‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

0 minutes, 1 second Read
This entry is part 14 of 14 in the series 28 ஜூன் 2020

  1. பறக்கும் பலூன்!

சிறுமி அத்தனை ஆர்வமாய் அத்தனை ஆனந்தமாய்
அத்தனை அன்பாய் அத்தனை அழகாய்
ஒரு பலூனை ஊதுகிறாள்.
முழுமுனைப்போடு மூச்சைப் பிடித்துக்கொண்டு ஊதி
ஒரு கால்பந்து அளவுக்கு அதை உப்பவைத்து
ஒரு கையின் இருவிரல்களால்
பலூனின் திறப்பை இறுகப் பிடித்தபடி
வாயிலிருந்து வெகு கவனமாய் வெளியே எடுக்கிறாள்.
அதற்கென்றே காத்துக்கொண்டிருந்தவர்
கையிலிருந்த குண்டூசியால் பலூனில் குத்த
ஒரு நொடியில் உருக்குலைந்து சுருங்கித் தொங்குகிறது பலூன்.
சிறுமி அழுவாள் என்று எதிர்ப்பார்க்கிறார் அந்த மனிதர்.
சிறுமி அழவில்லை.
காயப்படுத்தினாலும் தன்னிடமே ’ஊதித் தாயேன்’ என்று
மருந்து கேட்பாளென திட்டவட்டமாக நம்புகிறார்.
அவள் கேட்கவில்லை.
கையிலிருந்த இன்னொரு பலூனை அதே முனைப்போடு
ஊத ஆரம்பிக்கிறாள்.
ஆத்திரம் மேலிட, தவறவிட்ட குண்டூசியைத்
தேடப் பொறுமையின்றி
அருகே கிடந்த சிறிய கூர்கல்லைக் கையிலெடுத்து
இரண்டாவது பலூனையும் கிழித்துவிடுகிறார்.
சிறுமியிடம் மூன்றாவது பலூனில்லை.
பலூன் வாங்கக் காசில்லை.
‘இவ்வளவுதானா நீ’ என்பதாய் நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு
’உங்களால் ஒரு பலூன் செய்ய முடியுமா?’ என்று கேளாமல் கேட்டு
இரண்டெட்டு முன்னோக்கி நடந்து
சாலையோரக் குட்டிச் சுவரில் சாய்ந்து நின்றபடி
கழுத்தை சாய்த்து
பக்கத்துவீட்டு மாடியிலிருந்து நீளும் நூலில் பறந்துகொண்டிருக்கும் பலூனை
ஊதத் தொடங்குகிறாள் சிறுமி..

***  

  • நம்பிக்கை

மழை பெய்கிறது இங்கே
மாமழையின் கருணையும்
மகத்துவ சூரியனின் கருணையும்
சில நல்ல உறவுகளின் கருணையும்
பல அரிய தருணங்களின் கருணையும்
சிலருக்கேனும் உதவமுடியும் கருணையும்
நம்மை நாமே நம்பும் கருணையும்
நல்ல கவிதைகளின் கருணையும்
உள்ள வரை
மாபிச்சி மனம் மருகத் தேவையில்லை.

  •  
  • கவிதைக்கான ஆயத்தம் போலும் ஒரு சொல்…..

முன்பின் பார்த்தறியாத அரிய பறவையொன்றின்
ஒற்றைச் சிறகிதழ் காற்றில் மிதந்து வருவதைப்
போலொரு சொல்
மூச்சை உள்ளிழுக்கும்போதாயிருக்கலாம் _
அத்தனை மென்மையாக என் நுரையீரல்களுக்குள் நிறைந்து
என் இரத்தநாளங்களில் ஊடுருவிச் செல்லத் தொடங்குகிறது….
சொப்பனத்தில் எங்கென்றே சொல்லமுடியாத ஒரு வனாந்தரத்தில்
அல்லது ஒரு தெருவில்
நான் கால்கடுக்க நடந்துகொண்டிருக்கும்போது
ஒரு தேவதை எதிரே வந்து
‘என்ன வேண்டும் கேள்’ என்று சொன்னால்
பேந்தப்பேந்த விழிப்பதுபோலவே _
விழித்தபின் காலின்கீழ் எங்கோ புதையுண்டிருக்கும்
அந்த வனாந்திரத்தை அல்லது தெருவை
நினைவில் மீட்டுயிர்ப்பிக்க மீண்டும் மீண்டும் முயலும்
பிரக்ஞையின் கையறுநிலையாய்
காந்தும் அந்தச் சொல்……
பூங்கொத்தாகுமோ
உதிரிப்பூவாகவே நின்றுவிடுமோ
எப்படியிருந்தாலும்
இப்போது அது எனக்குள் தன்னை எழுதிக்கொண்டிருக்கும்
கவிதையாக….

  •  
Series Navigationகார்ப்பரேட் வைரஸ் பறவைகளையும் தாக்கும்
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *