முடிவற்ற போர்: மிதவாத முஸ்லீமாக இருந்தால் மட்டுமே போதாது.

author
6
0 minutes, 4 seconds Read
This entry is part 1 of 16 in the series 22 நவம்பர் 2015

minhazமின்ஹாஸ் மர்ச்சண்ட்

தீவிரவாத இஸ்லாமை நிரந்தரமாக தோற்கடிக்க ராணுவரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் இரண்டு முனைகளிலும் போரை நடத்தவேண்டும்

இஸ்லாமிய காலிபேட் (ISIS) பாரீஸில் நடத்திய தாக்குதல்களும், G20 உச்ச மாநாடு நடைபெறும் துருக்கியில் தடுக்கப்பட்ட தற்கொலைகுண்டு தாக்குதலும் இறுதியான தாக்குதல்கள் அல்ல. மேற்கத்திய நாடுகளின் தலைநகரங்களில் இது போல தாக்குதல்கள் நடைபெறும் என்று பிரிட்டனின் உளவுத்துறை தடயங்களை பெற்றுள்ளது. பிரிட்டனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் உச்சகட்ட தீவிரத்தை எட்டியதாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், பிரிட்டனின் சிறப்பு காவல்துறை லண்டனின் தெருக்களிலும், மற்ற இங்கிலாந்து நகரங்களின் தெருக்களிலும் ரோந்து செய்ய துவக்கியிருக்கிறது.

 

பிரஞ்சு ஜனாதிபதி ஃப்ரான்ஸ்வா ஓலந்த் , பாரீஸில் கொலைவெறியாடிய பயங்கரவாதிகளுக்கு எதிராக “இரக்கமற்ற போரை” நடத்தப்போவதாக சூளுரைத்திருக்கிறார். சிரியாவுக்கு பிரான்ஸின் துருப்புகளை அனுப்பி சிரிய நிலத்திலிருந்தே இஸ்லாமிய காலிபேட்டுக்கு எதிராக போரை துவக்கபோவதாக இருக்கிறார். ரக்கா என்ற இஸ்லாமிய காலிபேட்டின் தலைநகரத்தை பிரெஞ்ச் ஜெட் விமானங்கள் தாக்கியிருக்கின்றன. அங்கு சென்ற ஞாயிற்றுக்கிழமை, அந்த பயங்கரவாத குழுவின் தலைமை கட்டுப்பாடு நிலையத்தை தாக்கி அழித்திருக்கின்றன. அதே நேரத்தில், வரும் நாட்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் என்னும் இஸ்லாமிய காலிபேட்டை எதிர்த்து போரிட தனது ஸ்பெட்ஸ்நாஸ் சிறப்புப்படைகளை ரஷ்யா சிரியாவுக்கு அனுப்பியிருக்கிறது. தரைப்படை உள்ளே புகுந்து இஸ்லாமிய காலிபேட்டுக்கு எதிராக போரில் இறங்கும் என்றும் அறிவித்திருக்கிறது.

ஆனல், இது முடிவற்ற போராக ஆகலாம்.

புவிஅரசியல் ரீதியாக, தீவிரவாத இஸ்லாமுக்கு எதிரான போரில் ஐந்து கூட்டணிகள்  அமையலாம். முதலாவது அமெரிக்கா, ருஷ்யா, மேற்கு ஐரோப்பா. இரண்டாவது இந்தியா. மூன்றாவது சீனா. நான்காவது பாகிஸ்தான். ஐந்தாவது சவுதி அரேபியா தலைமைதாங்கும் வஹாபி இஸ்லாம்.

இந்த ஐந்து புவி பாகங்களில் அமெரிக்கா, ருஷ்யா, மேற்கு ஐரோப்பா என்ற குழுமமும் , இந்தியா என்ற தேசமும்  இஸ்லாமிய பயங்கரவாதக்  குழுக்களால் மேலும் மேலும் தாக்கப்படும். பாகிஸ்தானு ம், சவுதி தலைமை தாங்கும், வஹாபி அரபு நாடுகளும் சேர்ந்த இரண்டு முனைகள் இந்த பயங்கரவாத இஸ்லாமின் ஆள் சேர்ப்பு மையங்களாக இயங்கும். ஐந்தாவது புவி பாகமான சீனா இங்கே நடுநிலையாக இருக்கும். ஆனால், க்ஸிங்சியாங் (என்னும் உய்குர்) முஸ்லீம் பெரும்பான்மை மாநிலத்தில் வளரும் தீவிரவாத்தின் காரணமாக முக்கிய பங்கு வகிக்கும்.

மருத்துவ சர்ஜரி போல இரக்கமற்று ராணுவரீதியாக இஸ்லாமிய தீவிரவாதம் வெட்டியெறியப்படவேண்டும் என்றாலும், அதன் மீது போரை நடத்துவதால் மட்டுமே இஸ்லாமிய பயங்கரவாதத்தைத்  தோற்கடிக்கமுடியாது என்பது கசப்பான உண்மை. தீவிரவாத இஸ்லாம் கொள்கை ரீதியாகத்  தோற்கடிக்கப்படவேண்டும். அதன் உரையாடல் மறுவடிவாக்கம் பெற வேண்டும். உலகம் முழுமையும் 160 கோடி  மக்கள் முஸ்லீம்களாக இருக்கின்றனர். இதில் பெரும்பான்மையானவர்கள் அமைதிவிரும்பிகள். ஆனால் இந்த மிதவாத முஸ்லீம்களுக்குள்தான் பிரச்னையே இருக்கிறது.

எளிமையாகச்  சொல்லப்போனால், இந்த மிதவாத முஸ்லீம்கள் குரானில் இருக்கும் சில வசனங்கள் வன்முறையை போதிக்கின்றன என்றே ஒத்துகொள்வதில்லை. அப்படிப்பட்ட வசனங்கள் குரானில் இருக்கின்றன. இந்த வசனங்கள் ஏழாம் நூற்றாண்டுக்கானவை. இருபத்தியொன்றாம் நூற்றாண்டுக்கானவை அல்ல.

அலி ரிஜ்வி என்னும் எழுத்தாளர் ஹப்பிங்க்டன் போஸ்டில் “மிதவாத முஸ்லீம்களுக்கு ஒரு திறந்த கடிதம்” என்று எழுதியதில் சொல்வது  போல, குரானிலும் இன்னும் இதர ஆபிரஹாமிய மதப்புத்தகங்களில் உள்ள வரிகளை அப்படியே பொருள் கொள்ளக்கூடாது. யூதர்கள் இதனை புரிந்து வைத்திருக்கின்றனர். மிதவாத முஸ்லீம்களுக்கு அது புரியவில்லை. தனது கடுமையான கண்டனக்கடிதத்தில், இஸ்லாமுக்கு தேவை சீர்திருத்த வாதிகளே அன்றி, மிதவாதிகள் அல்ல என்று சொல்லுகிறார் அலி ரிஜ்வி.

“கொள்கை அடிப்படையில் ஒருமித்த கருத்தை உருவாக்குவது முடியாத காரியம். முஸ்லீம் உலகத்தில் வகுப்புவாத வன்முறை (ஷியா-சுன்னி-அஹ்மதியா) இன்னும் புரையோடிப்போன வியாதியாக தொடர்கிறது. இந்த வகுப்புவாதத்தின் காரணமாக இறந்த முஸ்லீம்களின் எண்ணிக்கை வேறெந்த வெளிநாட்டு ராணுவத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட அதிகம் என்பதே இதற்கான நிரூபணம். சமூகரீதியாக உணர்வுப்பூர்வமாக இணைவதாலேயே ஒரு சமூகம் முன்னேறும். சீர்திருத்தங்களை மேற்கொண்ட மற்ற ஆபிரஹாமிய மதங்களைப்  பாருங்கள். யூதமதமும், கிரிஸ்துவ மதமும் அவர்களுடைய வன்முறை மிகுந்த இருண்டகாலங்களைக்  கொண்டிருந்தன என்பது உங்களுக்கு தெரியும். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் அதனை குறிப்பிட தயங்குவதில்லை. அது சரியும் கூடத்தான். ஆனால், அவர்கள் எப்படி தங்களது வன்முறை மிகுந்த இருண்ட காலங்களைக்  கடந்தார்கள்?

“போப்பாண்டவர், குடும்பக்  கட்டுப்பாடுகளையும், கருத்தடையையும், திருமணத்துக்கு முந்திய பாலுறவையும் எதிர்த்தாலும், பெரும்பாலான கத்தோலிக்கர்கள் கருத்தடை செய்வதற்கு அஞ்சுவதில்லை. குடும்பக்  கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள், திருமணத்துக்கு முந்திய பாலுறவுக்கும் அஞ்சுவதில்லை. பெரும்பாலான யூதர்கள் மதச் சார்பற்றவர்கள், பெரும்பாலானவர்கள் தங்களை யூதர் என்று அடையாளப்படுத்திகொண்டாலும், தங்களை நாத்திகவாதிகள் என்றும், அஞ்ஞேயக்காரர்கள் (agnositc – கடவுள் பற்றி கருத்து அற்றவர்கள் )என்றும் அடையாளப்படுத்திகொள்கிறார்கள். இந்த மதங்களைச்  சார்ந்தவர்கள், இந்த மதங்களை எதிர்த்தாலும், இந்த மதங்களைத்  துறந்தாலும், அங்கும் இங்கும் விமர்சனங்களும் திட்டுகளும் வந்தாலும், இவர்கள் தம்முடைய மதத்தை எதிர்ப்பதன் காரணத்தினாலேயே கொல்லப்படுவதில்லை.

“2013 ப்யூ அமைப்பின் உலகளாவிய ஆராய்ச்சியின்படி, முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் உள்ள பெரும்பான்மையான முஸ்லீம்கள், இஸ்லாமை விட்டு வெளியேறியவர்கள் கொல்லப்படவேண்டும் என்று நம்புகிறார்கள் என்பது முஸ்லிம் உலகத்தை முற்றிலும் மாறுபட்டதாக காட்டுகிறது. யார் உண்மையான முஸ்லீம் யார் முஸ்லீமில்லை என்று விடாது விவாதித்துகொண்டே இருக்கிறார்கள். இஸ்லாமின் பெயரால் யார் அட்டூழியங்களை செய்கிறார்களோ அவர்களைக்  கண்டிப்பதைவிட, தங்களது மதத்தை கார்ட்டூனிஸ்டுகளிடமிருந்தும் திரைப்படகர்த்தாக்களிடமிருந்தும் காப்பாற்றுவதை வெகுவேகமாக செய்கிறார்கள்.

“இஸ்லாமுக்கு சீர்திருத்தவாதிகள்தான் வேண்டும். மிதவாதிகள் அல்ல….. சீர்திருத்தத்தின் நோக்கம் மாற்றுவது. அமைப்பை சரிசெய்வது, இன்னொரு திசைக்கு இட்டுச்செல்வது.. எதையாவது சரி செய்யவேண்டுமென்றால், அது உடைந்திருக்கிறது என்பதை முதலில் ஒத்துகொள்ளவேண்டும். – அது பார்ப்பதற்குத்தான் உடைந்திருக்கிறது போல தெரிகிறது என்றோ, உடைந்திருக்கிறது என்று தவறான மக்களால் பேசப்படுகிறது என்றோ பம்மாத்து செய்யாமல், அது உடைந்திருக்கிறது என்று ஒத்துகொள்ளவேண்டும். அதுதான் சீர்திருத்தத்தின் முதலாவது படி.

“இது மிகவும் புரட்சிகரமானது என்று உங்களுக்கு தோன்றினால், முகம்மது நபியையே மறுபடி சிந்தித்து பாருங்கள். இவர் குரேய்ஷிகளை எதிர்த்ததால், மெக்காவிலிருந்து துரத்தப்பட்டார். யேசு கிறிஸ்து ஏன் சிலுவையில் அறையப்பட்டார் என்று யோசியுங்கள். அன்றைய எந்த புனிதமானதாக கருதப்பட்ட நிலைப்பாடுகளையும் எதிர்க்க தயங்கவில்லை. அவற்றுக்கு தலைசாய்க்கவில்லை. இவர்கள் புரட்சிகரமானவர்கள். சீர்திருத்தவாதிகள். இவ்வாறுதான் மாற்றம் நடைபெறுகிறது. எல்லா புரட்சிகளுமே, போராட்டங்களாகத்தான் துவங்குகின்றன. இஸ்லாமும் இப்படித்தான் துவங்கியது. சிக்கலான, பிரச்னையான எதிர்ப்பது மதவெறி அல்ல. அது மதநிந்தனையும் அல்ல. அதுதான் சுன்னா. (நபி வழிமுறை)

இஸ்லாமின் இருமை. (Duality of Islam)

பாரின் பாலிஸி பத்திரிக்கையில் ”இஸ்லாம் வன்முறையின் மதம்” என்ற தலைப்பில் அயான் ஹிர்ஸி அலி மிகச்சிறப்பான கட்டுரை எழுதியிருக்கிறார். ஏன் இஸ்லாம் முஸ்லீம் அறிஞர்களாலும், இமாம்களாலும் தவறாகவே புரிந்துகொள்ளப்படுகிறது என்று எழுதியிருக்கிறார்.

”இஸ்லாமியக் கொள்கையில் வன்முறை ஒரு இன்றியமையாத அங்கமா என்று புரிந்துகொள்ள, நாம் இஸ்லாமை தோற்றுவித்த முகம்மதின் உதாரணத்தையும் குரானில் இருக்கும் வசனங்களையும், முஸ்லீம் நாடுகளில் நாம் பார்க்கும் வன்முறைகளை நியாயப்படுத்தும் இஸ்லாமிய நீதிமுறைகளையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். மெக்காவில், முகம்மது தனது ஜாதியினரை அவர்களது தெய்வங்களை வணங்குவதை நிறுத்திவிட்டு தனது தெய்வத்தை வணங்கவேண்டும் என்று வலியுறுத்தினார். தானங்கள் செய்வதையும், விதவைகளுக்கும் அனாதைகளுக்கும் உதவுவதை பற்றியும் பிரச்சாரம் செய்தார். (இப்படி பிரச்சாரம் செய்வது இன்றும் இஸ்லாமின் இன்றியமையாத அங்கமாக இருக்கிறது. இது அரபியில் தாவா என்று அழைக்கப்படுகிறது) இருப்பினும், மெக்காவில் இவரை பின்பற்றியவர்களாலும் இவராலும், பலரை தனது புதிய மதத்துக்கு திருப்பமுடியவில்லை. ஆகவே, முகம்மது தனது பிரச்சாரத்தை ஆரம்பித்து பத்தாண்டுகளுக்கு பிறகு, அவர் மெதீனாவுக்கு தப்பிச்சென்றார். அங்கு பலரை தனது ஆட்களாக சேர்த்துகொண்டு ஒரு ராணுவ அமைப்பை உருவாக்கி போர்நடத்த ஆரம்பிக்கிறார்.

”ஆயுதம் தாங்கிய வன்முறை ஜிஹாத் செய்ய விரும்பும் எவரும், முகம்மதின் மெதீனா காலத்தை பற்றிய ஹதீஸ்களிலும், குரானிலும் ஏராளமான ஆதரவைப் பெறலாம். உதாரணமாக 4.95 குரான் வசனம், “நம்பிக்கை கொண்டோரில் தக்க காரணமின்றி போருக்குச் செல்லாதோரும், தமது பொருட்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் சமமாக மாட்டார்கள். தமது பொருட்களாலும், உயிர்களாலும் போரிடுவோருக்கு, போரிடாதோரை விட ஒரு தகுதியை அல்லாஹ் சிறப்பாக வழங்கியிருக்கிறான். அனைவருக்கும் அல்லாஹ் நல்லதையே வாக்களித்திருக்கிறான். போருக்குச் செல்லாதோரை விட போரிடுவோரை மகத்தான கூலியாலும், பல தகுதிகளாலும், தனது மன்னிப்பாலும், அருளாலும் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான்.” என்கிறது. 8.60 குரான் வசனம், உங்களால் இயன்ற அளவு பலத்தையும், போர்க்குதிரைகளையும் அவர்களுக்கு எதிராகத் தயாரித்துக் கொள்ளுங்கள்! அதன் மூலம் அல்லாஹ்வின் எதிரிகளையும், உங்களின் எதிரிகளையும் அவர்கள் அல்லாத மற்றவர்களையும் நீங்கள் அச்சமடையச் செய்யலாம்.” என்று முஸ்லீம்களுக்கு அறிவுரை அளிக்கிறது. இறுதியாக குரான் வசனம் 9:29, ”வேதம் கொடுக்கப்பட்டோரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாமல், அல்லாஹ்வும், அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்கிக் கொள்ளாமல், உண்மையான மார்க்கத்தைக் கடைப்பிடிக்காமல் இருப்போர் சிறுமைப்பட்டு ஜிஸ்யா வரியைத் தம் கையால் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிடுங்கள்!” என்று முஸ்லீம்களுக்கு அறிவுரை அளிக்கிறது.

இந்த வாள் வசனங்கள் என்று அழைக்கப் படும் “sword verses” (9:5 and 9:29) ஆகியவை, குரானில் காணப்படும், சகிப்புத்தன்மை, கருணை, அமைதியை வலியுறுத்தும் வசனங்களை நீக்கி விட்டன என்று மையநீரோட்ட இஸ்லாமிய அறிஞர்கள் வலியுறுத்துகிறார்கள்.

isis

முகம்மதின் உதாரணங்களை எடுத்துகொண்டோமானால், ஆறு முக்கிய ஹதீஸ் தொகுப்புகளில் ஒன்றான சஹீ முஸ்லீம் என்னும் ஹதீஸ் தொகுப்பு சுமார் 19 ராணுவ படையெடுப்புகளை செய்தார் என்றும் அதில் எட்டு ராணுவ படையெடுப்புகளில் தானே கலந்துகொண்டார் என்றும் தெரிவிக்கிறது. கிபி 627இல் அகழிப்போரின் முடிவில், “பானு குரைஸா ஜாதியினரை கடுமையாக ஒடுக்க, அவர்களது ஆண்களையெல்லாம் கொன்று, அவர்களது பெண்களையும் சிறுவர் சிறுமிகளையும் அடிமைகளாக விற்றார்” என்று யேல் பல்கலைக்கழகத்தின் மத ஆய்வுப் பேராசிரியர் கெர்ஹார்ட் போவரிங் தனது இஸ்லாமிய அரசியல் சிந்தனை என்ற புத்தகத்தில் எழுதுகிறார். பிரின்ஸ்டன் ஆய்வாளர் மைக்கல் குக், தனது ”புராதன மதங்கள், நவீன அரசியல்” என்ற புத்தகத்தில் ”காபிர்களின் மீதான போர் என்பது இஸ்லாமின் அடிப்படை மத நூற்களில் எழுதப்பட்டுவிட்ட விஷயம்” என்று கூறுகிறார்.

இங்கேதான் இஸ்லாமில் இருமை இருக்கிறது. மெக்காவில் முகம்மதின் உதாரணங்களை வைத்து இஸ்லாம் ஒரு அமைதிமார்க்கம் என்று கோரவும் இடம் இருக்கிறது. அதே போல இன்றைய ஐ.எஸ்.ஐ.எஸ் செய்வது போல, மெதீனாவில் முகம்மதின் உதாரணங்களை பின்பற்றி, முஸ்லீம்கள் அனைவரும் உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் இஸ்லாமை ஏற்றுகொள்ளவேண்டும் அல்லது அடிமையாக வாழவே வேண்டும் என்று ஜிஹாத் தொடுக்கவேண்டும் என்று முகம்மதுவுக்கு அனுப்பப்பட்ட வெளிப்பாடு இருக்கிறது என்று கோரவும் இடம் இருக்கிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ்: மதத்தை உபயோகப்படுத்தி கொண்டு வழிப்பறி

isis1

அடிப்படையில், மதத்தையும் பயங்கரவாதத்தையும் உபயோகப்படுத்திகொண்டு, பணத்தையும் நிலத்தையும் பறிக்கும் ஒரு உலகலளாவிய குற்றக்கும்பலே இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தன்னைத்தானே காலிபேட் என்று கூறிகொண்டு அதன் மூலம் செச்னயா, பால்கன் பிரதேசங்கள், வட ஆப்பிரிக்கா, மேற்கு ஐரோப்பா போன்ற இடங்களில் வாழும் திருப்தி அற்ற முஸ்லீம் இளைஞர்களை தங்களுக்கு ஆள் பிடிக்க உபயோகித்துகொண்டிருக்கிறது. பலர் வெள்ளையினத்தவர்கள். பலர் பேராசையும், வெறுப்பும் இணைந்த உணர்வில் இதில் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

ஐ.எஸ்.ஐ.எஸின் மாதாந்திர வருமானம் சுமார் 50 மில்லியன் டாலர்கள் (சுமார் 330 கோடிரூபாய்கள்) என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த வருமானம், இந்த அமைப்பு கட்டுக்குள் வைத்திருக்கும் எட்டு எண்ணெய் வயல்களிடமிருந்தும், இதன் கீழ் வாழும் மக்கள் மீது விதிக்கும் கடுமையான வரிகள் மூலமும் வருகீறது. இது தான் ஆளும் பிரதேசங்களில் ஒரு உண்மையான அரசாங்கம் போல ஆள முயற்சித்தாலும், தண்ணீர், மின்சாரம், இதர சமூக தேவைகள் உடைந்துகொண்டிருக்கின்றன. ருஷ்யர்களுடனும் அமெரிக்காவுடனும் இன்று பிரான்ஸும் இணைந்து எண்ணெய்வயல்களையும், எண்ணெய் குழாய்களையும், அதன் கட்டமைப்புகளையும் தாக்குவதாலும், இந்த பயங்கரவாத அமைப்பின் பண மற்றும் ராணுவ முதுகெலும்பு உடைக்கப்பட்டுவிடும்.

ஏற்கெனவே வட ஈராக்கில் சிஞ்ஜார் பிரதேசத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்டு தோற்கடிப்பட்டுவிட்டது இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற இஸ்லாமிய காலிபேட்டு. அலெப்போவிலிருந்தும், எண்ணெய் அதிகம் கொண்ட ஹோல் நகரத்திலிருந்தும் இது தோற்கடிக்கப்பட்டுவிட்டது. குர்திஷ் பெஷ்மெர்கா அமைப்பும், ஈரானிய ஷியாக்களும், ஈராக்கின் ராணுவமும், அதற்குள் பணியாற்றும் அமெரிக்கர்களும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை தோல்வியடையச்செய்துகொண்டிருக்கிறார்கள். ரமாதி என்ற நகரம் அடுத்த குறியாக இருக்கிறது. ஈராக்கில் மோஸுலும், சிரியாவில் ரக்கா நகரமும், ஐ.எஸ்.ஐ.எஸின் வலிமையான நகரங்கள். இவற்றை எடுப்பது கடினமானதாக இருக்கும்.

நூற்றாண்டுகால நாகரீகத்துக்கான போர்

ஐ.எஸ்.ஐ.எஸின் கருத்தே மேற்கு நாகரிகத்தின் இதயத்தை தாக்குவதே. இது இஸ்லாமுக்கும் மேற்குக்கும் இடையேயான நூற்றாண்டுகால போரின் தொடர்ச்சி. இஸ்லாமிய அடிப்படைவாதம் மேலெழுவதன் வரலாற்றுப்பின்னணியை ஆராய்ந்து நான் என்னுடைய சமீபத்திய புத்தகத்தில் “அமெரிக்கா சீனா, இந்தியா, இஸ்லாம் ஆகியவற்றுக்கிடையேயான நாகரிக போட்டியே நமது அடுத்த நூற்றாண்டை வடிவமைக்கும்”என்று எழுதினேன். இது நாம் அறிந்த உலகத்தை மாற்றியமைக்கும். இது ஒவ்வொரு வடிவத்திலும், புதிய நாகரிக மோதலாக இருக்கும்.

“இந்த நூற்றாண்டு துவக்கத்தில், நான்கு நாகரிகங்கள் போட்டிபோட்டு இந்த நூற்றாண்டை வடிவமைக்க முயல்கின்றன. பல தலைமுறைகளுக்கு இந்த போட்டியின் விளைவு எவ்வாறு பலம் பங்கிடப்படும் என்பதும், பிரதேசங்கள் சமநிலை கொள்ளும் என்பதும் நிர்ணயிக்கப்படும். மேற்குலகு நாகரிகம் கீழ் நோக்கி சென்றாலும், உலக கொள்கை, கலாச்சாரத்தை தொடர்ந்து பாதிக்கும். சீனா மேலெழும். கன்பூசியன் நாகரிகத்தை முன்னுக்கு கொண்டுவந்து வரலாற்றிலும் கால்பதித்து, பசிபிக் கடலிலிருந்து ஆப்பிரிக்காவரைக்கும் தனது செல்வாக்கை உருவாக்கிகொள்ளும். மூன்றாவது மிகப்பெரிய நாகரிகமான இந்தியா, வரலாற்றில் ஆழப்பதிந்து தனது வன்மை, மென்மை இணைந்த ஒரு செல்வாக்கு சக்தியை உலகத்தில் உருவாக்கிகொள்ளும். உலகம் முழுவதும் பரந்த அதன் இந்திய மக்கள் தொகை, உலகத்தின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரம், ஆகியவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது போன்ற ஒரு பொற்காலத்தை இந்தியாவுக்கு பெற்றுத்தரும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், பொது யுககணக்கு ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்னாலும், அதற்கு பின்னால் ஐந்தாம் நூற்றாண்டிலும், இடையே இந்திய துணைக்கண்டம் இரண்டு மிகப்பெரிய மத ஸ்தாபகர்களை உருவாக்கியது (புத்தர், மஹாவீரர்), இரண்டு மாபெரும் பேரரசர்கள் (அசோகர், சந்திரகுப்தர்) இரண்டு பெருங்காவியங்கள் (ராமாயணம் ,மஹாபாரதம்)

இந்த நூற்றாண்டில் போட்டி போடும் நான்காவது நாகரிக சக்தி என்றால் அது இஸ்லாம். ஆன்மீக ரீதியாக மெக்காவுடன் இணைந்திருந்தாலும், ஒட்டோமான் பேரரசின் வீழ்ச்சி 1917இல் நடந்த பின்னால், 1924இல் காலிபேட் ஒழிக்கப்பட்ட பின்னால், அதற்கு மையம் என்று ஒன்று இல்லாமல் ஆகியிருக்கிறது. மேற்குலகு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய விழுமியங்களால் முன்னகர்த்தப்படுகிறது. சீனா அதன் இன ஒருமையால் முன்னகர்கிறது. இந்தியா தனது புராதன மதங்களாலும், தத்துவங்களாலும் முன்னகர்கிறது. ஒவ்வொன்றுக்கும் தெளிவான புவியியல் மையம் இருக்கிறது. ஆனால் இஸ்லாமிய நாகரிகமோ, உலகளாவிய செல்வாக்குடன் வளர்கிறது. அது கிழக்கு ஆசியாவிலும் (இந்தோனேஷியா, மலேசியா) அரபு நாடுகளுலும் அரபு அல்லாத துருக்கி ஈரானிலும், மத்திய ஆசிய குடியரசுகளான உஸ்பெக்கிஸ்தான், கஜக்ஸ்தானிலும், கிழக்கு ஐரோப்பாவான போஸ்னியா, அல்பேனியாவிலும், வடக்கு ஆப்பிரிக்காவான மொரோக்கோ, லிபியாவிலும் மேலும் இந்திய துணைகண்டத்திலும், நாடுகளை கடந்து செல்கிறது. இதுவே இதன் பலமும் பலவீனமும் ஆகும்.

சிரியாவிலும் ஈராக்கிலும் ஐ.எஸ்.ஐ.எஸின் தோல்வி இஸ்லாமிய பயங்கரவாதத்தின் முடிவு அல்ல. மாறாக, வெட்ட வெட்ட முளைக்கும் ராட்சதர்கள் போல ஒரு தலையை வெட்டும்போது மற்றொரு தலை முளைக்கும். ஐ.எஸ்.ஐ.எஸ் அல்குவேதாவிடமிருந்து வளர்கிறது. ஐ.எஸ்.ஐ.எஸ் அழியும்போது அதன் சாம்பலிலிருந்து இன்னொரு குழு எழும்.

அதனால்தான் தீவிரவாத இஸ்லாம் கொள்கையை அழிக்க ஒரே வழி அதனை ராணுவம், கொள்கை என்ற இரண்டு முனைகளிலும் போரை வென்றெடுப்பது. ராணுவம், தீவிரவாத முஸ்லீமை தோற்கடிக்கும். ஆனால் கொள்கைரீதியான போரே மிதவாத முஸ்லீமை சீர்திருத்தும்.

அது இல்லையேல், இந்த போர் முடியவே முடியாது.

மூலம்

Series Navigationவெளி ரங்கராஜன் – இரு நூல்கள்
author

Similar Posts

6 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    ” முடிவற்ற போர் : மிதவாத முஸ்லீமாக இருந்தால் மட்டும் போதாது ” என்னும் தலைப்பில் மின்ஹாஸ் மர்ச்சண்ட் எழுதியுள்ள கட்டுரை மிகவும் அர்த்தமுள்ளதாக உள்ளது. இது உலகின் சமாதானம் குறித்து ஆழ்ந்த சிந்தனையுடன் எழுதப்பட்டுள்ளது.
    இன்று உலக நாடுகளை உலுக்கிக்கொண்டுள்ள ஒரு ஆபத்தாக இஸ்லாமியத் தீவிரவாதம் உள்ளது. இதனால் ஈராக்,சிரியா போன்ற நாடுகளில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை சின்னாபின்னமாகிறது. சொந்த வீட்டையும் நாட்டையும் விட்டு இன்று ஆயிரக்கணக்கில் மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைகின்றனர். உலகின் தலைவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தீவிரவாதத்துக்கு எதிராக தொடர்ந்து அறிக்கைகள் விடுகின்றனர். அவர்கள் சாடுகிறார்கள், மன்றாடுகின்றனர். அழிப்போம் என்று வான் தாக்குதல்கள் நடத்துகின்றனர். தீவிரவாதிகளின் தளங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அமெரிக்கா, பிரான்சு நாடுகள் போன்று தற்போது ரஷ்யாவும் குண்டு வீசி தாக்குதுதலில் இறங்கியுள்ளது.
    அனேகமாக உலகின் அனைத்து நாடுகளும் தீவிரவாதத்தை எப்படி ஒடுக்குவது என்று தடுமாறுவது தெரிகிறது. காரணம் இது மதம் தொடர்புடையது. இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் உலகின் அனைத்து நாடுகளிலும் பரவியுள்ளனர். இவர்கள் இஸ்லாமியர்கள் என்றாலும் சில அடிப்படை கொள்கைகளால் இவர்களில் பல பிரிவினைகள் உள்ளன. இவர்களில் ஒரு பிரிவினர் தாங்கள்தான் உண்மையான இஸ்லாமியர் என்று கூறிக்கொண்டு மாறுபட்ட கொள்கைகள் கொண்ட இதர இஸ்லாமியர்களை வெறுக்கின்றனர்.இதனால் உலக இஸ்லாமியர்கள் பிளவுபட்டு வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவருமே ஒரே குர் ஆன்தான் படிக்கின்றனர். ஒரே மாதிரிதான் தொழுகின்றனர். ஒரே மாதிரிதான் மெக்காவுக்கு யாத்திரை மேற்கொள்கின்றனர். ஆனால் இவர்களுக்குள் ஒற்றுமை உண்டவதோ,, ஒரு மதத் தலைவரின்கீழ் செயல்படுவதோ பாலைவனத்து கானல் நீர் போன்றுதான் சென்று அடைய முடியாத நிலையில் உள்ளது..
    இன்று இஸ்லாமிய இளைஞர்கள் தற்கொலைப் படையாக செயல்பட்டு தங்களின் உயிரையே துச்சமென எண்ணி மனித குண்டாக மாறிவருகின்றனர். அப்படி அவர்கள் இறந்தால் அடுத்த வாழ்க்கையில் அவர்களுக்கு வெகுமதி வழக்கப்படும் என்று நம்புகின்றனர். இவர்களை ஈர்க்கும் தீவிரவாதக் கும்பல்கள் இவர்களை இப்படி தவறான பாதையில் இட்டுச் செல்கின்றனர். வேத நூலில் தங்களுக்குச் சாதகமான ஒருசில பகுதிகளைப் படித்துவிட்டு அதற்கேற்ப இவர்கள் உயிரையே தியாகம் செய்யத் துணிந்துவிடுகின்றன்ர்.
    உலகின் இஸ்லாமியத் தலைவர்களுக்கு தற்போது பெரும் பொறுப்பு உள்ளது. அவர்கள் ஒன்றுகூடி இஸ்லாம் சமாதானம் கூறும் மதம் என்று அறைகூவல் விடுவதோடு, தீவிரவாதமும் வன்முறையும் இஸ்லாமின் உண்மயான போதனை அல்லவென்பதையும் ஆதாரத்துடன் தெளிவுபடுத்தவேண்டும். இஸ்லாமிய நாடுகளும் இதுபற்றி சிந்தித்து ஒற்றுமையாக செயல்படவேண்டும். மசூதிகளின் தொழுகையின்போது சமாதானச் செய்தியை வலியுறுத்தவேண்டும்.
    இன்றைய நிலைக்கு ஏற்ப சீர்திருத்தங்கள் இன்றியமையாதவை. இவற்றை இக் கட்டுரை மிகச் சிறப்பாகக் கூறியுள்ளது. This is the need of the hour. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  2. Avatar
    ஷாலி says:

    ///உலகின் இஸ்லாமியத் தலைவர்களுக்கு தற்போது பெரும் பொறுப்பு உள்ளது. அவர்கள் ஒன்றுகூடி இஸ்லாம் சமாதானம் கூறும் மதம் என்று அறைகூவல் விடுவதோடு, தீவிரவாதமும் வன்முறையும் இஸ்லாமின் உண்மயான போதனை அல்லவென்பதையும் ஆதாரத்துடன் தெளிவுபடுத்தவேண்டும்.///

    In what is being projected as the “biggest fatwa (religious edict)” against Islamic State (ISIS) by Indian Islamic scholars, as many as 1,050 muftis and imams from all over the country have jointly condemned the killing of innocent people by ISIS and posting of images and videos of the crimes online as “un-Islamic” and contrary to the tenets of Shariat.

    http://timesofindia.indiatimes.com/india/Over-1000-Islamic-scholars-condemn-killing-of-innocents-by-ISIS/articleshow/48873062.cms

  3. Avatar
    Rama says:

    @Shalli
    “இஸ்லாமுக்கு சீர்திருத்தவாதிகள்தான் வேண்டும். மிதவாதிகள் அல்ல….. சீர்திருத்தத்தின் நோக்கம் மாற்றுவது. அமைப்பை சரிசெய்வது, இன்னொரு திசைக்கு இட்டுச்செல்வது.. எதையாவது சரி செய்யவேண்டுமென்றால், அது உடைந்திருக்கிறது என்பதை முதலில் ஒத்துகொள்ளவேண்டும். – அது பார்ப்பதற்குத்தான் உடைந்திருக்கிறது போல தெரிகிறது என்றோ, உடைந்திருக்கிறது என்று தவறான மக்களால் பேசப்படுகிறது என்றோ பம்மாத்து செய்யாமல், அது உடைந்திருக்கிறது என்று ஒத்துகொள்ளவேண்டும்.”
    Muslims need to accept that Islam needs reformation.Like Christianity did after it’s dark age. Until and unless they accept that Islam is ” Broken” and it needs mending and all the violent Koranic verses have no place at present, no amount of condemnations by Imams and Mullahs will make an iota of difference. Let them FIRST proclaim that the ” sword verses” have no place in this present time.

  4. Avatar
    BS says:

    இது முடிவில்லாத போர் என்பது சரியான புரிதல் இல்லை. ஐ எஸ் ஐ போன்ற தீவிரவாத இயக்கங்கள் எல்லாமே செய்து கொண்டிருப்பவை போர்களல்ல. போர்கள் முறையான இராணுவங்களைக்கொண்ட நாடுகளுக்கிடையில் நடப்பது மட்டும்தான். ஓரிடத்தில் இரகசியமாக நுழைந்து திடீரென அங்குள்ளவர்களைச் சுட்டுக்கொண்டுவிட்டு, தற்கொலை செய்யும் இயக்கங்களை போராளிகள் கொண்ட இயக்கம் எனலாம். அவர்கள் செய்வன கொரில்லா வார்ஃபேர். இவை தாற்காலிகமாகத் தோன்றும் இயக்கங்கள். தோற்றத்திற்கான‌ காரணிகள் ஓய்ந்துவிட்டால் இவ்வியக்கங்கள் தொடர வாய்ப்பேயில்லை. தாற்காலிகமாக தோன்றவில்லை என்று வாதிடுவோர் ஏன் முஸ்தஃபா கமால் இருக்கும்போது, நாசர் இருக்கும்போதும் ஐ எஸ் ஐ சிரியாவில் எகிப்தில் இல்லை; ஏன் அமெரிக்கா இராக் சண்டைக்கு முன் அல் கொய்தா இல்லை என்பதற்கு விளக்கங்கள் கொடுக்க முடியுமா?

    இவ்வியக்கங்களை நேரடியாக குண்டுபோட்டு அழிப்பது மற்றும் ஐடியாலஜியைக்கொண்டு நீர்த்துச்செய்வது என வழிகாட்டுகிறார் மர்ச்சன்ட். முதலில் சொல்வது சரி. காலிஸ்தானிகள்; விடுதலைப்புலிகள் இவர்களை நேரடி ஆயதங்களைக்கொண்டு அழித்தார்கள். ஐடியாலஜி அப்படியேதான் இருக்கின்றது.ஆனால், பதுங்கிக்கொண்டு. சரியான சமயமும் சரியான ஆட்களும் வந்தால் மீண்டும் எழும். எனவேதான் ஐடியாலஜி கொண்டு நீர்த்துப்போகச்செய்தல். கொள்கையைக் கொளகையைக்கொண்டு அழித்தல் நல்ல உபாயம் என்கிறார்.

    இங்கே குறிப்பிடுவது எந்த ஐடியாலஜியை ? ஜிஹாத்; மற்றும் உலகமெங்கும் பிறமதங்களை அழித்துவிட்டு ஆங்கே இசுலாமை நிலை நிறுத்துவது. இஃதை இசுலாமிய மறையில் சில இடங்கள் வலியுறுத்தவதாகவும். அவற்றை இசுலாமியர் ஏற்று உலமெங்கும் காலிபேட் உருவாக்கவேண்டுமென்றும் ஐ எச் ஐ செயல்படுகிறது.

    ஆக, இவ்வரிகளை இசுலாமியர்கள் இருக்கின்றன என்று ஒத்துக்கொள்ளவேண்டும். ஒத்துக்கொண்ட பின் என்ன செய்ய வேண்டும்? சீர்திருத்தம் செய்ய வேண்டும்? என்ன சீர்திருத்தம்? ஙே….! சீர்திருத்தம் என்றால் வேறுபாதைக்கு இட்டுச்செல்வது…அமைப்பை சரி செய்வது…! எப்படிப்பட்ட பாதை? எதை எப்படி சரி செய்வது? மெர்ச்சண்ட் சொல்லவில்லை. ஆனால் மருத்துவர் ஜாண்சனும், ராமாவும் கொஞ்சம் சொல்கிறார்கள். எப்படி?

    மருத்துவர் ஜாண்சன் அமைப்பைச் சரி செய்; வேறுபாதைக்குச் செல் என்றெல்லாம் சொல்லவில்லை. மாறாக, அனைத்து இசுலாமியத்தலைவர்களும் ஒன்று கூடி இசுலாம் வன்முறையை விரும்பவில்லை. அஃதொரு அமைதி மார்க்கமே என்று சொல்லவேண்டுமென்கிறார். இதையே ராமா என்பவரும் வன்முறைக்கு இடமில்லை இன்று எனவே அவ்வரிகளுக்கு இன்று மதிப்பில்லை என்றாக வேண்டுமென்கிறார். மர்ச்சென்ட் குறிப்பிடும் வேறுபாதை; அமைப்பைச் சரி செய்தல் என்றால் ஜாண்சனும் ராமாவும் சொன்னது போலவா? ஆம் அப்படித்தான் என்றால் அதைத்தானே ஷாலி காட்டிய செய்தியில் இந்திய இமாம்கள் ஒன்று கூடி வலியுறுத்தியிருக்கிறார்கள்? அவர்கள் சொல்வதெல்லாம் ஒன்றுக்கும் உதவாதென்றால் பின்னர் யார் செய்யவேண்டும்? எப்படி செய்ய வேண்டும்?

    என் கேள்விகளை யாராவது எதிர் நோக்குங்கள் ப்ளீஸ்…!

  5. Avatar
    ஷாலி says:

    // கிபி 627இல் அகழிப்போரின் முடிவில், “பானு குரைஸா ஜாதியினரை கடுமையாக ஒடுக்க, அவர்களது ஆண்களையெல்லாம் கொன்று, அவர்களது பெண்களையும் சிறுவர் சிறுமிகளையும் அடிமைகளாக விற்றார்” என்று யேல் பல்கலைக்கழகத்தின் மத ஆய்வுப் பேராசிரியர் கெர்ஹார்ட் போவரிங் தனது இஸ்லாமிய அரசியல் சிந்தனை என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.//

    வரலாற்றுப் பின்னணியை அறியாமல் வாயில் வந்தவாறு வெறுப்பு பிரச்சாரம் செய்வதே இவர்களது வாடிக்கை.

    முஸ்லிம்கள் மதீனா நகரை ஆட்சி செய்த காலகட்டத்தில், மதீனா பகுதிக்கு வெளிப்புறத்தில் பானு குரைஸா எனும் யூதர்கள் வாழ்ந்து வந்தனர்.முகம்மது நபிகள் இவர்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்திருந்தார்கள்.”நாங்கள் உங்கள் மீது போர் தொடுக்க மாட்டோம், நீங்களும் எங்களுடன் போர் தொடுக்கக்கூடாது.உங்களை எதிர்த்து யார் போருக்கு வந்தாலும்,நாங்கள் உங்களுக்கு ஆதரவாக போரிடுவோம்.எங்களை எதிர்த்து எவர் போருக்கு வந்தால் நீங்கள் எங்களுக்கு உதவி செய்யவேண்டும்” என்பதே ஒப்பந்தம்.

    இந்த ஒப்பந்தத்திற்கு விரோதமாக,மக்காவிலிருந்து படையேடுத்துவந்த எதிரிகளுடன் கூட்டுச் சேர்ந்து மதினா முஸ்லிம்களை கொல்ல பானு குரைஸா சதி செய்தனர். ஒப்பந்தத்திற்கு மாறுசெய்து சதி செய்ததால் இவர்கள் முற்றுகை இடப்பட்டு சிறை செய்யப்பட்டனர்.இவர்களைப்பற்றிய தீர்ப்பை வழங்கக் பானு குரைஸாக்களின் நெருங்கிய நட்பினரான ஸாத் இப்னு முஆத் என்பவரையே தெரிவு செய்தனர்.அவர் வழங்கிய தீர்ப்பு யூதர்களின் தவ்ராத் வேதத்தின் (பழைய ஏற்பாடு) அடிப்படையிலேயே அமைந்திருந்தது.”-சதியில் ஈடுபட்டு போருக்கு வந்த ஆடவர்கள் சிரச்சேதம் செய்யப்படுவார்கள்.சொத்துக்கள் பகிர்ந்தளிக்கப்படும்.பெண்டிரும்,சிறுவர்களும் சிறைப்பிடிக்கப்படுவார்கள்.”

    12.அவர்கள் உன்னோடு சமாதானம் செய்து கொள்ள இசையாமல் உன்னோடு போர் புரியத் தொடங்கினால், நீ அந்நகரை முற்றுகையிட்டு,

    13.உன் கடவுளாகிய ஆண்டவர் அதை உன் வயமாக்கிய பின்பு அதிலுள்ள ஆடவர் அனைவரையும் கருக்கருவாளினால் வெட்டி,

    14.பெண்களையும் குழந்தைகளையும் மிருகவுயிர்களையும் மட்டும் உயிரோடு வைத்து,நகரத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு,அவற்றை உன் போர்வீரருக்குள்ளே பங்கிட்டு,உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுத்த பகைவருடைய சொத்துக்களை அனுபவிப்பாய்.

    – பைபிள் பழைய ஏற்பாடு, உப ஆகமம்-20:12.

  6. Avatar
    Rama says:

    @Shalli
    “அது பார்ப்பதற்குத்தான் உடைந்திருக்கிறது போல தெரிகிறது என்றோ, உடைந்திருக்கிறது என்று தவறான மக்களால் பேசப்படுகிறது என்றோ பம்மாத்து செய்யாமல், அது உடைந்திருக்கிறது என்று ஒத்துகொள்ளவேண்டும்.”
    This article is precisely for people like you Sir. You are in denial. Yes, Christianity had it problems and it’s dark age. Yes, Old testament has numerous violent passages as in Koran. The difference? Christianity has moved on. In Christianity , you do not get stoned to death for adultery or apostasy. In Islam you do. (http://www.smh.com.au/world/maid-faces-being-stoned-to-death-in-saudi-arabia-after-admitting-adultery-20151127-gla9vk.html)
    If even educated people like Mr Shalli refuses to acknowledge the violent passages in Koran and Islam’s CONTINUATION OF violent practices based on it’s holy book and Hadiths, what hope do we have in expecting reformation?

Leave a Reply to ஷாலி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *