ஷாநவாஷின் “சுவை பொருட்டன்று- பரோட்டாவை முன்வைத்து சில கவிதைகள்

This entry is part 7 of 17 in the series 10 ஏப்ரல் 2016

சுப்ரபாரதிமணியன்

ஷாநவாஷின் சிறுகதையொன்றில் “ கறிவேப்பிலை “ கடைக்காரர் கறிவேப்பிலைக் கொத்தை சடக்கென்று ஒடித்து கொசுறு போடும்போது “ வேண்டாம் எங்கள் வீட்டில் கருவேப்பிலை கன்று இருக்கிறது “ என்று அம்மா சிரித்தபடி சொல்லும் வார்த்தைகள் இன்னும் வாடாமல் அப்படியே இருக்கிறது என்று ஆரம்பித்திருப்பார்..
நவாஸிடம் இந்த கொசுறு கறுவேப்பிலை வேலையெல்லாம் இல்லை. முழு கருவேப்பிலைக் கன்றையே கையில் எடுத்துத் தந்து விடுவது போலத்தான் அவரின் விஸ்தாரணமான பேச்சு இருக்கு.
பரோட்டா, கறி என்று ஓரிரு வார்த்தைகளை தெளித்து விட்டால் போதும் அவர் அதுபற்றியெல்லாம் விரிவாக, சுவரஸ்யமாகப் பேசிக் கொண்டே இருப்பார். அந்த வார்த்தைகளின் நதிமூலம் , அர்த்தம், கலாச்சாரம், அது தொடர்பான வெவ்வேறு கூறுகள் அவரின் பேச்சு விரியும். அவரின் உணவுக்கடைக்குப் பெயர் கறி வில்லேஜ்.

அவர் கடையில் அதிகம் சாப்பிடக்கொடுக்கவில்லை. ஒரு மதியத்தில் நன்கு சாப்பிட்டு விட்டு பின்னதான அரைமணி நேரத்தில் சென்றிருந்தேன். சாப்பிட ஆசை இருந்தாலும் முடியவில்லை. கறி என்பதற்கு விளக்கம் கேட்டால் 10 பக்கங்களுக்கு விபரங்கள் தந்து விடுவார். அப்படித்தான் பரோட்டா பற்றி அவர் சொல்வதும்.பரோட்டாவை முன்னிருத்தி அது தரும் கனவுகள், கற்பனைகள், அறிமுகப்படுத்தும் மனிதர்கள், பரோட்டாவும் மனிதர்களும் தரும் சுவையான அனுபவ எண்ணங்களை ஒரு நூலாய் வடிவமைத்திருக்கிறார்.

நம்மூரில் சிங்கப்பூர் ரோட்டா, மலேசியா பரோட்டா என்று ஆரம்பித்து பாக்கிஸ்தான் பரோட்டா கூட வந்து விட்ட்து. பாகிஸ்தான் பரோட்டாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் சமீபத்தில் வேலூர் அருகே ரகளை செய்த்து சமீபத்திய செய்தி.

பரோட்டாவுக்கு எதிராக தமிழ்நாட்டில் ஒரு பெரிய இயக்கமே நடந்து வருகிறது. மருத்துவர் கு.சிவராமன் இதில் முக்கியப்போராளி. நான் பரோட்டாவைப் பற்றி நினைக்கிற போது அவர் பேச்சு மனதில், கண்ணில் வந்து பரோட்டா சாப்பிடுவதை மறுக்க வைக்கும். ஆனால் பரோட்டா பற்றி ஷாநவாஸ் பேசும் போது சாப்பிடத்தோன்றும். தமிழ்நாட்டில் அய்ந்தாம் தர ஆட்டா மாவு பரோட்டாவுக்குப் பயன்படுகிறது சிங்கப்பூரில் நாங்கள் பயன்படுத்துவது முதல் தர மாவு. தமிழ்நாட்டில் அந்தக் குரலுக்கு நியாயம் இருக்கிறது. அவர் பேச்சிற்குப் பின்னால் ஒரு வாய் பரோட்டா அள்ளிப்போட்டுக் கொண்ட போது அவருக்கு ஒரு ஜே ( ஜெ. அல்ல )போடத்தோன்றியது.நாம் எதைச் சாப்பிடுவது என்பதையார் முடிவு செய்வது. விவசாயி, தரகன், மருத்துவர், சமையல்காரர், போகும் உணவகம் என்ற பட்டியலில் 50 சதம் விருப்பம் மட்டுமே நம்முடையது. என்கிறார் அவர். இயற்கை உணவிற்கு ஆதரவு இயக்கம் பல இடங்களிலும் பரவி வருகிறது. முட்டை, பால் முதல் எல்லாவற்றிலும் ரசாயனக்கலப்பு, கோழிக்கறி சாப்பிடுவதால் 7 வயதில் பெரியவர்கள் ஆகும் பெண் குழந்தைகள், சிறுமிகள். உடம்பைக்காக்க, எடையைக்குறைக்க ஆரோக்கியமாய் வாழ என்று தேவையான இயற்கை உணவை 3% மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்கிறார்கள் இதை புணர் ஜென்ம வேளான்மை என்கிறார் இவர். மனிதர்கள் பணத்தைச் சாப்பிட முடியாது என்று உணரும்போது அவர்களுக்கு வயதாகி விடுகிறது என்கிறார். சாதாபாவா, அண்டா பாவா, அம்பாசிக் ( சாதா , முட்டை, சதுரப் பரோட்டாக்கள் ) என்று ஆரம்பித்து சுவைக்குள் நாக்கைக் கொண்டு வந்து விடுவார் ஷா. 6 புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். புரோட்டா பற்றிய அனுபவங்கள கவிதை என்று ஒரு புத்தகமும் வெளியிட்டுள்ளார் சமீபத்தில் ( சுவை பொருட்டன்று )இந்நூலில் ஒரு சவுகரியத்திற்கு கவிதை என்று பெயர் இட்டிருக்கிறார். பரோட்டா என்ற வஸ்துவை சிங்கப்பூர் சமூகம் எதிர் கொள்வதைச் சொல்கிறார். சத்துக்கோசம், சத்துளேர் ( உயர்ந்தவை ) என்கிறார்.காதலி போட்ட மோதிரம் இடஞ்சல், கழற்று என்று அதிகாரம் செய்ததால் பரோட்டா உருட்டுவதிலிருந்து வேறு வேலைக்குப் போகிறவன், 80 வயதிலும் பரோட்டா சாப்பிடுகிறவர், எல்லா நடைகளும் பரோட்டா கடையை நோக்கி செல்வது , அந்தந்த புரோட்டாவின் ருசியை அடுத்தப் பரோட்டாவில் தேடுதல் பெரும் பிழை போன்ற அனுபவங்களைச் சுவாரஸ்யமாகச் சொல்கிறார். பல சொற்களில் வாழ்கிறது பசி என்று பல பரோட்டா ருசியை உடம்போடு வளர்த்த மனிதர்களை அறிமுகப்படுத்துகிறார்..” மூச்சைப்பிடித்து விசிறினாலும்/பக்குவமாய் புரட்டி எடுத்தாலும் கடைசி நிமிடத் திருப்பத்தில்தான் நேர்கிறது புரோட்டாவின் அடையாளம் “ என்கிறார்,பசியை பலபேர் பலவிதமாய் வெளிப்படுத்துகிறார்கள். அவசரகதியில், கோபத்தில் , பசியின் உடசத்தில் கூட . பல சொற்களில் வாழ்கிறது பசி என்கிறார்.

பரோட்டா எதிர்ப்பாளர்கள் கூட பரோட்டா என்பதற்கு பதிலாய், திணை, சாமி, மரவள்ளிக்கிழங்கு, கேழ்வரகு தோசை என்று கூட நிரப்பிக் கொண்டு இக்கவிதைகளைப் படித்து சுவாரஸ்யப்படுத்திக்கொள்ளலாம.
ஷா ” தோடம்பழம் “ என்று ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். ( மூன்றாவது வலது கை என்ற தொகுப்பில்) ஒரு பழத்தை முன் வைத்து மனித உறவுகளுக்குள் அது செய்யும் வித்தையைச் சொல்கிறார். அக்கதையின் இறுதி வாக்கியம் இப்படி முடிகிறது “ திஸ் ஒன் சுவீட் “ என்று பொதுமைப்படுத்துவார். அதைத்தான் பரோட்டா நூலிலும் சொல்லியிருக்கிறார். “ ஒவ்வொரு முறையும்/ முதல் பேடாவைத் தட்ட ஆரம்பிக்கும்போது ஒரு விளையாட்டை புத்தம் புதிதாய் அணுகுவது போல் என்றும் இருக்கிறது என்பதை அவரின் படைப்புகளை தொடர்ந்து கவ்னிக்கிற போது எல்லா இலக்கியப் படைப்புகளையும் இப்படித்தான் அணுகுகிறார் என்பதும் தெரிகிறது.
இத்தொகுப்பைப் படித்து விட்டு பரோட்டா சாப்பிடாமல் இருந்தால் எப்படி. ..”டுவா கோஸா “ ( இரண்டு ப்ரோட்டா ) என்று ஆர்டர் தரலாம் உடனே.

. ( சுவை பொருட்டன்று- பரோட்டாவை முன்வைத்து சில கவிதைகள் ஷாநவாஸ் வெளியீடு, சிங்கப்பூர் விலை 25 சிங்கப்பூர் வெள்ளி )

————-சுப்ரபாரதிமணியன்

Series Navigationபேரணைகள் அனைத்தும் வேதனைகள் அளிப்பவையா ? இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள்செங்கைஆழியான் நினைவுகள்
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *