‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

0 minutes, 1 second Read
This entry is part 7 of 7 in the series 26 ஜூன் 2022

 

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

 

  1. நான் யார் தெரியுமா!?!?

 

_ என்று கேட்பதாய்

சில அமைச்சர்களுடன் தான் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.

 

_ என்று புரியச்செய்வதாய்

மறவாமல் சில முன்னணி நடிக நடிகையர்

இயக்குனர் இசையமைப்பாளர்களுடன்

புதுப்பட பூஜை நிகழ்வில்

பங்கேற்ற செய்திகள் படங்களோடு

வெளியாகச் செய்திருக்கிறார்.

 

_ என்று அடிக்கோடிட்டுக்காட்டுவதாய்

சர்வதேச (நாலாந்தர) எழுத்தாளருடன்

தோளோடு தோள் சேர்த்து நின்ற, நடந்த

காணொளிக் காட்சிகளை

வெளியிட்டிருக் கிறார்.

 

_ என்று வீரமுழக்கம் செய்வதாய்

தலைமறைவுப்போராளிகள் சிலருடன்

காட்டில் குத்துக்காலிட்டு அமர்ந்து

உணவுண்ட காட்சிகளின்

(அதற்கென்றே பிரத்யேகமாக அழைத்துச்

செல்லப்பட்ட சித்திரக் கலைஞரான

தோழரால் கிறுக்கப்பட்ட)

கோட்டோவியங்களை

சுற்றிலும் இறைத்து

நடுவே சிந்தனையார்ந்த முகபாவத்துடன்

தன்னை இருத்திக்கொண்டு எடுத்த

செல்ஃபிகளை

சரசரசரவென்று தொடர்ச்சியாக சில நாட்கள்

வெளியிட்டிருக்கிறார்.

 

_ என்று அழுத்தமாக எடுத்துரைப்பதாய்

மெய்நிகர் மலையொன்றின் உச்சியில்

அமர்ந்தவாறு

சுற்றிலும் பல வயதுகளிலான ஆண்களும்

பெண்களும்

அவர் வாயிலிருந்து விழும் முத்துக்களை

ஆவேசமாகப் பாய்ந்து பாய்ந்து

பொறுக்கி யெடுத்துக்கொள்வதை

ஒரு மந்த காசப் புன்னகையுடன் பார்த்தவா

றிருக்கும் புகைப்படங்களை

அவருடைய நான்கைந்து பக்தகோடிகள்

Bit Noticeகளாய் வினியோகித்துக்கொண்

டிருக்கிறார்கள்.

 

என்றென்றென்றெனக் கேட்பதான

அத்தனை படங்கள், கோட்டோவியங்கள்,

காணொளிகள், குறுஞ் சுவரொட்டிகளைப்

பார்த்தபின்பும் அசராமல் நின்று கொண்டிருக்கும்

வாசகரைப் பார்த்து

‘நான் யார் தெரிகிறதா?’

என்று கேட்டவரிடம் _

_ உங்கள் எழுத்தின் மூலமே தெரிகிறது –

இத்தனை ‘Stage Props’ எதற்கு

என்று எதிர்க்கேள்வி கேட்ட வாசகர்

தன் கையிலிருந்த முகமறியாக் கவியின்

தொகுப்புக்குள்

கூடுவிட்டுக்கூடு பாய்ந்தார்!

 

  •  

 

 

 

 

 

 

  1. வாய்கள்

பேசுவதற்கென்றே சில வாய்கள்

மூடியிருக்கவென்றே சில வாய்கள்

பேசும் வாய்களைப் பகடி செய்யவும் பழிக்கவும்

பேசவிடாமல் செய்யவும்

சில வாய்கள்

பேசினால் பிடாரி

பேசாவிட்டால் பயந்தாங்கொள்ளி

நாவடக்கம் எல்லோரிடமும் ஒரேயளவாய்ப் பகுக்கப்படுவதில்லை.

நாவினாற் சுட்ட வடு இல்லாதார் யார்?

ஊர் பேர் உள்ள காருக்கேற்ப

ஒருவர் ஏற்படுத்திய காயம் உட்காயமாக

இன்னொருவர் உண்டாக்கியது அங்கிங்கெனாதபடி

எல்லாவிடமும் சுவரொட்டிகளாகும்.

சிலர் வாயால் வடைமட்டுமா சுடுகிறார்கள்?

பஜ்ஜி போண்டா பராத்தா பிரியாணி

பக்கோடா இன்னும் என்னென்னவோ

உள்ளூர்வாசிகளுக்கும் சுற்றுலாப்பயணிகளுக்குமாய்

வியாபாரம் அமோகமாய்.

பேச்சுரிமை சில வாய்களின் தனிச்சொத்தாக

சகமனிதர்களின் குரல்வளைகளை நெரித்துக்

குரலற்றவர்களாக்கி

அவர்களுக்காகப் பேசியவாறிருக்கும் சில வாய்கள்.

விளம்பரங்களால் பெண்ணுரிமையின் வாயில் நஞ்சூற்றிப் பொசுக்கியபடியே

பெண்விடுதலையை முழங்கிக்கொண்டிருக்கும் அச்சு ஒளி-ஒலி ஊடக வாய்கள்.

சின்னக் குழந்தைகளின் வாய்களில் நுழையமுடியாத சொற்களைத் திணித்துத்

தங்களுடைய வெறுப்பையும் வன்மத்தையும்

கக்கவைத்துக்கொண்டிருக்கும் பெரியவர்களின் வாய்கள் இப்போதெல்லாம் வெற்றிலைக்கு பதிலாக

அரசியலையே அதிகம் குதப்பியபடி.

பிறவியிலேயே வாய்பேச முடியாதவளின்

மனமெல்லாம் பேசும் வாய்களாக

நிலைக்கண்ணாடி முன் நின்றவண்ணம் பேச முயற்சித்துக்கொண்டிருக்கும் அவளுடைய

நாபியிலிருந்து பீறிடும் அமானுஷ்ய ஒலிகளின்

மொழியறிந்ததாய் அருகிலிருந்த மரத்திலிருந்து

ஒரு பறவை கீச்சிடுகிறது.

அவளுக்கு அது கேட்குமோ தெரியவில்லை.

வாயிருப்பதால் மட்டும் எல்லாவற்றையும் பேசிவிட முடிகிறதா என்ன?

மூடிய அறைக்குள் யாருமற்ற நேரத்தில் உரக்கத் தானும் தானான பிறனுமாக உரையாடிக்கொண்டிருந்தால்

மனநல விடுதிக்கு அனுப்பிவைக்கப்படும் சாத்தியக்கூறுகள் அதிகம்.

அதனால்தானோ என்னவோ

அடித்தால் பதிலடிகொடுக்கவியலாத பலவீனராய்த் தேர்ந்தெடுத்து

அடித்துக்கொண்டேயிருக்கின்றன சில வாய்கள்.

  •  
Series Navigationவடகிழக்கு இந்தியப் பயணம் : 14 
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *