வசுந்தரா..

author
2
0 minutes, 1 second Read
This entry is part 1 of 29 in the series 5 ஜனவரி 2014

 

 

சின்னக் கண்ணன்..

 

வசுந்தரா பெயரிடப்படாத குழந்தையாய்ப் பிறந்த போது, உயிருடன் இருக்கிறோம் என்பதற்காக ஒரே ஒரு முறை வீல் என்று அழுது விட்டு நிறுத்தி விட, குழந்தையை எடுத்துப் பார்த்த டாக்டர் பங்காரு அம்மாள் கன்ஃப்யூஸ் ஆனார்.

“என்னது இது..தொடர்ச்சியா அழணுமோல்லியோ..இது ஏன் இப்படிப் பண்ணுது” எனக் குழப்பமாய்க் கேட்க வாட்ச் பார்த்த நர்ஸ் ஓமனக் குட்டி (வயது 56) “ஒரு வேளை நல்ல நேரம் வரட்டும்னு வெய்ட் பண்ணுதோ என்னவோ…இப்ப 6.59.45. ஏழு மணிக்கு நல்ல நேரம்” எனச் சொல்ல, சரியாய்ப் பதினைந்து செகண்ட் கழித்து குழந்தை மறுபடியும் தொடர்ச்சியாய் அழுதது..

“நான் சொன்னேனில்லை..இந்தக் குட்டி எல்லாத்தையும் டயத்துக்குச் செய்யுமாக்கும்” என சந்தோஷமாய்ச் சொன்ன ஓமனா அறையின் வெளியில் வந்து கவலையுடன் இருந்த ராமபத்திரரிடம் “ பெண் குழந்தை” எனச்  சொல்ல ராமபத்ரர் சந்தோஷமானார்.. அருகிலிருந்த உறவுகளிடம் சாக்லேட்கொடுத்து மகிழ்ச்சியைக் கொண்டாட ஒரு உறவுக்கார வயதான அத்தை ஓ..இன்னிக்கு பரணி நட்சத்திரம் குழந்தை தரணியே ஆள்வா பாரு என்று தனது செண்டிமெண்டைச் சொன்னார்..

ராமபத்ரனின் முன்னோர்கள் தஞ்சையில் பெரும் பணக்காரர்கள்..எனில் ராமுவும் அப்படியே..அவருக்குச் சொந்தமாய்ப் பல வீடுகள், நிலங்கள், போதாக்குறைக்குத் தஞ்சையிலேயே ஒரு பெரிய ரைஸ்மில் இருந்ததில் பணம் அள்ள அள்ளக் குறையாமல் இருந்தது..

பிறந்த குழந்தைக்கு வஸீந்தரா என்ற வசு எனப் பெயர் வைக்க, வசுந்தரா மெல்ல மெல்ல வளர்ந்து பள்ளிப் பருவம் எய்தினாள்.. எல்கேஜியில் தஞ்சையில் இருந்த ஒரு பள்ளியில் சேர்த்து விட பள்ளி சென்று வந்த வசு மாலை சமர்த்தாய் புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டது..

“என்னம்மா செய்ற”

“நாளைக்கு ஸ்கூல்ல என்ன க்ளாஸ்னு பாக்கறேம்ப்பா”

“என்ன அதுக்குள்ள்யாம்மா”

“ஆமாம்ப்பா..என்ன செய்யணும்னு ப்ளான் பண்ணிக்கனுமோன்னோ”

குழ்ந்தையின் அறிவில் ராமபத்ரன் மட்டுமல்ல அவளது கேள்விக்ளில் மனைவி வேதாவிற்கும் பெருமை தான்..

இப்படியாகத் தானே நாளும் காலையில் யூனிஃபார்ம், மாலையில் கலர் ட்ரெஸ்,  யூனிஃபார்மைக் கழட்டி பத்திரமாக மடித்து வைத்தல், அழுக்காயிருப்பின் பாத்ரூம் சென்றுஅதைப் போட்டு அம்மாவிடம்..மறக்காம தோச்சு அயர்ன் பண்ணிவைம்மா என நினைவூட்டல் என இருந்த வசு மெல்ல மெல்ல வகுப்புகள் கடந்து எட்டாம் வகுப்பை அடைந்த போது ஒரு நாள்..

“அம்மா.. இங்க வாயேன்”

“என்னடி..பீரோல்ல என்ன பண்ணிக்கிட்டிருக்க”

“நீ தான் மன் த்லி யூஸ் பண்ணுவியேம்மா..எங்க வச்சுருக்க”

“என்னது..என்னடி சொல்ற..உனக்கெதுக்கு அது வேணும்”

“ஹச்சோ.. கொஞ்சம் எக்ஸைட் ஆகாம இரு.. நேத்துக்கு வயித்து வலிச்சுச்சா சாயந்தரம். இட் கேம்..”

“அப்பாக்கிட்ட சொல்லிடலாம்டி..ஸ்கூல் லீவ் போட்டுடு.. மூணு நாள்..கொண்டாட்டம்னு அதகளம் பண்ணிடுவார்..”

“கொஞ்சமாவது புத்தி இருக்காம்மா உனக்கு..இப்ப எக்ஸாம்.. இன்னும் ரெண்டு நாள் இருக்கு..முடிச்சுட்டு அப்புறம் சொல்லலாம்…என்னால்லாம் எட்டாம் கிளாஸ் மறுபடி படிக்க முடியாது..ஏற்கெனவே ஒன்பதாம் கிளாஸ் மேத்ஸ் போட்டுப் பாத்துக்கிட்டிருக்கேன்”

வேதா வியந்து ஓ.கே சொல்ல சமர்த்தாய் ஸ்கூல் போய் எக்ஸாம் எழுதிவிட்டு வந்தாள் வசுந்தரா..

*

பின் கடந்த வருடங்களில் ப்ளஸ் டூ முடித்து காலேஜில் பி.எஸ்ஸி பாட்டனி கோல்ட் மெடல் வாங்கிவிட்டு எம்.எஸ்ஸி பாட்டனி மதுரை தியாகராஜர் கல்லூரியில் சேர்ந்த போது அவளிடம் பிஎஸ்ஸியில் இருந்து பழகும் ரமேஷ் வந்தான்..கையில் ஒரு க்ரீட்டிங்க்ஸ்..

“என்னவாக்கும் இது ரமேஷா”

“ரமேஷ்னு கூப்பிடேன் அது என்ன பாட்டி மாதிரி”

“நீயும் தாத்தா காலத்து ஐலவ்யூ சொல்லப் போறியாக்கும்..”

“அதெப்படி கரெக்டா சொல்ற வசு..”

“இந்தப் பாரு ரமேஷ்… எனக்கு அதெல்லாம் டயம் இல்லை..என்னோட லைஃப்ல லவ்லாம் இடம் இல்லை..எனக்கு நேரமும் கிடையாது..ஏதோ எம்.எஸ்ஸி ஆசைப்பட்டேன்னு அப்பா படிக்க வச்சுட்டார் இன்னும் ரெண்டு வருஷத்துல கல்யாண்ம் பண்ணி வச்சுருவார்..அண்ட் எனக்குப் படிக்க வேண்டிய புத்தகங்கள் நிறைய இருக்கு.. நேத்து தான் வால்மீகி ராமாயணம் படிக்க எடுத்து வச்சுருக்கேன்..அதப் பத்திச் சொல்லட்டா…”

ரமேஷ் பேந்தப் பேந்த விழித்து விலகிவிட வசு சமர்த்தாய் எம்.எஸ்ஸி முடித்தாள்.. ஒரு நாள் அவளது அறைக்குள் வந்த ராமபத்ரர் அரண்டு போனார்..

மேஜை மேல் புக்மார்க் வைத்த படி இருந்த புத்த்கங்களாவன.. என்பிதலனை வெயில் காயும், மோக முள், ஜே.ஜே சில குறிப்புகள், யவன ராணி, மிஸ்டர் வேதாந்தம், ஃபெளண்டன் ஹெட், வியாச மகாபாரதம், கவிஞராக ஆக கிவா.ஜகன்னாதன், நீங்கள் ஒரு நிறுவனர்…..இன்னும் பல..

கொஞ்சூண்டு தலை சுற்ற ராமபத்ரன் “ இதெல்லாம் என்னம்மா..”

என்னப்பா பண்றது..வேலைக்குப் போகலாம்னா வேண்டாம்னுட்டேள்.. ஸோ டயத்தை வேஸ்ட் பண்ணாம இந்த புக்லாம் படிக்கணும்னு லிஸ்ட் போட்டு ப்ளான் ப்ரகாரம் படிச்சுட்டுருக்கேன்.. நீங்களோ ஸீரியஸா ஜாதகம் பார்த்துண்டுருக்கேள்..போற இடத்துல இதெல்லாம் படிக்க முடியுமோ முடியாதோ..

ராமபத்ரன் மறுபடியும் ஒருமுழி முழித்து” சரிம்மா.. சீக்கிரமாகவே ஒரு இடம் பார்க்கிறேன் என்றார்..

அது போலப் பார்த்தும் விட்டார்.. பையன் பெயர் சந்திர சேகரன் என்னும் சந்த்ரு..குட்டிக் கிருஷ்ணனைப் போலவேபஃப் என்ற கன்னமும் கொஞ்சம் முழ நீள கிருதாவும் சின்னப் ப மாதிரி மீசையும் கண்களில் தீட்சண்யமுமாக ஜோராகவே இருந்தான்.. படிப்பு எம்பிஏ வேலை துபாயில் ஒரு தனியார் கம்பெனியில் பெரிய பதவி..

வசுந்தராவிற்கும் பிடித்துப் போக  நல்ல சுபயோக சுப தினத்தில் டும்..டும்..டும்..

கல்யாணம் முடிந்த இரவு.. சமர்த்தாய் ஒரு வெங்காய நிற மெல்ல்லிய சேலை- விளையாடலுக்காக சந்த்ரு வீட்டில் எடுத்துக் கொடுத்த்து, குட்டியாய் அதே நிற ரவிக்கை, மெலிதாய்ப் போடப் பட்ட லிப்ஸ்டிக், மதுரை மல்லிகை தலையில்,.. கொஞ்சம் சிவந்த கண்கள் என வசு சோபன அறைக்குள் நுழைந்த போது சந்த்ரு தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்து “வா..வசு”

என்ன புத்தகம்.. வேர்ட் பவர் மேட் ஈசி.யா… இது நான் ஒன்பதாம் கிளாஸ்லயே படிச்சுட்டேனே..

”நானும் தான்” என்ற சந்த்ரு ”கையில் என்ன ஃப்ளாஸ்க்.”.

“பால் பழம் எல்லாம் உங்களுக்குக் கொடுக்கணுமாம்.. பால் சூடு ஆறிப் போனா நல்லா இருக்காதேன்னு அம்மா கிட்ட சொல்லி ப்ளாஸ்க்ல கொண்டாந்தேன்.. இந்தாங்க”

ச்ற்றும் பதற்றம் இன்றி விட்டுத் தந்த வசுவை ஆச்ச்ர்யமாய்ச் சந்த்ரு பார்க்க வசு “ காலையில எல்லாம் ஒரே ஹோமப் புகை.. ஒரே கண்ணெரிச்ச்ல்”

“ஆமாம்ல அதுல ஸபத பதிக்கு வேற சாஸ்திரிகள் ஏதோ மந்திர்ம் சொன்னாரோல்லியோ..போர்”

“போர்லாம் இல்லை \” என்ற வசு ஸப்தபதி மந்திரத்திற்கான அர்த்தத்தை விளக்கிச் சொல்ல சந்த்ருவின் விழிகள் விரிந்தன..

“இதெல்லாம் எப்ப்டி த் தெரியும்”

“படிச்சேன்..சரி..ஈ. நா சொல்ல வந்தது என்னன்னா.. எல்லாருக்கும் நமஸ்காரம் பண்ணினதுல ஒடம்புவலிக்குது.. ஈவ்னிங்க் ரிஷப்ஷனுக்காக போட்ட மேக்கப்ல ஃபேஸ் இஸ் பெய்னிங்க்..ஆல்ஸோ காலும் வலிக்குது..அதனால..

“அதனால..”

“,மத்ததுல்லாம் நாளைக்கு க் கொடைக்கானல்ல வச்சுக்கலாம்.. இப்போ தூங்கலாம்..” என ச் சொல்லி தொப்பெனப் படுக்கையில் விழ..

“மத்ததுல்லாம் என்ன வசு” எனச் சந்த்ரு ஆவலுடன் கேட்க “ம் ஹனிமூன் முடிச்சு வீட்டுக்கு வாங்க. சொல்றேன்”  எனக் குழறலாகச் சொன்ன வசு அடுத்த கணம் மெல்லிய குற்ட்டையுடன் தூங்கியும் போனாள்..

ஹனிமூன் முடித்து டி.கே.என் ஆக (தேன் குடித்த நரி) மாமியார் வீட்டைச் சென்றடைந்த சந்த்ருவிற்கு வசுந்தரா சொன்னது ஒரு மாலை நேரத்தில் நினைவுக்கு வர.. ஏதோ வீட்டுக்கு வந்ததும் சொல்றேன்னயே.. எனக் கேட்டான்..

வசு ”என்னோட ரூம்ல புக்‌ஷெல்ப் இருக்குல்ல.. அதுல டாப் ரோல பின்னால ஒரு புக் இருக்கும்..எடுத்துப் பாருங்க..”..

சந்த்ரு ஆவல் உந்த அங்கு சென்று ஆசையுடன் அந்தப் புத்தகத்தை எடுத்துப்பார்த்து பின் தலையில் கைவைத்துக் கொண்டான்.. காரணம் அது வாத்ஸாயனர் எழுதியது..!

  • *

வருடங்களும் வருடங்க்ளுடன்  வசந்தங்களும் புயல்களும் மாறி மாறித் துள்ளியோட ஆயிற்று வந்தது ஒரு தர்ட்டி ஃபர்ஸ்ட் டிசம்பர்..

இடம் துபாயில் வசுந்தராவின்  ஆறாவது மாடியில் அமைந்திருந்த த்ரி பெட்ரூம் ஃப்ளாட்..

“என்ன ஆச்சுடா நவீன் இன்னும் ரெடியாகலையா..”

”ம்மா ப்ளீஸ்.. எனக்குப் படிக்கணும்னு ஒரு சைட்ல டைம் டேபிள் கொடுத்துருக்க. இதுல இப்போ நியூ இயர் பார்ட்டிக்கு வான்னு கூப்பிடற..

“அதுக்கென்ன இப்போ” என்றாள் வசுந்தரா… டார்க் ப்ளூ லெக்கின்ஸ்..மேலே பூப்போட்ட டாப்… நெற்றியில் ஒற்றைக் கோட்டாய் ஒரு நீல நிறப் பொட்டு.. பளபள் முகம்..காதோரம் கொஞ்சூண்டு நரை மட்டும் இல்லையெனில் ஒரு ப்ளஸ்டூ பையனுக்கும் டென் த் பெண்ணிற்கும் அம்மா என்றால் சாமி சத்தியமாக யாரும் நம்ப மாட்டார்கள்..

“பார்ட்டி முடிச்சுட்டு வந்து தூங்கி, காலையில் கிருஷ்ணன் கோவில் போய்ட்டு வந்து படி.. நீ சமர்த்துடா படிச்சுடுவே…ஆமாம்..இந்த நளினா என்ன பண்றா..”

வந்துண்டே இருக்கேன் மம்மி.. என்று வந்த நளினா கையில் டேப்லட்..ஃபேஸ்புக்ல ஒரு ஃப்ரண்ட் சாட் பண்ணிக்கிட்டிருந்தான்… மேத்ஸ்ல ஏதோ டவுட்டாம்.. நளினா அழகாய் கால்கள் முழுக்கப் புரண்ட ஒரு பாவாடை டைப்பிலான டிரஸ், மேலே சின்ன டாப்ஸீம் நெற்றியில் பொட்டில்லை..

ம்ம்.. நன்னா இருக்க போ.எப்பப் பாத்தாலும் ஃபேஸ்புக் ட்விட்டரா…கொஞ்சூண்டு பொட்டு வச்சுக்கோ..எல்லாம் ஸூட் ஆகும்..எங்க உன்னோட அப்பா..”

இதோ” என்றான் சந்த்ரு.. கீழே ஜி.எம்.சியைக் கொஞ்சம் ஆன் பண்ணிப் பார்த்துட்டு வந்தேன்..பேட்டரி மாத்தி நாளாயிடுச்சோன்னோ..ஜூமைராவில் உன்னோட தோஸ்த் ரேவா சுரேஷோட வீட்ல தானே பார்ட்டி.. ஒன்பதரைக்குப் போனா போதுமில்லை..

“நல்லா இருக்கே..அவ எட்டுக்குல்ல கூப்பிட்டிருந்தா..சரி என்னவோ போங்கோ.. ப்ளான் பண்ணிக் கிளம்புங்கன்னா எப்பவும் கொஞ்சம் லேட் பண்ணியாறது..”

ஒரு வழியாய்க் கிளம்பி ஜூமைராவில் ரேவா சுரேஷ் வீட்டை அடைந்த போது நண்பர்கள் குழாம் எல்லாம் சேர்ந்திருந்தார்கள்..

பார்ட்டி பார்ட்டி டான்ஸ் டான்ஸ்.. பெரியவர்களான ஆண்கள் கையில் க்ளாஸ்களுடன் பிடித்த சோம பானங்களை எடுத்துக் கொண்டு செட்டிலாகி கோல்ட் ரேட், கேஜ்ரிவால், ஜன்னலோரம், கோச்சடையான் என செட்டில் ஆக சின்ன வயது பசங்கள் டான்ஸ் ஆட ஆரம்பிக்க, வசுந்தரா தன் கையில் டயட் கோக்குடன் ரேவா சுரேஷுடன் அமர்ந்து கொண்டாள்..

“என்னடி..வசு..எப்பப் பார்த்தாலும் டபக்குன்னு அடிச்ச ட்யூனிங்க் ஃபோர்க்காட்டமா ஒரு வைப்ரேஷன்லயே இருக்க..கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கப் படாதோ..எனக்கென்னமோ உன்னை பதினஞ்சு வருஷமா பார்க்கறேன் இப்படியே இருக்க நீ”

வசு சிரித்து, “அப்படியே சின்ன வயசுலருந்து பழக்கம் ஆகிடுச்சு ரேவா..கல்யாணம் ஆன உடனே ஃபினான்ஸையும் என் கைல கொடுத்துட்டார் சந்த்ரு.. ம்ம் என்னால ஆனது.. கொஞ்சம் அடையார்ல ஒரு ஃப்ளாட், வளசரவாக்கத்துல ஒரு வீடு, எங்களுக்குன்னு ரிட்டயர் ஆனதுக்கப்புறம் இருக்கறதுக்காக கேரளால கொலமாவுங்கற இடத்துல ஒரு வீடுன்னு வாங்கிப் போட்டுட்டேன்.. பெரியவன் ப்ள்ஸ்டூ முடிச்சுட்டான்னா அவனை மெடிக்கல்ல சேர்க்கணும்.. அதுக்கு வேண்டிய பேலன்ஸ் இருக்கு.. சின்னவ நளினாக்கு டெண்டல் சர்ஜன் ஆகனும்னு ஆசை..அதுக்கும் ப்ளான் பண்ணி வச்சுட்டேன்..அதுக்கெல்லாம் என்ன பண்ணனும்னு நினைச்சுக்கிட்டே இருக்கறதுனால உனக்கு அப்படித் தோணுது..”

“அப்படில்லாம் இல்லடி.. சமயத்துல நீ எல்லாரையும் போட்டு டிரில் வாங்கறச்சே எனக்கே கோபம் வ்ருது தெரியுமா..

“இதுல என்னடி நான் ட்ரில் வாங்கறேன்.. பாரு நளினா எப்படி இருக்கா.. டான்ஸ் க்ளாஸ்ல விட்டேன்.. பாடி ஒரு ஷேப்ல வந்துருக்கு.. நவீன் சின்ன வயசுலருந்தே ஸ்விம்மிங்க், கிரிக்கெட்.. படிக்கவும் செய்யணும் விளையாடவும் செய்யணும்னு பாலிஸி.. ஒடம்பயும் பார்த்துக்கணுமோன்னோ.. தவிர.. சந்த்ருவ எடுத்துக்கோ.. அம்பத்திர்ண்டு வயசு.. உடம்பத் தொட்டு நாக்குல வச்சா திதிக்குது..அவ்ளோ ஷீகர்.. போதாக்குறைக்குப் பொன்னியம்மா வந்தாளாங்கற மாதிரி பி.பி வேற.. டயத்துக்கு மாத்திரை சாப்பிடு, கண்டதையும் சாப்பிடாதேங்கறேன்..இதெல்லாம் ஒரு தப்பா என்ன..

என்னவோ..போ.. பொறக்கப் போற நியூ இயர்லயாவது கொஞ்சம் ரிலாக்ஸாகவும் இருக்கப்பழகு.” எனச் சொல்லி ரேவதி சுரேஷ் மெல்ல எழுந்து உள் சென்றாள்..

வசுவும் எழுந்து பார்ட்டி ஹாலை வலம் வந்து, கிண்ணத்துடன் இருந்த சந்த்ருவுடன் ஜாஸ்தில்லாம் வேண்டாம் எனக் கண்ணால் பேசி, உண்வுகள் வைத்திருந்த இடத்துக்கு வந்து ஒரு ப்ளேட்டில் ஸாலட் மற்றும் சப்பாத்தி சப்ஜி போட்டுக்கொண்டு உண்ண ஆரம்பித்தாள்..

ஒரு வழியாய பன்னிரண்டு மணி ஆகி புத்தாண்டை வரவேற்று உணவருந்தாதவர்கள் எல்லாம் உண்டு கிளம்பி மறுபடியும் பர்துபாயில் இருக்கும் தன்னுடைய வீட்டிற்கு வசு அண்ட்கோ வந்து சேர்ந்த போது மணி ஒன்றரை..

“சந்த்ரு..காலையில் ஆறரைக்கு எழுந்துடுங்கோ.. நானும் எழுந்துடுவேன்..கிருஷ்ணா கோவிலுக்குப் போகணும்”

“ம்’ என்றான் சிவந்த கண் சந்த்ரு..

அருகில் படுத்துக் கொண்ட வசுந்தரா சற்றே கண் மூடுகையில் கொஞ்சம் மார்பு வலித்தாற்போல இருந்தது..தடவி விட்டுக் கொண்டாள்..கொஞ்சம் எழுந்து டிர்ஸ்ஸிங்க் டேபிளில் இருந்த மாலோக்ஸ் (டைஜஷன் சிரப்) குடித்துக் கொண்டாள்.. அந்த ஆலு கோபி சாப்பிட்டிருக்கக் கூடாது என நினைத்தபடியே கண்களை மூடிக்கொண்டாள்..

மறு நாள் சந்த்ருவின் செல்ஃபோன் சிணுங்கிக் கூப்பிட்ட அலாரத்தில் விழித்த சந்த்ரு வசுந்தரா அசந்து தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து ஓசைப்படாமல் எழுந்து பாத்ரூம் சென்று விஷயங்கள் முடித்து முகமலம்பி கிச்சன் வந்து ஃப்ரிட்ஜில் இருந்த டிகாக்‌ஷன் பால் இரண்டையும் கலந்து ஓவனில் சுடவைத்து காப்பி கலக்கையில் – வசு தான் எழுந்திருக்கலையே என நினைப்பு வர சுற்றும் முற்றும் பார்த்து பாட்டிலில் இருந்த சர்க்கரை ஒருஸ்பூன் போட்டுக்கொண்டு ஹாலில் சோபாவில் அமர்ந்து காப்பி குடித்து முடித்தான்..

“என்ன இவள் இன்னும் எழுந்திருககவிலலை..எழுப்புவோம்” என பெட்ரூம் வந்தவன் “வசு வசு..” என அழைக்க வசு எழவில்லை..

அதன் பிறகு வந்த நளினா, நவீன்,, டாக்டர் என யார் அழைத்தும் வசுந்தரா எழுந்திருக்கவேயில்லை…

 

**

Series Navigationஅனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்நீங்காத நினைவுகள் – 28விடியலை நோக்கி…….என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’பெருமாள் முருகன் கவிதைகள் நீர் மிதக்கும் கண்கள் – தொகுப்பை முன் வைத்து…டாக்ஸி டிரைவர் – திரு.ஆனந்த் ராகவ் எழுதிய கதைகளின் தொகுப்புகவிதை
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர். says:

    அன்பின் சின்னக் கண்ணன்

    வசு….எழுந்திருந்திருக்க வேண்டும்…! மனம் கனத்தது. கதையும் தான்.

    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்

Leave a Reply to Shakthiprabha Cancel reply

Your email address will not be published. Required fields are marked *