ப.மதியழகனின் “சதுரங்கம்” : பிணங்கள் வாழும் வீட்டுக்குப் பயணிப்போம்

This entry is part 6 of 35 in the series 11 மார்ச் 2012

பொன்.குமார்

சமூகத்தைப் பேசவும் சமூகத்தைக் காட்டவும் சமூகத்தைச் சீர்படுத்தவும் ஒரு சிறந்த ஆயுதம் கவிதை.கவிதை எழுதுவது எளிது போல் தொடக்கத்தில் தோன்றும்.கவிதைக்கு என்று ஒரு மொழி இருக்கிறது.அது எளிதில் வசப்படாது.கவிதை உலகில் நுழைந்தவருக்கே தெரியும்.புரியும்.சாத்தியப்படும்.தொலைந்து போன நிழலைத் தேடி புறப்பட்ட ப.மதியழகன் இரண்டாம் தொகுப்பில் சதுரங்கம் விளையாடி உள்ளார்.விளையாட்டில் முன்னேற்றம் தெரிகிறது.

பால்யம் என்பது எல்லோருக்கும் ஒரு பொதுவான அனுபவமாகவே இருக்கும்.எதிர் காலம் குறித்த கவலை ஏதுமின்றி மகிழ்ச்சியாய்ச் சுற்றித் திரியும் பருவம் அது.பெரியவர்களுக்குக் கவலை அளிக்கும் செயலாகவே படும்.பொறுப்புப் பெற வேண்டும் என பெரிதாக முயல்வர்.அதிக பட்சமாக பட்டணத்திற்கு அனுப்பி வைத்து புதிய அத்தியாயத்திற்கு அடிகோலிடுவர்.முற்றுப்புள்ளி யில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கிய கவிஞரின் அனுபவத்துடன் கவலையும் வெளிப்பட்டுள்ளது.

தென்னந் தோப்பையே

சுற்றிக் கொண்டு திரிந்தால்

தேறமாட்ட என்று

பட்டணத்துக்கு பஸ் ஏற்றி

அனுப்பி வைத்த

சொந்த பந்தங்களை

என்னவன்று சொல்ல

கவிஞர் மீது கொண்ட அக்கறையினால் உறவுகளின் செயல் இருந்தாலும் கிராமத்தின் நினைவுகளிலிருந்து மீள முடியாமல் தவிப்பதை உணர முடிகிறது.பால்ய வயது எல்லோருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.வாழ்க்கையில் எத்தனையோ பருவங்கள் வந்தாலும் பால்யமே இனிமையானது.பசுமையானது.மறக்க முடியாதது.வயதான காலத்தில் அசை போடுதலுக்குரியது.கவிஞரும் பால்ய பொழுதுகள் குறித்து எழுதியுள்ளார்.நினைவுக் கூர்ந்து நினைவுக் கூரச் செய்துள்ளார்.

பால்யத்தின் கனவுகளை

அசை போட்டவாறு இருக்கும்

பீஷ்மரைப் போல்

வாழ்க்கை கொடிய கணைகளால்

எனது நெஞ்சத்தைகத் தைத்தது

வாசக நெஞ்சத்தையும் தைத்துள்ளார்.வயோதிகத்தில் இருக்கும் ஒருவரின் உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.பால்யம் தொலைந்ததை எண்ணி வருந்தியுள்ளார்.சமூகம் கூண்டுக்குள் அடைத்து வைத்து பால்யத்தைக் காணாமல் செய்து விடுகிறது என்று பிராயம் கவிதையில் கவலைப் பட்டுள்ளதையும் அறிய முடிகிறது.

கவனமாகக் கையாள வேண்டிய

கண்ணாடிப் பாத்திரம் போன்றது

பால்யம்

துாளி யில் எழுதியுள்ளது கவனிக்க வேண்டியதாகும்.

மனிதன் எவ்வளவுதான் முயன்றாலும் எப்படித்தான் எத்தணித்தாலும் இயற்கையை வெல்ல முடியாது.வெல்லவும் வாய்ப்பில்லை.இயற்கை அழகைக் கொடுத்து கொண்டிருந்தாலும் இயற்கையின் இயக்கத்தை மனிதரால் மாற்ற முடியாது.சூரியன் எரிந்து கொண்டேயிருக்கும்.பூமி சுழன்று கொண்டேயிருக்கும்

பகலைத் துரத்தும் இரவு

இரவுக்கும் உண்டு முடிவு

பகலும் இரவும் மாறி மாறி வருவதைக் கவிஞர் கவித்துவமாக கற்பனையாக வானமற்ற வெளி யில் எழுதியுள்ளார்.வாசகர்களைச் சிந்திக்க செய்துள்ளார்.வானம் கவிதையிலும் பகலை துரத்தும் இரவும்

இரவை விரட்டும் பகலுமாக

இருளுக்கும் ஒளிக்கும் இடையேயான

போட்டியினால் தான்

பூமி இன்னும் பிழைத்திருக்கிறது

பூமி பிழைத்திருப்பதற்கான காரணத்தைக் குறிப்பிடுகிறார்.

குழந்தைகளுக்கு பிடிக்காது.அறிவுறுத்தினாலும் ஏற்றுக் கொள்ளாது.வளர்பிறை யில் குழந்தைகளுக்குக் கதைச் சொல்வதை ஒரு கதையாகவே சொல்லி கருத்து எதுவும்

சொல்லாத கதைகளே

அவர்களுக்குப் பிடித்திருந்தது

என்று குழந்தைகளின் மன இயல்பைக் காட்டியுள்ளார்.குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்காதீர்கள் கற்றுக் கொள்ளுங்கள் என்று பொன்.குமார் இனிது தொகுப்பில் எழுதியிருந்தது நினைவிற்கு வருகிறது.குழந்தையை வைத்து எழுதப் பட்ட இன்னொரு எழுதியிருந்தது நினைவிற்கு வருகிறது.குழந்தையை வைத்து எழுதப்பட்ட இன்னொரு கவிதை பிறை.கனவில் கடவுளுடன் விளையாடிய குழந்தை கனவுக் கலைந்ததும் கடவுளைத் தேடியது என்கிறார்.குழந்தையின் இயல்பை இயல்பு மாறாமல் கூறியுள்ளார்.கனவு என்பதிலும் கனவு உலகத்திலேயே குழந்தை இருக்க விரும்புகிறது என்கிறார்.

வாழ்க்கையை ஒரு பயணம் என்பர்.வாழ்வில் பயணம் செய்யாதவர் குறைவு.அதில் பேருந்து பயணம் நல்ல அனுபவம்.பேருந்து சாலையில் ஒரு திசையில் பயணித்தால் பயணியின் மனம் ஒரு திசையில் பயணிக்கும்.பயணம் செல்லும் போது அவரவர் சுமைகளைச் சுமப்பதுடன் மனத்தில் தன் ஊரையும் சுமந்து செல்வர்.

பணிக்காக வேறு ஊருக்கு

பயணப் படுபவர்கள் எல்லாம்

சொந்த ஊரை

மனதில் சுமந்து கொண்டு

இருக்கையில் அமர்ந்திருந்தனர்

ஊர்விட்டு ஊர் சென்றாலும் உள்ளம் விட்டு ஊர் செல்லாது என்று உணர்த்தியுள்ளார்.ஊருக்குள் மனிதர் வாழ்ந்தாலும் மனிதர் உள்ளத்துள் ஊர் வாழ்கிறது என்கிறார்.ஊர் குறித்த சித்திரம் வரைந்து காட்டியுள்ளார்.

ஈழத்தில் பல நிகழ்வுகள் கொடுமையான முறையில் கடுமையான வகையில் நடந்தேறியுள்ளன.ஈழத்தில் இறந்தவர்களின் நிலையை விட இருப்பவர்களின் நிலை பரிதாபத்திற்குரியது.

குருதிய கலந்த நீரைத்தான்

குடிக்க வேண்டியிருக்கிறது

இரத்தம் தோய்ந்த உடைகளைத்தான்

உடுத்த வேண்டியிருக்கிறது

ஈழத்து தாய்மார்களின் கண்ணீரில்தான்

குளிக்க வேண்டியிருக்கிறது

போரில் இறந்து போனவர்களின்

கல்லறை அருகே

உறங்க வேண்டியிருக்கிறது

ஈழத்து நிலையை எழுத்தில் கூறியுள்ளார்.ஈழத்தவர்கள் எல்லாம் எவ்வாறு எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறியச் செய்துள்ளார்.போர்க் களத்தில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்கிறார்.ஈழத்துத் தமிழர்களுக்காக இந்தியத் தமிழர்கள் ஏதும் செய்ய முடியா நிலையில் இருப்பதற்காகவும் வருந்தியுள்ளார்.உதிரச் சுவடுகள் என்னும் இக்கவிதை மூலம் உதிரத்தை உஷ்ணமூட்டியுள்ளார்.

கவிஞர்கள் சமுதாயத்தின் ஓர் அங்கம்.சமூகத்திற்காக வருந்துபவர்கள்.சமூகத்தைச் சீர்ப்படுத்த முயல்பவர்கள்.சமூகமோ கவிஞர்களைக் கண்டு கொள்வதில்லை.

சமூகத்திற்காகாத்தான் அவர்கள் வருந்துகிறார்கள் என்று சமூகம் அறியாமல் உள்ளது.சமூ

கண்டு கொள்ளாத ஒரு கவிஞனின் நிலையில் எழுதிய கவிதை காகிதத்தில் புதைந்தழியும் கனவு

வேறு என்ன செய்ய முடியும்

கவிதை எழுதிக் குவித்த

காகிதங்களை வைத்து

கவிதை எழுதி வைத்த காகிதங்களால் ஒன்றும் பயனில்லை.என்கிறார்.கவிதைகளால் பயனில்லை என ஒரு கவிதையாலே எழுதியுள்ளார்.சமூகத்தில் கவிஞர்களின் நிலையை உணர்த்தியுள்ளார்.கதைக்குதவாத கலை யிலும் கவிதையை வைத்து காசு பண்ண முடியவில்லை என்று கவலைப்பட்டுள்ளார்.

குறளி வித்தை கவிதை ஒரு குறியீடாக உள்ளது.குறளி வித்தை என்பது ஓர் ஏமாற்றுக் கலை.அல்லது ஓர் ஏமாற்று வேலை.ஆனால் ஏமாந்து போவது மக்களே.ஏமாந்து போகும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கவே செய்வார்கள் என்கிறார்.ஏமாற்றுபவர்கள் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்கிறார்.குறளி வித்தையாளர்கள் என்பவர்கள் அரசியல் வாதிகளாகவும் உள்ளனர் என்கிறார்.

கை என்பது மனிதனின் உறுப்பு.உறுப்பினுடைய வேலை ஏராளம்.கை செய்வதில் நல்லவையும் உண்டு.அல்லவையும் உண்டு.கையில் கவிஞர் தீயவைகளைப் பட்டியலிட்டுள்ளார்.இறுதியில் வாசகர்களோடு கை குலுக்குபவை தீயவைச் செய்தவையாகவும் இருக்கலாம் என்கிறார்.கையிடம் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டுமென எச்சரிக்கைச் செய்துள்ளார்.

விளையாட்டுக்களில் வித்தியாசமானது சதுரங்கம் சிந்தனையும் தேவை.சுறுசுறுப்பும் வேண்டும்.நகர்த்துதலே முக்கியம்.எதை,எப்போது,எப்படி நகர்த்த வேண்டும் என்பதே அவசியம்.பாதுகாப்பு வளையத்தில் இருந்து கொண்டு எல்லோரையும் பலி கொடுத்துக் வீரர்களைப் பற்றிய கவலையில்லை.கவிஞரின் சதுரங்கம் வீரர்களைப் பற்றிய பேசுகிறது.

வெட்டுண்ட சிப்பாய்களுக்கு

ராஜாவை காக்க முடியவில்லையே

என்ற கவலை வருமா

ராஜாவிற்காக வீரர்கள் வருத்தப் படுகிறார்கள்.வீரர்களுக்காக ராஜா வருத்தப் படுவதில்லை என்கிறார்.ராஜாக்களைக் குற்றம் சாட்டியுள்ளார்.

படிப்பு என்பது நாளைய தலைவர்களை உருவாக்குவதில்லை.நாளைய சிந்தனையாளர்களை உருவாக்குவதில்லை.மனப்பாடும் செய்யும் மனிதர்களை உற்பத்திச் செய்கிறது.மனப்பாடம் செய்ய முடிந்தவர்களுக்கே முதல் மதிப்பெண் கிடைக்கிறது.முதல் மதிப்பெண் பெற்றவர்களின் நிலை பிற காலத்தில் என்னவாக இருக்கிறது ஆராய்ந்து பார்ப்போம் எனில் வாழ்க்கைத் தோல்வியிலேயே முடிந்திருப்பதை அறிய முடியும்.

புத்தகத்தில் படிப்பதை

தேர்வில் வாந்தியெடுத்து

வைப்பதே

பிழைப்பாய் போய்விட்டது

படிப்பு என்பது மனப்பாடம் செய்யும் ஒரு கலை என்கிறார்.பிழைப்பாய்ப் போய் விட்டது என்று வருந்துகிறார்.கல்வித் திட்டத்தை விமரிசித்துள்ளார்.கல்வித் திட்டத்தில் மாற்றம் வேண்டும் என்று உணர்த்துகிறார்.

மனநிலை பாதிக்கப் பட்டவர்களை மருத்துவத்தாலும் மனத்திற்கு ஆறுதலாக பேசினாலும் குணமடையச் செய்ய முடியும்.வைத்தியம் செய்யாமலே வைத்திருந்தால் மனநிலை பாதிக்ப்பட்ட நிலையிலேயே இருப்பர்.அவர்களுக்கு அன்பும் அரவணைப்பும் தேவை.பித்து பிடித்திருப்பவர்களைப் பார்த்து விட்டு கவிஞர் எழுதியிருப்பது

எங்கும் செல்ல முடியாமல்

சங்கிலியால் பிணைக்கப் பட்ட

அவளைப் பார்த்துவிட்டு

வந்த பிறகு

இரவில் கண்ணுறக்கம் வரவில்லை

மனநிலைப் பாதிக்கப்பட்டவர்களுக்காக மனம் இரங்கியுள்ளார்.பித்து பிடித்தவர்கள் மீது கருணைக் காட்ட கோரியுள்ளார்.

வட்டத்துக்குள் வாழ்க்கை தத்துவமாக இருந்தது.வாழ்க்கை ஏதுமற்றது என்கிறது.எதார்த்தத்தை முன்வைத்துள்ளது.துன்பம் மனிதனைத் துரத்திக் கொண்டே இருக்கிறது என்று உணர்த்துகிறது.வாழ்க்கைச சுவடில்லாமல் போய் விடும் என்கிறது.ஒரு வட்டத்துக்குள் வாழ்க்கை முடிந்து விடுகிறது என்பதே கவிதையின் தத்துவமாக உள்ளது.

பாடம் நடத்தும் ஆசிரியர்களை விட பாடத்திற்கு அப்பால் குட்டிக் கதைகள் கூறும் ஆசிரியர்களையே மாணவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.கதைகள் கூறி கவர்ந்த ஆசிரியரைப் பற்றி ஒரு கவிதையில் கவிஞர் கூறியுள்ளார்.ஒரு கதையாகவே உள்ளது.ஆசிரியரின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கவிஞர் ப.மதியழகன் சதுரங்கம் என்னும் தொகுப்பு மூலம் பல செய்திகளை நகர்த்தியுள்ளார்.வாசகர் முன் வைத்துள்ளார்.பால்யம் ஒரு முக்கியத்துவம் பெற்றுள்ளது.பால்யம் வாழ்வில் ஓர் இன்றியமையாத பருவம் என்பதைப் பல கவிதைகள் வாயிலாக வெளிப்படுத்தி பால்யத்தின் மீதான தன் ஏக்கத்தைக் காட்டியுள்ளார்.முன்னுரையிலும் பால்யத்தையே முன்னிறுத்தியுள்ளார்.ஒரு கவிஞனாக,ஒரு தமிழனாக கவிதைகளைத் தந்துள்ளார்.வாழ்வின் அம்சங்களை வடித்துக் கூறியுள்ளார்.கவிதை மொழியை இன்னும் கூர்மையாக்கி இருக்கிறேன் இந்தக் கவிதைத் தொகுப்பில் என்று கூறியிருப்பது மெய்யே என்பதைக் கவிதைகளில் கையாண்டுள்ள மொழியே சான்றாக உள்ளது.கவிஞருக்கான ஓர் அடையாளத்துடன் தொகுப்பு தனித்து விளங்குகிறது.இயற்கையையும் பாடியுள்ளார்.மனிதநேயத்தையும் பேசியுள்ளார்.ஒரே பொருளில் பல கவிதைகள் இருப்பது ஒரு சலிப்பை ஏற்படுத்துகிறது.எனினும் கவிஞரின் கவிதை முயற்சி வரவேற்கக் கூடியது என்பதை மறுக்க முடியவில்லை.சதுரங்கம் என்னும் இத் தொகுப்பு கவிஞர் ப.மதியழகனை அடுத்த கட்டத்திற்கு

நகர்த்தியுள்ளது.அடுத்தடுத்த கட்டம் நகர்ந்து முன்னேற வாழ்த்துக்கள்.

வெளியீடு

ஸ்ரீலெட்சுமி பதிப்பகம்,115,வள்ளலார் சாலை,ஆர்.பி.சிவம் நகர்,மன்னார்குடி-614001.செல்;9597332952 mathi2134@gmail.com

விலை.ரூ.70/-

ponkumarkavithai@gmail.com

Series Navigationகானல் நீர்..!ஜென் ஒரு புரிதல்- பகுதி 34
author

பொன்.குமார்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *