந்தது.
ராத்திர பூராவும் பனை விசிறியால உனக்கு வீசிறிக்கிட்டு எத்தனை ராத்திரி
கண்விழிச்சிருப்பா… அப்பப்பா… அதெல்லாம் முழுசா சொன்னா இப்ப படுற
கஷ்டம் எல்லாம் தூசு… இதை ஏன் உனக்குச் சொல்றேன்னா…
உங்க அம்மா உனக்குப் பட்ட கஷ்டத்தை, கடனை நீ திருப்பியா செய்துட்டே! ஒரு
அம்மா பட்ட கடனை எந்தப் பிள்ளைகளாலும் ஒரு ஜென்மத்துல முழுசா அடைக்க
முடியாது. இது தான் உண்மை.இப்ப, உங்கம்மா உனக்குப் பட்ட கடனை, உன்
மகனுக்கு நீ செய்யற. அவ்வுளவுதான். நீ இப்ப படற கஷ்டத்தை உன் மகன்
உனக்குத் திருப்பி அடைக்கணும்னு அவசியமில்ல. ஆனால், அவன், அவனுக்குப்
பிறக்கிற பிள்ளைக்கு வட்டியும் முதலுமாக அடைச்சிதான் ஆகணும். இந்த
உலகத்துல இந்தக் கணக்கு இப்படித்தான் காலம்காலமாக நடந்துகிட்டு இருக்கு.
நீ படிச்சவதானே இந்த ஆயா சொல்றதை கொஞ்சம் சிந்திச்சு பாரு உண்மை உனக்கே
புரியும். இதுல எதுக்கு உன்புருஷனையும் பிள்ளையையும் நொந்துக்கற?” என்று
தீர்க்கமாக சொன்னார் ஆயா.
“ ஆயா, நீ சொல்ற தத்துவம் எல்லாம் சரிதான். அது பிள்ளை பெத்த அம்மாவுக்கு
மட்டும்தானா, அப்பாவுக்கு எல்லாம் கிடையாதா, அது என்ன ஆண்களுக்கு மட்டும்
விதிவிலக்கு?” என்று சொல்லிய சந்திராவின் பார்வையில் ஏளனம் கொப்பளித்ததை
ஆயா பார்க்கத்தவறவில்லை.
“ குடும்பம்னு வந்தா, ஆணுக்கு ஒரு கடமை இருக்கு. பெண்ணுக்கு ஒரு கடமை
இருக்கு. இரண்டும் வேறு வேறு. ஆண் செய்யற கடமையை என்னால செய்ய
முடியாதான்னு விதாண்டாவாதம் பண்றது சரியாக இருக்காது.
ஒரு ஆணுக்குரிய கடமை பெத்தவங்கள உயிரோடு இருக்கும்போதும் அரவணைக்கணும்.
அவங்க இறந்தப்பிறகும் அவங்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் எவ்வளவோ
இருக்கு. சிராத்தம், தர்ப்பணம்னு பல பிறவிக்கடன்கள் இருக்கு. அதை
செய்துதான் ஆகணும். அது செய்தாதான் அந்த ஆத்மா திருப்தி அடையும்.
உன் புருஷன் அவனுக்கு உரிய பிறவிக்கடனை செய்துகிட்டுதான் இருக்கான்.
இனியும் செய்வான். அவன்கூட எல்லாத்துக்கும் போட்டி போடாத.
வாழ்க்கையில் இப்படி நெளிவு சுளிவுகள் இருக்கும். அதை எல்லாம் உணர்ந்து,
பொறுத்து, அனுசரித்துதான் போகணும். இதுக்குப் பேர் அடிமைத்தனம் இல்ல. நீ
அடிமைத்தனம்னு இதை நெனைச்சா உன்னால் இந்தக் குடும்ப வாழ்க்கையில்
நிம்மதியாக கரை சேர முடியாது.” என்றார் செவ்வாய் பேட்டை ஆயா.
சந்திராமணிக்கு தெளிவு பிறக்கும் என்ற நம்பிக்கையில் ஆயா, மாடியில்
இருந்து இறங்கி வந்தார்.
அதே படிகளில்தான் சந்திராவும் இறங்கி வருவதை உறுதிபடுத்திக்கொண்ட ஆயா,
பேரனைப்பார்த்து அர்த்தமுடன் புன்முறுவல் செய்தார்.

Series Navigationசங்க இலக்கியத்தில் பண்டமாற்று முறைகனவு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *