வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -1

This entry is part 16 of 29 in the series 12 மே 2013

 

Cover image -1

மூன்று அங்க நாடகம்

 

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா

தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++++

1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ]

2.  [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU  ]

The Devils Disciple, Presented by Neptune Theatre

பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம்  அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் நடந்ததாக எழுதப் பட்ட ஒரு கற்பனை நிகழ்ச்சி.   பிரிட்டீஷ் காலனி அதிகாரி கைது செய்து  தூக்கில் இடப் போன  ஒரு சுதந்திரப் போராட்டக் காரனின் ஆள் மாறாட்ட சூழ்ச்சியை மையமாய் வைத்து, அரசியல் ஆவேசம் கொந்தளிக்க எழுதப் பட்டிருக்கிறது.  அந்தப் போராட்ட மனிதன் நாட்டுத் துரோகியா இல்லை  தியாகியா என்பதை பெர்னாட் ஷா மிக நகைச்சுவையோடு மூன்று அங்கங்களில் காட்டுகிறார்.  அவன் மெய்யாக வேதாளத்தின் மாணாக்கனா இல்லையா வென்று வாசகரே நாடகத்தைப் படித்தோ, பார்த்தோ முடிவு செய்து கொள்ளட்டும்.

 

Fig 1 You can have a quiet word

நாடக மேதை பெர்னாட் ஷா

ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர்.  அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வி யுற்ற வணிகத் துறையாளர். வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர்.  இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார்.  அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார்.  நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வியுறும் நாடகங்களை எழுதினார்.  பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களை விமர்சனம் செய்து 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங் களைப் பற்றித் திறனாய்வு செய்து வந்தார். அப்போது பொது வுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளா ராகவும் உரைமொழி ஆற்றினார்.

அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), மற்றும் தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans) வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple)சீஸர் & கிளியோபாத்ரா (Caesar and Cleopatra),  காப்டன் பிராஸ்பவுண்டு மாற்றம் (Captain Brassbound’s Conversion), மேலும் நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898), மிஸிஸ் வார்ரனின் தொழில் (Mrs. Warren’s Profession) (1893) போன்றவை.  ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.

 

Fig 2 How long do you allow

 

வேதாளத்தின் மாணாக்கன் நாடகத்தைப் பற்றி :

1777 ஆண்டு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் அமெரிக்க சுதந்திரப் போர் ஆரம்பமான இரண்டாவது வருடம்.   இங்கிலாந்தின் கோரப் பிடியிலிருந்து அமெரிக்கக் காலனிகள் விடுதலைத் தாகமுற்றுத் தொடர்பிலிருந்து அற்றுக் கொண்டு போகப் போராடிய காலம் அது.   இருபுறத்திலும் ஒருவரை ஒருவர் தாக்கிப் புரட்சி உண்டாக்கி உணர்ச்சி வெள்ளம் பெருகிப் பலர் துரோகிகளாய்க் கருதப் பட்டுத் தூக்கு மரத்தில் பிரிட்டீஷ் இராணுவ அதிகாரிகளால் கொல்லப்பட்ட போர்க் காலம் அது .  பிரிட்டனின் ஆதிக்கக் குறிக்கோள் அமெரிக்காவில் பிரிட்டீஷ் ஆட்சி அதிகாரத்தை இழந்து விடாமல் மீண்டும் நிலைநிறுத்திக் கொள்வது.   அமெரிக்கருக்கு அந்த ஆதிக்க அடிமைப் பிடியிலிருந்து விடுபட்டுச் சுதந்திர நாடாக்கத் தாய் நாட்டுடன் போரிடுவது.   அதற்காகச் சிறையிடப்பட்டு தூக்கு மரமேறி உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் ஒரு சாதாரண அமெரிக்கக் குடிமகனின் அதிர்ச்சி நாடகம் இது.   அமெரிக்கத் தெருக்களில், ஊர்களில்  எங்கும் இராப் பகலாய்ப் பிரிட்டீஷ் இராணுவக் காவலர் கண்காணித்து வரும் போர்க்காலம் அது.   அப்போது இருதரப்பில் இருக்கும் கிறித்துவப் பாதிரியார்களும் ஆயுதங்கள் ஏந்தி தம் இனத்தாருக்கு மறைமுகமாக உதவி செய்து வந்தனர்.   அத்தகைய துரோகிப் பாதிரியார் ஒருவரைச் [அந்தோணி ஆண்டர்சன்] சிறை செய்ய வந்த பிரிட்டீஷ் இராணுவ அதிகாரிகள்  உண்மை முகம் தெரியாமல் அப்பாவிக் கயவன் ஒருவனைக்  [ரிச்செர்டு டச்சியான்] கைது செய்து, குற்றம் சாட்டித் தூக்கிலிட உத்தரவு விடுகிறார்.   தன்னை யாரென்று காட்டிக் கொள்ள விரும்பாத குசும்பன் ரிச்செர்டு பாதிரியாரைக் காப்பாற்றத் தன்னுயிரைத் தியாகம் செய்யவும் தயாரா கிறான்.  இதைத் தனது மனைவி மூலம் அறிந்த பாதிரியார் ஆயுதம் ஏந்தி, பிரிட்டீஷ் இராணுவத்திடம் நிரூபித்து “வேதாள மாணாக்கன்” ரிச்செர்டைத் தூக்கு மேடையிலிருந்து  காப்பாற்றுகிறார்.   அதற்கு பாதிரியாரின் அழகிய மனைவியும் உதவி செய்கிறாள்.

[தமிழில் எழுதப் பேசும் வசதிக்காக பெர்னாட் ஷாவின் நாடகப் பெயர்கள் சிலவற்றை நான் எளிதாய் மாற்றி இருக்கிறேன்.]

 

**********************

Fig 3 This visit is very kind of you

நாடக  உறுப்பினர்

1.  ரிச்செர்டு டச்சியான்   [35 வயது]  (Richard Dudgeon)

2.  கிரிஸ்டி டச்சியான் [வயது 22], ரிச்சர்டின் சகோதரன்   (Christy  Dudgeon)

3.  கிறித்துவப் பாதிரியார் மேதகு அந்தோணி ஆண்டர்சன்   [வயது 50]

(Rev. Anthony Anderson)

4.  ஜூலியா ஆண்டர்சன் பாதிரியாரின் அழகிய மனைவி   [30 வயது] (Wife : Julia Anderson)

5.  ஜெனெரல் பர்காயின்  [50 வயது]  (British General Burgoyne)

6.  பிரிட்டீஷ் மேஜர் சுவிண்டன்  [55 வயது] (Major Swindon)

7.  ஸார்ஜன்ட்   (Sergeant)

8.  வழக்கறிஞர் ஹாக்கின்ஸ்   (Lawyer Hawkins)

9.  மிஸிஸ். அன்னி டச்சியான் :  [வயது 60] [Mrs Annie Dudgeon : Mother of Richard Dudgeon and wife of Timothy Dudgeon)

10.  சாப்பிளின் புரூட்நெல்   (Chaplin Mr Brudenell)

11.  சிற்றப்பா வில்லியம் டச்சியான் & மனைவி  (Uncle William Dudgeon & Wife)

12. சிற்றப்பா  டைட்டஸ்  டச்சியான் & மனைவி  (Uncle Titus Dudgeon & Wife)

13  இளம் மங்கை : எஸ்தர்  [17 வயது] பீட்டர் டச்சியன் மகள்.

 

************************

வேதாளத்தின் மாணாக்கன்

அங்கம் -3 பாகம் -1

மூன்று அங்க நாடகம்

Fig 4 He is no longer my husband

இடம்:  அமெரிக்காவில் வெப்ஸ்டர்பிரிட்ஜ் ஊர்ச் சுற்றுப்புறம் , நியூ ஹாம்ஷயர்.  [Websterbridge, New Hamshire, U.S.A]  பாதிரியார் இல்லம்.

நடந்த ஆண்டு : 1777  (கலவரம் நிறைந்த அமெரிக்க சுதந்திரப் போராட்டக் காலம்)

பொழுது :  மறு நாள் இலையுதிர் காலத்து காலை நேரம்.

அரங்க அமைப்பு:   வெஸ்டர்பிரிட்ஜ்  நகர் மையத்தில் கட்டப் பட்டிருக்கும் பிரிட்டீஷ் இராணுவத் தலைமை ஆணையகம்.  கைதிகள் அடைக்கப் பட்டுள்ள சிறைக்கள அரண்கள்.  இராணுவக் காவலன் ஒருவன் கைதிகள் தனிப் பேச்சறைக் கதவைத் திறந்து,  ஜூலியா உள்ளே அனுமதிக்கப் படுகிறாள்.  இரவில் சரிவரத் தூங்காது, ஜூலியா பாதி மயக்க நிலையில் மெதுவாய் நடந்து வருகிறாள்.    காவலன் ஜூலியாவிடம் பரிவோடு நடந்து கொள்கிறான்.   கைதி ரிச்செர்டைக் காலையில் காண வந்த  ஜூலியாவுக்கு ஆறுதல் கிடைக்கிறது.

பிரிட்டீஷ் ஸார்ஜென்ட்:  [ஜூலியாவைப் பார்த்து]  நீ அவனுடன் சிறிது நேரம் இங்கு பேசலாம் பெண்ணே !

ஜூலியா:  வெகு நேரம் நான் காத்திருக்க வேண்டுமா ?   நான் அவன் முகத்தைப் பார்த்துப் பேச வேண்டும்.   இதுவே என் இறுதிச் சந்திப்பு !

 

Fig 5 You have 20 minutes

 

ஸார்ஜென்ட்:   இல்லை பெண்ணே !   ஒரிரு நிமிடங்கள்தான் !   நீதி மன்ற விசாரணைக்கு அவனை அழைத்து வந்தோம் !  இரவில் நன்கு தூங்கினான் ! காலையில் வயிறு முட்டத் தின்றான் !   கவலை இல்லாத மனிதன்போல் களிப்புடன் காணப் பட்டான்.

ஜூலியா:   அவன் மனக் குளிர்ச்சியோடு இருந்திருக்கிறான் என்று சொல்கிறாயா ?

ஸார்ஜென்ட்:    ஒழுக்கமான கைதியாக நடந்து கொண்டான்.  சிறைப் பாதிரி கைதியைச் சோதிக்கப் போனார்.   அவனொரு நாகரீக மனிதன் போல் கூலியாட்களுடன் நடந்து கொள்கிறான்.   நீ அவனுக்கு உறவு.  [திறக்கும் கதவைப் பார்த்து]  அதோ அவனைக் கூட்டி வருகிறார்.  [காவலர் முன்னும் பின்னும் தொடர, ரிச்செர்டு கண்ணியமாக நடந்து வருகிறான்.  ஸார்ஜென்ட் தலை அசைக்க இரு காவலரும் நீங்குகிறார்.]   நீ பேசலாம் உன் மனைவி யோடு.

ரிச்செர்டு:  [ஜூலியாவைப் பார்த்து]  என் கண்மணி !  நான் நேசிக்கும் மாது !  [அவள் கையைப் பற்றி முத்தமிடுகிறான்.]  எவ்வளவு நேரம் அனுமதிப்பீர் ஸார்ஜென்ட் !  மனமுடைந்த ஒரு மனிதன் மனக் கவலை கொண்ட மனைவியிடம் இறுதியாய் விடை பெற்றுக் கொள்ள ?

ஸார்ஜென்ட்:  நாங்கள் அனுமதிக்கும் நேரம் வரை !  நீதி மன்றம் கூடும் வரை நீங்கள் பேசிக் கொள்ளலாம்.

ரிச்செர்டு:  ஆரம்ப மணிச் சத்தம் கேட்டதே !

ஸார்ஜென்ட்:  ஆனால் சற்று தாமதமாகும் !   அதுவரை நீங்கள் பேசலாம். ஜெனரல் ஜான் பர்காயின் இப்போதுதான் வந்தார்.   கண்ணியவான் என்று நாங்கள் புகழ்வோம் அவரை !   அமெரிக்கரிடம் அவர் என்றும் குற்றம் காண மாட்டார்.  எனக்கு நன்றாகத் தெரியும் அவரை.  போர்ச்சுகலில் நான் அவரிடம் வேலை பார்த்தவன்.   இப்போது நீங்கள் இருவரும் இருபது நிமிடங்கள் பேசலாம்.  உங்கள் நேரத்தை வீணாக்காது நான் போகிறேன். மனைவி யோடு நீ பேசு. !   [ஸார்ஜென்ட் போகிறான், கதவைச் சாத்திக் கொண்டு]

Fig 6 He cannot save me

ரிச்செர்டு:  மிஸிஸ் ஆண்டர்சன் !  இந்த வருகை உனது கருணை மனதைக் காட்டுது.   நலமா நீ  ?   நேற்று நேர்ந்த அதிர்ச்சிக்குப் பிறகு நீ இரவில் சரியாகத் தூங்க வில்லை போல் தெரியுது.   உன்னுடன் பேசி முடிப்பதற்குள் என்னை இங்கு இழுத்து வந்து விட்டார் இராணுவக் காவலர் !  நான் எஸ்தரை அனுப்பி உன்னைக் கவனித்துக் கொள்ளச் சொன்னேன்.  அங்கு அவள் வந்தாளா ?

ஜூலியா:  [வருத்தமோடு]  என்னைப் பற்றி நீ கவலைப் படாதே !  இங்கு நான் வந்தது என்னைப் பற்றிச் சொல்வதற்கு அல்ல.  [அழுது கொண்டே] உன்னை இங்கு … இங்கு …இன்று ?

ரிச்செர்டு:  [மனக் கவலையின்றி]  சரியாக இன்று பகல் 1 மணிக்கு.  [கழுத்தைல் கை வைத்துக் காட்டுகிறான்] அதே நேரத்தில்தான் சித்தப்பா பீட்டரையும் தூக்கில் இட்டார் !  [ஜூலியா நடுங்குகிறாள்]  உன் கணவர் பாதுகாப்பாய் ஒளிந்துள்ளாரா ?  நான் சொன்ன வற்றைச் சொன்னாயா ?

ஜூலியா:  அவர் இனிமேல் என் கணவர் இல்லை !

ரிச்செர்டு:  [கண்களைப் பெரிதாக்கி]  என்ன ?  என்ன ?

ஜூலியா:   உன் சொற்படி செய்ய நான் தவறி விட்டேன். எல்லாவற்றையும் அவரிடம் நான் சொல்லியும் அவர் கேட்க வில்லை  !   இங்கு வந்து உன்னைக் காக்கும்படி வேண்டினேன்.  அவரோ அதைக் கேளாது எங்கோ ஓடிவிட்டார் !

ரிச்செர்டு:  நான் அதைத்தான் எதிர்பார்த்தேன்.  அவர் இங்கு வந்து என்னைக் காப்பாற்ற முடியாது.  எங்கள் இருவரையும் பிடித்துத் தூக்கில் போட்டு விடுவார்.

ஜூலியா:   இந்த மாதிரித் தருணங்களில் அவரிடத்தில் நீ இருந்தால் என்ன செய்திருப்பாய் ?

 

Fig 7 You took his place

ரிச்செர்டு:   பாதிரியார்  செய்தது போல்தான் நானும் செய்திருப்பேன்.

ஜூலியா:   என்னிடம் நேராகச் சொல் !  நேர்மையாகச் சொல் !  நீ அப்படிப் பட்ட சுயநலவாதி என்றால் நேற்று ஏன் அவருக்குப் பதில் உன்னைப் பிடித்துக் கொள்ள ஒப்புக் கொண்டாய் ?

ரிச்செர்டு:   ஏனென்று தெரியவில்லை மிஸிஸ் ஆண்டர்சன் !   நானும் ஏன் அப்படிச் செய்தேன் என்னும் அதே கேள்வியைத்தான் என்னிடம் கேட்டுக் கொள்கிறேன்.  பதில் கிடைக்க வில்லை.

ஜூலியா:  பாதிரியாருக்காக நீ செய்திருக்கிறாய் !   உன்னை விட அவர் நல்வழியில் சேவை செய்து வாழத் தகுதி பெற்றவர் என்று நீ நம்புகிறாய் !

ரிச்செர்டு:   இல்லை, இல்லை, அப்படி யெல்லாம் ஒன்றுமில்லை !  நீ சொல்வது உயர்ந்த காரியம் !   நான் அப்படி ஓர் உத்தமன் இல்லை !  நான் அவருக்காக என்னுயிரைத் தியாகம் செய்ய முன்வரவில்லை !

ஜூலியா:  [முகத்தைச் சுழித்துக் கொண்டு ஆர்வமோடு]  அப்படியானால் என் பொருட்டு நீ அதைச் செய்தாயா ?

ரிச்செர்டு:  [நிமிர்ந்து கொண்டு]  உன் மீதும் சிறிது அனுதாபம் உள்ளது.   உனக்காக நான் செய்ததாக நீ நினைப்பது சரியே.  காவலர் என்னைக் கைது செய்த போது தடுக்காது நீயும் அதை வரவேற்றாய் அல்லவா ?

ஜூலியா:  இரவு பூராவும் நான் அதை நினைத்து நினைத்து அழுதேன் தெரியுமா ?   உனக்குத் தூக்குக் கயிறு என்ற போது நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

[மிக்க ஆர்வமோடு, பரிவோடு]  நீ என் கணவரைக் காத்ததுபோல், நான் உன்னை காப்பாற முடிந்தால் , மரணம் எப்படிக் கடுமையானாலும் ஏற்றுக் கொள்கிறேன்.  நானிங்கு வந்தது அதற்குத்தான் !

 

Fig 8 You let them take me

ரிச்செர்டு:  [சிரித்துக் கொண்டு]  தூக்கில் நீ சித்திரவதை அடைய நான்  விட்டு விடமாட்டேன் !  உன்னாலும் என்னைக் காக்க முடியாது.

ஜூலியா:   நான் உன்னைக் காப்பாற்ற முடியும் என்று நீ நினைப்ப தில்லையா ?

ரிச்செர்டு:  [கேலியாக] எப்படிச் செய்வாய் ?   உனது உடுப்புகளை நான் அணிந்து கொண்டா ?

ஜூலியா:   இல்லை, இல்லை !    நீதி மன்றத்தில் நீ யாரென்று உண்மையைச்  சொல்லி நான்  நிரூப்பிக்க முடிந்தால் … உன்னைத் தப்பிக்க வைக்க முடியும்.

 

*******************

 

[தொடரும்]

***************

தகவல் :

Based on The Play : The Devil’s Disciple By : George Bernard Shaw, –

1.  Penguin Plays :  The Devil’s Disciple in Three Plays for Puritans (1958)

2.  http://www2.hn.psu.edu/faculty/jmanis/gbshaw/devil-disciple.pdf   [77 Pages]

(Complete English Drama of The Devil’s Disciple)

3.  http://en.wikipedia.org/wiki/The_Devil’s_Disciple  [December 14, 2013]

(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(d) The Wicked Wit of Oscar Wilde (1997)

(g) The Great Quotations Compiled By : George Seldes (1967)

(h) BBC DVD Classics “The Devil’s Disciple”  – Bernard Shaw’s (120 minutes) (1987)

(i) A Guide to the Plays of Bernard Shaw By : C.B. Purdom (1964)

(j) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986

(k)  http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs  [You Tube : The Devil’s Disciple Drama]

 

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 12, 2013)

http://jayabarathan.wordpress.com/

Series Navigationபுதிய வலை இதழ் – பன்மெய்சுமைதாங்கி சாய்ந்தால் ……..
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *