This entry is part 11 of 12 in the series 27 ஜூலை 2025

ரவி அல்லது.

உந்துதலால்

உயரம் வந்த

பறவைகள் 

சிறகசைத்த வண்ணமிருந்தது

சிதறாப் போக்கில்

சேருமிடத்திற்கு.

மிச்சங்களைக் கழிக்க

எச்சமிடும்பொழுது

யோசிக்கவே இல்லை

விருட்சங்களாக

வேறொரு நாள்

இளைப்பாறுதலுக்கு

இணக்கமாகுமென.

அச்ச ரேகைகளை

அழிக்கத் தெரியாதவர்கள்

அறியாமை ரேகைகளில்

வகுத்துக் கொண்டார்கள்

பூமியைத் தன்வயப்படுத்திவிடத்

தோற்று.

இடம்பெயரும்

எவ்வுயிரிகளுக்கும்

யாதொரு

பங்கமில்லை

பூமியை

வாழுவதற்காக மட்டும் 

வந்த இடமெனும்

தெளிவுகள் கொண்டதால்.

அநேக

ஆச்சரியங்களுக்கு

வித்திட்ட

அறியப் படைப்பாம்

மனிதனிடம்

பூமியைத் தாண்டிய

பொதுப் பார்வை

வாய்க்கவே இல்லை

மண்ணோடு 

மண்ணாக

மக்கும் வரை

வியப்புகள் கொள்ளுமாறு.

யுக யுகமாக

சொற்பப் புரிதலுக்கு

ஆட்பட்டு விடத்துடிக்கும்

பேரியக்க ஹிருதயம்.

மனிதனுக்குள்

மகத்தானவொன்றை

வெளிப்படுத்திக் கொண்டே

இருக்கிறது 

கணங்கள் தோறும்.

நிரந்தரப் பருகலில்

நிம்மதி துய்த்து

சுயச் சிறகசைத்து

சொர்க்க வானில்

நீந்த.

***

-ரவி அல்லது.

ravialladhu@gmail.com

Series Navigationஅசோகமித்திரன் சிறுகதைகள் – 6தெய்வமாக அமைதல் – ‘மௌனத்தின் மீது வேறொருவன்’ – கவிதைகளில் வெளிப்படும் தெய்வாம்ச நிலை