ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11

This entry is part 7 of 42 in the series 22 மே 2011
ramayana

யுத்த காண்டம்- ஐந்தாம் (நிறைவுப்) பகுதி

யுத்த காண்டம் ராமனைப் பற்றிய மிகவும் துல்லியமான அடையாளத்தை நமக்குத் தருகிறது. ராமன் தன்னை சமுதாயத்தின் அங்கமாக, சமூக மரபுகளை நிலை நிறுத்துபவனாகவே உணர்ந்தான். ஒரு அரசன் என்னும் நிலையில் பல மரபுகளை நிலை நாட்ட அவன் மிகக் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டி வந்தது.

க்ஷத்திரிய தர்மம் என்று முன்னாளில் கடைப்பிடிக்கப் பட்டவற்றில் நம்மால் புரிந்து கொள்ள முடியாதவை நிறையவே உண்டு. மகாபாரதத்தைக் கூர்ந்து கவனிக்கும் போது நம்மால் புரிந்து கொள்ள இயலாதவை நிறையவே உண்டு. மகாபாரதத்தைக் கூர்ந்து வாசிக்கும் போது மகாபாரதப் போருக்கான மூல காரணம் தருமரால் தன்னை சூதாட துரியோதனன் விடுத்த அழைப்பை நிராகரிக்க முடியாமற் போனதே. ஒரு க்ஷத்திரியன் இன்னொரு க்ஷத்திரியன் சூதாடக் கூப்பிட்டால் மறுக்கக் கூடாதாம். இதே போலத்தான் ராவண வதத்திற்குப் பிறகு ராமனும் சீதையும் சந்திக்கும் இடம் நம்மை நிலைகுலையச் செய்யுமளவு அதிர்ச்சி தருகிறது.

முதலில் ராமன் சீதையைத் தன்னிடம் அழைத்து வரச் செய்யும் ஏற்பாட்டைக் காண்போம்.

நின்ற காலை நெடியவன் வீடண
சென்று தா நம் தேவியை சீரொடும்

பொருள்; மேன்மையுடையவனான ராமன் “விபீடணா! எனது தேவியை அலங்கரித்து அழைத்து வா” என்றான். (பாடல் 3929 யுத்த காண்டம் கம்பராமாயணம்)

இதற்கு சீதையின் பதிலைக் காண்போம்.

யான் இவண் இருந்ததன்மை இமையவர் குழுவும் எங்கள்
கோனும் அம் முனிவர் தங்கள் கூட்டமும் குலத்துக் கேற்ற
வான் உயர் கற்பின் மாதர் ஈட்டமும் காண்டல் மாட்சி
மேல் நிலை கோலம் கோடல் விழுமியது என்று வீர

பொருள்: வீரனே ! எந்தத் தன்மையுடன் நான் இங்கே இருந்தேன் என்பதை தேவர்களும் எங்கள் அரசன் ராமனும், முனிவரும், வானளவு கற்பிலுயர்ந்த பெண்களும் காண்பது எனக்குச் சிறப்பு. அலங்கரித்து வருவது முறையாகாது.

அதற்கு விபீடணன் சொன்ன விடை:

என்றனள் இறைவி கேட்ட இராககர்க் கிறவன் நீலக்
குன்று அன தோளினாந்தன் பணியின் குறிப்பு இது என்றான்
நன்று என நன்கை நேர்ந்தாள் நாயகக் கோலம் கொள்ள
சென்றனர் வான் நாட்டுத் திலோத்தமை முதலோர் சேர

பொருள்: ராட்சஸர்களின் அரசனான விபீடணன் நீல மலை போன்ற தோள்களை உடைய ராமன் இட்ட கட்டளை இது என்று சீதையிடம் கூற அவளும் அதுவே சரி என அலங்கரித்துக் கொள்ள தேவலோகத்துத் திலோத்தமையும் மற்றவரும் சூழக் கிளம்பினாள். (பாடல் 3933 யுத்த காண்டம் கம்ப ராமாயணம்)

வால்மீகி ராமாயணத்தில்

ததஹ சீதாம் மஹாபாகாம் த்ருஹ்டோவாச் விபீஷணஹ
முகனிம் பக்தாஞ்சலிஹி ஸ்ரீமான் வினிதோராஷஸேஸ்வரஹ
திவ்யாலங்கராகா வைதேஹி திவ்யாபரண பூஷிதா
யானமோரேஹ பத்ரம் தே பர்த்தாத்வாம் த்ரஷ்டுமிச்சஸி

பொருள்: இதன் பிறகு லங்கை அரசன் விபீடணன் சீதையைப் பார்க்கச் சென்று பணிவுடன் அவளை வணங்கிக் கூறினான்: விதேஹ ராஜகுமாரி ! தாங்கள் குளித்து முழுதும் அலங்காரத்துடன் ரதத்தில் வாருங்கள். தங்களுக்கு நன்மை உண்டாகட்டும். தங்களது கணவர் தங்களைக் காண விரும்புகிறார்.

அதற்கு சீதையின் பதில்:
ஏவ முக்தா து வைதேஹி ப்ரயுவாச விபீஷணம்
அஸ்த் ராத்வா த்ரஷ்டுமிச்சாமி பர்த்தாரம் ரக்ஷஸேஷ்வர
தஸ்யாகத் வசனம் ஷ்ருத்வா ப்ரத்யுவாச விபீஷணஹ
யதாஅ அஹ ராமே வர்த்தாதேதத் தத கர்த்துமர்ஹஸி
தஸ்ய தத் வசனம் ஷ்ருத்வா மைதிலி பதிதேவதா
பத்தூர்பக்யாவ்ருதா ஸாத்வி ததேதி ப்ரத்பாஷத

பொருள்: விபீடணன் கூறியதைக் கேட்டதும் வைதேஹி ” நான் குளிக்காமலேயே உடனே இப்போதே எனது கண்கண்ட தெய்வமான கணவரைக் காண விரும்புகிறேன் என்றாள்.

இதற்கு விபீடணன் “தேவி! நான் கூறியது தங்களது கணவர் ஸ்ரீராமரின் கட்டளை. தாங்கள் அவ்வாறே நடக்க வேண்டும்.” என்றான்.

இதைக் கேட்டதும் பதிபக்தியில் பாதுகாக்கப்படுபவளும் கணவனைக் கடவுளாய் வணங்குபவளும் கற்பிற் சிறந்தவளும் நன்னெறி கொண்டவளுமான சீதை அவ்வாறே ஆகட்டும் எனத் தன் கணவனின் கட்டளையைத்தன் சிரம் மேற் கொண்டாள்.
(பாடல்கள் 9,10,11,12,13 ஸர்க்கம் 114 வால்மீகி ராமாயணம்)

ராமசரிதமானஸில்

சுனிவாணி பதங்க குல்பூஷண்
போலேலியே யுவராஜ் விபீஷண்
மாருத ஸுத கேசங்க சிதாவறூ
சாதர் ஜகை சுதாலை ஷ்ராவஹூ
துரதஹிம் சகல கயே ஜஹ்(ன்) சீதா
சேவஹி(ம்) சப நிஷிசரி சபீதா
வேகி விபீஷண தினஹி(ம்) சிகாவா
சாதாதின சீதஹி(ம்) அன்ஹவாவா
திவ்ய பஸன பூஷண பஹிராயே
ஷிபிகாருசிர ஸாஜி புனி போயே
தேஹி பர் ஹரஷி சபி வைதேஹி
சுமிரி ராம சுகதாம ஸனேஹி

பொருள்: (சீதையின் செய்தியைக் கேட்ட பின்பு) ஸ்ரீராமர் விபீடணனையும் சுக்கிரீவனையும் கூப்பிட்டு நீங்கள் இருவரும் அனுமனுடன் சென்று சீதையை மரியாதையுடன் அழைத்து வாருங்கள் என்றார்.

அவர்கள் அனைவரும் உடனே சீதை இருக்கும் இடத்திற்குச் சென்றனர். அங்கு ராட்சஸிகள் சீதையிடம் அடைக்கலமாய் இருந்தனர். விபீடணனின் ஆணையை ஏற்று அவர்கள் சீதைக்கு நீராட்டி விட்டனர்.
விதம்விதமான நகைகளை சீதைக்கு அணிவித்தனர். பிறகு அலங்கரித்த ஒரு பல்லக்கைக் கொண்டு வந்தனர். ராமனின் எண்ணத்துடன் சீதை அதில் ஏறி அமர்ந்தாள்.

(பக்கம் 803 ராமசரிதமானஸ் அலகாபாத் ராமநாராயண்லால் பதிப்பு 1936)

இந்த இடத்தில் நாம் புரிந்து கொள்வதெல்லாம் சீதை எந்தவிதமான அலங்காரமுமின்றியே ராமனை சந்திக்க விரும்பினாள். ஆனால் ராமன் தனது தூதுவர்கள் மூலம் அவள் நன்கு அலங்கரிக்கப் படுவதே தன் விருப்பம் என ஆணையிட்டு அதைச் சொல்லி அனுப்புகிறான். வாலி வதையில் ஏதேனும் கேள்விகள் விடை தெரியாது மீதி இருந்திருந்தால் அவை இனி நடக்கப் போகிறவை முன் தூசாக மறையும்.

தொடர்ந்து வாசிப்போம்- அலங்கரிக்கபட்டு வந்த சீதையைப் பார்த்து ராமன் கூறியது கம்ப ராமாயணத்தில்:

வணங்கு இயல் மயிலினை கற்பின் வாழ்வினை
பணம் கிளர் அரவு என எழுந்து பார்ப்புறா

ஊன் திறம் உவந்தனை ஒழுக்கம் பாழ்பட
மாண்டிலை முறை திரம்பரக்கன் மாநகர்
ஆண்டு உறைந்து அடங்கினை அக்சம் தீர்ந்து
மீண்டது என் நினைவு? எதை விரும்பும் என்பதோ

உன்னை மீட்பான் பொருட்டு உவரி தூர்த்து ஒளிர்
மின்னை மீட்டுறு படை அரக்கர் வேர் அற
பின்னை மீட்டு உறுபகை கடந்திலேன் பிழை
என்னை மீட்டான் பொருட்டு இலங்கை எய்தினேன்

பொருள்: கற்பின் உறைவிடமானவளும் தன்னை வணங்கியவளுமான சீதையை கோபத்துடன் படமெடுத்தாடும் பாம்பைப் போல ராமன் நோக்கினான்.

ஒழுக்கம் பாழ் பட்டு பல அறுசுவை உணவுகளை உண்டு நீண்ட காலம் அரக்கனின் நகரத்தில் வாழ்ந்து விட்டு என் நினைவு எப்படி வந்தது?
என்னை இவன் விரும்புவான் என எண்ணினாயோ?

கடலைத் தூர்த்து பாலம் எழுப்பி, மின்னலையும் வெட்கி ஓடச் செய்யுமளவு ஒளி மிகுந்த அரக்கர் படையை வென்றது உன்னை மீட்பதற்கு என்றோ எண்ணினாய்? இல்லை. தனது மனைவியைக் கடத்திச் சென்றவனை ராமன் கொல்லாமல் விட்டுவிட்டான் என்னும் பழி வராதிருக்கவே போரிட்டேன். (பாடல் 3953,3954,3955 யுத்த காண்டம் கம்ப ராமாயணம்)

இத்தோடு ஏச்சு நிற்கவில்லை. தொடர்ந்து ராமன் கூறுகிறான்:
அடைப்பர் ஐம் புலங்களை ஒழுக்கம் ஆணியாச்
சடைப்பரம் தகைத்ததோர் தகையின் மா தவம்
படைப்பர் வந்து ஒரு பழி வந்தால் அது
துடைப்பர் உயிரொடும் குலத்தின் தோகைமார்

யாது யான் இயம்புவது உணர்வை ஈடுஅறச்
சேதியாநின்றது உன் ஒழுக்கச் செய்தியால்
சாதியால் அன்று எனின் தக்கது ஒர் நெறி
போதியால் என்றனன் புலவர் புந்தியான்

பொருள்: கணவனைப் பிரிந்த காலத்தில் உயர் குலப் பெண்கள் கற்பே தவமாக இருந்து (தலைமுடியை சீவிப் பராமரிக்காது) சடையையும் தாங்கி ஐம்புலன்களையும் அடக்கி வைப்பார்கள். இதையும் மீறி ஒரு பழி ஏற்படுமாயின் தமது உயிரையே விட்டு விடுவார்கள்.

புலவர்கள் மனதில் இருப்பவனான ராமன் உனது தீயொழுக்கம் பற்றிய செய்தி எனது உணர்வின் வலிமையை உடைக்கிறது. ஒன்று நீ உயிரை விடு. இல்லையேல் ஏற்ற இடத்திற்குப் போ” என்றான். (பாடல் 3959,3960 யுத்த காண்டம் கம்ப ராமாயணம்)

இந்த இடத்தில் நாம் கவனிக்கக் கூடியது சீதையின் தலை அலங்காரம் ஒரு பிரச்சனை ஆகிறது என்பது. இதைக் கேட்ட சீதை உயிரை விடத் துணிகிறாள்.

ஆதலில் புறத்தினி யாருக்காக என்
கோது அறு தவத்தினை கூறிக் காட்டுகேன்

சாதலின் சிறந்தது ஒன்று இல்லை தக்கதே
வேத நின் பணி அது விதியும் என்றனள்

இளையவன் தனை அழைத்து இடுத் தீயென
வளை ஒலி முன் கையாள் வாயின் கூறினாள்
உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும்
களைகணைத் தொடி அவன் கண்ணின் கூறினான்

பொருள்: வேத வடிவமானவனே! இனி வேறு யாருக்காக குறையற்ற என் தவத்தைப் பற்றிக் கூற வேண்டும். நீங்கள் குறிப்பிட்டது போல் சாதலே சிறந்தது என் விதியும் அதுவே என்றாள்.

ஒலிக்கும் வளையல்களை உடைய கையைக் கொண்ட சீதை இளையவன் லட்சுமணனை அழைத்துத் தீயை மூட்டும் படி கூறினாள். உலகமே பணியும் பாதங்களை உடைய ராமனின் மனதை அறியவென அவனது பாதங்களில் லட்சுமணன் விழுந்து எழ கண்களால் குறிப்பாக அங்கனமே செய் என ராமன் உணர்த்தினான்.(பாடல் 3969,3970 யுத்தகாண்டம் கம்ப ராமாயணம்)

லட்சுமணனிடம் அக்கினி வளர்க்க ஜாடையாகவே ராமன் அனுமதிப்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். இனி வால்மீகி ராமாயணத்தைக்
காண்போம்.

கஹ புமாம்ஸ்து குலே ஜாதஹ ஸ்த்ரியம் பரக்டு ஹோபிதாம்
தேஜஸ்வி புனராதத்யாத் ஸுஹுல்லோபேன் சேதஸா
ராவணங்கப்பரிக்லிஷ்டாம் த்ருஷ்டாம் துஷ்டேன சக்ஷுஷாம்
கதம் த்வாம் புனராதத்யாம் குலம் வ்யபதிஷன் மஹம்

பொருள்: நல்ல குலத்தவனான எந்த ஆணும் தான் வல்லமையானவனாயிருப்பினும் வேறு வீட்டில் இருந்த ஒரு பெண்ணை தன்னுடன் முன்பு வாழ்ந்தவள் என்ற ஒரே காரணத்திற்காக ஏற்றுக் கொள்வானா? மனதளவில் கூட அது சாத்தியமில்லை.

ராவணன் உன்னைத் தன் மடியில் வைத்து எடுத்துக் கொண்டு போனான். அவனது கெட்ட பார்வை உன் மீது பட்டு விட்டது, எனது குலப் பெருமை பேசும் நான் உன்னை எவ்வாறு ஏற்க இயலும்?
(பாடல் 20,21 ஸர்க்கம் 115 வால்மீகி ராமாயணம்)

ந ஹி த்வாம் ராவணோ த்ருஷ்ட்வா திவ்யரூபாம் மனோரமாம்
மர்ஷயேத் சிரம் சிதே ஸ்வக்குஹே பர்யவஸ்திதாம்

பொருள்: சீதை! உன்னைப் போன்ற அழகிய அலங்கரிக்கப்பட்ட பெண்ணைத் தனது வீட்டிலேயே விட்டு விலகி இருக்கிற கஷ்டத்தை அதிக நாள் ராவணன் சகித்திருக்க இயலாது

(பாடல் 24 ஸர்க்கம் 115 வால்மீகி ராமாயணம்)

ந ப்ரமாணி க்ருதஹ பாணிர்வால்யே மம நிபீடிதஹ
மம பக்திஷ்ச்ச ஷீலம் ச் ச்ர்வே தே தே புப்ருதஹ க்ருதம்
இதி புவந்தி ருததி பாஷ்ப கந்த பாஷிணி
உவாச லக்ஷ்மணம் சீதா தீனம் த்யான பராயணம்
சீதாம் மே குரு சௌமித்ரே வ்யஸ்னஸ்யாஸ பேஷஜம்
மித்யாப வாதோபஹதா நாஹம் ஜீவிதுமுத்ஸஹே

பொருள்: அன்புடன் என்னை மணந்து கொண்டீர்கள். அதையும் கவனத்திற் கொள்ளவில்லை. உங்களின் மீது நான் கொண்டுள்ள பக்தியையும் என் நல்லியல்பையும் பின் தள்ளி விட்டீர்கள். ஒரு சேர மறந்தும் விட்டீர்கள்.

இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே சீதையின் நெஞ்சடைத்தது. அழுதபடி கண்ணீர் ஆறாய்ப் பெருக துக்கமும் கவலையுமாயிருக்கும் லட்சுமணனிடம் உடைந்த குரலில் பேசத் துவங்கினாள்.

சுமித்திரையின் மகனே! எனக்கு ஒரு சிதையைத் தயார் செய். எனது துக்கத்திற்கு அதுவே மருந்து. கணவனால் களங்கம் கற்பிக்கப் பட்ட ஒரு பெண் உயிருடன் இருக்க இயலாது.
(பாடல் 16,17,18 ஸர்க்கம்119 யுத்த காண்டம் வால்மீகி ராமாயணம்)

ஏவமுக்தஸ்து வைதேஹ்யா லக்ஷ்மணஹ பர்வீரஹா
சுமர்ஷவஷமாபன்னோ ராகவம் சமுதைக்ஷத
ஸ விக்ஞாய மனஷ்சந்தம் ரமஸ்யாகரசூசிதம்
சிதாம் சகார சௌமித்ரித்புதே ராமஸ்ய வீர்யவான்

விதேக நந்தினி இவ்வாறு கூறிய பின் எதிரிகளைக் கொன்றழிக்கும் லட்சுமணன் தன்னிலை மறந்து ராமனை நோக்கினான்.

ஆனால் ராமனின் சமிக்ஞையிலிருந்து அவரது உள்மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டு அவரது அனுமதியுடன் சிதையைத் தயார் செய்தான்
(பாடல் 20,21ஸர்க்கம்119 யுத்த காண்டம் வால்மீகி ராமாயணம்)

ராமசரித மானஸில் சுருக்கமான விவரிப்பு வருகிறது:
தேஹி காரண் கருணா அயன்
கஹே குச் துர்வாத்
சுனத் யாதுதானி சகல
லாகி கரண் விஷாத்
ப்ரபு கேவசன் ஸீஸ்கரி சீதா
போலி மன் கரம வசன் புனிதா
லக்ஷ்மண் ஹோஹூ தர்ம கே நேகி
பாவக் ப்ரகட் கரஹூ தும் வேகி

பொருள்: இந்தக் காரணத்தினால் சில கடுமையான வார்த்தைகளை ராமர் கூறக் கேட்டு ராட்சஸிகள் துக்கமுற்றார்கள்.

ரகுநாதரின் வார்த்தைகளைக் கேட்டு சீதை மனம் செயல் வாக்கு ஆகிய மூன்றிலும் தூயதான வார்த்தைகளைப் பேசினாள். “ஓ லட்சுமணா! நீ தர்மத்தின் ஏந்தலாக இருந்து அக்கினியை வளர்ப்பாயாக.”
(பக்கம் 805 ராமசரிதமானஸ் அலகாபாத் ராமநாராயண்லால் பதிப்பு 1936)

இதைத் தொடர்ந்து சீதை அக்கினிப் பிரவேசம் செய்ய அக்கினித் தேவன் அவளை வணக்கத்துடன் ராமனிடம் ஒப்படைத்து விடை பெறுகிறான்.

முதலில் சீதையை அலங்காரமாக வரச் சொல்லிப் பிறகு வானரத்தினர் மற்றும் அரக்கர் அவையில் சீதையை அவதூறான வார்த்தைகளால் ஏசிப் பிறகு அக்கினிப் பிரவேசம் செய்ய ராமன் அனுமதிப்பதைக் காண்கிறோம்.

சமுதாயத்தின் தலைமைப் பீடமாக அதன் சட்டதிட்டங்களை ராமன் மேற்கூறியவாறு செயற்படுத்தி இருக்கும் விதம் ராமாயண காலத்து செங்கோலின் கடுமையை அரசனின் மிகக் குறுகிய அணுகுமுறையைக் காட்டுகிறது. யுத்த காண்டம் ராமனின் பட்டாபிஷேகத்துடன் முடிகிறது. அதன் பிறகு உள்ள உத்தர காண்டத்தைக் கம்பர் எழுதவில்லை. ஒட்டக் கூத்தரே எழுதினார். வால்மீகியும் துளசிதாஸரும் உத்தர காண்டத்தையும் கவிதையில் வடித்துள்ளனர்.

அரசன் அரசியின் வழி நிலைநிறுத்தும் கட்டாயப் பண்பாட்டு வழிமுறைகளே உத்தர காண்டத்தின் செய்தி. மேலும் வாசிப்போம்.

Series Navigationதூசி தட்டுதல்தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்….
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *