மேத்தாவின் கவிதைகளில் எதிர்காலம் குறித்த பதிவுகள்

This entry is part 2 of 31 in the series 13 அக்டோபர் 2013

ப. லட்சமி

முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்),

தமிழாய்வத்துறை

பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி, (தன்னாட்சி)

திருச்சிராப்பள்ளி

 

படைப்பாளன் படைப்புகளில் தான் வாழும் காலத்தையும் பதிவு செய்கிறான். தனக்கு முந்தைய காலத்தையும் மதிப்பிடுகிறான். அதே நேரத்தில் எதிர்காலம் பற்றிய பதிவுகளையும் அவன் உணர்த்திநிற்கிறான். இம்முக்காலத்தையும் பதிவாக்கும் இலக்கியம் நல்ல படைப்பாக உயர்ந்து நிற்கிறது. முக்காலத்தையும் உணர்த்துதலே படைப்பாளனின் கடமையும் ஆகின்றது. ஒவ்வொரு படைப்பாளரிடத்திலும் இத்தகைய மூன்று காலத்தின் இயல்புகளைப், பண்புகளைக் காணமுடிகின்றது. புதுக்கவிதை உலகில் தனித்த இடம் பெற்றுள்ள மு.மேத்தாவின் கவிதைகளில் இம்முக்காலச் சிந்தனைகள் இடம்பெற்றுள்ளன. அவர் காண விரும்பும் எதிர்காலம் அவரின் கவிதைகளில் கனவுகளாகவும் இலட்சியங்களாகவும் இடம்பெற்றுள்ளன. இதன்வழி எதிர்காலத்தில் அவர் காண விரும்பும் இலட்சிய சமுதாய இயல்புகளை அறிந்து கொள்ள முடிகின்றது.

 

இளைஞர்கள் கையில் எதிர்காலம்

 

இளைஞர்கள் வளமான நாட்டை உருவாக்குவார்கள், வளமான நலமான சமுதாயத்தை உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை கொண்டு கவிதை படைத்துள்ளார் மேத்தா.

‘‘வாழ்வில் உனக்கினி

     ஏது குறை?

     வருவதெல்லாம் புது

     வைகறை’’  (வைகறை வரும், காத்திருந்த காற்று, ப.70)

 

என்று எதிர்காலம் நல்ல விடியலாக அமையும் என்ற நம்பிக்கைக் கவிதையை இளைஞர்களுக்கு மேத்தா படைத்தளிக்கின்றார்.

        ‘‘அழுவதன் மூலம் எதையும்

         எதையும் அடைந்துவிட முடியாது

         எழுவதன் மூலம்

        எதுவும் இயலும்’’ ( வைகறை வரும். காத்திருந்த காற்று..71-72)

 

என்று இளைஞர்களின் எழுச்சி மிக்க காலமாக அவர் எதிர்காலத்தைக் கணிக்கின்றார். அழுவதை விட்டுவிட்டு எழுவதைப் பற்றிய சிந்தனையை மேத்தா இளைஞர்களிடம் கொண்டு வந்துச் சேர்க்கிறார் கவிஞர்.

 

    மேத்தா கொள்கைகளுக்காய்த் தான் வாழ்வதாகவும் ஆனால் அதற்கான அங்கீகாரம் தனக்குக் கிடைக்கவில்லை என்ற ஏக்கமுடையவராக உள்ளார்.

 

            ‘‘எனக்கு

            இலட்சியங்களைத் தேடி

            நடைபோடத் தெரிந்தது

            இலட்சங்களைத் தேடி

            கடைபோடத் தெரியவில்லை

            அதனால்- இங்கிருப்பவர்களுக்கும்

            என்னைச் சரியாக

            எடைபோடத் தெரியவில்லை’’

( இடைவேளை, ஒற்றைத்தீக்குச்சி, ப. 120)

 

இந்த ஏக்கத்தைக் களையுமாறு எதிர்காலம் அமையும் என்று அவர் கருதுகிறார்.

 

            ‘‘புறப்படுகிறேன்

             என் வீணையை இங்கே

             விட்டுச் செல்கிறேன்

             என்றேனும்

             ஒரு நல்ல மனிதன்  இங்கே வருவான்

             அவனிடம் இதை என்

             அன்பளிப்பாய்க் கொடுத்துவிடுங்கள்

             நான் புறப்படுகிறேன்’’

                    ( இடைவேளை, ஒற்றைத்தீக்குச்சி, ப. 123)

 

வீணை என்பது மேத்தா பயன்படுத்தும் படைப்பு, கொள்கை என்பதற்கான குறியீடு ஆகும். இதனை எதிர்கால இளைஞர்களிடம் கொடுத்துவிட அவர் எண்ணம் கொள்கிறார். இந்த அளவிற்கு இளைஞர்களிடம் அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.

 

    இவ்வகையில் எதிர்காலம் நல்லகாலமாக அமையும், அதனை இளைஞர்கள் வடிவமைப்பார்கள் என்ற உற்சாக எண்ணம் மேத்தாவின் கவிதைகளில் இடம்பெற்றுள்ளது என்பதை உணரமுடிகின்றது.

 

எதிர்காலம்- சமத்துவ சமுதாயம்

    எதிர்காலம் நிச்சயம் உண்மையின் காலமாக, உற்சாகம் மிக்க காலமாக, ஊக்கம் மிக்க காலமாக அமையும் என்று மேத்தா கருதுகிறார். எதிர்காலம் சமவத்துவம் மிக்க சமுதாயமாக விளங்கும் என்றும் அவர் எண்ணுகிறார்.

 

        ‘‘உதயத்தை எங்கெங்கோ

        ஒளித்து வைக்க

        உலவி வரும் கால்களுக்கு

        உதை கொடுக்க

        தனியுடமைக் கொடுமைக்கு

        முடிவெடுக்க

        சமத்துவமும் சரித்திரமும்

        விழி திறக்க

        காலமே வா இங்கே

        கை குலுக்க

        கறை படிந்த மனதுகளின்

        பொய் வெளுக்க’’

        ( என் இனிய விருந்தினனே, என்னுடைய போதி மரங்கள்,ப.26)

 

எதிர்காலம் பற்றிய நம்பிக்கை மிகுந்த கருத்துகளை இதனுள் பொதிந்து வைத்து மேத்தா கவிதை படைத்துள்ளார்.

 

எதிர்காலத்தின் சவால்கள்

    எதிர்காலம் நன்மைகளை மட்டும் கொண்டுள்ள சமுதாயமாக இல்லாமல் சவால்கள் நிறைந்த காலமாக இருக்கும் என்று கருதுகிறார் மேத்தா.

 

        ‘‘உலக வீதிகளில்

         ஊர்வலம் போகும்

        ஆயுதங்கள்…

        வீடுகளுக்கு ஒளிந்தபடி

        எட்டிப் பார்க்கும்

         மனிதன்’’( நாளை. என்னுடைய போதிமரங்கள், ப28)

 

என்ற கவிதையில் மனிதநேயம் மறைந்து ஆயுதங்களின் ஆட்சிக் காலமாக நாளைய பொழுதுகள் அமையும் என்று போர் குறித்த சவாலை முன்வைக்கிறார் மேத்தா.

 

முக்காலத்திலும் புத்தர்

        அன்பை உபதேசித்த புத்தர் நேற்று இருந்தார். இன்று வருவதாக கவிதை படைக்கிறார் மேத்தா. அவர் எதிர்காலத்திற்கும் தேவைப்படுவதாக மேத்தாவின் கவிதை அமைகின்றது.

 

        ‘‘கலிங்கம் மானுடத்தின்

         கடைசிப் போர் என்றிருந்தேன்

         இங்கேயோ

         புதிது புதிதாய்ப்

         போர்க்களங்கள் காணுகின்றேன்.

 

        ( என்னுடைய போதிமரங்கள், ப. 39)

என்ற கவிதையில் போரைப் புறக்கணிக்கும் புது உலகம் காண புத்தர் விழைவதாக மேத்தா கருதுகின்றார்.

 

இவ்வகையில் எதிர்காலத்தின் சவால்களையும், நம்பிக்கைகளையும். விழைவுகளையும்  கவிதைகளாகப் புனைந்துள்ளார் மேத்தா. இவற்றின் வாயிலாக எதிர்கால சமுதாயத்தை நிகழ்காலத்தில் காணும் கவிஞராக மேத்தா விளங்குகின்றார். இவரின் எதிர்காலக் கனவுகள் நிறைவேற இளைஞர்கள் முன்வரவேண்டும். இளைஞர்களுடன் தன் பேராசிரியர் பணியைத் தொடர்ந்த மேத்தா தன் மாணவர்களான இளைஞர்களிடம் நல்ல நம்பிக்கை வைத்திருப்பது அவரின் கவிதைகளில் பதிவாகி வெளிப்பட்டுள்ள என்பதையும் மேற்குறித்த கவிதைகள் எடுத்துக்காட்டுகின்றன.

 

—————————————————-

பயன் கொண்ட நூல்கள்

மேத்தா,மு. என்னுடைய போதிமரங்கள், திருமகள் நிலையம், சென்னை, ஆறாம் பதிப்பு. 2005

மேத்தா.மு. ஒற்றைத் தீக்குச்சி, கவிதா பப்ளிகேசன்ஸ், மூன்றாம் பதிப்பு, 2006

மேத்தா,மு. காத்திருந்த காற்று, திருமகள் நிலையம் சென்னை, ஏழாம் பதிப்பு, 2007

Series Navigationநீங்காத நினைவுகள் – 19மருத்துவக் கட்டுரை நெஞ்சு படபடப்பு
author

ப. லட்சமி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *