வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 47

This entry is part 5 of 28 in the series 10 மார்ச் 2013

சீதாலட்சுமி
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப்படும்

வரலாறு
வரலாற்றின் வரலாறுக்குப் பன்முகங்கள் உண்டு.
முதலில் வரலாற்றின் வரலாற்றை ஓரளவு புரிந்து கொண்டால்தான் பல குழப்பங்கள் நீங்கும். முடிந்த அளவு சுருக்கமாக, இன்றியமையாத பகுதிகளை மட்டும் சொல்ல நினைக்கின்றேன்
முதலில் ஒரு வேண்டுகோள். சாதி, மதம், அரசியல் இவைகள் உணர்வுகளைத் தூண்டும் விஷயங்கள். சமுதாயத்தில் ஓர் நல்லிணக்கத்தோடு, ஒற்றுமையுடன் வாழ அமைதி பெற முயற்சி செய்கின்றேன். எனவே யாரும் என்னைத் தவறாக எண்ண வேண்டாம். இறைவனால் படைக்கப்பட எல்லாவற்றையும் நான் நேசிக்கின்றேன்.இந்த சமுதாயத்தின் அமைதிக்காகப் பிரார்த்தனை செய்கின்றேன். .இனி வரலாற்றினைப் பார்க்கலாம்.
வரலாற்று நிகழ்வு ஒரு சாராருக்கு ஓர் காட்சியையும் இன்னொரு சாராருக்கு அதே நிகழ்வு வேறாகவும் உணரப்படுவதுண்டு.
வரலாற்றுப் புதினங்கள் என்று கூறும் பொழுது எல்லோருக்கும் நினைவிற்கு வருவது நமது எழுத்தாளர் கல்கிதான். அவர் கதை என்றவுடன் பொன்னியின் செல்வன் பற்றி சொல்லப் போவதாக நினைக்க வேண்டாம். அந்த அளவு பொன்னியின் செல்வன் கதை வாசகர்களை மயக்கி வைத்திருக்கின்றது. இப்பொழுது எடுத்துக்காட்டிற்கு நான் எடுத்துக் கொள்ளப் போகும் கதை சிவகாமியின் சபதம். அதாவது பல்லவர் வரலாறு.
மகேந்திர வர்மருக்கு விசித்திர சித்தர் என்ற பெயர் ஒன்று உண்டு. அவரின் திறனுக்கு ஓர் சோதனைக் கட்டம் வந்தது. வடக்கிலிருந்து சாளுக்கிய மன்னன் புலிகேசி காஞ்சி நோக்கி படை எடுத்தார். கலைகளுடன் பிணைந்து படைகள் பற்றி அதிகச் சிந்தனையில்லாமல் இருந்துவிட்டார் நம் மகேந்திர வர்மர். புலிகேசியோ பெரும் படை திரட்டிக் கொண்டு வந்துவிட்டார். போரிட்டு ஜெயிக்க முடியாத நிலை. கோட்டையைக் காப்பாற்ற முயன்றார் பல்லவ மன்னர். பல மாதங்கள் காத்திருந்துவிட்டு கோட்டையை வீழ்த்த முடியாமல் போகவும் காஞ்சியைச் சுற்றி இருந்த பகுதிகளை அழித்துவிட்டுத் திரும்பினர் சாளுக்கிய மன்னர். இது நடந்தது. திரும்பும் [பொழுது சாளுக்கிய படை பலரைக் கைது செய்து உடன் கூட்டிச் சென்றது. அவர்களில் ஒருத்தி சிவகாமி. காஞ்சியின் நாட்டிய தாரகை. இளவரசர் நரசிம்ம வர்மரின் காதலி. அவளைத் தந்திரமாகக் கூட்டிவர இளவரசர் வாதாபிக்குச் சென்றார். ஆனால் சிவகாமி உடன் வரவில்லை. சூழ்நிலை காரணமாக அவள் முச்சந்திகளில் நடனமாட வேண்டி வந்துவிட்டது. எனவே வாதாபியை அழித்துவிட்டு அவளை அழைத்துச் செல்லவேண்டுமென்று கூறிவிட்டாள் சிவகாமி. வாதாபி சென்றவர் வெறும் கையுடன் திரும்பினார். மன்னரின் உடல் நிலை மோசமாகவும் இளவரசரை பாண்டிய குமாரியை மணக்கச் சொன்னார். சாகும் முன்னர் வாதாபிக்குச் சென்று சிவகாமியின் சபதத்தை நிறைவேற்ற வேண்டு மென்று கட்டளையும் இட்டு மறைந்தார் வாதாபி எரிந்தது சிவகாமியின் சபதத்தால். இது கதை. .
போர் என்றால் சாதாரணமா? வாதாபி வெகு தூரத்தில் இருக்கும் இடம். படை திரட்ட வேண்டும். குதிரைப் படை யானைப் படை என்றும் திரட்ட வேண்டும். போர்ப் பயிற்சியும் கொடுக்க வேண்டும். அத்தனை பொறுப்புகளையும் சிரமேற் கொண்டு செய்தவர் தளபதி பரஞ்சோதியாகும். இவர் வரலாற்றுப் பாத்திரம். பின்னர் இவரே சிறுத்தொண்டாராக மாறுவார்.
ஒன்பது ஆண்டுகள் கடந்தன
வாதாபி நோக்கி படை நகர்ந்த்து. வாதாபி நகர் எரிந்தது. புலிகேசியும் மாண்டார். இது வரலாறு.
சிவகாமியின் சபதத்தால் அல்ல.
நம் தமிழக வரலாற்றின்படி நரசிம்மவர்மர் வல்லவர். வீர்ர். வெகுதூரம் படை கொண்டு சென்று சாளுக்கியனை வென்றவர். வெற்றிக்கு அடையாளமாக புலிகேசியைக் கொன்று வாதாபி நகரையும் அழித்தவர். இது வீரச் செயலாக தமிழக வரலாற்றில் வரையப்பட்டுள்ளது.
இதனைவைத்து ஓர் வரலாற்றுத்தொடரை எழுதிவிட்டார் கல்கி.. தமிழனுக்குப் பெருமை சேர்க்கும் வீர வரலாறு.
நான் பங்களூரில் 18 மாதங்கள் வாழ்ந்தேன். அப்பொழுது கர்நாடகாவின் வரலாறு படித்தேன். நான் எங்கு சென்றாலும்அந்த இடத்தின் வரலாறு படிப்பேன். வாழ்வியலையும் பார்ப்பேன். அவர்கள் வரலாற்றின் படி புலிகேசி ஓர் வீரன். காஞ்சியை வென்றவன். பல்லவமன்னர் கோழையாய்க் கோட்டைக்குள் இருந்துவிட்டார். நரசிம்மவர்மன் இரக்கமற்றவன். பொல்லாதவன். பழி வாங்கப் புறப்பட்டு ஊரையே கொளுத்தி ஊர்மக்களைக் கொன்றவன். அது வீரச் செயல் அல்ல.
ஒரே நிகழ்வு. வாதாபி நெருப்பில் அழிந்தது. தமிழகத்தில் நரசிம்ம வர்மர் வீர்ர். புலிகேசி தீய குணம் படைத்தவர். காஞ்சியை முற்றுகையிட முடிந்ததே தவிர பல்லவனை வெல்ல முடியாதவன். கர்நாடகா வரலாற்றுப் படி புலிகேசி வீரன். காஞ்சியை அழிக்கவில்லை. பல்லவமன்னன் கோழை கோட்டைக்குள் ஒளிந்து கொண்டார். மாறாக நரசிம்ம வர்மர் வாதாபி நகரை தீயிட்டு அழித்தார். உயிர் போகும் வரை புலிகேசி போராடி மாண்டார்.
ஒரு நிகழ்வு. இரு கோணங்கள்
வரலாற்றில் உண்மைகளை பல கோணங்களில் ஒப்பிட்டுப் பார்த்துச் சரியான முடிவிற்கு வர வேண்டும்.
உடையாளூரில் இராஜ ராஜன் சமாதி இருக்கின்றது என்று ஒரு சாராரும் அது இராஜராஜன் சமாதியில்லையென்று இன்னொரு சாராரும் கூறுவதால் அதில் முடிவெடுக்க முடியவில்லை. வரலாற்று ஆய்வுகள் முடிந்தவுடன் ஓர் குழுவிற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அவர்கள் எல்லோரும் ஒருமித்து ஏற்க வேண்டும். அதன் பின்னரே வரலாற்றில் பதியப்படும். “எழுந்தருளிய” என்ற ஒரு வார்த்தைதான் பிரச்சனையாகி இருக்கின்றது. டாக்டர் கலைக் கோவன் இந்த வார்த்தையைக் கூறி மறுப்பு தெரிவித்திருக்கின்றார்..வரலாற்றின் முக்கியத்துவம்பெற்ற இவ்விடத்தை முழுமையாக இன்னும் ஆய்வு செய்யப்பட வில்லை .
சில ஆய்வுகள் தொடர்ந்து செய்யப்படவில்லையென்றால் வரலாற்றில் முக்கிய தகவல் பெற முடியாது.
“எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர் “
வாழ்வியல் சட்டம் எழுதிய வள்ளுவரின் கூற்றும் அதுவே
ஒரு சொல் பல பொருள். இதுவும் வரலாற்றின் ஒரு முகம்
வென்றவர் வந்தால் வரலாற்றை மாற்றிவிடுவர் என்று நெப்போலியன் கூறியிருக்கின்றார். நடைமுறையில் இதனை நிறைய பார்க்கின்றோம். போர் என்று வரவும். முந்தைய மன்னனுக்குச் சிறப்புதருபவைகளை மாற்றிவிட்டோ அல்லது அழித்துவிட்டோ செல்வர். அதனாலும் சரியான வரலாறு கிடைக்காது. இதுவும் வரலாற்றின் இன்னொரு முகம்.
வரலாற்று சம்பவங்களை வைத்து திரைக்கதை எழுதுகின்றவர்கள் பலரும் வரலாற்றை முழுவதும் தெரிந்து கொள்வதில் அக்கறை காட்டாமல் இருக்கும் பொழுது வரலாற்றுப் பிழைகள் ஏற்படுகின்றன. எட்டயபுர வரலாற்றில் சிறப்பு மிக்க பகுதியில் கரும்புள்ளியை ஏற்படுத்திவிட்டது மாய உலகம். .
சிலகிராமங்களை உள்ளடக்கிய சந்திரகிரியில் வருடம் 856 AD ல் பெரிய நாயக்கர் என்று ஒருவர் ஆட்சி செய்து வந்தார். அவருடைய பரம்பரையினர் சில நூற்றாண்டுகள் ஆட்சி புரிந்து வந்தனர். அந்த பரம்பரையில் உதித்தவர் நல்லம நாயக்கர். ஒரு சமயம் தன் தம்பி வடலிங்கம நாயக்கருடன் விஜயபுர அரசர் சம்புராஜாவைக் காணச் சென்றார். வழியில் ஓர்தடை ஏற்பட்டது. சோமன் என்ற மல்லன் பாதையின் குறுக்கே ஒரு சங்கிலியைக் கட்டி வைத்து அந்த பாதையைக்கடக்க வேண்டுமென்றால் சங்கிலியைத் தூக்கிக் குனிந்து செல்ல வேண்டும் அல்லது அவனுடன் போர் செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்திக் கொண்டிருந்தான். நல்லம நாயக்கர் அவனுடன் போர் செய்து அவனைக் கொன்று விடுகின்றார்.
அப்பொழுது மல்லனின் எட்டு சகோதரர்கள் ஓடிவந்து “ இனி எங்களைப் பாதுகாப்பவர் யார் ?” என்று புலம்பினர். உடனே நல்லம நாயக்கர்” கவலை வேண்டாம். இனி நீங்கள் என் பிள்ளைகள். உங்களுக்கு நானே அப்பன் “ என்றார். இதனை கேள்விப்பட்ட மன்னர் மகிழ்ந்து நல்லம நாயக்கர் எட்டு பிள்ளைகளுக்கு அப்பன் என்று கூறியதால் இனி “எட்டப்பர்” என்ற பட்டத்தைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறினார். இனி வரும் அவர்கள் பரம்பரையில் எல்லோரும் இந்த சிறப்புப் பட்டத்தைச் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் கூறினார். அத்துடன் மல்லனை வென்றதற்கு ஒரு தலை உருவம், கால்பிணைக்கும் சங்கிலி இவைகளைத் தங்கத்தில் செய்து பரிசாகக் கொடுத்தார். இன்றும் அவைகள் எட்டையபுர அரண்மனையில் இருக்கின்றன. இது வரலாறு.
பாண்டிய நாட்டிற்கு வந்த பாளையக்காரர்களில் இவரும் ஒருவர். முதலில் இலம்புவனம் வந்தாலும் தங்களுக்கு ஓர் ஊரை நிர்மாணித்தனர். அதுதான் எட்டையபுரம். அங்குள்ள சிவனுக்குக் கூட பெயர் எட்டீஸ்வரர் ஆகும். அவர்கள் பரம்பரையில் எல்லோருக்கும் இந்தப் பட்டப் பெயரும் சேர்ந்துவரும். வீரத்திற்கும் மனித நேயத்திற்கும் கிடைத்த பட்டம். இன்று அரசியல் குழப்பத்தில் அப்பெயரின் சிறப்பு சிதைக்கப்பட்டது வேதனைக்குரியது.
ஆரம்பத்தில் எட்டயபுர வரலாற்றைப் புத்தக வடிவமாகக் கொண்டு வந்தவர்கள் இருவர். ஒருவர் திரு ம. பொ. சி அவர்கள். அடுத்து தமிழ்வாணன். இருவருமே வரலாற்றை சரியாய் ஆராயாமல் எழுதியவைகள். கிராமங்களில் ஓர் வழக்கம் உண்டு. அந்த கிராமத்தில் யாராவது சிறப்பாகச் செயல்பட்டிருந்தால் அது நாட்டுப்புற பாடலாக வந்துவிடும். அந்தப் பாட்டை வைத்து எழுதியவர் திரு ம. பொ. சி. அவர்கள். புத்தகம் அச்சில் வந்துவிட்டதால் அரண்மனையைச் சேர்ந்தவர்கள் மறுப்பு கூற முடியவில்லை. . தமிழ் வாணன் கட்டபொம்மன் ஓர் கொள்ளைக் காரன் என்று எழுதியுள்ளார். அதுவும் சரியல்ல. கணபதியா பிள்ளை என்பவர் எட்டயபுர வரலாறு எழுதியிருக்கின்றார். அதற்கு அணிந்துரை கொடுத்திருப்பவர் கால்ட்வெல் ஆகும்.
எட்டயபுர வரலாற்றை ஏற்கனவே விபரமாக ஒர் இணைய இதழில் வந்த “நினைவலைகள்” தொடரில் எழுதியிருக்கின்றேன். விடுபட்டவைகளையும் சேர்த்து என் வலைப்பூவில் பதிந்திருக்கின்றேன். அந்த உண்மையான வரலாற்றைத் தெரிந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் பார்க்க வேண்டிய இடம் www.seethaammaa.blogspot.com நான் அரண்மனையில் சேகரித்த புத்தககம், குறிப்புகள் எல்லாவற்றையும் “தமிழ்மரபு அறக்கட்டளையில்” மின்னாக்கம் செய்யப்பட்டிருக்கின்றது. அங்கும் பார்க்கலாம்.
கட்ட பொம்மன் சினிமாவிற்கு திரைக் கதை வசனம் எழுதியவர் திரு கருணாநிதி அவர்களாகும். பராசக்தி முதல் வீர வசனங்களை எழுதி வந்தவர். கட்ட பொம்மனாக சிவாஜி கணேசன். நடிகர் திலகம் பேச்சு. கேட்க வேண்டுமா? கட்டபொம்மன் இருக்கும் வரையும் எந்தத் தமிழ்ப் புலவர்களையும் ஆதரிக்க வில்லை. அவனுக்குத் தெரிந்தது போர் ஒன்றுதான். நாயகன் என்று ஒருவர் இருந்தால் வில்லன் வேண்டுமே. எட்டப்பன் வில்லனாகிவிட்டான். அதிலும் வி. கே ராமசாமி நடிப்பில் எட்டப்பன் பெயர் எட்டிக் காயாக்கப்பட்டது. அது ஓர் பரம்பரையின் பெயர் அதிலும் வீரத்திற்கும் மனித நேயத்திற்கும் பரிசாகக் கிடைத்த பட்டம். இந்த பட்டத்துடன் பல மன்னர்கள் எட்டயபுரத்தை ஆண்டிருக்கின்றார்கள். அது ஒரு சமஸ்தானம்தான். ஆனால் எல்லோரும் மஹாராஜா, மன்னர் என்றே அழைப்பர். சம்பவம் நடந்த பொழுது இருந்த மன்னரின் பெயரை எழுதியிருக்க வேண்டும். வரலாறு படிக்கவில்லை. பெயர்களை விசாரிக்கவில்லை. கலைஞர் ஓர் எழுத்தாளர். வரலாற்றுத் தொடரும் எழுதியவர். தமிழ்ப் புலவர்களையும் கலைஞர்களையும் ஆதரித்து வந்த ஒரு பரம்பரையைப் பற்றி எழுதும் பொழுது கவனமாக இருந்திருக்க வேண்டும். சமீபத்தில் கூட ஓர் கூட்டத்தில் “எட்டப்பன்” என்ற பெயரை அவர் கூறியபொழுது எட்டையபுரத்து மண்ணைச் சேர்ந்த என் போன்றோர்க்கு மனம் புண்படுகின்றது. திராவிடம் என்ற சொல்லுக்காக அதிகம் பேசப்படும் கால்ட்வெல் அவர்கள் அணிந்துரை எழுதி கணபதியா பிள்ளையால் எழுதப்பட்டுள்ள எட்டயபுரம் வரலாற்றைப் படிக்கட்டும். அதில் அப்பொழுது நடந்த உண்மைகள் எழுதப்பட்டிருக்கின்றன.
வரலாற்றில் அரசியலும் ஊடகங்களும் விளையாடுவதுண்டு.
வரலாற்றைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அளவு விளக்கமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ற சலிப்பு தோன்றலாம். வரலாற்றை வளைத்து, சொற்களைக் கூட புரட்டிப் பேசி மனிதனைக் குழப்பக் குழியில் தள்ளி, பல பிரிவினைகளைத் தோற்றுவித்து ஒற்றுமைகளைக் குலைத்துச் சமுதாயம் நிம்மதியின்றி வாழவைத்துவிட்டு, நம்பியவர்கள் துன்பக் குழியிலும் இவர்கள் உல்லாச உப்பரிகைகளிலும் வாழ்கின்றார்களே. நமக்குப் புத்தி வர வேண்டாமா? நம் காழ்ப்புணர்ச்சி மறந்து ஒற்றுமை வர வேண்டாமா? எனவே அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் புரிந்து கொள்ள முயலுங்கள். இதுவே என் வேண்டுகோள்.
இனி வாழ்வியல் வரலாற்றைப் பார்க்கலாம். இனி சாதி, மதம், அரசியல் மூன்றும் வரும். இவைகள் ஒன்றுக் கொன்று பிணைந்திருக்கின்றன. நமக்குத் தெளிவு வரவேண்டும். விருப்பு வெறுப்பின்றி தகவல்களை எழுதுகின்றேன். நம் நன்மைக்காக எழுதுகின்றே என். சமுதாய அமைதிக்காக எழுதுகின்றேன். உண்மைகள் கசக்கும். தயவு செய்து பொறுத்துக் கொள்ளவும்.
நீங்கள் ஒரு புத்தகம் படிக்க வேண்டும் கடைக்குப் போய் புத்தகம் வாங்க வேண்டுமே என்று தோன்றலாம். பரவாயில்லை. கணினியில் வலம் வாருங்கள். செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன.
ராகுல்ஜி எழுதிய “வால்காவின் நதிக்கரையிலுந்து கங்கை வரை” புத்தகத்தை ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். கதைகள் வடிவில் தத்துவார்த்த ரீதியில் சொல்ல வேண்டியவைகளை அருமையாகச் சொல்லியிருக்கின்றார். கி.மு. 6000 முதல் தொடங்கி முகலாய ஆட்சிகாலம், ஆங்கிலேயர் ஆட்சி காலம் வரையில் எழுதியிருக்கின்றர். இவருக்குத் தெரிந்த மொழிகள் பல. படித்த புத்தங்களோ அதிகம். . இவர் பின்னால் பொது உடைமைவாதியாகிவிடுகின்றார். பொருளாதார ஏற்ற இறக்கமும் அதிகாரப் பலமும்தான் மனிதன் வாழ்வரங்கில் விளையாட்டை நடத்திவருகின்றன. மிகத் தெளிவாக வாழ்வியலை அலசியிருக்கின்றார். எனவே நான் அந்த விளக்கங்களில் நுழையவில்லை.
வேட்டையாடி, காட்டுமனிதனாக இருக்கும் பொழுதே கடவுளை தன் வாழ்க்கையில் இணைத்துக் கொண்டான். காலம் உருண்டோடியது. விவசாயம் செய்யத்தொடங்கும் பொழுது நீண்ட வெளிப்புறத்தில் பல குழுச் சமுதாயங்கள் சேர்ந்து வாழும் நிலையும் உருவாயிற்று. ஒரே இடத்தில் இருந்தாலும் அவரவர் நம்பிக்கைகளை, பழக்க வழக்கங்களை விட்டு விலக வில்லை. விலகவும் முடியது. பழக்கம் தொடர்ந்தால் அதுவே வழக்கமாகி இறுகப்பற்றிக் கொள்ளும் இது இயல்பு. கூட்டம் பெருகியது, நிலப்பிரபுத்துவம் தோன்றியது. பல தொழில்களும் தோன்றின. மனிதனே பிரமித்தான். சிதறிக் கிடக்கும் தொழில்கள், சமுதாயம் இவைகளை ஒழுங்கு படுத்த எண்ணினான்.
CLASSIFICATION
அறிவு சார்ந்தவை, காத்தல், வாணிபம் எஞ்சியிருக்கும் சிறுதொழில்கள்
நான்காகப் பிரித்தான். அவைகளுக்கு அடையாளம் வேண்டுமே. மனித உருவையே மீண்டும் எடுத்துக் கொண்டான். தொழில்களுடன் சம்பந்தப்பட்ட சாதிகளையும் சேர்த்தான். இப்பொழுது அவனுக்கு சமாதானம் ஆயிற்று.
தலைப் பக்கம். அறிவு – அதாவது கற்றலும் கற்பித்தலும் – பிராமணர்
காத்தலுக்குத் தோள்வலிமை வேண்டுமே. எனவே தோள், மார்பு பகுதி – ஷத்திரியர்கள்
பிழைப்புக்கு வணிகம். வயிற்றுப் பகுதி – வைசியர்
ஓடியாடி உழைப்பதற்குக் கால்கள் உழைக்கும் கூட்டம். சூத்திரர்
இதுதான் வர்ணாச்ரமம். அதாவது வர்ணங்கள். ஒவ்வொரு வர்ணத்திலும் பல சாதிகள் உண்டு.
ஒரே நாளில் இது உதயமாகி விடவில்லை.
லட்சக்கணக்கான ஆண்டுகளில் மனிதன் வேட்டையாடியும் புலம் பெயர்ந்தும் வாழ்ந்து வந்தான். அவனுக்குக் கிடைத்த அனுபவங்கள் , படிப்பினைகள், இது உருவாக்கம் பெறும் பொழுது ஓரிடத்தில் நிலையாய் இருந்து வாழ ஆரம்பிக்கவும் நிகழ்ந்திருக்கலாம். ஆரம்பத்தில் எழுத்துரு கிடையாது. பின்னர் எழுத்து வரவும் ஒரு மொழியில் இது பதிய நேரிட்டிக்கின்றது. ஏற்கனவே இருந்தவைகளைப் பிரித்து வகைப் படுத்தப் பட்டிருக்கின்றது. அவ்வளவுதான். இதிலும் சாதிகள் அவ்வப்பொழுது வர்ணங்களில் மாறி இருக்கவும் நடந்திருக்கின்றது.
உழைக்கும் கூட்டம் அன்று அடிமைக் கூட்டம் . கயிற்றால் கட்டிப் போட்ட நிலை என்பதால் சூத்திரர்களானார்கள். அவர்கள் வாழ்க்கையிலும் எத்தனை சோதனைகள் ?!
என்னுடைய பணிக்காலத்தில் தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வேலை பார்த்திருக்கின்றேன்.அப்பொழுது கொத்தடிமையாய் வாழ்ந்த மனிதர்களையும் பார்த்திருக்கின்றேன். ஏழைகள் பொருள் வேண்டி செல்வந்தர்களிடம் கடன் பெறுவர். வட்டியுடன் திரும்பக் கட்ட முடியாது. கடன் அடைக்கும் வரை அவர்கள் அந்த செல்வந்தனுக்கு அடிமையாக வாழ வேண்டும். குடும்பத்துடன் இருந்தவர்களும் உண்டு. சிறுவர்களைத் திருடி விற்று அவர்களை அடிமைகளாக்கியதும் உண்டு. எனவே அடிமைகள் என்றால் கொத்தடிமை எனக் கொள்ளுதல் கூடாது. ஒரே மனிதரிடம் உதவி பெற்று அவனுக்காக அவன் ஏவிய வேலைகள் செய்வதும் ஒரு வகையான அடிமைத்தனம்தான். அடிமை என்றவுடன் தாசி, தாசன் என்ற சொற்கள் பேசப்பட்டன. தாசன் என்றாலும் அடிமைதான். கேவலமான பிறவி என்றல்ல. பின் ஏன் அப்படி ஒரு வதந்தி? அதற்கும் காரணம் இருக்கின்றது. அதனை எல்லோரும் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் எப்படியெல்லாம் குழப்பப்பட்டிருக்கின்றோம் என்று தெரியும்.
முதலில் சூத்திரர் என்ற சொல்லைப் பார்ப்போம்.
பேச்சு வழக்கில் பிராமணர்கள் அல்லாதவர்களைச் சூத்திரர்கள் என்று சொல்லியும் கேட்டிருக்கலாம். அப்படியானால் சூத்திரர் என்பது எப்படி கேவலமாக இருந்திருக்க முடியும்? கண்ணனை சூத்திரதாரி என்றும் சொல்வோம். . இந்த குழப்பத்திற்குக் காரணங்களைப் பார்ப்போம்.
தமிழர்கள் வரலாற்றில் வீட்டில் மனைவி இருந்தாலும் அவன் இச்சைகளைத் தீர்க்க காமக் கிழத்தி தேவை என்று நினைத்து பரத்தையர் சேரியும் வைத்திருந்தான். அப்படியிருந்தும் இன்னொன்றும் அவன் உண்டாக்கினான். அதுதான் “ வேளம்”
தன் நாட்டிற்குப் பொருள் தேடப் போர்கள் நடத்ததுவதாக் கூறினான். அப்படிப்பட்ட போர்களில் பொன்னையும் பொருளையும் மட்டுமல்ல அங்கிருந்த பெண்களையும் கவர்ந்து கொண்டு வந்து அடைத்த இடம்தான் வேளம். அந்தப் பெண் அரசன் மனைவியாக இருந்தாலும் அடுத்தவன் மனைவியாக இருந்தாலும் அள்ளிக் கொண்டு வந்து இந்தக் கொட்டிலில் அடைத்து தங்கள் இச்சைகளைத் தீர்த்துக் கொள்வர். இந்தப் பெண்களுக்குக் குழந்தைகள் பிறந்தால் எந்த உரிமையும் கிடையாது. அப்பன் பெயரைக் கூடச் சொல்லக் கூடாது. இதனை அடிமைக் கூட்டம் என்று சொல்ல ஆரம்பிக்கவும். வர்ணங்களில் இருந்த பல சாதிகள் வைசியர் கூட்டத்திற்கு மாற்றப் பட்டனர். உதாரணமாக பள்ளர், பறையர் இரு இனங்களும் வைசியர் கூட்டத்திற்கு மாற்றப் பட்டனர். கவுரமான ஏழை உழைப்பாளர்கள் வைசியர் கூட்டத்தில் சேர்க்கப்பட்டனர். வர்ணங்களில் சாதிகள் அவ்வப்பொழுது இப்படி மாற்றப்படுவதுண்டு. .
வாழ்வியல் சட்ட நூல் எழுதிய வள்ளுவர் பிறன்மனைவியை நோக்கக் கூடாது என்று எழுதி இருக்கின்றார். ஆனால் நம் மொழி இருக்கும் அழகுக்கு நாம் இல்லை. இது வருத்தம் தரும் செய்தி. அதனால்தான் போர்களின் போது தோற்கப் போகின்றோம் என்ற நிலை வரவும் அங்கிருக்கும் பெண்கள் தீக்குளித்துச் சாவர். பெண்ணுக்குத்தான் எத்தனை கொடுமைகள் ?!
மீண்டும் ஆஸ்திரேலியா நாட்டின் துயரச் செய்தி ஒன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். என்னை மிகவும் பாதித்த செய்தி. ஆஸ்திரேலியாவில் பொன்னை எடுக்க வந்தவர்கள் பிரிட்டீஷ்காரர்கள். ஆரம்பத்தில் சிட்னி ஓர் திறந்த வெளி சிறைச்சாலை. தங்கள் நாட்டில் அவ்வளவு கைதிகளை வைத்துக் கொள்ள முடியவில்லையென்று சொல்லி பல்லாயிரக்கணக்கான கைதிகளை சிட்னியில் கொண்டுவைத்தனர். அவர்களை நிர்வகிக்க அதிகாரிகளும் உண்டு. ஆனால் சுற்றுப்புற வேலைகள் செய்ய 70000 பெண் கைதிகளைக் கொண்டுவந்துவிட்டனர். இந்த எண்ணிக்கை தவறு என்றும் 30000 பேர்கள்தான் அனுப்பப்பட்டது என்றும் கூறினர். எப்படியும் அது பெரிய எண்ணிக்கைதான். அவர்கள் இடங்களைச் சுத்தப்படுத்துவது மட்டுமல்ல அதிகாரிகள் முதல் கைதிகள் வரை ஆண்களின் இச்சைகளையும் தீர்க்க வேண்டும். கொடுமை!. இவர்களுக்குப் பிள்ளைகள் பிறந்தால் தகப்பன் பெயர் கூறக் கூடாது.
முத்திரையில்லாத மனிதக் கூட்டம்
சிறைச்சாலைச் சூழல் மாறினாலும் இந்த பெண்ணினம் இழி பெயருடன் அங்கேயே வாழ நேரிட்டது. எந்த வீட்டிலும் வேலைக்கு வைத்துக் கொள்ள மாட்டார்கள். கடைகளில் வேலைக்குச் சென்றாலும் அங்கிருக்கும் ஆணின் சொல்படி கேட்கவேண்டும். போராட்ட வாழ்க்கை. கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்தாள். வீதியில் நின்று கொண்டு வீட்டில் வளரும் காய்கறிசெடிகளில் தேவைக்கு மேல் விளையும் காய்களை வாங்கி விற்க ஆரம்பித்தாள். இப்படி சிறிய தொழில்கள் மூலம் தன் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள ஆரம்பித்தாள். இதற்கிடையில் அரசாங்கம் விபச்சாரத்தை ஓர் தொழிலாக அங்கீகரித்தது..
எவனையும் நம்பி திருமணம் செய்து கொள்ளவில்லை. அதற்கும் காரணம் உண்டு.
ஒரு பெண் திருமணமானவள். அவள் கணவன் குடித்துவிட்டு ஒரு நாள் மனைவியின் கை கால்களைக் கட்டிப் போட்டுவிட்டு மெழுகுவர்த்தியால் உடல் முழுவதும் சூடு போட்டான். அவள் பிறப்புறுப்பிலும் மெழுகுவர்த்தியால் சூடு போட்டு அலற அலற விளையாடினான்.(டில்லியில் 17 வயது சிறுவன் கம்பியால் புண்படுத்தினான் ) அவள் செத்துவிட்டாள். . அவன் கைதானான். ஆனால் மூன்று மாதங்களில் விடுதலையாகி வெளியே வந்துவிட்டான். காரணம் என்ன வென்றால் அவளுடைய பாட்டி ஓர் விலைமாதாக இருந்தவளாம்.
அவ்வழி வந்தவர்கள் ஆணாயினும் பெண்ணாயினும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவளை அந்த நிலைக்குக் கொண்டுவந்தது யார்? எப்படி ஒருவனை நம்பி மணக்க முடியும் ? நிரந்தரமில்லாத, உறுதியில்லாத உறவு. எனவே முன்னர் இத்தகைய வாழ்க்கையில் பிறந்தவர்கள் திருமணத்தை விரும்ப வில்லை. உடலுக்குத் தேவைவரின் ஆண்மகன் வெளியில் போகவில்லையா? அதுபோல் பெண்ணும் தன் இச்சையைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்றாள்.. பொதுவாகப் பெண்கள் அத்தகைய வாழ்க்கையை வெறுக்க ஆரம்பித்தனர்.
கல்வியில் உற்சாகம் காட்டி உயர்ந்தனர். தொழில்கள் செய்து உயர்ந்தனர். அரசியலிலும் அவர்கள் பங்கெடுத்தனர். எந்த ஆண்மகனுக்கும் அவள் பினாமியில்லை. உலக அரங்கில் அரசியல் உலகில் பெண்களின் பங்கீட்டில் இரண்டாம் இடத்தில் இருந்தனர். அத்தகைய பெண்களிடம் ஓர் உறுதி இருப்பதை நேரில் கண்டவள் நான். அவர்களின் குழந்தைகள் சிலர் என் பேரனுடன் படித்தார்கள். அப்பா பெயர் என்ன என்று கேட்டால் நீ என்னுடன்தானே பழகப் போகின்றாய். என் அப்பாவுடனா என்று அந்த மாணவர்கள் பேசியதைக் கேட்டு வியந்து போனேன். அமெரிக்காவிற்குப் பின்னர்தான் அது சுதந்திர நாடாயிற்று. அந்த நாட்டில்தான் எத்தனை சூறாவளிகள். பெண்ணின் நிலைமை இன்றும் மாறவில்லையே !
வேளத்தை ஏற்படுத்தியவர்கள் நம்மவர். வேளாண்மை என்று சொல்லக் கூடாது விவசாயம் என்று கூறுங்கள் என்று சிலர் என்னிடம் சொன்னார்கள். காரணம் வேளத்தில் வாழும் பெண்களுக்கு வேளாட்டிகள் என்று பெயர். இன்றும் வேளாட்டி சீர் என்று சில திருமண வீடுகளில் கொடுக்கின்றார்கள். வேளத்தை உண்டு பண்ணியவர்கள் அதிகாரம் படைத்தோர்.
விவசாயம்பற்றி விசாரிக்கும் பொழுது இப்பொழுதும் கிராமங்களில் “வெள்ளாமை எப்படி இருக்கு” என்று கேட்கின்றோம். ஒரு சொல் எப்படி யெல்லாம் புரண்டு புரண்டு வருகின்றது.
சாதிகள் இருந்தன ஆனால் இப்பொழுது போல் காழ்ப்புணர்ச்சியும் சண்டைகளும் இல்லை. பெரிய புராணத்தில் வரும் 63 நாயன்மார்களில் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். யாரும் குறைவாகப் பேசவில்லை. எல்லா நாயன்மார்களையும் சமுதாயம் பெருமையாகப் பார்த்தது. விலக்கி வைக்க வில்லை . சொல்லப் போனால் கோயில்களில் ஒரே இடத்தில் எல்லோருடைய விக்கிரங்களும் வைக்கப்பட்டன. இறைவனுக்கு முன்னால் எந்த வேற்றுமைகளும் கிடையாது. எல்லோரும் ஒன்றே. இதுவே கிறிஸ்துவதத்திலும் இஸ்லாமியத்திலும் சொல்லப்பட்டிருக்கின்றன.
நான் வேலைக்கு வந்த பொழுது கூட பல சாதிகள், மதங்களைச் சேர்ந்தவர்கள் கிராமங்களில் இருந்தனர். மாமன். மச்சான், அண்ணன் என்று உறவு முறையில் பழகுவார்கள். அவரவர் நம்பிக்கைகள், சட்ட திட்டங்களிலும் அவர்கள் கண்டிப்பாக இருந்தனர். பெரிய சண்டைகள் வராது. ஒன்றுமட்டும் வேதனைக்குரியதாக இருந்தது. தலித் என்பவர்கள் அன்று ஹரிஜனங்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் ஒதுக்கப்பட்டவர்களாக வாழ்வதையும் பார்த்தேன் பணம்படைத்தோர் ஏற்படுத்திய பள்ளங்கள்.
இன்று பல பிரிவினைகள். எத்தனை சாதிச் சண்டைகள். ? இந்தளவு காழ்ப்புணர்ச்சிக்குக் காரணம் என்ன? அதையும் அலசிப் பார்ப்போம்.
“அடுத்தவர் திருந்தி நமக்கு எதுவும் ஆகப் போவதில்லை. மாறாக , குறைகளை நீக்கிக் கொண்டு நாம் திருந்தினால் நம் வாழ்க்கையில் அடையும் பயன்கள் ஏராளமானவை.மேலும் நாம் நம் குறைகளை நீக்கிக் கொண்டு சிறப்பாக வாழும் பொழுது அடுத்தவர்கள் நம்மைப் பார்த்து மாற உத்வேகத்தை ஏற்படுத்தும் வண்ணம் நல்ல உதாரணமாக இருப்பதால் குறையுள்ள மற்றவர்களும் நல்வழிக்கு மாற வாய்ப்புண்டு.
எனவே விமர்சனம் தவிர்த்து நல்ல உதாரணமாக இருந்து வழி காட்டுவோம்”
என். கணேசன்.
“எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் அன்பு கொண்டவர்கள், நண்பர்கள், தன்னை எப்பொழுதும் அலட்சியப்படுத்துகின்றவர்கள், நடுநிலையானவர்கள், தன்னை வெறுப்பவர்கள், சுற்றத்தார், நல்லோர், தீயோர், எல்லோரிடமும் ஒரே நிலையில் நடந்து கொள்கின்றவர்கள்தான் உத்தமமானவர்கள்.
சாப்பிடுவதிலும், நடமாடுவதிலும் , தூங்குவதிலும், விழித்திருப்பதிலும் அளவாக இருப்பவன் துன்பமில்லாமல் இருப்பான் “
பைபிள்
[தொடரும்]

Series Navigation40ஆவதுஇலக்கியசந்திப்பு-லண்டன் 06-07 (சனி,ஞாயிறு) ஏப்ரல்-2013ஜே.பிரோஸ்கான் கவிதைகள்
author

சீதாலட்சுமி

Similar Posts

5 Comments

  1. Avatar
    paandiyan says:

    //கட்ட பொம்மன் சினிமாவிற்கு திரைக் கதை வசனம் எழுதியவர் திரு கருணாநிதி அவர்களாகும். பராசக்தி முதல் வீர வசனங்களை எழுதி வந்தவர். கட்ட பொம்மனாக சிவாஜி கணேசன். நடிகர் திலகம் பேச்சு. கேட்க வேண்டுமா//

    தேசியவாதியான நடிகர் பி.ஆர்.பந்துலு 1959-ல் தனது பத்மினி பிக்சர்ஸ் சார்பில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகத்தை கேவா கலரில் படமாக்கி லண்டன் சென்று அதை டெக்னிகலராக மாற்றி வெளியிட்டார். சுதந்திரம் பெற்ற தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்டம் பற்றியதோர் கதை 12 ஆண்டுகளுக்குப் பிறகே வெளிவந்தது.

    சிவாஜி கணேசன் கட்டபொம்மனாகவும், ஜாவர் சீதாராமன் பானர்மென்னாகவும் நடித்தனர். எஸ்.வரலட்சுமி, பத்மினி ஆகியோரும் நடித்த இந்தப் படத்தின் கதை ஆலோசனைக் குழுத் தலைவராகத் தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ. சிவஞானம் இருந்தார்.

    ‘பராசக்தி’, ‘மனோரமா’ படங்களில் நீளநீளமான வாக்கியங்களில் வசனம் பேசிய சிவாஜி கணேசன் வீரபாண்டிய கட்டபொம்மனில் சக்தி கிருஷ்ணசாமியின் வித்தியாசமான வசனங்களைப் பேசினார்.

    so – சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் அனல் தெறிக்கும் வசனங்களை எழுதியவர் சக்தி கிருஷ்ணசாமி.

    இதை ஒரு குறையாக நான் இங்கு சொல்ல வரவில்லை. மற்றபடி சினிமா உலகம ஒரு கூத்தாடிகள் யுடையது என்பது என் பாணி.

    1. Avatar
      seethaalakshmi says:

      அன்பு பாண்டியன் வணக்கம். கட்டபொம்மன் சினிமா விபரங்கள் என் நினைவில் தடுமாறியிருக்கலாம். ஆனால் கட்ட பொம்மன் வரலாற்று ஆய்வு சமீபத்தில் செய்தது. அரண்மனைக்கார்ர்களிடமிருந்து சம்பந்தப்பட்ட புத்தகங்கள் மற்ற வரைவுகள் பெற்று , பார்த்து எழுதினேன். அதுமட்டுமல்ல, தமிழ் மரபு அறக்கட்டளையின் துணைத்தலைவி திருமதி சுபா அவர்கள் எட்டயபுரத்திற்கு நேரில் சென்று பல செய்திகளையும் ஆய்வு செய்து, அவரும் சில குறிப்புகள் பெற்று மின்னாக்கம் செய்திருக்கின்றார்.
      என் நினைவுகளில் சினிமா செய்திகள் என்று வரும் பொழுது ஏனோ நிலைத்திருப்பதில்லை. முற்றிலும் குறை கூறவில்லை. என் குறைகளில் ஒன்றாகக் கூறுகின்றேன்
      எதுவாயினும் வீரத்திற்கும் மனித நேயத்திற்குக் கிடைத்த பட்டப் பெயரை தெரிந்து சிலரும் தெரியாமல் சிலரும் கெடுத்துவிட்டனர். சமீபத்தில் கூட கலைஞர் “எட்டப்பன்” என்ற வார்த்தையைக் கூறியது என்னை வேதனைப் படுத்தியது. . சினிமா எடுப்பவர் யாராயினும் வரலாற்றுக் கதைகளைப் படம் எடுக்கும் பொழுது வரலாற்றைப் படிக்க வேண்டும். வரலாற்றுப் புதினங்கள் எழுதுபவர்களையும் சேர்த்தே கூறுகின்றேன். முக்கியமான ஜீவனைச் சிதைக்க் கூடாது. நன்றி
      சீதாம்மா

      1. Avatar
        paandiyan says:

        நான் மேல சொன்ன மாதரி ஒரு குறையாக நான் இங்கு சொல்லவில்லை. புராண படங்களையும் (தேரா மன்னா ஒரு உதாரணம்..), வரலாற்று படங்களையும் (நீங்கள் இங்கு சொல்லி இறுப்பது), எதுகை , மோனை வசனம் பேசி முடித்தவரை மாற்றிய மாமேதைகள் அவர்கள் .

      2. Avatar
        paandiyan says:

        கலைஞர் “எட்டப்பன்” என்ற வார்த்தையைக் கூறியது என்னை வேதனைப் படுத்தியது — உங்களுக்கு வயதாகிவிட்டது அதானல்தான். மற்றபடி எங்களுக்கு எல்லாம் அவர் பேசுவது மெகா காமெடியா இருக்கும். புராணங்களை கேலி பண்ணுவார் அப்பறோம் நாங்கள் ராவனன் பரம்பரை என்று ஒரு காமெடி பண்ணுவார்.மஹாபாரதம் விளாசிவிட்டு என்னை சகுனி என்று சொல்லாதீர்கள் என்பார். ஹிந்து என்று ஒன்றை சொல்லி இப்பொழுது ஐயோ ஹிந்து கோவில் என்று சொல்லுகின்றார். இந்த கருத்தைய ரெண்டு வாட்டி படியுங்கள் . டென்ஷன் போயி சிரிப்பு வரும் அப்படி வந்தால், தினமும் அவர் கட்டுரை இரண்டு முறை படியுங்கள், சிரித்து சிரித்து உங்களுக்கு இளமை திருப்பினாலும் திரும்பும்.

Leave a Reply to seethaalakshmi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *