This entry is part 11 of 16 in the series 10 ஆகஸ்ட் 2025

அவள் 

தண்டவாளத்தில் தலைவைத்து 

சாக காத்திருந்தாள். 

எமலோகம் 

செல்லும் வண்டி 

இரண்டு மணிநேரம் 

லேட் என அறிவிப்பு. 

அருகில் 

பழைய சினிமா ஒன்று 

ஓடிக்கொண்டிருந்தது. 

சினிமா பார்த்த போது 

மூன்றாவது அடுக்கில் 

பழைய காதலனைப்பார்த்தாள். 

அடுத்த நாள் 

குடித்தனம் நடத்த 

பக்கத்து தெருவில் 

வீடு பார்த்தாள். 

இந்த வாழ்க்கை 

அவளுக்கு மூணாவது 

அவனுக்கு ரெண்டாவது. 

எப்பவும் போல் 

அவன் தச்சு வேலைக்கு போனான். 

அவள் 

வீட்டு வேலைக்கு போனாள். 

அவன் 

மாலை வீடு திரும்பும் போது 

கொஞ்சம் மல்லிகைப்பூவும் 

இருட்டுக்கடை அல்வாவும் 

வாங்கி வந்தான். 

அவள் 

அவனுக்கு 

புது லுங்கி வாங்கி வந்தாள். 

எப்பவும் போல் 

ரயில் ஓடிக்கொண்டிருந்தது. 

அவளுக்கும் 

வாழ்க்கை……,

ஒரு அருவியைப்போல.

பக்கத்து வீட்டு 

பார்வதியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் 

“தற்கொலை “, செய்வது 

கோழைத்தனம்.

வாழ்க்கை 

வெகு தூரத்தே போன 

கானல் நீரல்ல;

கையருகே விழும் அருவி!.

-ஜெயானந்தன்.

Series Navigationநடக்காததன் மெய்கவிதைகள்