மருத்துவக் கட்டுரை ஆஸ்த்மா

This entry is part 1 of 23 in the series 16 மார்ச் 2014

ஆஸ்த்மா நோய் என்பது இன்று வளர்ந்து வரும் நாடுகளில் வெகு வேகமாகப் பரவி வருகிறது. இதற்கு முக்கியக் காரணமாக பெருகிவரும் தொழிற்சாலைகளும், வாகனங்களும், அதனால் உண்டாகும் சுற்றுப்புறச் சுகாதாரச் சீர்கெடும் முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.

வளர்ந்துவரும் நாடுகளில் ஆஸ்த்மா 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிகமாகி வருகிறது. அங்குள்ள ஜனத்தொகையில் 10 முதல் 15 சதவிகிதத்தினர் இதனால் பாதிக்கப் படுகின்றனர். மக்கள் மேலை நாட்டு கலாச்சாரத்தைக் கடைப் பிடிப்பதால் இந்த வியாதி இன்னும் அதிகமாகத் தோன்றும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இப்போதெல்லாம் சிறு குழந்தைகளும்கூட ஆஸ்த்மா நோயால் அதிகம் பாதிக்கப்படுவதும் கண்கூடு.

இது பரம்பரை வழியாக தோன்றும் நோயாக இருந்தாலும், புதிதாக பலருக்கு வருவதன் காரணம் சுற்றுச் சூழல் சீர்கேடுதான் எனக் கூறலாம்.

.இது 12 வயதுக்குக் குறைவான குழந்தைப் பருவத்தில் தோன்றினாலோ 12 வயதுக்கு மேல் இது வராது.

ஆஸ்த்மா முழுக்க முழுக்க நுரையீரல் அழற்சி தொடர்புடைய நோய். இது உண்டாவதின் காரணம் முழுதுமாக இன்னும் சரிவரத் தெரியவில்லை என்பதே உண்மை.

இருமல், ‘ வீஸ் ‘ எனும் சத்தம், நெஞ்சு இறுக்கம், இரவில் மூச்சுத் திணறல் ஆகியவை முக்கிய அறிகுறிகள்.

ஆஸ்த்மா நோய் மூன்று விதமான தன்மை கொண்டது.

* சுவாசக் குறைவு – Airway Limitation – இது தானாகவோ அல்லது மருந்தினாலோ குணமாகும்.

* வெளி காரணிகளால் சுவாசக் குழாய்களின் அளவுக்கு அதிகமான எதிர்ப்பு செயல்பாடு – Airway Hyperresponsiveness – அவை வருமாறு:

^ சுற்றுச் சூழலில் உள்ள தூசுகள், புல்களின் மகரந்தம், வளர்ப்புப் பிராணிகளின் ரோமங்கள் போன்றவை.

* வீடுகளில் உள்ள தூசு உண்ணிகள் .

^ வேலை செய்யுமிடத்தில் இரசாயனப் புகை.

^ சில மாத்திரை மருந்துகள்.

^ சில உணவுவகைகள் – கோதுமை, முட்டை, பால், அவரை, சாக்லேட், உருளைக் கிழங்கு, மாட்டு அல்லது பன்றி இறைச்சி போன்ற சில உணவு வகைகள் ஒவ்வாமையுடன் தொடர்புடையவை . ஆகவே ஆஸ்த்மா உள்ளவர்கள் இவற்றை உட்கொள்ளுள்ளும் போது நோய் தீவிரமாகலாம்.

^ வைரஸ் தொற்று

^ குளிர் காற்று

^ புகைத்தல்

^ வாசனைத் திரவியங்கள்

^ மன அழுத்தம்

* சுவாசக் குழாய் அழற்சி – Inflammation of the bronchi- இதில் இயோசினோபில், T லிய்ம்போசைட், மாஸ்ட் செல்கள் என்னும் வெள்ளை இரத்த அணுக்கள் சுவாசக் குழாய்களைத் தாக்கி, சளி அடைப்பு, குழாய் வீக்கம் , குழாய் தடிப்பு போன்றவற்றை உண்டுபண்ணுகின்றன.

இவை தவிர இது மரபணு வழியாகவும் அடுத்த சந்ததியினரிடையே அதிகம் காண வல்லது. சிலருக்கு உடற்பயிற்சி செய்து முடிந்தபின்பு கூட இது உண்டாகலாம்.

அறிகுறிகள்

* திடீர் மூச்சுத் திணறல்

* சுவாசிக்கும் போது ஸ்ஸ்ஸ் என்ற சத்தம். இதையே வீஸ் ( Wheeze ) என்பர்,

* சளியுடன் கூடிய இருமல்

* நெஞ்சில் வழி இல்லாத இறுக்கம்.

* இரவில் தூக்கமின்மை.

பரிசோதனைகள்

மருத்துவர் சாதாரண பரிசோதனையின் வழியாகவே ஆஸ்த்மா உள்ளதை நிர்ணயம் செய்தாலும் நுரையீரல் செயல் திறன் பரிசோதனை ( Pulmonary Function Test ) செய்து பார்ப்பார். இதில் சுவாசத்தை வெளியேற்றும் பலம் அறியலாம்.

சாதாரணமாக ஆஸ்த்மா இல்லாதவர்கள் நுரையீரலிலிருந்து 75 முதல் 80 சதவிகித காற்றை ஒரு நிமிடத்தில் வெளியேற்றி, முழு காற்றையும் 3 வினாடிகளுக்குள் வெளியேற்றிவிடுவர். ஆனால் ஆஸ்த்மா உள்ளவர்கள் முழுக் காற்றையும் வெளியேற்ற 6 முதல் 7 வினாடிகள் எடுப்பர். இதை அளக்க ” பீக் ஃப்லோ மீட்டர் ” ( Peak Flow Meter ) எனும் கருவி பயன் படுத்தப்படுகிறது.

சிகிச்சை முறைகள்

* அறிகுறிகள் வராமல் தடுப்பது, சுலபமாக சுவாசிப்பது, நோய் கடுமையாகாமல் தவிர்ப்பது போன்றவை சிகிச்சையின் முக்கிய குறிக்கோள்கள்.

* ஒவ்வாமையை உண்டு பண்ணக்கூடிய வீட்டிலுள்ள தூசு உண்ணிகள், வளர்ப்பு பிராணிகள், சில உணவு வகைகள் போன்றவற்றைத் தவிர்த்தல் நல்லது.

* புகைத்தலை நிறுத்தியாக வேண்டும்.

* ஆஸ்பிரின் போன்ற வலி குறைக்கும் மாத்திரைகளை தவிர்ப்பது.

* வேலையிடத்தில் இரசாயன புகை வெளியேறும் இடங்களிலிருந்து அவை இல்லாத இடம் மாறுவது.

* மருந்துகள் – இப்போதெல்லாம் நுரையீரலுக்குள் நேரடியாக உடன் சென்று பயன் தரும் சுவாசிக்கும் மருந்துகள் ” இன்ஹேலர் ” ( Inhaler ) எனும் சிறு கருவி மூலம் தரப்படுகிறது. இதில் குறுகிய காலம் வேலை செய்வதும், நீண்ட நேரம் வேலை செய்வதுமான இரண்டு வகைகள் உள்ளன. இவை சுவாசக் குழாய்களை உடன் விரிவடையச் செய்து உடனடியாக நிவாரணம் தருகின்றன. கிளினிக்குகளில் ” நெபுளைசர் ” ( Nebulaiser ) எனும் கருவி மூலம் தொடர்ந்து சில நிமிடங்கள் மருந்து சுவாசிக்கச் செய்து நிவாரணம் தருகிறோம்.

சுவாசக் குழாய் வீக்கம் குறைக்க ” ஷ்டீராய்ட் ” மருந்தும் தரப்படுகிறது.

இவை இரண்டிலும் குணமாகாமல் மூச்சுத் திணறல் அதிகமானால், கால தாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்ல வேண்டும்.

உயிருக்கு ஆபத்து இல்லாத நோய்தான் ஆஸ்த்மா. ஆனால் சில வேலைகளில் உடனடியாக சரியாக கவனிக்காவிட்டால் அதுவே உயிருக்கு ஆபத்தாக மாறலாம்!

( முடிந்தது )

Series Navigationஇருநகரங்களின் கதை சொல்லி: சுப்ரபாரதிமணியன்இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர் [ நிகழ்ச்சி எண்-145 ]2015 இல் புறக்கோள் புளுடோவைத் தாண்டி பரிதி மண்டலத்துக்கு அப்பால் உளவப் போகும் நாசாவின் வேக விண்ணுளவி புதுத் தொடுவான் [New Horizon]எறும்பின் பயணம் – நிலாரசிகனின் ‘கடலில் வசிக்கும் பறவை’பங்காளிகளின் குலதெய்வ வழிபாடு
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *