விஜய் தொலைக்காட்சியின் “ஜூனியர் சூப்பர் சிங்கர்” போட்டி

author
10
0 minutes, 5 seconds Read
This entry is part 9 of 31 in the series 4 நவம்பர் 2012

ஜோதிர்லதா கிரிஜா

    தொலைக்காட்சிச் சேனல்கள் இப்போதெல்லாம் நிறையவே இசை நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. அனைத்துக் கலைகளிலும், மனிதர்களையும் _ ஏன்? விலங்குகளையும் கூடத்தான் – கட்டிப்போட்டு மெய்ம் மறக்கச்செய்யும் இசைக்கலையே மிகச் சிறந்ததென்று தோன்றுகிறது.

    அண்மையில் முடிவுற்ற விஜய் டி.வி. யும் ஏர்டெல் நிறுவனமும் இணைந்து நடத்திய இளநிலை இசைத் திறமையாளர்களுக்கான – Super singer among junior artistes – முதலிடம் உண்மையான இசை நுகர்வாளர்கள் செய்து வைத்திருந்த முடிவைத் தவறாக்கிப் பிறிதொரு போட்டியாளருக்குத் தரப்பட்டது.  காரணம், அரங்கில் கூடியிருந்த மக்கள் தங்கள் கைப்பேசிகளிலிருந்து குறுஞ்செய்திகள் வாயிலாக அனுப்பிய வாக்குகள்தான். ஒருவரே எத்தனை குறுஞ்செய்திகள் வேண்டுமானாலும் அனுப்பலாம் என்று ஏர்டெல் நிறுவனம் அறிவித்திருந்தது. அரசியல் சார்ந்த பொதுத் தேர்தலில் ஒருவர் எத்தனை வாக்குகளை வேண்டுமாயினும் பதிக்கலாம் என்பதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்? இந்த விதி நேர்மைக்குப் புறம்பானதல்லவா? வருமானத்தைப் பெருக்கிக்கொள்ளும் நோக்குடன் ஏர்டெல் நிறுவனம் செய்த தவறான செயல் அல்லவா இது?

 

    மேலும், இசை வல்லுநர்களாகிய புகழ்பெற்ற பாடகர்கள் அனைத்துச் சிறுவர்-சிறுமியரின் இசையைக் கேட்டுத் தீர்ப்பு அளித்த பிறகும், பொது மக்கள் முன்பு அவர்களைப் பாட வைத்து SMS அனுப்பித் தீர்ப்பு அளிக்கச் செய்தது அபத்தமாகப் படுகிறது.  ஏனெனில், நம் பொதுமக்கள் இசையை ரசிக்கத் தெரிந்தவரகளே ஒழிய,  அதன் நுணுக்கங்களையோ, சரியான இசையின் விதிமுறைகளையோ அறியாதவர்கள்.  நல்ல குரல் வளம் ஒருவருக்கு இருந்தாலே போதும் அவர்களுக்கு. இசையின் தரம்  பற்றி யெல்லாம் கவலைப்படடாமல் ரசிக்கக் கூடியவர்கள்.  கைகளைத் தட்டியும் கால்களைக் கொட்டியும், இருப்பை வெட்டியும் குரங்கு ஆட்டம் ஆட வைக்கும் பாடல்களைப் பாடுபவரைச் சிறந்த பாடகன் என்று தேர்ந்தெடுத்து விடுபவர்கள். மேலும் இத்தகைய பாடல்களைப் பாடத் தனித் திறமை எதுவும் தேவையில்லை. இவை, எவருமே எளிதாய்ப் பாடக்கூடிய மிகச் சாதாரணமான டப்பாங்க்குத்துப் பாடல்கள். தங்களால் பாட முடிகிற பாடல்கள் எனும் அதிகப்படியான விஷயத்தாலும் உயர்ந்த ரசனை இல்லாத இந்த மக்கள். அவற்றுக்கு அதிக மதிப்பெண்கள் கொடுக்கக் கூடியவர்கள்  கடினமான பாடல்கள் – அவற்றுக்குத் தாளக் கட்டு இருந்தாலும் – இப்படிப்பட்ட மிகச் சாதாரணமான – திறமையே அற்றவர்களும் பாடிவிட முடிகிற – டப்பாங்குத்துத் திரைப்படப் பாடல்கள் அதிகக் கைதட்டல்களை அள்ளி விடுகின்றன.

    மகாகவி பாரதியாரின் சில பாடல்கள் – அவருடைய கும்மிப் பாட்டுகள் போன்றவை –  மிக நல்ல தாளக்கட்டு உடையவை.  ஆனால், டமால் டுமீல் பக்க இசைக் கருவிகள் இல்லாமல் அவற்றைப் பாடினால், அவற்றைப் புறந்தள்ளி, அமர்க்களமான பக்க வாத்தியங்களுடன் பாடப்படும் மட்டமான டப்பாங்குத்துப் பாடல்களுக்கு மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து விடுவார்கள். விஷய ஞானமே இல்லாத, மட்டமான ரசனைபடைத்த திரைப்படப் பாடல் ரசிகர்களை வாக்களிக்கச் செய்தால், கடினமான, உயர்ந்த இசைப்பாடலை நிராகரித்து, காதைச் செவிடாக்கும் பக்க வாத்தியங்களுடன் பாடப்படும் சர்வ சாதாரணமான குத்துப்பாட்டுக்கே அதிக வாக்குகள் விழும்!

    அடுத்ததாக, ஏற்கெனவே சொன்னபடி ஏர்டெல் நிறுவனம் தங்கள் வரும்படியைக் கருத்தில் கொண்டு ஒருவரே எத்தனை வாக்குகள் வேண்டுமானாலும் அளிக்கலாம் என்று விதித்தது நாணயமற்ற செயலாகும். இசையில் தேர்ந்த கலைஞர்கள் தீர்ப்பு வழங்கியதன் பிறகு, உயர்ந்த ரசனையற்ற டப்பாங்குத்துப் பாட்டு ரசிகப் பெருமக்களை மேலும் ஒரு நடுவராக்கி வாக்களிக்க வைத்து, அவர்கள் அளிக்கும் மதிப்பெண்களையும் இசை வல்லுநர்கள் ஏற்கெனவே அளித்த மதிப்பெண்களோடு கூட்டி, முதல் இடக் கலைஞரை முடிவு செய்வது என்பது அந்த இசை வல்லுநர்களை அவமதிப்பதுதானே?

    அடுத்து வரும் போட்டிகளிலேனும் அநீதியான் இந்த ஏற்பாட்டை விஜய் டி.வி – ஏர்டெல் குழுமம் கைவிடுமா?

    பொதுமக்களின் தீர்ப்பையும் தெரிந்துகொள்ள வேண்டு மென்றால், அதற்கு வேறு வழி இருக்கிறது. இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகும் ஐந்து போட்டியாளர்களுக்குக் கீழே இருக்கும் – இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகாத –  வேறு ஐந்து போட்டியாளர்களை மக்கள் முன் பாட வைத்து அவர்கள் வாயிலாக முதல் இடம் பெறும் கலைஞரைத் தேர்ந்தெடுக்கலாமே? அறுபது லட்சம் பெறுமான வீடு தராவிட்டாலும், வேறு வகையான பரிசுகளை இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகாத இவர்களுக்குத் தரலாம் அல்லவா? இவ்வாறு செய்தால், நடுவர்களாய்ப் பணி புரிந்த இசைக்கலைஞர்களைப் பெருமைப் படுத்துவதாக இருக்குமே.

 

செய்வரர்காளா?

 

நல்ல வேளை! பரத நாட்டியப்போட்டி வைத்து, நாட்டியக் கலைஞர்கள் நடுவர்களாக இருந்து தீர்ப்பு வழங்கிய பிறகு, பார்வையாளர்களின் வாக்குகளையும் சேர்த்து, மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் வெற்றி பெற்றவரை அறிவிக்கிற அளவுக்கு அபத்தமாக இவர்கள் போட்டியை நடத்தாமல் இருந்தால் சரி!

 

    பிரகதி குருப்பிரசாத் எனும் மிகச்சிறந்த இசைக்கலைஞர் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப் பட்டதைத் தாளாமல் எழுதப் படும் கட்டுரை இது.

 

                  jothigirija@live.com

Series Navigationரணம்வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -35
author

Similar Posts

10 Comments

  1. Avatar
    ஷாலி says:

    மூன்றாந்தர சினிமா பாடல்களை வைத்தே இங்கு மக்களிடம் வர்த்தகம் நடக்கிறது. இதற்க்கு பிரகதி குருபிரசாத் போன்ற சங்கீத கலா பீடங்கள் கலந்து கொள்வது தவறு என்று ஜோதிர் லதா கிரிஜா எடுத்துச்சொல்ல வேண்டும். சொக்கா!…ஆயிரம் பொன்னாச்சே! என்று தருமி போல் புலம்புவதில் அர்த்தமில்லை.
    திருவையாறு சங்கீத ஆராதனை நாத பிரம்மத்தில் கலந்துகொள்ள வேண்டிய குரு பிரசாத் எஸ்எம்எஸ் சூதாட்டத்தில் பங்கு கொண்டது தவறு. எல்லாம் அறுபது லட்சம் செய்யும் வேலை.இதுவே ஜோதிரின் கவலை.

  2. Avatar
    இளங்கோ says:

    இவையெல்லாம் உண்மை எனினும், விதிகள் வகுக்கப்பட்ட பின்னரே, அதன் சாதக பாதகங்களை அறிந்தே தேவையின்பாற்பட்டு, போட்டியில் கலந்து கொள்கின்றனர். முடிவு அறிவித்த பிறகு, இங்ஙனம் எழுதுவது, பரிசு பெற்றவரின் மன நிலையைப் பாதிக்காதா. எழுத்தாளர் ஜோ.ல.கி க்கு இது தெரிய வேண்டாமா?

    நிற்க, நானும் பிரகதியின் பாடல்களை விரும்பிக் கேட்பவன், ரசிப்பவன். அந்தக் குழந்தை அதீதத் திறமை படைததவள் என்பதில் சந்தேகம் இல்லை.

    ஆனால், போட்டியின் இறுதி நாளன்று, வாக்களிக்கும் மக்களை தன் வசம் இழுக்க சமயோசிதமாய் “தாய் மண்ணே வணக்கம்” பாடலைத் தேர்ந்தெடுத்த ஆஜித் (அல்லது அவனைச் சார்ந்தோர்) போல அந்த மாபெரும் கூட்டத்தின் போக்கறிந்து அப்படியொரு பாடலைத் தேர்வு செய்து பாடாதது பிரகதியின் பக்கத்தில் நடைபெற்ற வழுக்கல் என்பது என் கணிப்பு.

  3. Avatar
    smitha says:

    Everyone knows that the results are rigged. This time also it was proved so.

    Aajith, the eventual winner sang “vande maaataram”. He sang very well, but the round he sang in was the “classical song” round.

    Is “vande maataram” a classical song? When all the other contestants sang classical songs, why was aajith not penalised for singing this song in that round?

    Also, who is to keep count of the number of sms a contestant gets?

    It is a pity that well know carnatic musicians like nithyashree, sowmya & others come a s judges knowing very well the result.

  4. Avatar
    smitha says:

    I happened to have a small talk with Renu who was one of the 3 finalists (the others being ravi & ajeesh) in the last years edition of super singer seniors.

    She said that before the finals, she was given a hint that ajeesh is going to be the winner.

    In fact, most of the winners like ajeesh, mathew are struggling to get chances to sing in filsm whereas singers like srinivas, renu, sathya prakash are singing many songs in films.

    This time aajith, no doubt sang well, but did not surely deserve to be the winner. Also, he got a scholarshop in the A.R rehman run music school.

    Does this ring a bell?

  5. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர். says:

    மதிப்பிற்குரிய ஜோதிர்லதா கிரிஜாம்மா,

    அம்மா, நீங்கள் நினைப்பதும் எழுதியதும் முற்றிலும் நிஜம்…..
    என் ஆதங்கமும் அதுவே…பிரகதியின் குரல் தான் ஏகோபித்த பாராட்டையும் கேட்ட அனைவருமே தனை மறந்து ரசிக்க வைத்தது. “இசையரசி எந்நாளும் நானே…” பாடலை அவ்வளவு எளிதாகப் பாடியவர். “செல்லக் குரலுக்கான தேடலில்….வளர்ந்த குழந்தைகளைப் சின்னக் குழந்தைகளோடு போட்டியிட வைத்ததே முதல் தவறு.இறுதிக் கட்டத்தில் அரை மதிப்பெண்ணில் தோற்று விட்டாள் ….(???!!!)) என்று சப்பைக் கட்டு கட்டியபோது….மனசு ச்சே…இங்கயும் ஏதோ ஊழல் நடந்திருக்கு…என்று எண்ணியது. உண்மையில் உண்மையான திறமைக்கு வெற்றி கிடைப்பது கடினம் என்பது போலிருந்தது இந்த நிகழ்ச்சி.

    இரவு ஒரு மணியையும் தாண்டி…அனைவரும் பிரகதி தான் என்று காத்திருந்தபோது..பொறுமையின் எல்லை கடந்ததும்….பார்க்காமல் விட்டோம். முடிவு தெரிந்ததும்…வருத்தம் தான் மேலோங்கியது…ஆஸித்….அறிவிக்கப் பட்டபோது மனது ஏற்கவில்லை. “இது குரலுக்கான போட்டியா அல்லது தேசிய உணர்வைத் தூண்டும் போட்டியா”..? ஏ ஆர் ரகுமான் அவர்கள் “சாவி கொடுத்ததால்” விளைந்த…….யா? இனிமேல் பெற்றோர்களே….இந்தப் போட்டியில் திறமை இருக்கு என்று குழந்தைகளை சேர்த்து இறுதிக் கட்டம் வரை இந்தக் கண்துடைப்பு விளையாட்டில் கலக்க விட்டு இறுதியில் வேண்டாத மனக் கவலை முக்கியமாக உங்கள் குழந்தைகளுக்கு உண்டாகும்படி செய்யாதீர்கள்.

    இந்த ஒரு ஷோவில் டி .ஆர்.பி. ரேட்டிங் ஜாஸ்தியாவதால்…..இந்த ஓட்டை… எஸ்.எம்.எஸ். சில் கொடுக்கும் பரிசில் பத்து மடங்கு ஒரே ஷாட்டில் சம்பாதித்து விட்டு செல்லும் வர்த்தகம்….இது போன்ற போட்டிகளுக்கு அனுப்பும் எஸ்.எம்.எஸ். க்கு தனி கட்டணம் என்பதை அறியாத ஜனங்கள்….இந்த சூதாட்டத்தில் தங்களின் கைக்காசைத் விரயமாக்கி…..இறுதியில் ..ச்சே…இவ்வளவு தானா? எனும் நிலை. இது ஆரம்பித்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது…இனி வளர்ந்து வளர்ந்து…..வளர்ந்து…ஜப்பானுக்கே ஏர்டெல் நிறுவனம் கடன் கொடுக்கும்..

    இது போலவே இன்னும் கண்துடைப்பு நிகழ்ச்சிகள் ஆயிரம் ஆயிரமாகப் பரிசை அறிவித்து எஸ்.எம்.எஸ்.என்று சுரண்டிக் கொண்டிருக்கிறது.

    சிந்திக்க வைத்த பதிவு. மிக்க நன்றிம்மா.

    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  6. Avatar
    K A V Y A says:

    இரு பரிசுகளை வைக்கலாம்:

    1. தற்போது இருக்கும் முறைப்படி. வர்த்தக ரீதியானது. பாடலைக் கேட்கலாமேயே தனக்குத் தெரிந்தவர்கள் என்பதால் போடப்படும் வாக்குக்களை வைத்து. வாக்க்குகள் பெற ஊரெங்கும் சுவரோட்டிகள் பாடகரின் குடும்பத்தாரால் ஒட்டப்பட்டிருப்பதை திருநெல்வேலியில் கூட காணலாம்.

    2. இசை இரசிகர்களின் வாக்குக்களை வைத்து.

    கால்பந்து விளையாட்டில் சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுக்கும்போட்டியில் (யுகேவில்), இரு பரிசுகள் கொடுக்கப்படும்:

    1. கால்பந்து இரசிகர்களின் வாக்குக்களை வைத்து. இவர்கள் தங்கள் கிளப் வீரரைப் பெருவாரி வாக்குகள் போட்டு வெற்றிபெறச்செய்வர்.

    2. கால்பந்து விமர்சக்ர்கள் அதாவது பத்திரிக்கை ஸ்போர்ட்ஸ் ரிபோர்ட்டர்ஸ்.

    இருவரில் எவர் உண்மையிலேயே சிறந்த ஆட்டக்காரரென்று எல்லாருக்கும் தெரியும்.

  7. Avatar
    ஷாலி says:

    ஒரு முறை மேல் நாட்டில் மாறு வேடப்போட்டி ஒன்றை நடத்தினார்கள்.அதில் சார்லி சாப்ளின் மாதிரி யார் திறமையாக நடிக்கிறார்கள் என்பதே போட்டி. யாருக்கும் தெரியாமல் சார்லி சாப்ளின் அவர்களும் அப் போட்டியில் கலந்து கொண்டார்.
    அவருக்கு கிடைத்தது மூன்றாம் பரிசு.இதுதான் உலகம் இவ்வுண்மையை ஜோதிரும்,ஜெயஸ்ரீ அவர்களும் புரிந்து கொண்டால் நெஞ்சில் மயக்கமில்லை கலக்கமில்லை.

  8. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர். says:

    ஆம் ஆம்…உலகம் மாறித்தான் போச்சு,.அது புரிந்த போது தான் வருத்தம் உலகத் தராசு ஒரு பக்கம் நன்றாக சாய்ந்து விட்டது…!

  9. Avatar
    K A V Y A says:

    //அவருக்கு கிடைத்தது மூன்றாம் பரிசு.இதுதான் உலகம் இவ்வுண்மையை ஜோதிரும்,ஜெயஸ்ரீ அவர்களும் புரிந்து கொண்டால் நெஞ்சில் மயக்கமில்லை கலக்கமில்லை.//

    முதலில் இஃது உணமையென்றால்தானே மயக்கமா கலக்கமா என்ற கேள்வியெழும்.

    ஏன்?

    சார்லி சாப்ளின் ஒரு உருவகத்தைக் கொடுத்தார். அவ்வுருவகம் தனக்கென செயலகளை தொடர்ந்து அப்படியே செய்தது எல்லாப்படங்களிலும். அஃதொரு போலி உருவகம். உண்மையான சாப்ளின் முகமும் செய்லகளும் அப்போலி திரையுருவத்தைப் போலிருக்கா. சாப்ளினை நேரில் கண்டவர் எவரும் நம்பார். நாமும் அவர் படங்களைப்பார்த்து இவரா அவ்வுருவகத்தை நமக்குத்தந்தார்? தொடர்பேயில்லையே? இது சாபிளினின் ஜீனியசைப்பறை சாற்றுகிறது.

    அதே உருவகத்தைத் திரையில் மீண்டும்மீண்டும் பார்த்து அதை அப்படியே நடித்துக்காட்டுபவர்களிடையே போட்டி வரும்போது, அங்கே மனிதர் சாப்ளினும் ஒரு போட்டியாளரே. அவர் வெற்றியும் தோல்வியும் அவர் அன்னேரத்தில் எப்படி அத்திரையுருவத்தை நேரில் கொண்டுவருகிறார் என்பதைப்பொறுத்தே வரும்.

    அவர்தான் ஜெயிக்க வேண்டுமென நீங்கள் நினைத்திருந்தால் தவறு உங்கள் மேல். போட்டியாளர்கள் மேலன்று. The truth must have been that on that day, some participants would have brought the screen character alive on the stage better than the real Chaplin could. So he lost. One of them won.

  10. Avatar
    C.Kumar says:

    ஆஜீத் டாப் 30 வந்த அந்த நிமிடமே அவனது இறுதி வெற்றி உறுதி செய்யபட்டுவிட்டது. நடக்க வேண்டியதெல்லாம், ஆஜீத் எப்பொழுது இடையில் நீக்கபட்டாலும், Wild cardல் வர வேண்டியது மற்றும் அதன் மூலம் Wild cardலும் அதன் மூலம் இறுதி போட்டியிலும் அவன் வெற்றி உறுதி செய்யபட வேண்டியது தான். அன்றைய இறுதி போட்டியில் ஆஜீத் உடன் யார் பாடியிருந்தாலும், எடுத்துக்காட்டுக்கு, பி.சுசீலா, வாணி ஜெயராம், மலேசியா வாசுதேவன், L.R.ஈஸ்வரி இந்த நாலு பேரும் (மற்ற நாலு போட்டியாளர்களுக்கு உருவகமாக), ஆஜீத்தான் வெற்றி பெற்றிருப்பான். இதன் பின்னணியில் பல விஷயங்கள் இருந்தன.
    இங்குள்ளவர்களுக்கு கூட சிலருக்கு ‘ழ’ சரியாக வராது. ஆனால் அமெரிக்காவில் வளர்ந்தும் இங்குள்ளவர்களை போல் கர்நாடக, ஹிந்துஸ்தானி சங்கீதங்களை கற்ற பிரகதியின் திறமையை வெளிப்படையாக பாராட்டாவிட்டாலும் அவரை பல்வேறு சொத்தை காரணத்தை சொல்லி சிறுமை படுத்த பல்வேறு தளங்களில் முயற்சிகள் நடைபெற்றன. ஒரு பாட்டு போட்டி என்றால் எல்லாவிதமான பாடல்களையும் பாட வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒன்றும் தவறில்லை. பின் வரும் பாடல்களில் ஒன்றைக்கூட ஆஜீத் பாடவில்லை என்பது இசையறிந்த அனைவரும் அறிவர். சங்கீத ஜாதி முல்லை, ஒரு நாள் போதுமா, பாட்டும் நானே, இசை தமிழ் நீ செய்த, நீயே உனக்கு என்றும், சொல்லடி அபிராமி, உதயா உதயா, செந்தமிழ் தேன் மொழியாள், சின்னஞ்சிரிய வண்ண பறவை. ஆஜீத்-தான் பாடியவர்களிலேயே அனைத்து வகையிலும் சிறந்தவன் என்று இசையை தெய்வமாக கருதுபவர்கள் அந்த தெய்வத்தின் மீது சாட்சியாக கூறட்டும். அடுத்த பகுதிகளில் விஜய் டிவி சித்ரா போன்ற மேதைகளின் நேரத்தை வீணடித்து இந்த சங்கதி சரியில்லை அந்த சங்கதி சரியில்லை என்று அவரை கூறவைக்காமல் பசங்களை அவர்கள் இஷ்டத்துக்கு கத்த விடுங்கள்!!

Leave a Reply to K A V Y A Cancel reply

Your email address will not be published. Required fields are marked *