பேக்குப் பையன்

This entry is part 4 of 44 in the series 16 அக்டோபர் 2011

துளி சத்தம் இன்றி அதை வைத்து விட்டுப் ப+னை போல் நழுவினான் அவன்.
எந்தப் ப+னைக்கு பயந்து ‘ஒரு சத்தம் கொடுப்பா’ என்று அக்கறையாக நான் சொல்லியிருந்தேனோ அதைப் பொருட்படுத்தாமல் அவனே ப+னைபோல் பதுங்கினால்?
தற்செயலாக நான் எழுந்துவர அடர்ந்து தலை கவிழ்ந்து நிழலாய்க் கவிழ்ந்திருந்த வாசல் மரத்தின் கிழே தலையைப் பதவாகமாய்க் குனிந்து சைக்கிளை மிக மென்மையாக மிதித்து நகர்ந்தான்.
“Nஉற…Nஉற…பார்த்தியா…பார்த்தியா…சொல்லாமப் போறான் பாரு…எவ்வளவு சைலன்ட்டா நழுவுறாம்பாரு…”
அது அவன் காதில் நிச்சயம் விழுந்திருக்காது. அவன்தான் பறந்து விட்டானே?
விருட்டென்று போய் வாசல் கதவைத் திறந்து காம்ப்பவுன்ட் சுவற்றில் வைக்கப்பட்டிருக்கும் பால் பாக்கெட்களை எடுத்தேன்.
இன்னும் ஒரு விநாடி தாமதித்திருந்தால் அவ்வளவுதான்…ஸ்வாஉறாதான்…பால் பாக்கெட் நிச்சயம் நமக்கில்லை. அந்தக் கருப்புப் ப+னை காம்பவுன்ட் சுவரின் கோடியில் தயாராய் உட்கார்ந்திருந்தது. பால் வரும் நேரம் எப்படித்தான் அதற்குத் தெரியுமோ?
ஒரு வாரமாய் இதே போராட்டம்தான். இந்தப் ப+னைக்குப் பயந்து தூக்கத்தை உதறிவிட்டு, எழுந்து கொட்டக் கொட்ட உட்கார்ந்து கிடக்க வேண்டியிருக்கிறது.
ஒரு கணம் தவறினால்தான் பால் அம்பேல் ஆகிவிடுமே? ஏற்கனவே ரெண்டு முறை அப்படியாகித்தான் இந்த முஸ்தீபு!
பாக்கெட் வைக்கப்பட்டு, ஒரு மணி நேரம் ஆனாலும், அதுபாட்டுக்குக் காம்பவுன்ட் சுவற்றில் வைத்தது வைத்தமேனிக்கு இருக்கும். எத்தனையோ போர் வீதியில் போகிறார்கள், வருகிறார்கள். யாராவது பாலைப் போய் திருடுவார்களா? கடவுளுக்குப் படைக்கும் (நமக்குத்தான் முதல் டிகாக்ஷன்ல உள்ளே இறங்குது!) ப+ஜைப் பொருளாயிற்றே? அதுவும் விடிகாலையில் முதல் பாவமாக அந்தத் திருட்டைச் செய்வார்களா? இதுவரை இல்லை. இனிமேல் எப்படியோ? அதுதான் இந்தப் ப+னை செய்வதைப் பார்க்கிறார்களே? அன்றொருநாள் ஒருத்தர் பார்த்து, ச்சூ…ச்சூ…என்று சத்தமிட்டு வாயில் கடித்த பால் பாக்கெட்டைப் அப்படியே கீழே போட்டுவிட்டு ஓடியதே! அதனால் மனிதர்களுக்கும் ஆசை வரக் கூடாதா என்ன?
திருட்டுப் ப+னை! கறுப்பாகப் பளீர் என்ற வட்ட மஞ்சள் உருட்டுக் கண்களுடன், புலி போல் பதுங்கிப் பதுங்கி வந்து (என்னடா ப+னை போல வர்ற…என்போமே…அது மெத்தச் சரி!) லபக்கென்று பால் பாக்கெட்டைக் கவ்விக் கொண்டு ஓடி விட்டது. ஒரு மூலையில் கடித்து ஓட்டை உண்டாக்கி, வாயை வைத்து ஆனந்தமாக உறிஞ்சிக்கொண்டிருக்கிறது. பாக்கெட்டின் இன்னொரு பக்கத்தில் காலை வைத்து லேசாக அழுத்தி பாலை ஓட்டைப் பக்கம் வரச்செய்து, துளி வீணாகாமல் அரை லிட்டர் பாலையும் குடித்துத் தள்ளி விட்டதே! தினசரி காலை வயிற்றை நிரப்ப வசமாக ஒரு இடம்!
ரெண்டு முறை என்று சொன்னேனோ! அதுகூடத் தவறுதான். அது ஒரு நான்கைந்து முறை இருக்கும். பெரிய பாக்கெட்,சின்னப் பாக்கெட் என்று அகப்பட்ட வகையில் கபளீகரம் செய்து விட்டது.
அன்று கூட இருந்த இன்னொரு பாக்கெட்டையும் தொட வேண்டாம் என்றுவிட்டாள் என் சகதர்மிணி. அது வாயை வைத்திருக்குமாம். அதன் முடிகிடி ஏதேனும் ஒட்டியிருந்து, அது நம் வயிற்றில் போய் ஏதாச்சும் ஏடாகூடம் ஆகிவிட்டால்? சரி தொலையட்டும் என்று விட்டேன். சரி, நமக்குத்தான் போல என்று அதையும் வந்து எடுத்துக் கொண்டு போய்விட்டது. கெட்டிக்காரப் ப+னைதான்!
“என்னாச்சு எடுத்தாச்சா? இன்னைக்கு அந்தப் ப+னை பட்னிதான்…” என்றவாறே அதை வாங்கிக் கொண்டாள் லலிதா.
காம்பவுன்ட் சுவரை விட்டுக் குதித்து, எதிலே போய்க் கொண்டிருந்தது அந்தப் ப+னை. தளர்ந்த நடை. பார்க்கச் சற்று சங்கடமாகத்தான் இருந்தது.
“உங்களுக்கு ஒரு மணி நேரத் தூக்கம் போச்சு…இதுக்காக வேண்டி முன்னக்கூட்டி எழுந்திரிக்கணும்…”லலிதா சங்கடப்பட்டதுபோல் இருந்தது.
“அதுக்காகத்தான் ஒரு சத்தம் கொடுன்னு அவன்ட்டச் சொன்னேன்…அவனென்னடான்னா கமுக்கமாப் போறான்…”
“இது அந்தப் பையன் இல்லை…அத நீங்க கவனிக்கலையா…”
“அப்டியா? நா கவனிக்கலையே? ஒரு வேளை தூக்கக் கலக்கத்துல விட்டுட்டேனோ என்னவோ? அதானே பார்த்தேன். அந்தப் பையன்னா நா போய் எடுத்த பின்னாடிதான இடத்தை விட்டு நகருவான்னு நினைச்சேன்..நாங்கூட பொடிப்பயன்னு பார்க்காமே ‘தாங்க்ஸ்’ன்னுவேன். பதிலுக்கு சிரிச்சிக்குவான்…அந்தச் சிரிப்பு பார்க்கிறதுக்கு நன்னாயிருக்கும்…அந்தத் துறு துறுப்பய இல்லையா இவன்? அப்போ எவன் வந்தது?”
முன்னாடி ஒரு பையன் போட்டுண்டிருந்தானே…சரியான அசடுன்னு கூட நீங்க சொல்லுவேள்…கொஞ்சம் பேக்காட்டம் இருப்பான் பார்க்கிறதுக்கு…ஞாபகமிருக்கா…அவனாக்கும் இன்னைக்கு வந்தது…”
“ஓ!அந்தப் பயலா? அட பேக்காண்டீ! அதான் சத்தம் கொடுக்காமப் போயிருக்கானா? இருக்கட்டும் வைக்கறேன்…கடைல போய் சொல்றேன்…அவா சொன்னா செய்துதானே ஆகணும்…ஏன்னா இவன்ட்ட நேர்ல சொல்லிப் பிரயோஜனம் இல்ல…இவன் ஒரு மாதிரி…இந்த அசடோடல்லாம் பேச வேண்டாம்…நாம நேரடியாப் பார்த்துப்போம்…ஒபே த ஆர்டர்ன்னா செய்துட்டுப் போறான்…அப்போ இனிமே தினமும் கொட்டக் கொட்ட முழிச்சிண்டு உட்கார்ந்திண்டிருக்க வேண்டிதான்…”
“வேறென்ன பண்றது? உங்களுக்கும் ஒரு வேலை வேணுமே?” –
“உனக்குக் கிண்டலா இருக்காக்கும்…சொல்லு…சொல்லு…”சிரித்துக் கொண்டேன். பிறகு கேட்டேன்.
“அதுசரி, இவன் எங்கேயிருந்து முளைச்சான் திடீர்னு? அந்தப் பையன்பாட்டுக்கு சிவனேன்னு போட்டுண்டிருந்தானோல்லியோ? வேலையை விட்டு நின்னுட்டான்னில்ல நினைச்சேன் நான்…”
“நிக்கிறதென்ன, போகிறதென்ன…எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணுதான்…கொஞ்ச நாளைக்குக் கடைல இருப்பான்…கொஞ்ச நாளைக்கு இப்டி ஷன்டிங் அடிப்பான்…”
“அப்போ அந்தச் சுறு சுறுப் பையன் வேறே ஏரியாவுக்குப் போவான்னு சொல்லு…நம்பளக் கேட்காம ஏன் மாத்தினா…நல்ல பையனாச்சே அவன்…”
“அது சரி, அது அவுங்க இஷ்டம்…நமக்கென்ன போச்சு…”
“அது உண்மைதான்…யார் போட்டா என்ன? நமக்குத் தேவை பால். டயத்துக்கு. வாசல்ல வச்சவுடனே ஒரு சத்தம் கொடுக்கச் சொல்லுங்கன்னு சொல்லிப்புடறேன்…அவ்வளவுதான்…”
அன்று முதல் வேலையாக அதைத்தான் செய்தேன்.
“சரிங்க ஸார் பசங்ககிட்ட சொல்லிப்புடறேன்…இனிமே சத்தம் கொடுப்பாங்க…” கடை முதலாளி சொன்னார்.
“சத்தம் கொடுத்தா மட்டும் போறாதாக்கும். நா வந்து எடுக்கிறவரைக்கும் சித்த நிக்கணும்…”
“அதெப்படி ஸார்…அவுங்க நாப்பது அம்பது வீடுகளுக்குப் போறவங்க…அவுகளும் உங்கள மாதிரி டயம் தவறக் கூடாதுன்னு பார்ப்பாங்கல்ல? ஒரு சவுன்ட் கொடு;த்தவுடனே நீங்க வந்திடுங்க…சரிதானா ஸார்…”
அதற்கு மேல் வற்புறுத்தினால் நமக்கு மதிப்பில்லை என்று கிளம்பினேன். வாடிக்கையாளரை இந்த அளவுக்கு மதிப்பதே மேல். இதற்கு மேலும் அதையும் இதையும் சொல்லி நம் மதிப்பை நாமே கெடுத்துக் கொள்ளக் கூடாது. பிறகு நீங்க இல்லாட்டா இன்னொருத்தர் என்று போய் விடுவார்கள். அப்படிப்பட்ட காலம் இது! நமக்கும் கூட அப்படித்தான். என்றாலும் ஒரு ஏரியாவில் குடியிருக்கும் போது பலதையும் யோசிக்கத்தானே வேண்டியிருக்கிறது.
“சொல்லியாச்சா?”
“ம்ம்ம்…ஆச்சு ஆச்சு…”
“அதானே பார்த்தேன்…இல்லன்னாத்தான் உங்களுக்குத் தூக்கம் வராதே…”
“எனக்குத் தூக்கம் வந்தாலும் வந்துடும்டீ…அந்தப் ப+னைதான் தூங்காதாக்கும்…அதை என்ன அடிச்சா விரட்ட முடியும்? இன்னும் அந்தப் பாவம் வேறே வேணுமா? ப+னை செத்தா தங்கத்தால செய்து போடணும்னுவா…அத்தனை பாவமாம்!
இந்தப் பேச்சையெல்லாம் கூடக் கேட்டுக் கொண்டு இந்த வீட்டின் எந்த மூலையிலாவது அது உட்கார்ந்து கொண்டிருக்கக்கூடும்! ஆனால் ஒன்று. ப+னைகளுக்கு மனிதர்கள் முக்கியமில்லை. வீடுகள்தான் முக்கியம். அதிலும் இந்த வீடுதான் இப்போதைக்கு முக்கியம்.
நினைத்தவாறே படுக்கைக்குப் போனேன். இதையே நினைத்துக் கொண்டு தூங்காமல் இருக்க முடியுமா? அடித்துப் போட்டதுபோல் தூங்கிப் போனேன். அது ஒன்றுதான் இன்றுவரை உள்ள நீங்கா வரம்!
“அட ராமா!- இப்டித் தூங்கிப் போயிட்டேனே? எந்த பிசாசம் வந்து இப்படிஅமுக்கித்து? அரக்கப் பரக்க எழுந்தேன். நன்றாக விடிந்திருந்தது. அடN;ட! பால் வந்திருக்கணுமே…? என்னாச்சோ தெரியலியே? – சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தவாறே பரபரப்பாய்க் கதவைத் திறந்தேன். நல்லவேளை!
நான் கதவைத் திறக்க, அந்தப் பையன் வந்து நிற்க, சரியாக இருந்தது! என்ன ஒரு அதிர்ஷ்டம் இன்று!
இன்றுதான் நானே பிரசன்னமாகி விட்டேனே! அவன் சத்தம் கொடுக்க வேண்டிய வேலை கம்மி! கொடுக்கிறானா இல்லையா என்று பார்த்திருக்கலாம். அவனுக்கும் இந்த வீட்டின்பாலான தன் வேலையை நினைவுபடுத்திக் கொண்டது போலிருந்திருக்கும். போய்ச் சொன்னதற்கு விடையாய் நமக்கும் ஒரு நிம்மதி. எழுந்தவுடன் மூளை இதையெல்லாம் எங்கே நினைக்கிறது?
பாலை எடுத்துக் கொண்டு திரும்பினேன். அவன் அங்கேயே நின்றான். அதுதான் பால் போட்டாயிற்று, எடுத்தாயிற்று, கிளம்ப வேண்டியதுதானே? இன்றைய பாடு ஆச்சுதானே! எதற்குத் தேவையில்லாமல் நிற்கிறான். சொன்னமாதிரி சரியான பேக்குப்பயதான் போலிருக்கு!
“என்னப்பா, என்ன வேணும்?;. எதுக்கு நிக்கிறே?”
“பேசாம எங்கிட்டச் சொல்லியிருக்க வேண்டிதான ஸார்? எதுக்கு ஸார் கடைல போய்ச் சொன்னீங்க…?”
எடுத்த எடுப்பில் டணால் என்று நேரடியாகத் தாக்குகிறானே? பதில் சொல்வோமா வேண்டாமா? இதென்ன பேச்சு இப்படி?

“ஏம்ப்பா…அதுனாலென்ன? “
“ஒண்ணுமில்ல ஸார்…பைசாப் பெறாத விஷயம்…இதை மெனக்கெட்டு நீங்க கடைக்கு வந்து சொல்லி, அவுங்க வீட்ல சொல்லி, வீட்லருந்து எங்கிட்டச் சொல்லி…தேவையா ஸார்?”
“சரிப்பா…அதுனால இப்ப என்ன வந்திடுத்து? பெரிசா கேட்டுண்டு வர்றே?”
“கேட்டுட்டு வர்றேன்னா…கேட்காம என்ன ஸார் செய்றது? ஒரு சவுன்டு கொடுத்து போட மாட்டீங்களாடான்னு கன்னா பின்னான்னு சத்தம் போடுறாரு முதலாளி. நீங்க சொன்னத சாதாரணமா எடுத்திட்டுச் சொன்னாப் பரவால்ல…பெரிய புகாரே வந்திட்ட மாதிரிப் பேசுறாரு…நாங்க என்னமோ கஸ்டமர்ட்ட திமிரா நடந்துக்கிற மாதிரி…அத்தக் கூலிக்கு நாயாக் கெடந்து பாடு படுறோம் நாங்க…வெளில யாரும் கேட்டா சொந்தக்காரப் பசங்கதான்னு நெருக்கமாச் சொல்லிக்குவாரு…”
நான் உள்ளே போவதா, வெளியேயே நிற்பதா என்பதறியாமல் தவித்தேன். இதென்ன காலங்கார்த்தாலே…பக்கத்து வீடுகளில் யாரும் பார்க்கிறார்களோ?
“நீங்க அந்தப்பயகிட்டே சொல்லியிருக்கீங்க…அது எனக்கு எப்படி ஸார் தெரியும்? எங்கிட்டயும் சொன்னாத்தான தெரியும்? இல்ல அவனாவது எங்கிட்டச் சொல்லியிருக்கணும்…”
“அதுக்கு நா என்னப்பா பண்ண முடியும்?” – ஏதோ குற்றவுணர்வு உறுத்த செய்வதறியாது நின்றேன்.
“நீங்க என்கிட்டச் சொல்லியிருக்கணும் ஸார்…அத விட்டுட்டு…”
“அப்படி ஒண்ணும் கட்டாயமில்லப்பா…நீ அநாவசியமாப் பேசாதே…பாலுக்குப் பணம் கொடுக்கிற எடம் அது. எதானாலும் அங்க சொல்றதுதான் முறை…அதனால சொன்N;னன்…அவ்வளவுதான்…”
“அப்போ அந்தப் பயகிட்ட மட்டும் ஏன் ஸார் சொன்னீங்க…அதுக்கும் கடைல போய்ச் சொல்லியிருக்க வேண்டிதான?”
“நீ என்னப்பா திகிடு முகடாப் பேசிட்டிருக்கே?”
“என்ன மாதிரிப் பேச்சு வாங்கிருந்தாத் தெரியும் ஸார் உங்களுக்கும்? போன தீபாவளிக்கு எத்தன வாட்டி அலைய விட்டீங்க? நா எதுனாச்சும் சொன்னனா ஸார்? கடைசி வரைக்கும் தீபாவளிக் காசு கொடுக்காமயே ஏமாத்திட்டீங்கல்ல? முத நா ராத்திரி கூட வந்து கேட்டன்ல…சும்மாத்தான அனுப்பிச்சீங்க…நா எதாச்சும் என்னிக்காச்சும் ஒரு வார்த்தை அதைப் பத்திப் பெறவு பேசியிருப்பனா? ஆளுகளப் புரிஞ்சிக்குங்க ஸார்…எதுவும் வாய் பேசாதவன்னா இஷ்டத்துக்கு என்னமும் நினைச்சுக்குவீங்களா? நல்ல ஆளு ஸார்…”
-சொல்லி விட்டுப் பதிலுக்குக் காத்திராமல் போய்க் கொண்டிருந்தான் அவன். கையை நீட்டிக் காண்பித்து, கடைசியாக வந்த அந்த ஒருமை வார்த்தையில் அப்படியே அடங்கிப் போனேன் நான்.
பழி தீர்ப்பதுபோல் அவன் மூட்டிவிட்டுப் போன தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதன் தகிப்பு தாளாமல் அந்த வெப்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் வெந்து கருகிக் கொண்டிருந்தேன் நான்!!

Series Navigationதஞ்சாவூரு மாடத்தி (வாகைசூடவா விமர்சனம்)ஒருகோப்பைத்தேநீர்
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

2 Comments

    1. Avatar
      ushadeepan says:

      கதைகள் பலவகை. இது ஒரு வகை. இவையிவைதான் கதைகள் என்று சொல்வதற்கில்லை. அப்படியிருப்பின் ஒரு வரிக் கதைகள் வந்திருக்க வாய்ப்பில்லை. நான் மற்றவருக்குச் சொல்ல நினைக்கும், மனித மேன்மையை உசுப்பிவிடும் எல்லாமே என்னைப் பொறுத்தவரை கதைகள்தான். அதற்கு எவரும் எந்தப் பட்டயமும் அளித்து தூக்கி நிறுத்த வேண்டும் என்று நான் எதி்ர்பார்ப்பதில்லை.தேவையுமில்லை. நன்றி. உஷாதீபன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *